இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

டாக்டர் அப்துல் கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்க
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா?  அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார்.  நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை.  எந்த நாட்டையும் கைபற்ற வில்லை.  யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

(தொடரும்)

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2007)

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Edison Electric Bulb

 

 

(1847–1931)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”

தாமஸ் ஆல்வா எடிசன்

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]


படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Prespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Center] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு!

Edison -4

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

Edison-2

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

Edison -3

 

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

Edison -1

 

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi Meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Electric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incandescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.

திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope].  ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

Cover image

 

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது !

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

***********************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 15, 2009

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி

Cover Image Marie

 

http://www.biography.com/people/marie-curie-9263538/videos  [Biography]

http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography]

http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg  [Marie Curie Movie]

 

Madame Curie

(1867 – 1934)

 

சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada

+++++++++++++

“வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது ! மேரியின் விஞ்ஞான ஆராய்ச்சி, வரலாறு இதுவரைக் கண்டறியாத அச்சமற்ற யுக்தியோடு, கடுமையான இடையூறுகள் தடுப்பினும், அவற்றைத் தாண்டிச் செய்த ஓர் அரிய சாதனை !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்!

நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் [Wilhem Roentgen] 1895 இல் முதன் முதல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்கள் [X Rays], மனிதன் உட்புற அங்கத்தைப் படமெடுக்கும் ஓர் அற்புத ஆய்வுக் கருவியாய், மருத்துவப் பணிக்கு பயன்படுவது போல், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுவின் அமைப்பை அறியவும் அவை அடிப்படையாய் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து பிரென்ச் விஞ்ஞானி, ஹென்ரி பெக்குவரல் [Henri Becquerel] 1896 இல் ஒளிவீசும் உலோகம் அவ்வாறு எக்ஸ்ரே கதிர்களை எழுப்புகிறதா என்று ஆராய்ச்சி செய்யும் போது பிட்ச்பிளன்டி தாதுவில் [Pitchblende Ore] யுரேனிய உப்புக்கள் [Uranium Salts] ஒருவிதக் கதிர்களை வெளியாக்கு வதைக் கண்டார். அப்புதிய கதிர்கள் எக்ஸ்ரே கதிர்களை விடப் பன்மடங்கு ஊடுருவுத் திறனைக் கொண்டிருந்தன.

பெக்குவரலைப் பின்பற்றிப் பிரென்ச் மாது மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் கியூரி [Marie & Pierre Curie] இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து சோதித்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு உக்கிரம் கொண்ட கதிர்களை வெளியாக்கும் பொலோனியம் [Polonium], ரேடியம் [Radium] என்னும் புதிய இரு மூலகங்களைக் [Elements] கண்டு பிடித்தார்கள். யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் இவற்றில் எழும் கதிர்கள், எக்ஸ்ரே போல் மின்சக்தி துணையின்றித் தாமாகவே உலோகத்திலிருந்து தொடர்ந்து எப்போதும் வெளி வந்து கொண்டி ருந்தன. மேரி கியூரி அந்த இயற்கை நிகழ்ச்சிக்குக் கதிரியக்கம் [Radioactivity] என்று பெயரிட்டார். இவ்வரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்ரி பெக்குவரல் மூவருக்கும் பெளதிக விஞ்ஞானத்திற்கு 1903 இல் நோபல் பரிசு அளிக்கப் பட்டது. அடுத்து மேரி கியூரி ரேடியம் கண்டு பிடித்ததற்குத், தனியாக இரசாயன விஞ்ஞானத்திற்கு 1911 இல் நோபல் பரிசு பெற்றார். இதுவரை இரண்டு நோபெல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானப் பெண் மேதை, மேரி கியூரி ஒருவரே.

 

இருளில் கதிர் ஒளி கண்ட வைர மங்கை.

மேரி கியூரி இருளில் ஒளியைக் கண்டவர்! அவரது சரிதை வறுமையில் உயர்ச்சி! அபார சிந்தனையும், அளவற்ற பொறுமையும், அசுர சக்தியும் கொண்டு, விஞ்ஞானம் ஒன்றுக்காகவே தன் வாழ் நாட்களை அர்ப்பணித்த ஒரு பெண் மேதையின் வரலாறு! 1867 நவம்பர் 7 ஆம் தேதி போலந்திலுள்ள வார்சா நகரில் வறுமையில் வாழும் பிரென்ச் பெற்றோருக்கு மேரி கடேசிப் புதல்வியாய்ப் பிறந்தார். தந்தையார் பெளதிகம் கற்பிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தாயார் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியை. கூடப் பிறந்தவர், நான்கு சகோதரிகள்; ஒரு சகோதரன். மூத்தவள் பெயர், பிரானியா. எல்லாப் பிள்ளைகளை விடவும், சிறு வயதிலேயே மேரி மிக்க அறிவோடு காணப் பட்டாள்.

அப்போது போலாந்து ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், அடிமை நாடாக இருந்தது! போலந்து பல்கலைக் கழகத்தில் பெண்கள் கற்க அனுமதிக்கப் படாததால் மேரி, பிரானியா இருவரும் மேற் படிப்புக்காகப் பாரிஸ் நகருக்குச் செல்ல விரும்பினார்கள். ஆனால் அந்த ஆசை நிறைவேற அவர்களிடம் போதிய பணத்தொகை கைவசம் இல்லை. உயர்நிலைப் பள்ளியை 15 வயதில் முடித்தபின், மேரி ஆறு ஆண்டுகள் [1885-1891] ஓர் இல்லத்தில் தணிக்கை மாதாக [Governess] வேலை செய்து பணம் சேர்த்து, முதலில் பிரானியா பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற உதவ வேண்டிய தாயிற்று. பிறகு பிரானியா வேலையில் சம்பாதித்து, மேரியின் மேற்படிப்பை முடிக்க உதவி செய்தாள். மேரியின் முன் ஆலோசனைப் படி, அத்திட்டம் வெற்றி யடைந்து, தன் 24 ஆம் வயதில் மேரி முதன் முதல் 1891 ஆண்டு பாரிஸூக்குப் பயணம் செய்தாள்.

Fig 4 Radioactivity

பாரிஸ் கடுங்குளிரில் சரியான உணவு, உடை இல்லாமல், பாழடைந்த தங்குமிடத்தில் மேரி சிரமத்தோடு படித்து வந்தாள். மாதம் 100 பிராங்க் நிதித் திட்டத்தில் [கல்லூரித் தவணை உட்பட], பணம் பற்றாமல் பல நாட்கள் வெறும் ரொட்டி, சாக்லெட், சிறு பழத்தைத் தின்று காலம் தள்ள வேண்டிய தாயிற்று. சில சமயம் பசியில் மயக்கமாகிக் கிடந்திருக்கிறாள். அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது, மேரி ஆழ்ந்து படித்துக் கல்லூரியில் 1893 இல் முதல் மாணவியாக M.Sc. பெளதிக விஞ்ஞானத்திலும், அடுத்த ஆண்டு M.Sc. கணிதத்திலும் பட்டம் பெற்றார். அதன்பின் லிப்மன் ஆய்வுக் கூடத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்றும் போது தான், அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் எதிர்காலக் கணவர், பியரி கியூரியைச் சந்தித்தார். பியரி ஓர் உன்னத பெளதிக விஞ்ஞானி. இருவரும் காதல் வயப்பட்டு, 1895 இல் திருமணம் செய்து, அவர்களுக்கு ஐரீன், ஈவ் [Irene & Eve] என்ற இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். மேரியும், பியரியும் அடுத்த பத்தாண்டுகள் ஒன்றாக ஆராய்ச்சிகள் நடத்தி, நோபல் பரிசு பெற்று ரேடியம், பொலோனியம் போன்ற மகத்தான கதிர் ஒளிவீசும் உலோகங்களைக் கண்டு பிடித்து உலகை வியப்புள் ஆழ்த்தினார்கள்!

தீவிரக் கதிர்வீசும் ரேடியம், பொலோனியம் கண்டுபிடிப்பு

ஹென்ரி பெக்குவரல் சோதித்த போது, யுரேனிய உலோகம் உமிழ்ந்த புதுவிதக் கதிர்கள், அவர் வைத்த வெள்ளி நாணயத்தைச் சுற்றிலும் கருமை நிறங்காட்டிப் படமெடுத் திருந்தது. 1898 இல் அதைப் படித்தறிந்த மேரி கியூரி தானும் சோதித்த போது, யுரேனியத்தைப் போன்று, தோரியமும் [Thorium] கதிர் வீசுவதைக் கண்டார். இதுவே அவரது முதற் கண்டு பிடிப்பு. யுரேனியத்திலும், தோரியத்திலும் ஒளிச்சக்தி எவ்வாறு எழுகிறது ? எக்ஸ்ரே போன்று புறத் தூண்டுதல் எதுவும் இல்லாது, உலோகங்களில் கதிர்கள் எப்படி எழுகின்றன ?

விந்தையான அந்தக் கதிர்கள் என்னவாக இருக்க முடியும் ? என்று மேரி ஆழ்ந்து சிந்தித்தார். ‘தங்க இதழ் மின்காட்டிக் ‘ [Gold Leaf Electroscope] கருவியில் யுரேனியத்தை வைத்து மேரி சோதித்ததில், இதழ்கள் மின்கொடை [Electrically Charged] இழந்து, கதிர்கள் காற்றை மின்கடத்தி யாக [Conductor] மாற்றுவதைக் கண்டார்.

தெள்ளத் தெளிய அறிந்திட, பிட்ச்பிளன்டி தாதுவதைச் [Pitchblende Ore] சிறிது எடுத்து, அதிலுள்ள யுரேனியம் முழுவதையும் பிரித்தெடுத்து, தங்க இதழ் மின்காட்டியில் மறுபடியும் சோதித்தார். என்ன ஆச்சரியம்! எஞ்சிய பிட்ச்பிளன்டி, எடுத்த யுரேனியத்தை விட அதி விரைவாய் இதழ்களின் மின்கொடையை இழக்கச் செய்தன! அதாவது கரடு முரடான பிட்ச்பிளன்டி வீசும் கதிர்கள், சுத்தமான யுரேனியக் கதிர்களை விட தீவிரம் வாய்ந்தன, என்று அறிந்தார்! அப் புதிருக்கு முடிவான தீர்ப்பு ஒன்றே ஒன்று தான். ஏதோ ஓர் அதிசய, யாரும் அறியாத உலோகம், பிட்ச்பிளன்டி தாதுக் குள்ளே ஒளிந்து கொண்டு, யுரேனியத்தை விட அதி உக்கிரக் கதிர்களை உண்டாக்கி வருகிறது! மேரி வேறு ஒரு யுரேனியத் தாது சால்கொலைட்டைச் [Chalcolite] சோதித்த போது, அதே கதிர் எழுச்சி விளைவுகளைக் கண்டார். அந்த சமயத்தில்தான் கணவரும் மனைவியும் சேர்ந்து உழைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்கள் மேரியும், பியரியும் இராப் பகலாக உழைத்து, பிட்ச்பிளன்டியை சுத்தீகரித்துச் சோதித்ததில், யுரேனியத்தை விட 400 மடங்கு அதிகக் கதிர்வீசும் முதல் புதிய மூலகம் [Element] ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். அதற்கு மேரி தன் பிறந்த நாட்டு நினைவாக, ‘பொலோனியம் ‘ [Polonium] என்று பெயரிட்டார். அத்துடன் அவரது ஆராய்ச்சிப் பணி முடியவில்லை.

பொலோனியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் உக்கிரக் கதிர்வீச்சு, முன்னை விட மிக்க அளவில், அதிசயமாக மிஞ்சிய பிட்ச்பிளன்டியில் வந்து கொண்டிருந்தது! அந்த உலோகத்தின் கதிர் எழுச்சி யுரேனிய இயக்கத்தை விட 900 மடங்கு அதிகமாக இருந்தது. 1898 இல் இம்மியளவு [மில்லியனில் ஓர் பங்கு] உள்ள அந்த அபூர்வ ஒளி உலோகத்தைப் பிரித்து அதற்கு ரேடியம் என்று மேரி பெயரிட்டார்.

 

ஆனால் மிகச்சிறு நுண்ணளவில் பிரிக்கப் பட்ட ரேடியம், பொலோனியம் இரசாயனக் குணங்களை அறியப் போதாது. அவற்றின் அணுப்பளுவைக் [Atomic Mass] கணக்கிடாமல், கண்டு பிடிப்பை அகில நாடுகளுக்கும் வெளிப் படுத்த முடியாது. மில்லியனில் ஒரு துகளாய் இருக்கும் புதிய உலோகத்தைக் கடைந் தெடுத்து, சிறிதளவு திரட்டக் குறைந்தது ஒரு டன் பிட்ச்பிளன்டி தேவைப்படும்! அந்த அளவுத் தாது எங்கே கிடைக்கும் ? கிடைத்தாலும் எங்கே இறக்கி வைப்பது ? பிறகு இரசாயன முறையில் எப்படிச் சுருக்கம் செய்து புதிர்ப் பொருளைப் பிரித்து எடுப்பது ? இந்த இமாலய முயற்சியில் மேரியும், பியரியும் போதிய நிதியின்றி, நிலமின்றி, ஆய்வகம் இன்றி, துணிந்து ஆழம் தெரியாமல் காலை வைத்தார்கள்!

எதிர்பாராத விதமாக, பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் மீட்கப் பட்டு எஞ்சிய பிட்ச்பிளன்டி கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு நன்கொடையாகக் கிடைத்தது. ஒருவரும் நாடாத, கூரை ஒழுகும், இடிந்து போன ஒரு மரப் பட்டறையில், 45 மாதங்கள் குளிரில் நடுங்கி, வேனல் காலத்தில் வேர்வை சிந்தி, ஒரு டன் தாதுச் சாம்பலைச் சிறுகச் சிறுக, மேரி இராப் பகலாய்ச் சலித்தும், ரசாயன முறையில் வடி கட்டியும், கடேசியில் அவர்களுக்கு வேண்டிய 0.1 கிராம் தூய ரேடியம் 1902 இல் வெற்றி கரமாய்க் கிடைத்தது! 1903 ஆம் ஆண்டில் ரேடியத்தைப் பற்றியும், கதிரியக்கம் பற்றியும் தயாரித்த அற்புத வெளியீட்டுக்கு, மேரி கியூரி டாக்டர் பட்டம் பெற்றார்.

 

ரேடியத்தின் குணாதிசயங்களும் கதிர்வீச்சின் பயன்பாடுகளும்

ரேடியம் இருட்டில் சுடர் விட்டு மிளிர்ந்தது. பியரி கியூரி ரேடியத்தின் ‘ஒளிர்வு ‘ [Luminosity] ‘காந்தத் தளத்தில் நடப்பு ‘ [Behaviour in Magnetic Field] போன்ற கதிர்களின் பெளதிகக் குணங்களைச் சோதித்தார். வெளிவரும் கதிர்கள் நேர், எதிர், நடு மின்னியல் [Positive, Negative & Neutral Charge] கொண்டிருப்பதைப் பியரி கண்டறிந்தார். மேரி கியூரி அந்தக் கதிர்வீச்சு நிகழ்ச்சிக்குக் ‘கதிரியக்கம் ‘ [Radioactivity] என்று பெயரிட்டார். இரண்டு ஆங்கில விஞ்ஞானிகள் வில்லியம் ராம்சே, பிரடரிக் சாடி [Ramsay & Soddy] 1903 இல் யுரேனியம், ரேடியம் ஒரு வித வாயுவை உண்டாக்குகின்றன எனக் கண்டு, அதற்கு ஹீலியம் [Helium] என்று பெயரிட்டனர். ரேடிய உலோகம் தானே ஹீலிய வாயுவாக மாறி ரசவாதம் [Alchemy] புரிவதாக நினைத்தார்கள்! ஏர்னெஸ்ட் ரூதர்போர்டு [Ernest Rutherford] பின்னால் அவற்றுக்கு ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்கள் [Alpha, Beta, Gamma Rays] எனப் பெயர் அளித்தார். ஆல்பாத் துகளே ஹீலிய வாயு என்று நிரூபிக்கப் பட்டது.

 

Fig 6 Mother & Daughters

 

வெள்ளிபோல் தோன்றும் ரேடியம் இருளில் சுடர் வீசி ஒளிர்கிறது. யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் மடங்கு ஒளிச்சுடரை, ரேடியம் வீசுகிறது. கண்ணாடிக் கூஜாவில் வைத்தால் கண்ணாடி வயலட் நிறத்தில் மாறுகிறது. ரேடியம் அருகில் உள்ள எல்லாப் பொருட்களை யும் தாக்கி, அவைகளும் கதிரியக்கம் உண்டாக்கத் தூண்டுகிறது. ஒரு காலத்தில் ரேடியக் கலவைக் கடிகார முட்களிலும், கருவி எண்களின் முகப்பிலும் இருட்டில் தெரியப் பூசப் பட்டது. 1930 இல் ரேடிய மையைத் தொட்டுத் தடவிய தொழிலாளிகள் எல்லோரும் தீவிரக் கதிர்த் தீங்குகளால் [Radiation Injury] தாக்கப் பட்டு அனிமியா [Anemia], எலும்புப் புற்றுநோயில் [Bone Cancer] மாண்டதால் அம்முறை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது. முதலில் புற்றுநோய் சிகிட்சைக்கு ரேடியத்தின் கதிர்வீச்சு [Radiation Therapy] பயன் படுத்தப் பட்டது. இப்போது அதை விட மலிவாய்க் கிடைக்கும் கோபால்ட்60 [Cobalt60], சீஸியம்137 [Cesium137] போன்ற கதிர் ஏகமூலங்கள் [Radio Isotopes] மருத்துவக் கூடங்களில் உபயோக மாகின்றன. அணு ஆய்வுக் கூடங்களில் ‘ரேடியம் * பெரில்லியம் ‘ [Radium Beryillium] சேர்க்கை, ‘நியூட்ரான் சுரப்பி ‘ [Neutron Source] யாகப் பயன் பட்டு வருகிறது.

 

 

ரேடியம் நீரில் வீரியமாய் இயங்கி ஹைடிரஜன் வாயுவை வெளியாக்குகிறது. வெள்ளி உலோகத்தின் பாதி அளவு திணிவு [Density] கொண்டது, ரேடியம். நடத்தையில் பேரியம் மூலகத்தைப் போன்றது, ரேடியம். பெரில்லியம், மக்னீஸியம், கால்சியம், பேரியம், ஸ்டிரான்சியம், ரேடியம் யாவும் இராசயனக் குணங்கள் ஒன்றிய ஓரின மூலகக் குழுவைச் சேர்ந்தவை. ரேடியத்தின் வீரியக் கதிர்கள் ஈயத்தைத் தவிர மற்றும் எல்லா உலோகங்களையும் ஊடுறுவிப் பாய்கின்றன. ஆதலால் ரேடியக் கதிர்ச் சுரப்பிக் [Radium Source] கலன்களில் கதிர்க் கவசமாக [Shielding] ஈயம் உபயோக மாகிறது.

தீவிர ரேடியத்தின் தேய்வு! தாய்மூலகம்! சேய்மூலகம்! அரை ஆயுள்!

ரேடியம் மற்ற உலோகங்கள் போல் தனியாய் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை. மேலும் யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் யாவும் சிறுகச் சிறுகத் தேய்கின்றன! பூமி தாதுக்களில் கிடைக்கும் இயற்கை யுரேனியம் [Natural Uranium] கதிரியக்கத்தால் சிதைந்து [Disintegration], ‘தேய்வு விளைவு ‘ [Decay Product] உலோகமாய்ப் பிட்ச்பிளன்டியில் இருப்பது போல் யுரேனியத்துடன் சேர்ந்தே, ரேடியம் காணப் படுகிறது. அதாவது ‘யுரேனியத் தேய்வுச் சீரணியில் ‘ [Uranium Decay Series] ஆல்பாத் துகள்கள் வெளியேறி, யுரேனியத்தின் பளு குன்றித் தேய்ந்து உண்டாவது, ரேடியம்226. அதுவே மிகுந்த காலம் இருக்கும் ரேடிய ஏகமூலம் [Most Stable Isotpe]. கதிரியக்கத்தால் ரேடியம் தொடர்ந்து சிதைந்து போய், அதன் பளுவும் [Mass] குறைந்து கொண்டு வருகிறது. ரேடியம் போல் சிதையும் அணுக்களின் பளு பாதி பாதியாய் ஆகும் காலம், ஒரு நிலை இலக்கம் [Constant]. அந்தக் கால நிலை இலக்கம், ‘அரை ஆயுள் ‘ [Half Life] எனப் பெயர் பெறும்.

 

மிகுந்த காலம் நிலைக்கும் ரேடியம்226 அரை ஆயுள் 1620 ஆண்டுகள். அது போன்று பொலோனியம்210 இன் அரை ஆயுள் 200 ஆண்டுகள். ரேடியம்226 இன் தாய்மூலகம் [Parent Element] தோரியம்230! ரேடியம்226 இன் சேய்மூலகம் [Daughter Element] ரேடான்222 [Radon222]. பின்னால் செய்த ஆராய்ச்சிகளில் ஆல்பாத் துகள் ஹீலிய அணுவாக அறிய

ப் பட்டது. தாய்மூலகமான யுரேனிய238 அணுச் சிதைவில் பளுவிழந்து, சுய ரசவாதம் புரிந்து, சேய் மூலகங்கள் தோரியம், ரேடியம், ரேடான், பொலோனியம் இவற்றைப் பெற்று, இறுதியில் நிலையான ஈயமாக மாறுகிறது. அந்த உலோகங்கள் அனைத்தும் வெவ்வேறு அரை ஆயுட்கள் கொண்டுள்ளதால், யுரேனியத் தாதுவில் அம் மூலகங்கள் யாவும் ஒரே சமயத்தில் தென்படுகின்றன.

பிட்ச்பிளன்டியில் தானாய்ச் சிதையும் மூலகங்கள் [யுரேனியத் தேய்வுச் சீரணி]

பிட்ச்பிளன்டியில் மேரி கியூரி கண்ட யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனிய ஏகமூலங்கள் எல்லாவற்றையும் யுரேனியத் தேய்வுச் சீரணியில் காணலாம். தேய்வு மூலகங்கள் யாவும் முடிவில் ஈயம்206 அணுப்பளு கொண்ட நிலைமூலகம் [Stable Isotope] ஆகின்றன!

 

அணு யுகத்திற்கு அடிகோலிய கியூரி குடும்ப விஞ்ஞானிகள்

ஐரீன் கியூரியும், அவரது கணவர், பெரடெரிக் ஜோலியட்டும் [Irene Curie Joliot & Frederic Joliot] சேர்ந்து, 1932 இல் ஆல்பா துகளைக் கணையாக ஏவி, குறியாக போரான், அலுமினியம், மெக்னீஸியம் போன்ற மூலகங்களை வைத்து அடித்ததில், செயற்கை முறையில் நைட்ரஜன், பாஸ்பரஸ், அலுமினியம் மூலகங்களில் கதிரியக் கத்தை முதன் முதல் உண்டாக்கி விஞ்ஞானத்தில் விந்தைகள் புரிந்தார்கள். செயற்கை கதிரியக்கத்தை [Artificial Radioactivity] மூலகங்களில் [Elements] உண்டாக்கி, அத்தோடு விஞ்ஞான இரசவாதத்தைச் [Alchemy] செய்து காட்டி, இருவரும் 1935 இல் இணைந்து நோபல் பரிசு பெற்றார்கள். 19-20 நூற்றாண்டு விஞ்ஞானச் சரித்திரத்தில் கியூரி குடும்பத்தில் மட்டும் நால்வர் “இயற்கை செயற்கைக் கதிரியக்கத்திற்கு” மூன்று நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போய் விட்டார்கள்!

முதல் அணுப் பிளவைத் தூண்ட அடிகோலியது, ஜோலியட்-கியூரி செய்து காட்டிய செயற்கைக் கதிரியக்கமே. ஜோலியட்-கியூரியைப் பின் தொடர்ந்து, இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] 1934 இல் நியூட்ரான் கணைகளை யுரேனிய235 உலோகம் மீது ஏவி, முதன் முதல் அணுவைப் பிளந்து [Nuclear Fission] அணுக்கருவினுள் அடங்கிக் கிடக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளியேற்ற ஏதுவாயிற்று! ஆனால் ஃபெர்மிக்குத் தான் அணுவை பிளந்தது அப்போது தெரியாமல் போய் விட்டது! 1939 இல் ஜெர்மன் விஞ்ஞானிகள், ஆட்டோ ஹான், ஃபிரிஷ் ஸ்ட்ராஸ்மனும் நியூட்ரான் கணைகளை ஏவி யுரேனிய அணுவைப் பிளந்து, உலகுக்கு முதலில் அறிவித்தார்கள். எக்ஸ்ரேயில் ஆரம்பித்த ‘கதிர் யுகம் ‘ கியூரி தம்பதிகள் ரேடியத்தைக் கண்டு பிடிக்க வைத்து, கதிரியக்கத்தை விளக்கச் செய்து 50 ஆண்டுகளுக்குள் உலகை அணு யுகத்திற்குத் திருப்பியது, இருபதாம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி!

 

ரேடியத்தாலே புகழடைந்து, ரேடியத்தாலே மரணம்!

வளர்த்த கடா மார்பிலே பாயும், என்னும் பழமொழியின் கூற்றுப்படி, கியூரி தம்பதிகள் இருவரும், தாங்கள் இராப் பகலாய் உழைத்துக் கண்டெடுத்த ரேடியக் கதிர்களின் கூரிய தீ அம்புகளுக்கு இரையாகினர்! ரேடியத்தை அடிக்கடிக் கையாண்ட பியரி கியூரியின் கைகளைத் தீக்கதிர்கள் சுட்டுப் புண்ணாக்கித் தோலை உரித்து விட்டன! எதிர்பாராத விதமாக 1906 ஏப்ரல் 19 இல் தனது 46 ஆம் வயதில் வீதியில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மேல் குதிரை வண்டி ஏறி, விபத்தில் மாண்டார் பியரி. அந்தக் கோர மரணச் சம்பவம் மேரியை மிகவும் பாதித்து விட்டது. பத்தாண்டு காலம் மேரியுடன் இணைந்து ஆராய்ச்சிகள் செய்து ரேடியம், பொலோனியம் இரண்டையும் கண்டு பிடித்து, இணையாக நோபல் பரிசு பெற்ற ஒப்பில்லா விஞ்ஞான மேதை! கணவர் இறந்தபின் தனியாக ஆறு வயது ஐரினையும், இரண்டு வயது ஈவையும் வளர்த்து, எஞ்சிய நேரத்தை விஞ்ஞான ஆய்வுக்கு அர்ப்பணித்து, மேரி கியூரி மேலும் 28 ஆண்டுகள் வாழ்ந்து, மற்றும் சில அரிய ஆக்கப் பணிகளைச் செய்து முடித்தார்.

 

முதல் உலக மகா யுத்தத்தின் போது [1914-1918] மேரியும், ஐரீனும் இணைந்து எக்ஸ்ரே கதிர்ப்பட வரைவைச் [X-rays Radiography] சீர்ப்படுத்தி, காயம் அடைந்தோர்க்கு நோய் ஆய்வுக் கருவியாய் [Medical Diagnosis] ஏற்பாடு செய்தார்கள். 1921 இல் தன் புதல்வியரை அழைத்துக் கொண்டு, மேரி கியூரி அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஜனாதிபதி வாரன் ஹார்டிங் [Warren Harding] அவரை வரவேற்று, உபசரித்து அமெரிக்க மாதர் நிதி திரட்டி வாங்கிய ஒரு கிராம் ரேடியத்தைப் பரிசாக அளித்தார். வார்சாவில் 1932 இல் ரேடிய ஆய்வகத்தை நிறுவி, தன் தமக்கை பிரானியாவை ஆணையாளராய் [Director] நியமித்தார். இறுதியில் பரிதாபகரமாக ரேடியக் கதிர்களுக்குப் பலியாகி, லுக்கிமியாவில் [Leukemia] நோய் வாய்ப்பட்டு 1934 ஜூலை 4 ஆம் தேதி விண்ணுலகு எய்தினார்.

 

Fig 13 Marie & Einstein

ரேடியம் கண்டு பிடிக்கவே பிறந்து, ரேடியக் கதிரியக்கம் தாக்கியே இறந்த மாதருள் மாணிக்கம், மேரி கியூரிக்கு இரங்கல் அஞ்சலி செய்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியது: “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது! விஞ்ஞான ஆராய்ச்சி வரலாறு இதுவரைக் கண்டறியாத அச்சமற்ற யுக்தியோடு, கடுமையான இடையூறுகள் தடுப்பினும், அவற்றைத் தாண்டிச் செய்த ஓர் அரிய சாதனை!”

 

*******************************

Information :

1. http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1903/marie-curie-bio.html

2.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie

3.  http://en.wikipedia.org/wiki/Pierre_Curie

4.  http://www.ocrwm.doe.gov/curriculum/unit2/lesson2reading.shtml

5.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie  [November 16, 2012]

6. The Biographical Dictionary of Scientists , Chemists By : David Abbott, Ph D. [1984]

7.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie  [March 26, 2013]

8.  http://www.biography.com/people/marie-curie-9263538

+++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)   [ March 27, 2013]  (R-3)

பூரண சுதந்திரம் ?

cover-image-indian-flag.jpg

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி  யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
கையில் இருப்பதைக் கவனமாய்
வைத்துகொள் !

ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம் புவியில்
ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் பாரதக்
குருச்சேத்திரம் !

ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவயுகச் சுதந்திரம் !
பூரண சுதந்திரத்தில்
மதம் பிடித்த யானைகள்
ஊரைச் சூறையாடும் !

விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
கட்டவிழ்த்தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
சுதந்திரம் ?

எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும் பாரத
பூரண சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர் ஒருவர்,
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித்
தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !

 

+++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  January 27, 2020  (R-7)

எனது குறிக்கோள்

jayabarathans-photo.jpg

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

 

 

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கின்றேன் – விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறனூட்ட வா.

கற்றதனால் பெற்ற பயன் ஏது  படைப்பாளி
அற்புதத்தைக் காணாத போது ?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட காண்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை இருபத்தி ஏழு தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள்,  அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்],  ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள்.  காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2.  அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு]  ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். [Echo of Nature] [Environmental Poems]

My Father's Pattayam

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர்.  பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர். பெற்றவர்.  முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும்  குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது வலைதளமான (https://jayabarathan.wordpress.com/) ‘நெஞ்சின் அலைகள்’ என்பதிலும் (http://www.thinnai.com/) திண்ணை வலைப் பதிவிலும் அண்டவெளிப் பயணங்கள் பற்றியும் அணுசக்தி பற்றியும் விஞ்ஞான மேதைகளைப் பற்றியும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றில் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் :

* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான   புளுடோ ஏன் விலக்கப் பட்டது ?

*பாரத அணுவியல் துறை விருத்தி விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா

+பாரத விண்வெளித் தேடல் விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய்.

*பாரத ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்

* பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா

* ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி

* இந்தியாவின் முதல் விஞ்ஞானத் தமிழ்ப் பெண்மணி

* கணித மேதை ராமானுஜன்

* முதல் விஞ்ஞானி கலிலியோ

* விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர்

* விஞ்ஞானி ஜெயந் நர்லிகர்

*இந்திய அணுமின்சக்தி நிலையங்கள்

*இந்திய அண்டவெளித் தேடல் முயற்சிகள்

* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

‘அணுசக்தி’ நூலில் அணுசக்தியின் ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் தயக்கமின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்களும், எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம்    பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றிய விபரங்களும் உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங் களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப்பட்டுள்ளன.

‘வானியல் விஞ்ஞானிகள்’ என்ற இரண்டாம் நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர், மேலும் சிலரின் விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன.

பல நாடகங்களையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ள எனது படைப்புகள் :

1. தாகூரின் கீதாஞ்சலி மற்றும் பிற கவிதைகள்

2. கலீல் கிப்ரான் கவிதைகள்

3. பாப்லோ நெருடாவின் கவிதைகள்

3A  ரூமியின் கவிதைகள்

3B  வால்ட் விட்மன் வசன கவிதைகள்.

4. ஷேக்ஸ்பியரின்  ஜூலியஸ் சீஸர், ஆண்டனி & கிளியோபாத்ரா ஆகிய நாடகங்கள்

5. பெர்னாட்ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா, உன்னத மனிதன், ஆயுத மனிதன், எழ்மைக் காப்பணிச் சேவகி, மேடம் மோனிகாவின் வேடம்  ஆகிய நாடகங்கள்

6. காற்றினிலே வரும் கீதங்கள் என மீராபாயின் பாடல்கள்

7. எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள்

8. ஆப்ராஹாம் லிங்கன் பற்றிய வரலாற்று தொடர் நாடகம்

9. ‘சாக்ரடிஸின் மரணம்’ என்ற மூவங்க நாடகம் (தமிழாக்கம்)

10. சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)

11. நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (தமிழாக்கம்)

12. எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)

13. பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) (தமிழாக்கம்)

14. உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) (தமிழாக்கம்)

15. ஆயுத மனிதன் (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)

16.  எழ்மைக் காப்பணிச் சேககி (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)

17. மேடம் மோனிகாவின் வேடம். (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)

இவை மட்டுமல்லாமல் சீதாயணம் (ஓரங்க நாடகம்), முக்கோணத்தில் மூன்று கிளிகள் (குறுநாவல்), முடிவை நோக்கி, ஒரு பனை வளைகிறது, என் விழியில் நீ இருந்தாய், எமனோடு சண்டையிட்ட பால்காரி ஆகிய சிறுகதைகளையும், பல கவிதைகளையும இயற்றியுள்ளேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

URL : https://jayabarathan.wordpress.com/   (My Web Page )

http://www.thinnai.com/

++++++++++++++++++++++++++++++++++++++++++

படைப்பு வகைகள்

* அணுசக்தி (30)

* அண்டவெளிப் பயணங்கள் (87)

* கட்டுரைகள் (15)

* கதைகள் (7)

* கவிதைகள் (26)

* கீதாஞ்சலி (8)

* நாடகங்கள் (7)

* விஞ்ஞான மேதைகள் (37)

* விஞ்ஞானம் (155)

++++++++++++++++++++

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

நெஞ்சின் ஒளிஅலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
எஞ்சி நிலைக்கும் இருள்.

*************************

கணித மேதை ராமானுஜன்

cover-image-ramanujan.jpg

கணித மேதை ராமானுஜன்
(1887-1920)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada


“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 !  பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”

பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி


சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.  பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.  உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

fig-3-ramanujans-home

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.  இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது.  அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

fig-2-ramanujan-notes

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள்.  அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்!  அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

fig-1-men-behind-ramanujan

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்!  அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood],  புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள்.  சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள்.  ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

fig-a-ramanujan-award

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions],  ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

fig-b-ramanujan-award-for-sujatha-ramdorai

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின்  ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே!  ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது!  முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது!  அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று.  அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

sujatha-ramadorai-at-tifr5

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார்.  உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

+++++++++++++++++++++++

ஆதாரங்கள்

1. Scientific American (1988)

2. http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujan

3. http://www.gap-system.org/~history/Biographies/Ramanujan.html (Biography of Ramanujan)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 21, 2009)] [Revised R-1]

செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் & ஜோலியட் கியூரி

(1897-1956)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada

 

புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி

1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஐரீன் கியூரி, அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் இருவருக்கும் செயற்கைக் கதிரியக்கம் ஆக்கியதற்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டது. அப்போது ஐரீன் அருகில் அவரது புகழ் பெற்ற தாய் மேரி கியூரி அமர்ந்திருக்க வில்லை! அவர் ரேடியத்தின் வீரியக் கதிரியக்கம் பல்லாண்டுகள் தாக்கி ஓராண்டுக்கு முன் இரத்த நோயில் இறந்து போனார்! பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற முதற் பெண்மணி, மேரி கியூரி! இரண்டாவது பெண்மணி புதல்வி ஐரீன் கியூரி! தாய் உயிரோடு இருந்திருந்தால், நோபெல் பரிசு கிடைத்த புதல்வியைப் பெற்றதற்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் ?

சில விஞ்ஞானிகள் வெறும் தத்துவ வாதிகள்! சில விஞ்ஞானிகள் சோதனைகளைத் திறம்படச் செய்யும் திறமைசாலிகள்! சில விஞ்ஞானிகள் மேம்பட இயக்கும் நிர்வாகிகள்! ஐரீன் ஜோலியட் கியூரி மேற்கூறிய முத்திறமும் படைத்தவர்! ஐரீன் பாரிஸ் கியூரி ஆராய்ச்சிக் கூடத்தின் ஆணையாளர். அங்கே தனியாக ஐரீன் கணவருடன் ஆய்வுகள் செய்தும் வந்தார்! பிரென்ச் அணுசக்திப் பேரவையில் ஓர் உறுப்பினர். அத்துடன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியர்! ஆய்வுக் கூடத்தில் ஐரீன் ஓர் யதேட்சை அதிகாரி! எதுவும் துப்புரவாகத், தூய்மையாகத், துல்லியதாக [Meticulous] இருக்க வேண்டுமென அவரது பதவி அதிகாரத்தைக் காட்டுவார்!

கதிரியக்கம் கண்டு பிடித்து, உலகப் பெயர் பெற்ற மேரி கியூரி, பியரிக் கியூரி ஆகிய விஞ்ஞானத் தம்பதிகளுக்குப் பிறந்த மூத்த புதல்வி ஐரீன் கியூரி! இதுவரை யாரும் அடையாத இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்று, நவீன விஞ்ஞானத்துக்கு அடிகோலிய மேரி கியூரியின் அருமைப் புதல்வி, ஐரீன் கியூரி! ‘தாயைப் போல பிள்ளை’ என்ற முதுமொழியை மெய்ப்பித்து, முதன் முதல் செயற்கைக் கதிரியக்கத்தைச் [Artificial Radioactivity] செய்து காட்டி தாயைப் போல் தானும் தன் கணவருடன் 1935 இல் நோபெல் பரிசு பெற்றவர்! மூலக மாற்றத்தைப் [Transmutation of Elements] புரிந்து ஏராளமான கதிரியக்க ஏகமூலங்களைப் படைத்து [Radioactive Isotopes], மூலகங்களின் அணி அட்டவணையைப் [Periodic Table of Elements] பெரிது படுத்திய விஞ்ஞானப் பெண் மேதை, ஐரீன் ஜோலியட் கியூரி!

தாய் மேரி கியூரியைத் தெரிந்த அளவுக்கு, தாயைப் போல் வாழ்வு முழுவதையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பபணித்த ஐரீன் கியூரியைப் பற்றி, பலர் அறிய மாட்டார்கள்! புகழ் பெற்ற விஞ்ஞானப் பெற்றோர்களால் புதல்வி ஐரீன் மறைக்கப் பட்டாள்! அவளுடன் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட அவளது விஞ்ஞானக் கணவன், பிரடெரிக் ஜோலியட்டால் அவள் பெயர் மறைந்து போனது! விஞ்ஞானி யில்லாத அவரது தங்கை ஈவ் கியூரி 1937 இல் தாயின் சரிதையைப் புத்தகமாக எழுதி, பலரைக் கவர்ந்ததால் ஐரீன் புகழ் சிறிது மறைவு பட்டுப் போனது! கதிரியக்கத்தை விளக்கி, நவீன விஞ்ஞானத்திற்கு பாதை வகுத்த மேரி கியூரியின் கால் தடத்தைப் பின்பற்றிச், செயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்கி, அணுவைப் பிளக்க அடிகோலிய ஐரீன் கியூரிக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும், மேரி கியூரியின் புகழ் பன்மடங்கு பெருகியதே தவிர, புதல்வியின் புகழ் உலகில் மறைந்தே கிடந்தது!

ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் விஞ்ஞான வாழ்க்கை வரலாறு

1897 செப்டம்பர் 12 ஆம் தேதி பாரிஸில் மேரி கியூரி, பியரி கியூரி விஞ்ஞானத் தம்பதிகளுக்கு ஐரீன் மூத்த புதல்வியாய்ப் பிறந்தார். இரண்டாம் புதல்வி பெயர் ஈவ் கியூரி. தாய்மைப் பணிகளை ஒருபுறம் கவனித்துக் கொண்டே, மறுபுறம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் கைவிடாது கண்காணித்து வந்தார், தாய் மேரி கியூரி. மேரியின் முக்கியப் பணி புதல்விகள் இருவருக்கும் உயர்ந்த கல்வியைப் புகட்ட ஆவன செய்வது.

சிறிய வயதிலிருந்தே, ஐரீன் எதிலும் மிகத் திறமைசாலியாக மிளிர்ந்தாள்! கணிதத்தில் அவள் மித மிஞ்சிய சாமர்த்தியசாலி! பத்து வயதிலேயே ஐரீன் கணக்கில் கொண்டிருந்த வலிமை பளிச்செனத் தெரிந்தது! வல்லுநர்களின் பிள்ளைகள் பத்துப் பேருடன் ஒருத்தியாக, தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளியில் ஐரீன் படிக்கத் தொடங்கினாள். அப்பள்ளியின் ஆசிரியர்கள்: மேரி கியூரி, பெளதிக விஞ்ஞானி பால் லாங்கிவின் [Paul Langevin], ஜீன் பெர்ரின் [Jean Perrin] ஆகியோர்.

செவைன் கல்லூரியில் [College of Sevigne] உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஐரீன் சார்போன் பல்கலைக் கழகத்தில் [Sorbonne, Now University of Paris] 1914 இல் கணிதமும், பெளதிகமும் பயின்றார். ஐரோப்பாவில் முதல் உலகப் போர் 1916 இல் துவங்கவே, ஐரீன் கல்லூரிப் படிப்புத் தடையுற்றது! அப்போது ஐரீன் தாய் மேரி கியூரியுடன் சேர்ந்து, போரில் காயப் பட்டவர்களுக்குப் பணி செய்ய, எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து முதல் உதவி செய்தாள். மேலும் ஐரீன் அப்பணியைப் பிரான்ஸ், பெல்ஜியம் ராணுவ மருத்துவக் கூடங்களில் நீடித்து, எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ ஏற்பாடு செய்தாள். அவ்வரிய சமூக சேவை யானது பாராட்டப் பட்டு, ஐரீன் ராணுவப் பதக்கத்தைப் பெற்றாள்.

பிரடெரிக் ஜோலியட் 1900 ஆம் ஆண்டில் பாரிஸில் பிறந்தவர். சிறு வயதில் விளையாட்டுப் பிள்ளையாய்த் திரிந்து குடும்பத்தின் சொத்து, சுகங்கள் கரைந்து போகவே, பிரடெரிக் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய தாயிற்று! பெளதிகத் தொழிற்துறைக் கல்லூரியில் பொறியியல் பயின்று, பட்டம் பெற்று முதல்வராகத் தேர்ச்சி அடைந்தார். ராணுவச் சேவை செய்த பிறகு, ஆராய்ச்சி செய்ய அவருக்கு உபகார நிதி வெகுமதி யாகக் கிடைத்தது.

1918 இல் 21 வயதாகும் போது, ஐரீன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் கியூரி ரேடிய ஆய்வுக் கூடத்தில் [Curie Radium Institute], தாயின் துணையாளி ஆகப் பணிபுரியச் சென்றாள். அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுத்து ‘போலோனியத்தின் ஆல்ஃபாக் கதிர்கள் ‘ [Alpha Rays of Polonium] என்னும் விஞ்ஞானக் கோட்பாடை எழுதி, 1925 இல் டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு பெளதிக விஞ்ஞானி பால் லாங்ஜிவின் சிபாரிசின் பேரில் மேரி கியூரியிடம், உதவி விஞ்ஞானியாய் ஆராய்ச்சி புரிய வந்தார், பிரடெரிக் ஜோலியட் [Frederick Joliot]. ஆய்வுக் கூடத்தில் கதிரியக்கச் சூழ்நிலையில் பணி செய்ய, அவருக்கு முன்னறிவிப்பாய் சோதன முறைகளைச் சொல்லிக் கொடுக்கும் முதல் வேலை ஐரீனுக்குத் தரப்பட்டது! ஐரீன், பிரடெரிக் இருவரும் விஞ்ஞானம், கலைத்துவம், மனிதத்துவம், விளையாட்டு, பொழுது போக்கு ஆகியவற்றில் ஒரே மாதிரி ஆர்வத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் காதல் வயப்பட்டு 1926 அக்டோபர் 28 இல் மணம் புரிந்து, தாய் தந்தையரைப் போன்று விஞ்ஞானத் தம்பதிகள் ஆயினர்! 1928 முதல் ஐரீன், பிரடெரிக் இருவரும் ஒன்றாய் இணைந்து நீண்ட நேரம் விஞ்ஞான ஆராய்ச்சிகள் புரிந்தனர்! 1930 இல் பிரடெரிக் ஜோலியட் எழுதியக் கதிர் மூலகங்களின் மின்னியல் ரசாயனக் [Electrochemistry of Radio Elements] கோட்பாடுக்கு டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். ஐரீன் பிரடெரிக் தம்பதிகளுக்கு ஹெலென் [1927] என்ற புதல்வியும், பியர் [1932] என்ற புதல்வனும் பிறந்தனர்.

ஐரீன், பிரடெரிக் தம்பதிகள் ஆக்கிய செயற்கை மூலகங்கள்

பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் 1896 இல் யுரேனிய உப்பு எக்ஸ்ரே போல் கதிர்வீசுவதை முதலில் ஆராய்ச்சியின் போது கண்டார். அதைத் தொடர்ந்து மற்ற தாதுக்களை ஆய்வு செய்த மேரி, பியர் கியூரித் தம்பதிகள் 1898 இல் ஆல்ஃபாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் வீசும் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] ரேடியம், போலோனியம் ஆகிய இரண்டு கதிரியக்க மூலகங்களை முதலில் கண்டு பிடித்தார்கள். ஆல்ஃபாத் துகள் ஓர் ஹீலிய அணு. பீட்டாத் துகள் எதிர்மின் கொடை [Negative Charge] உள்ள ஓர் எலக்டிரான். காமாக் கதிர்களுக்கு எக்ஸ்ரே [X-Rays] போன்று எந்த வித மின்கொடையும் கிடையாது. அடுத்து 1932 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] அணுக்கருவுள் இருக்கும் நியூட்ரான் என்னும் புதிய துகளைக் கண்டு பிடித்தார். நியூட்ரான் துகளுக்கும் எந்த வித மின் கொடையும் இல்லை! அதே ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டேவிட் ஆன்டர்ஸன் நேர்மின் கொடை யுடைய பாஸிட்ரான் துகளைக் [Positron] கண்டு பிடித்தார். அதன் இருக்கையை ஐரீன் பிரடெரிக் தம்பதிகளும் சோதனை மூலம் நிரூபித்து உறுதிப் படுத்தினர்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] மூலக மாற்றம் புரிய ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் அவருக்கு 1929 இல் உதவி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow], விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் ரசவாதம் அல்லது மூலக மாற்ற முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பயன்படுத்திப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

அணுவின் மையமான அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் உள்ளன. சூரியனை மையமாகக் கொண்டு, அண்ட கோளங்கள் சுற்றி வருவதைப் போல், அணுக்கரு நடுவை எலக்டிரான்கள் சுழல்வீதியில் [Orbits] சுற்றி வருகின்றன. புரோட்டான் நேர்மின் கொடையும் [Positive Charge], எலக்டிரான் எதிர்மின் கொடையும் [Negative Charge] கொண்டவை.

நியூட்ரானுக்கு எவ்வித மின் கொடையும் [Neutral Charge] இல்லை! ஓர் மூலகத்தின் புரோட்டான் எண்ணிக்கை அணு எண் [Atomic Number] என்றும், புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை நிறை எண் அல்லது பளு எண் [Mass Numer] என்றும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்களின் அணுக்கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்து, நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டிருந்தால், அவற்றை ஏகமூலங்கள் [Isotopes] என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரே அணு எண்ணைக் கொண்டு வேறுபட்ட நிறை எண்களைப் பெற்ற மூலகங்களை நிலையான மூலகத்தின் ஏகமூலங்கள் என்று சொல்கிறார்கள்.

ஐரீன் கியூரியும் பிரடெரிக் ஜோலியட்டும் மூலக மாற்றத்தில் [Transmutation of Elements] புரிந்த அரும் பெரும் விஞ்ஞானச் சாதனைகள் என்ன ? அவர்கள் இருவரும் மேரி கியூரி, பியர் கியூரித் தம்பதிகள் போல் நோபெல் பரிசு பெறும் அளவுக்கு, ரசாயனத்தில் ஆக்கிய தென்ன ? ஐரீனுடைய பெற்றோர்கள் தனித்தெடுத்த ரேடியம், போலோனியம் என்னும் இரண்டு சுயமாய்த் தேயும் மூலகங்களில் [Spontaneous Decay of Elements], ரேடியத்தை விடப் போலோனியம் பதினாறு மடங்கு மித மிஞ்சி நிலையற்று [Highly Unstable], அதன் அணுக்கரு வேகமாய்த் தேய்வடைகிறது! அதாவது ஒரே அளவு எடை எடுத்துக் கொண்டால் போலோனியம், ரேடியத்தை விட அதி வேக முள்ள ஆல்ஃபாத் துகளை அதிக எண்ணிக்கையில் வெளியாக்குகிறது! ஆல்ஃபாத் துகள் என்பது ஹீலிய அணுவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

1934 ஆம் ஆண்டில் ஐரீன், பிரடெரிக் இருவரும் செய்து காட்டிய ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ [Artificial Radioactivity] என்பது என்ன ? தம்பதிகள் தமது ஆராய்ச்சியின் போது போரான், அலுமினியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தனித் தனியாக [Boron, Aluminium, Magnesium], அதி வேக ஆல்ஃபாத் துகளைக் கணையாகக் கொண்டு தாக்கிய போது இதுவரை யாரும் அறியாத விந்தை விளைவுகளைக் கண்டார்கள்! முதல் இயக்க முடிவில் கதிர்வீசும் புதிதான நைட்ரஜன் மூலகம் [Radioactive Nitrogen] உண்டானது! அதாவது போரான் மூலகம் நைட்ரஜனாக மாறி விட்டது! இது ஓர் மூலக மாற்றம்[Transmutation of Element], அல்லது ரசவாதம் [Alchemy] என்று சொல்லப் படுகிறது. இந்த அணுக்கரு இயக்கத்தின் சிறப்பு என்ன வென்றால், நைட்ரஜன் கதிரியக்கம் கொண்டிருந்தது! ரேடியம், போலோனியம் போல் அணுக்கருச் சிதைவு அடைந்து தேய்ந்தது! அதன் அரை ஆயுள் [Half Life], அதாவது பாதி நிறை யாகும் காலம் சுமார் 10 நிமிடம்! மேலும் அக்கதிரியக்கம் செயற்கை முறையில் ஆக்கப் பட்டது! முதல் இயக்க விளைவில் உண்டான நைட்ரஜன்13, நிலையற்றுத் தேய்ந்து கதிர் வீசியது! நிலையற்ற நைட்ரஜன்13 நிலையான நைட்ரஜன்14 மூலகத்தின் ஓர் ஏகமூலம் [Unstable Nitrogen13 is an isotope of the stable Nitrogen14].

[போரான்10] + [ஹீலியம்4] –>[நைட்ரஜன்13]* + [நியூட்ரான்1]

[அலுமினியம்27] + [ஹீலியம்4] –>[ஃபாஸ்ஃபரஸ்30]* + [நியூட்ரான்1]

[மக்னீஷியம்24] + [ஹீலியம்4] –>[சிலிகான்27]* + [நியூட்ரான்1]

[எண்கள் நிறை எண்ணைக் (Mass Number) குறிப்பன. (*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள்]

அடுத்து அலுமினியம், மக்னீஷியம் ஆகிய உலோகங்களைத் தனியே வைத்து ஆல்ஃபா கணைகளைக் கொண்டு தாக்கியதில், அவையும் மாற்றப்பட்டு புதிய செயற்கை மூலகங்கள் அணுக்கரு இயக்கங்களில் விளைந்தன! அவை முறையே ஃபாஸ்ஃபரஸ்31, சிலிகான்28 நிலையான மூலகங்களின் ஏகமூலங்கள். அத்துடன் ஃபாஸ்ஃபரஸ்30, சிலிகான்27 ஆகிய இரண்டு புது மூலகங்களும் கதிரியக்கம் உள்ளவை! ஜோலியட் தம்பதிகள் ஆக்கிய அவ்வரிய மூலக மாற்றங்களைப் பின் தொடர்ந்து, சுமார் 700 மேற்பட்ட கதிர் ஏகமூலகங்கள் [Radio Isotopes] உண்டாக்கப் பட்டு, மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] பின்னால் சேர்க்கப் பட்டன!

செயற்கை மூலக மாற்றக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசவாதிகள் [Alchemists] தாமிரம், பித்தளை போன்ற அடித்தள உலோகங்களை மாய மந்திரம், போலி ரசாயன முறைகளைக் கையாண்டு, அவற்றைத் தங்கமாக மாற்றப் பல முறை முயற்சி செய்தார்கள்! ஐரீன், பிரடெரிக் பழைய ரசவாத முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்து, செயற்கை விஞ்ஞான முறையில், மூலக மாற்றத்தைச் [Transmutation of Elements] செய்து காட்டினர்! ரேடியம், போலோனியம், யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்கள் இயற்கையில் தாமாகவே சிதைந்து தேய்ந்து கதிர்களைக் கக்கி, வேறுவித உலோகங்களை விளைவித்தன! அந்த அணுக்கரு இயக்கங்களை விஞ்ஞான மேதைகள் பெக்குவரல், மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோர் ஆராய்ச்சியின் போது கண்டு பிடித்தனர்! இப்போது ஐரீன், பிரடெரிக் இருவரும் செயற்கை முறையிலும் புது மூலகத்தை, கதிர்வீசும் மூலகத்தை உண்டாக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினர்! அவ்வரியச் செயற்கைக் கதிரியக்கத்திற்கு ரசாயன விஞ்ஞானத்தின் நோபெல் பரிசையும் 1935 இல் பெற்றார்கள்.

Carbon Isotopes

அடுத்து நேர்மின் கொடையுள்ள புரோட்டான்களை [Positively Charged Protons] மின்காந்தத் தளங்களில் கணைகளாய்த் துகள் விரைவாக்கிகளில் [Particle Accelerators] வேகப் படுத்தி, குறியாக மற்ற உலோகங்களை வைத்துப் புது மூலகங்களை விஞ்ஞானிகள் உண்டாக்க ஆரம்பித்தனர். அப்பணியில் கணைகளை வேகப் படுத்த ‘நேரடி விரைவாக்கிகள் ‘ [Linear Accelerators], ‘சுழல் விரைவாக்கிகள் ‘ [Cyclotrons] என்னும் பூத மின் யந்திரங்கள் அமைக்கப் பட்டன. உதாரணமாக கீழே காணப்படும், விரைவாக்கிய புரோட்டான் லிதிய மூலகத்தைத் தாக்கும் போது, அணுக்கரு இயக்கத்தில் புதிய மூலகம் பெரிலியம் விளைகிறது.

புரோட்டான் கணை, லிதியம் குறி மூலக அணுக்கரு இயக்கம்:-

லிதியம்7 + புரோட்டான்1 –>பெரிலியம்7 + நியூட்ரான்1

ஐரீன், பிரடெரிக் தம்பதிகளின் படைப்பான ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை [Modern Nuclear Physics] வளர்த்தது! மேலும் மேலும் விருத்தி செய்தது! முதன் முதல் அணுவைப் பிளக்க வழி வகுத்து, அதன் உள்ளிருந்த அளவற்ற சக்தியை வெளியேற்றத் தூண்டியது! மனித இனத்தை அழிக்க உலகில் ராட்சத அணு ஆயுதங்கள் உண்டாக்கப் பாதை இட்டது! ஆக்க வினையாய் மின்சக்தி நிலையங்கள் தோன்ற உதவியது! புதுப்புது மூலகங்கள் ஆக்கிட வழி திறந்தது! விஞ்ஞானிகள் ஆய்வு அணு உலைகளை [Atomic Reactors] அமைத்து, மின்கொடை யற்ற நியூட்ரான் [Neutrons] கணைகளைப் பயன்படுத்தி யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்களைத் தாக்கும்படி செய்து ஆராய்ச்சிகள் செய்தனர்! நீர் அல்லது கனநீர் மிதவாக்கித் திரவம் [Heavy Water Moderator], அல்லது கரித்திரள் மிதவாக்கி [Graphite Moderator] ஆகியவற்றால் நியூட்ரான்கள் வேகத்தைக் கட்டுப் படுத்தி அணு உலைகளில் ஆய்வுகள் செய்தனர். மித வேக நியூட்ரான்கள், சிலவற்றை யுரேனியம் [Uranium238] விழுங்கியது! சில மித வேக நியூட்ரான்கள் யுரேனிய அணுவை இரு கூறாய்ப் பிளந்தன! அதி வேக நியூட்ரன்கள் சில சமயம் யுரேனியம்238 தாக்கிப் புது மூலகம் புளுடோனியத்தை [Plutonium239] முதன் முதலாகப் படைத்தன! பிளவுப் பிண்டமான [Fissile Material] புளுடோனியம்239 அணு ஆயுதங்களுக்குப் பயன் பட்டது!

மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம்:-

யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

–>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

மாலிப்டினம், லாந்தனம் இரு பிளவான சிறு துணுக்குகள்!

ஒவ்வோர் அணுப்பிளவிலும் புது நியூட்ரான்கள் இரண்டு விளையும்!

அளவற்ற சக்தி அணு ஆயுதத்தில் வெடிக்கிறது! அல்லது

மின்சக்தி யாக மாற்றி மின்சாரம் பரிமாறுகிறது!

அதிவேக நியூட்ரான், யுரேனியம்238 அணுக்கரு இயக்கம்:-

புது மூலகம் புளுடோனியம்239 விளைவு.

யுரேனியம்238 + நியூட்ரான்1 –>யுரேனியம்239*

யுரேனியம்239* (தேய்ந்து) –>நெப்டினியம்239* + பீட்டாத் துகள்

நெப்டினியம்239* (தேய்ந்து) –>புளுடோனியம்239* + பீட்டாத் துகள்

[(*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள் (Radioactive Elements)]

பிரான்ஸில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் ஆக்கிய தம்பதிகள்

1934 ஆம் ஆண்டு முதன் முதலில் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி நியூட்ரான் கணைகளால் யுரேனிய அணுவைத் தாக்கி, அணுக்கருவை இருகூறாகப் பிளந்தார்! ஆனால் அவ்வரிய விஞ்ஞான சாதனை அவருக்கு அப்போது தெரியாமலே போயிற்று! அணுக்கருவைப் பிளக்க முதலில் ஆலோசனை கூறியவர் ஐரீன் கியூரி! அதன் விளைவைப் புரிந்து கொண்டு ‘அணுப்பிளவு ‘ என்று விளக்கம் தந்த பெண் மேதை, ஆஸ்டிரியப் பெண் விஞ்ஞானி லிஸ் மெயிட்னர்! ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானிடம் [Otto Hahn] முப்பது ஆண்டுகள் துணையாளி ஆகப் பணி ஆற்றியவர், லிஸ் மெயிட்னர்!

ஐரீன் கியூரி செயற்கைக் கதிர் ஊட்டம் [Irradiation] சம்பந்தமாக உரையாற்றிய சமயம், நியூட்ரான்களை கணையாய் ஏவி, யுரேனிய அணுவைப் பிளக்க முடியும் என்று கூறியதைப் பின்பற்றி, ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர் ஸ்டிராஸ்மன் இருவரும் 1938 இல் யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தை உண்டாக்கினார்கள்! ஆனால் அந்த இயக்க விளைவில் உண்டான சிறு கதிர்த் துணுக்குகளைக் கண்டு வியந்ததைத் தவிர, அதன் முக்கியத்துவத்தை அவர்களால் விளக்க முடியவில்லை!

அந்த ஆண்டு செப்டம்பரில் ஐரீன் கியூரியும், அவரது துணையாளி ஸாவிட்ச்சும் [P. Savitch] ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் செய்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தைத் திருப்பிச் செய்தார்கள். அப்போது அணுப்பிளவின் ஒரு சிறு துணுக்கான லாந்தனம் [Lanthanam] மூலகத்தின் கதிர்வீச்சைக் கண்டார்கள். ஆனால் லிஸ் மெயிட்னர் அவரது நண்பர் ஆட்டோ பிரிஷ் [Otto Frisch] இருவரும்தான் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் புரிந்த அணுக்கரு இயக்க நிகழ்ச்சியை, ‘அணுப்பிளவு ‘ [Fission] என்று முதன் முதலில் விளக்கப் படுத்தி விஞ்ஞான வெளியீட்டில் உலகுக்குப் பறைசாற்றினர்.

அவ்வெளியீட்டைப் படித்தபின் உடனே பிரடெரிக் ஜோலியட், அணுப்பிளவைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு பிளவும் வெளியாக்கும் பிளவு சக்தி 200 MeV என்றும், பிளவு விளைவுத் துணுக்குகள் புரோமின் [Bromine, Atomic Number 35] முதல் சீரியம் [Cerium, Atomic Number 58] வரையுள்ள மூலகங்களுக்கு இடைப்பட்டவை என்றும் முதலில் அறிவித்தார்! அத்துடன் நிகழும் ஒவ்வொரு யுரேனிய, நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தின் விளைவில் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உண்டாகின்றன என்றும், அவற்றைக் கட்டுப்படுத்தி அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] ஏற்படுத்தி, அளவற்ற சக்தியை வெளிப்படுத்தலாம் என்றும் முதன் முதல் உலக விஞ்ஞானிகளுக்கு முன்னறிவித்தார்!

1940 இல் ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றவே ஐரீன், பிரடெரிக் இருவரது அணுப்பிளவு ஆராய்ச்சிகள் மூடப் பட்டன! ஐரீன் தன்னிரு பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு சுவிட்ஜர்லாந்துக்கு ஓடி அங்கே சரண் புகுந்தார்! பெயரை மாற்றிக் கொண்டு, தனியாக பிரடெரிக் மட்டும் பாரிஸில் காலம் தள்ளினார்! 1944 இல் நேச நாடுகள் போரிட்டுப் பிரான்ஸை விடுவித்ததும், பிரசிடென்ட் சார்ல்ஸ் டிகாலே [Charles de Gaulle] நாட்டைச் சீர்ப்படுத்தினார். பிரடெரிக் பிரான்ஸின் அணு ஆராய்ச்சித் துறைகளை ஒழுங்கு படுத்தி, பிரான்ஸில் அணுசக்திப் பேரவை [French Atomic Energy Commission] நிறுவ ஏற்பாடுகள் செய்தார்! 1946 இல் டிகாலே பிரான்ஸ் அணுசக்திப் பேரவையைத் திறந்து வைத்து, பிரடெரிக் ஜோலியட் அதிபதியாக நியமிக்கப் பட்டார்!

1942 இல் இத்தாலிய அமெரிக்க விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி, அணு ஆயுதத்தைப் படைக்கச் சிகாகோவில் முதன் முதல் அணுக்கருத் தொடரியக் கத்தைச் செய்து காட்டி, அணுயுகத்தின் பிரம்மாண்டமான நுழை வாயிலைத் திறந்து வைத்தார்! 1948 பிரான்ஸின் முதல் ஆராய்ச்சி அணு உலை பிரடெரிக் மேற்பார்வையில் சான்டில்லன் கோட்டையில் [Fort de Chantillon] இயங்க ஆரம்பித்தது! பிரான்ஸில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஐரீன் கியூரியும், அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட்டும் அணுக்கருத் தொடரியக்கம் செய்து காட்டி, அணுசக்தி ஆக்க வரலாற்றில் முதல்வர் வரிசையில் அவர்களும் நின்று உலகப் புகழ் பெற்றார்கள்! 1960 பிப்ரவரி 13 இல் பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை ஸகாரா பாலை வனத்தில் வெடித்துச் சோதனை செய்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டது!

Natural Isotopic Abundances of light stable isotopes.

Hydrogen                Carbon                 Nitrogen                     Oxygen

1H – 99.984%     12C – 98.89%      14N – 99.64%        16O – 99.763%

2D – 0.0156%      13C – 1.11%         15N – 0.36%           17O – 0.0375%

+++++++             ++++++               ++++++              18O – 0.1995%

மனித இனத்திற்குப் பயன்படும் கதிரியக்க ஏகமூலங்கள்

கதிரியக்க ஏகமூலங்கள் [Radioactive Isotopes] மனித இனத்துக்குப் பயன் படாத துறையே இல்லை! உலகெங்கும் மருத்துவம், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்ய நூற்றுக் கணக்கான கதிர் மூலகங்கள் உபயோகம் ஆகின்றன! நேரடி, சுழல் விரைவாக்கி யந்திரங்கள் [Linear, Cyclotron Accelerators], அணு உலைகள் ஆகியவற்றில் கதிர் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகமூலங்கள் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் பட்டுள்ளன! அவற்றில் இயற்கையாகக் கிடைப்பவை 276. கதிரியக்கம் கொண்டவை 740.

அமெரிக்காவில் டென்னஸி மாநிலத்தின் ஓக் ரிட்ஜ் அணு உலைகளில் [Oak Ridge Atomic Reactors] நூற்றுக் கணக்கான கதிர் ஏகமூலங்கள் உற்பத்தியாகி, உலகம் எங்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 78% மருத்துவ ஆய்வுகளுக்கும் [Medical Diagnosis], புற்று நோய் குணப்பாடுக்கும் [Cancer Treatment] பயன் படுகின்றன! 12% ஏகமூலங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், 6% தொழிற்துறைப் பணிகளுக்கும், 4% வேளாண்மை விருத்திக்கும் உபயோக மாகின்றன. மருத்துவ, உயிரியல் பணிகளுக்கு ஹைடிரஜன், கரி, ஸல்ஃபர், ஃபாஸ்ஃபரஸ், குளோாரின், கால்ஸியம், ஆர்செனிக், ஐயோடின், வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இப்போது அகில நாடுகளும் தமது அணு உலைகளில் எண்ணற்ற கதிர் ஏகமூலங்களை ஆக்கி வருகின்றன.

ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் இறுதிக் காலம்

முதல் உலகப் போரின் சமயத்தில் காயப் பட்டோர்களுக்குச் சிகிட்சை செய்ய எக்ஸ்ரே கதிர்ப்பட [Nurse Radiographer] பணிப் பெண்ணாக ஐரீன் கியூரி, தாயுடன் சேர்ந்து சேவை செய்தார். பிரென்ச் விஞ்ஞானக் கழகம், [French Academy of Science] பிரென்ச் மருத்துவப் பேரவை இரண்டும் நோபெல் பரிசு பெற்ற பிரடெரிக் ஜோலியட்டுக்குச் சிறப்புநர் தகுதியை அளித்தது. ஆனால் நோபெல் பரிசு பெற்ற பெண்மணி ஐரீன் கியூரிக்கு பிரென்ச் விஞ்ஞானக் கழகம் சிறப்புநர் மதிப்பைத் தர, பிரென்ச் ஆடவர் குழு மறுத்தது! அதே போல் இரட்டை நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரிக்கும் பிரென்ச் விஞ்ஞானக் கழகம் அங்கத்தினர் பதவி கூடத் தர எதிர்த்தது! ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ‘ [Liberty, Equality & Fraternity] என்று பிரென்ச் புரட்சியின் போது முழக்கிய பிரான்ஸ், விஞ்ஞானக் கழகத்தில் சமத்துவத்தைப் பெண்ணினத்திற்கு அளிக்காமல் அவர்களை இரண்டாம் தரக் குடியினராகத் தாழ்த்தியது, வருந்தத்தக்க செய்தி!

1956 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் ஐரீன் ஜோலியட் கியூரி கதிரியக்கச் சூழ்நிலையில் நீண்ட காலம் பாதிக்கப் பட்டு, இரத்த நோயில் [Leukemia] தாய் மேரி கியூரி போல் தானும் அவதியுற்று, பாரிஸில் 59 ஆவது வயதில் காலமானார்! பிரிட்டானியில் [Brittany] ஓய்வெடுக்கச் சென்ற போது விபத்தில் காயமுற்று, சில நாட்கள் கழித்துப், பிரடெரிக் 1958 ஆகஸ்டு 14 ஆம் தேதி தனது 58 ஆவது வயதில் காலமானார். தாய் ஐரீன் கியூரி, தந்தை பிரடெரிக் ஜோலியட் இருவரும் விட்டுச் சென்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புதல்வி ஹெலனும், புதல்வன் பியரும், தன் பெற்றோர் கடைப்பிடித்தது போலப் பரம்பரையான குல வித்தையைப் பின்தொடர்ந்தனர்!

***************

Information :

http://www.answers.com/topic/irene-joliot-curie (Biography: Irene Joliot-Curie)

S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 21, 2010

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தி கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

என்ரிக்கோ ஃபெர்மி

(1901-1954)

ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.

 

அணுவைப் பிளந்த அசுர விஞ்ஞானிகள்

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான்  கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற,  அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு  இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன்  சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி  விட்டதாகப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்  பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக  உருமாற்றம் [Transmutation] கொண்டது!  அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை  பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப்  பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது  புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு ‘பயன்பாட்டு இரசாயனம்’ [Applied Chemistry] இதழில் ஐடா &  வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், ஃபெர்மியின்  பிழையான கருத்தை எடுத்துக் கூறி, ‘கன உலோகம் யுரேனியம், நியூட்ரான்  தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது’ என்று எழுதி  யிருந்தார்கள்.  மெய்யான இந்த விளக்கத்தை, ஃபெர்மி உள்படப் பலர் அன்று  ஒப்புக் கொள்ள வில்லை!  சாதாரண ஆய்வகச் சாதனம் அணுவைப் பிளக்க  முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான்  அணுவை உடைக்க முடியும், என்பது ஃபெர்மியின் அசைக்க முடியாத கருத்து.   பெரும்பான்மையான பெளதிகவாதிகள் [Physicists] யுரேனியம் நியூட்ரானை  விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே  நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞானிகள் அணுவைப்  பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

அணுக்கருப் பிளவை முதலில் விளக்கிய லிஸ் மெயிட்னர்

நியூட்ரான்களை ஏவி அணுக்கரு உடைப்பு [Nuclear Bombardments] ஆராய்ச்சியில்  பங்கேற்ற விஞ்ஞானப் பெண் மேதைகள், இருவர் குறிப்பிடத் தக்கவர். முதலாவது  இயற்கைக் கதிரியக்கம் பற்றி விளக்கி நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் மூத்த  புதல்வி, தாயைப் பின்பற்றிச் செயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு  பெற்ற ஐரீன் கியூரி. அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]  அவருடன் 30 ஆண்டு காலம் ஆய்வு உதவியாளியாகப் பணியாற்றிய, லிஸ்  மெயிட்னர் [Lise Meitner]. ஹானும், மெயிட்னரும் பலமுறை யுரேனியத் தேய்வு  அணுக்கரு இயக்கங்கள் நிகழ்த்தி ஆராய்ச்சி செய்து, ‘புரொட்டோ ஆக்டானியம் ‘  [Protoactinium] என்னும் புது மூலகம் கண்டு பித்தவர்கள். மெயிட்னர் யூதரானதால்,  ஹிட்லருக்குப் பயந்து 1938 இல் சுவீடனுக்கு ஓடி, ஸ்டாக்ஹோம் நோபல்  ஆய்வகத்தில் [Nobel Institute, Stockholm] சேர்ந்து தன் ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தார்.

ஐரீன் கியூரி செயற்கைக் ‘கதிர் ஊட்டம்’ [Irradiation] சம்பந்தமாகப் பேசிய சமயம்,  நியூட்ரானைக் கொண்டு யுரேனிய அணுவைத் துண்டிக்க முடியும் என்று  கூறியதைப் பின்பற்றி, யுரேனிய நியூட்ரான் இயக்கத்தை உண்டாக்கி, முதன்  முதலில் அணுவை உடைத்ததாக ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர்,  ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Fritz Strassman] இருவரும் 1938 இல் பறை  சாற்றினார்கள். இவ்வரிய புதுக் கண்டு பிடிப்பைக் கடிதம் மூலம் ஆட்டோ ஹான்,  சுவீடனில் இருந்த தனது பழைய துணையாளி, லிஸ் மெயிட்னருக்குத்  தெரிவித்தார். தகவலைப் படித்த மெயிட்னர் அவரது உறவினர், ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் [Otto Robert Frisch] இருவரும் புதிய அணுக்கரு இயக்கத்தைப் பற்றி  விவாதித்து, ‘இயற்கை’ [Nature] ஃபிரிஷ் வெளியீட்டுக்கு உடனே இதைப் பற்றி  விபரமாக எழுதி, அதில் ‘அணுக்கருப் பிளவு இயக்கம்’ [Nuclear Fission]  நிகழ்ந்துள்ளது என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அணுவைப் பிளந்தவர்  பலராயினும் மெயிட்னர், ஃபிரிஷ் இருவர்தான் முதலில் அணுக்கருப் பிளவைப்  புரிந்து உலகத்திற்கு விளக்கிய, ஐரோப்பிய விஞ்ஞானிகள். இதே ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில்  அணுகுண்டு விஞ்ஞானிகளோடு சேர்ந்து அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம்,  புளுடோனியம் உலோக அளவைக் கணித்து, முதல் அணுகுண்டு செய்ய  உதவியவர்.

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி  மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஆறு விஞ்ஞான மேதைகள்!  முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக்  கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி!  முதன்முதல் அணுப்பிளவு நேர்ந்துள்ளதை அறிவித்த ஆஸ்டிரிய விஞ்ஞான மாது லிஸ் மெயிட்நர். அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும்  முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட்  ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப்  பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த  ராபர்ட் ஓப்பன்ஹைமர்!   அவருடன் ஜப்பானில் இரு அணு குண்டுகளைப் போட்ட  அமெரிக்க இராணுவத் தளபதி லெஸ்லி குரூஸ் ஒருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  முதல் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும்  பொறுப்பை அமெரிக்க அரசு யுத்த சமயத்தில் லெஸ்லி குரூஸ்  ஒருவருக்கே  இரகசியமாக அளித்தது

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள்  நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு  ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா  ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல்  அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல்  பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற  நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115  தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty,  NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால்  அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்,  தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத்  தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!

இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

அணுவின் அமைப்பு. பிண்ட சக்தி அழிவின்மை.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க ஞானிகள் அணுவை பற்றிச் சிந்தித்து  விளக்கியதைத்தான் பிற்கால விஞ்ஞானிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘Atomos’ என்றால் பிரிக்க இயலாதது என்று அர்த்தம்.  அதிலிருந்து Atom என்ற பதம் வந்தது. கி.மு.460-370 ஆண்டுகளில் கிரேக்க  வேதாந்த ஞானி டெமாகிரிடஸ் [Democritus] எழுதி வைத்த அணுவியல் நியதி,  [Atomic Theory] “தூய பிண்டம் [Matter] அனைத்தும் நுண்ணிய, கண்ணுக்குத்  தெரியாத, கடினமான, திணிக்க முடியாத, அழிக்க முடியாத மூலச்சிறு தூள்களைக்  [Particle] கொண்டவை. அவைதான் அணுக்கள். அணுவுக்கும் சிறிய தூள் எதுவும்  அகிலத்தில் இல்லை. அணுக்களே பிண்டத்தின் மூலத் துகள். அணுக்கள்  எண்ணற்றவை. பல வடிவம் உடையவை. எல்லையற்ற அண்ட வெளியில்  அணுக்கள் ஓயாமல் எப்போதும் அசைந்து கொண்டே இருப்பவை. அணுக்களின்  அளவு, வடிவம், நிறை வேறு பட்டாலும், அவை யாவும் ஒரே மூலப் பொருளால்  ஆனவை. அணுக்களின் தனிச் சிறப்புப் பிறழ்ச்சிகள் தான் பொருட்களில்  மாறுபாடு களை உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சியால், அணுக்களின்  முடிவற்ற இயக்கத்தில், அகிலம் உருவானது. அணுக்கள் மோதுவதாலும், தாமே  சுழல்வதாலும் பிண்டத்தின் மாபெரும் வடிவங்கள் தோன்றின”. டெமாகிரிடஸின்  அணுவியல் நியதியே, நவீனத் தத்துவமான ‘பிண்ட சக்தி அழிவின்மை’  [Conservation of Energy & Matter] கோட்பாடுக்கு அடிகோலியது.

இந்து வேதாந்த ஞானிகள் கிரேக்க ஞானிகளுக்கு முன்பே, அணுவைப் பற்றியும்,  அவற்றின் கருவில் இருக்கும் அடிப்படைப் பரமாணுக்களைப் [Sub Atomic Particles]  பற்றியும் கூறி இருக்கிறார்கள் என்று சாமுவெல் கிளாஸ்டன் [Samuel Glasston]  தான் எழுதிய ‘அணுசக்தியின் மூலப் புத்தகத்தில்’ [Source Book on Atomic Energy]  முதல் பக்கத்திலே கூறியிருக்கிறார். அகிலத்தின் தோற்றம் பற்றியும், அண்ட  கோளங்களின் சுழற்சி பற்றியும், சக்தி பொருள் இவற்றின் அழிவின்மை பற்றியும்  இந்து வேதங்கள் பக்கம் பக்கமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இயற்றியுள்ளன.

அங்கிங்கு எனாதபடி எங்கும் அணுமயம்! ஆனால் அணுவை எவரும் இதுவரைப்  பார்த்ததில்லை! நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை.  துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning]  மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக்  கண்டறிய முடியும்! எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1  கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17  பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன! ஒரு நீர்த் துளியைப் பெரிது படுத்திப் பூமி  வடிவில் நோக்கினால், நீர் மூலத்திரளில் [Molecule] உள்ள அணு, ஓர் எழுமிச்சைப்  பழம் அளவாகக் கருதலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட அணு வகைகள் உலகில் உள்ளன. நமக்குத் தெரிந்த தங்கம்,  வெள்ளி, இரும்பு, தாமிரம் [Copper], ஈயம், அலுமினியம் போன்ற பழைய  உலோகங்கள் நிலையானவை [Stable]. பின்னால் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட  யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் ஆகியவை  கதிரியக் கத்தால் சுயமாய்த் தேயும், நிலையற்ற [Unstable] கன மூலகங்கள் [Heavy  Elements]. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 106 மூலகங்களில் 88 இயற்கையில்  தோன்றுபவை. மற்ற 18 அணுக்கருச் சிதைவிலோ, அன்றி அணு உலைகளிலோ  உண்டானவை. அணு எண் 92 மேல் மூலகங்கள் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப  தில்லை. அணுக்கள் தனியாகவோ, அன்றி கூட்டாகவோ இயற்கையில்  தோன்றுகின்றன. உதாரணமாக நீரில் ஈரணு ஹைடிரஜனும் [H2], ஓரணுப் பிராண  வாயுவும் [Oxygen] இணைந்தே [H2+O–>H2O] தென்படுகின்றன. ஈரணு, மூவணு  அன்றிப் பலவணு சேர்ந்து இயங்கும் மூலகக் கூறுகளை ‘மூலத்திரள்’ [Molecules]  என்று இரசாயனத்தில் கூறுவார்கள்.

ஜான் டால்டன், ஹென்ரி பெக்குவரல், ஏர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு, நீல்ஸ் போஹ்ர்  ஆகிய விஞ்ஞானிகளின் புது அணுவியல் நியதியின்படி, அணுவின் அமைப்பு ஓர்  குட்டிச் சூரிய மண்டலம் போன்றது. சூரியன் போல, அணுவின் நடுவே சக்தி  அடங்கிய அணுக்கரு உள்ளது. அண்ட கோளங்கள் போல கருவைச் சதா  எலக்டிரான்கள் [Electrons] நீள்வட்ட [Elliptical] வீதியில் சுற்றி வருகின்றன. நடுக்  கருவில் நியூகிளியான் [Nucleons] எனப்படும் புரோட்டான் தனியாகவோ, அல்லது  நியூட்ரான் கூடச் சேர்ந்தோ இருக்கிறது. அண்ட வெளி போன்று அணுவின்  உள்ளும் பெரும் சூன்ய வெளி சூழ்ந்திருக்கிறது. புரோட்டான் நேர்மின் [Positive],  எலக்டிரான் எதிர்மின் [Negative], நியூட்ரான் நடுமின் [Neutral] கொடையும் [Electrical  Charge] கொண்டவை. எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள்  பரமாணுக்கள் [Sub atomic Particles] எனப்படுபவை. ஓர் அங்குள நூலில்  முத்துக்களைப் போல் வரிசை யாகக் கோர்த்தால், 10 பில்லியன் பில்லியன் [10  அடுத்து 17 பூஜியங்கள்] நியூகிளியான்களை அமைத்து விடலாம்!

இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

அணு எண், அணுப் பளுஎண், அணுநிறை, ஏகமூலங்கள்

மூலகத்தின் அணு எண் [Atomic Number] என்பது, அணுக் கருவுக்குள் இருக்கும்  புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஓர் மூலகத்தின் இரசாயனக்  குணங்கள் அதனுடைய அணு எண்ணைப் பொருத்தது. மூலகங்கள் அணு எண்  வரிசையில்தான் அணி அட்டவணையில் [Periodic Tables of Elemets] இடம்  பெறுகின்றன. அணுப் பளு எண் [Atomic Mass Number] எனப்படுவது, கருவில்  இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கூட்டு எண்ணிக்கை யைக் காட்டும். அது  ‘நியூக்கிளியான்’ தொகை. அணு நிறை [Atomic Weight] என்பது மூலகக் கருவில்  புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு நிறை. அணு நிறை என்புது ஓர் ஒப்பு  நிறை [Relative Mass]. கரியின் [Carbon12] அணுக்கருவில் 6 புரோட்டான், 6  நியூட்டான் உள்ளன. கரியின் அணு எண் 6, பளு எண் 12, அணு நிறை  12.00000000. கரியின் அணு நிறை 8 தசமத் துள்ளியமாக இருப்பதால், மற்ற  மூலகங்களின் அணு நிறை யாவும், கரி நிறைக்கு ஒப்பாகக் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக, முதல் எளிய மூலகமான ஹைடிரஜன் ஒரே ஒரு புரோட்டானைக்  கொண்டுள்ளது. அதன் அணு எண் 1. பளு எண் 1. நிறை 1.0078.

சில மூலகங்களுக்கு ஒன்று அல்லது பல ஏகமூலங்கள் [Isotopes] இயற்கையிலோ  அன்றி செயற்கையிலோ ஆக்கப் பட்டுள்ளன. ஏகமூலங்கள் என்றால்,  அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான்  எண்ணிக்கை கொண்ட மூலகங்கள். உதாரணமாக ஹைடிரஜன் மூலகத்திற்கு  இரண்டு ஏகமூலங்கள் உள்ளன. டியுடிரியம் [Deuterium] புரோட்டான் 1, நியூட்ரான் 1.  டிரிடியம் [Tritium] புரோட்டான் 1, நியூட்ரான் 2.

கரி12, கரி13, கரி14 மூன்றும் கரியின் ஏகமூலங்கள். அது போல், யுரேனியம்238  இன் ஏகமூலம் யுரேனியம்235. யுரேனியம்238 இன் அணு எண்: 92 [92  புரோட்டான், 146 நியூட்ரான்], பளு எண்: 238. அணு நிறை: 238.03. யுரேனியம்235  இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 143 நியூட்ரான்], பளு எண்: 235.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238 விகிதம்: 99.286% U235 விகிதம்:  0.714% யுரேனியம் U235 தானாகப் பிளந்து [Spontaneous Fission] உடையும் தன்மை  யுடையது. யுரேனியம் U235 போன்று, புளுடோனியம் Pu239, தோரியம் Th233  இரண்டும் சுயமாய்ப் பிளக்கும் தன்மை யுடையவை. ஆதலால் அணுசக்தி  நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும் U235, அல்லது Pu239, அல்லது Th233  முழுமையாக [100%] அல்லது செழுமையாக [Small% Enriched] எரிக்கோலாய்ப் [Fuel  Rods] பயன் படுகின்றன.

நிலையற்ற கன மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம்,  பொலோனியம் சிதைந்து தேய்வதற்குக் காரணம் என்ன ? கன உலோகங்களின்  அணுக்கருவில் உள்ள நியூகிளியான் [புரோட்டான் நியூட்ரான்] எண்ணிகையைப்  பார்த்தால் இதற்குப் பதில் அறிந்து விடலாம். நிலையான உலோகங்களில் ஏறக்  குறைய நியூட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் உள்ளன. அதாவது  நியூட்ரான் / புரோட்டான் பின்னம் [Neutron Proton Ratio] = 1 [அருகில்]. யுரேனியம்  [U235] இல் நியூட்ரான்145 / புரோட்டான்92 பின்னம் = 1.55 அதாவது  அணுக்கருவில் அதிகமான, அளவுக்கு மீறிய நியூட்ரான்கள் அடங்கி நிலை யற்ற  தன்மையை உண்டாக்குகின்றன.

மீறும் தொடரியக்கம், ஆறும் தொடரியக்கம், பூரணத் தொடரியக்கம்

அணு உலைகளில் U235 மீது, ஒரு நியூட்ரான் கணையை ஏவிடும் போது,  அணுக்கருவில் நியூட்ரான் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி, U236 இரு  துண்டங்களாகப் பிரிந்து, இணைவு சக்தி [Binding Energy] வெளியாகி, அடுத்து 2  அல்லது 3 நியூட்ரான்கள் இயக்கத்தில் உண்டாகும். ஓர் இயக்கத்தில் தோன்றிய 2  நியூட்ரான்கள் அடுத்துள்ள U235 அணுக்களைத் தாக்கிப் பிளவுத் துணுக்குகளும்  [Fission Products] 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறு நியூட்ரான் எண்ணிக்கை  2, 4, 8, 16, 32, 64 என்ற தொடர்ப் பெருக்கத்தில் [Geometric Progression] மீறிப்  போய் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அளவு கடந்த நியூட்ரான்  பெருக்க இயக்கத்திற்கு ‘மீறும் தொடரியக்கம்’ [Super Critical Reaction] என்று  சொல்லப்படுகிறது.

அணு உலையில் நியூட்ரான் விழுங்கிகளைத் [Neutron  Absorbers] தக்க சமயத்தில் நுழைவித்து, எண்ணிக்கையைக் குறைத்தால் இயக்கம்  சிறிது நேரத்தில் நின்று விடும். இக்கட்டுபாடு ‘ஆறும் தொடரியக்கம்’ [Sub Critical  Reaction] எனப்படும். நடு நிலமையில் நியூட்ரான் விழுங்கிகளை ஏற்றியும்,  இறக்கியும் ஆட்சி செய்து, சம நிலை நியூட்ரான்களை நிலவச் செய்வதைப்,  ‘பூரணத் தொடரியக்கம்’ [Critical Reaction] என்பார்கள். மீறும் தொடரியக்கம்  பொதுவாக அணு ஆயுதங்களில் பயன்படும். அணு உலை ஆட்சியில் [Reactor  Control] பூரணத் தொடரியக்கமும், ஆறும் தொடரியக்கம் உபயோக மாகிறது.  எதிர்பாராத அபாய நிலை [Prompt Critical] இயக்கங்களைத் தடுக்க தடைக் கோல்  [Shut Down Rods] அல்லது தடுப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூரணத்  தொடரியத்தில் வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப் பாடாகிறது. தடுப்பு,  ஆறும் இயக்கங்களில் முறையே வெப்பசக்தி உடனே அல்லது மெதுவாகக்  குறைக்கப் படுகிறது.

அணுஉலையில் கோடான கோடி இயக்கங்கள் ஒரு நொடிக்குள் நிகழ்கின்றன.  ஓரணுப் பிளவில் மட்டும் 200 MeV வெப்பசக்தி வெளியாகிறது. U235 சுயமாகவே  பிளவுபடுவதால், அதைச் சுற்றி நியூட்ரான்கள் வெளிப்பட்டு மறைகின்றன.  நியூட்ரான் பெருக்க இலக்கம் [Muliplication Factor] K=1 என்றால் பிறக்கும்  நியூட்ரான்கள் யாவும் இயக்கத்தில் பயன்படுகின்றன என்று அர்த்தம். K=0.5  என்றால் நியூட்ரான் எண்ணிக்கை குன்றி உலை நிறுத்தப் படுகிறது. K=1.006  என்றால் நியூட்ரான் அணு உலையில் சக்தி அதிகமாவதைக் காட்டுகிறது. K>1.5  என்றால் அபாயம்! நியூட்ரான்கள் அளவுக்கு மிஞ்சுகின்றன! தடை ஏற்பாடுகள்  உடனே இயங்கி உலையைப் பாதுகாக்க வேண்டும். K>3 என்றால் அங்கே ஓர்  அணுகுண்டு வெடிக்கப் போகிறது!

அணுயுகம் பிறந்தது, அமெரிக்காவின் ஆய்வு அணு உலையிலே!

இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர்  அமெரிக்காவுக்கு விரைந்தார்கள். குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ்  போஹ்ர் [Niels Bohr, Denmark], லியோ ஸிலார்டு, எட்வெர்டு டெல்லர், யுஜீன்  விஞ்னர் [Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Hungery], என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi, Italy], ஹான்ஸ் பெதே [Hans Bethe, Germany], ஆட்டோ ஃபிரிஷ் [Otto  Frisch, Vienna] ஆகியோரும், மற்றும் அமெரிக்காவில் பல ஆய்வுக் கூடங்களில்  பணியாற்றிய விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]  தலைமையில், லெஸ்லி குரூஸ் [Leslie Groves] ராணுவ அதிகாரியின் கீழ் நியூ  மெக்ஸிகோ, லாஸ் அலமாசில் மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project]  அணுகுண்டு தயாரிக்க ஆழ்ந்தார்கள்.

சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் [Metallurgical  Laboratory] 1942 நவம்பர் 7 ஆம் தேதி அணுவியல் விஞ்ஞானிகள் கூடி, முதல்  அணுஉலையைக் கட்டத் துவங்கினார்கள். CP1 [Chicago Pile-1] என்று பெயர்  பெறும், இந்த அணுஉலையை டிசைன் செய்த இத்தாலிய விஞ்ஞானி, என்ரிகோ  ஃபெர்மி நிறுவன மேற்பார்வையாளர். மற்றும் ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton],  லியோ ஸிலார்டு, யுஜீன் விஞ்னர், வால்டர் ஸின் [Walter Zinn] குறிப்பாக  அணுஉலை ஏற்பாட்டில் நேரடிப் பங்கேற்றவர்கள். இந்த அணு உலைக் கவசமற்ற  [Unshielded], வெப்பம் தணிக்கப் படாத [Uncooled] உலை. ஃபெர்மியின் திட்டப்படி  5.5 டன் யுரேனியம், 36 டன் யுரேனியம் ஆக்ஸைடு இரண்டும் திணித்த  கரித்திரட்டுக் [Graphite] கோளங்கள் சீரணியில் அமைக்கப் பட்ட ‘சதுரப் பெட்டகம்’  [Cubic Lattice] ஒன்று கட்ட வேண்டும். அணுப் பிளவில் முதலில் எழும்  நியூட்ரான்களின் வேகத்தைக் குன்றச் செய்து மிதமாக்கிட 344 டன் கரித்திரட்டுக்  கட்டிகள் பயன் பட்டன. இதை அமைக்க, சாதனங்கள் உள்பட மொத்தச் செலவு 1  மில்லியன் டாலர். ஒரு சில வாட்ஸ் [Watts] வெப்ப சக்தி உண்டாக்கும் எளிய  ஆய்வு உலை, அணுவியல் பெளதிகச் சோதனைகளுக்கும், அணுக்கருத்  தொடரியக்கம் ஏற்படுத்தவும் டிசைன் செய்யப் பட்டது. ஃபெர்மி 17 நாட்கள்  நியூட்ரான் ‘பெருக்க இலக்கம்’ [Muliplication Factor] K=1 ஆகக் கொண்டு, பூரண  இயக்கத்தில் ஆட்சி செய்து, தன் டிசைன் முடிவுகளைச் சரிபார்த்துக் கொண்டார்.

மித நியூட்ரான்தான் யுரேனியம்235 [U235] இல் கலந்து, அணுக்கருப் பிளவை  உண்டாக்க முடியும். வேக நியூட்ரான் U235 இல் அணுப் பிளவு ஏற்படுத்துவது  இல்லை. ஆனால் நியூட்ரான் யுரேனியம்238 [U238] அணுக்கருவுடன் சேரும் போது,  புளுடோனியம்239 [Pu239] ஆக மாறுகிறது. அடுத்து மித நியூட்ரான் Pu239 தாக்கி  அணுக்கருப் பிளவு உண்டாக்கிச் சக்தி எழுகிறது.

கரித்திரட்டு செங்கல் போல் வெட்டப் பட்டு மரச் சட்டங்களில் அமைக்கப் பட்டு,  எரிப் பண்டமான யுரேனியக் கோளங்கள், கரிக்கட்டி மூலையில் அடுத்தடுத்து  வைக்கப் பட்டன. அணுஉலைப் பாதுகாப்புக்கு நியூட்ரான் விழுங்கியான 7  ‘காட்மியம் கோல்கள்’ [Cadmium Rods] இடையே செங்குத்துத் துளைகளில்  நுழைக்கப் பட்டன. மீறும் தொடரியக்கம் எழாது தடுக்க, எப்போதும் நியூட்ரான்  தடைக் கோல்கள் அணு உலையில் தயாராக இருக்க வேண்டும். மூன்று  துளைகளில் நியூட்ரான் மிதக் கட்டுப் பாட்டுக்குப் ‘போரான் இரும்புக்’ கோல்கள்  [Boron Steel] தொங்க விடப்பட்டன. மட்டத் துளைகளில் போரான் டிரைபுளுரைடு  [Boron Trifluoride] உள்ள ‘நியூட்ரான் மானிகள்’ [Neutron Monitors] நியூட்ரான்  திணிவைக் [Neutron Flux] கண்காணிக்க அமைக்கப் பட்டன.

1942 டிசம்பர் 2 ஆம் தேதி 3:25 P.M. சரியாக, ஃபெர்மி பச்சைக் கொடி காட்ட,  உதவியாளர் ஜார்ஜ் வீல் [George Weil] இறுதி மித ஆட்சிக் கோலை மேலே  நீக்கிடும் போது, பெருக்கு இலக்கம் K=1.0006 ஆகக் கூடி நியூட்ரான் எண்ணிக்கை  விரிந்து முதன் முதல் அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  சிகாகோ ஆய்வு அணுஉலையில் காட்டப் பட்டு ‘அணு யுகம்’ [Atomic Age]  பிறந்தது. மாபெரும் இந்த அரிய சரித்திர சாதனையை நேரில் கண்ட விஞ்ஞான  மேதைகள் பெர்மி, காம்ப்டன், ஸிலார்டு, விஞ்னர், வால்டர் ஸின் ஆகியோர் தவிர  மற்றும் 42 பேர்கள் பால்கனியில் நின்று, இந் நிகழ்ச்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி  அடைந்தனர். உலகின் முதல் அணுஉலை 28 நிமிடங்களுக்கு இயங்கி அதன் பின்  ஆட்சிக் கோல்கள் மறுபடியும் நுழைக்கப் பட்டு உலை நிறுத்தப் பட்டது. இவ்வரிய  வெற்றியை, ஆர்தர் காம்ப்டன் உடனே குறி மொழியில் [Code Language]  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராய் இருந்த ஜேம்ஸ் பிரையன்ட்  கொனாட் [James Bryant Conant] அவருக்குப் தொலை பேசியில், ‘இத்தாலிய  மாலுமி புதிய உலகில் கால் வைத்தார் ‘ என்று செய்தி கொடுத்தார்.

அணு உலை, அணுசக்தியின் பிதா, என்ரிகோ ஃபெர்மி

என்ரிகோ ஃபெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில்  பிறந்தார். ஆக்கத் திறமையும், கணித வல்லமையும், ஆய்வுச் சாதுரியமும்,  சோதனை யுக்தியும் ஒருங்கே பெற்றவர். சிறு வயதிலேயே பெளதிகத்தில் மிகுந்த  ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக் கழகத்திலும், ஐரோப்பாவில் வேறு  இடங்களிலும் படித்துப் பெளதிகத்தில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராகப் பணியாற்றி யவர். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டாக்கதிர்  தேய்வு நியதியைத் [Theory of Beta Decay] தோற்றுவித்தவர். இயல் யுரேனியத்தை  [Natural Uranium] நியூட்ரான் கணைகளால் தாக்கி, செயற்கைக் கதிரியக்கத்தை  உண்டு பண்ணி, புது யுரேனியச் சீரணி மூலகங்களை [Trans Uranium Elements]  உருவாக்கியவர். அந்த பெளதிகச் சாதனைக்கு 1938 இல் ஃபெர்மி நோபல் பரிசு  பெற்றார்.

அவரது மனைவி யூதரானதால், மதச் சீண்டலைத் தாங்க முடியாமல், யுத்த  சமயத்தில் அமெரிக்காவுக்கு விரைந்தார். ஆங்கு கொலம்பியா பல்கலைக்  கழகத்தில் பெளதிகப் பேராசியராகச் சேர்ந்தார். தான் முன்பே துவங்கிய யுரேனிய  நியூட்ரான் அணுக்கரு இயக்கங்கள் 1939 இல் பிரபலமாகி, ‘அணுக்கருப் பிளவு’  விளக்கமாகி ஐரோப்பாவில் வெளியான போது, ஃபெர்மி நியூ மெக்ஸிகோ லாஸ்  அலமாஸில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அடியில் அணுகுண்டு ஆக்கும் முயற்சியில்  இறங்கிய மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.

சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1942 டிசம்பரில் சரித்திரப் புகழ் பெற்ற முதல்  அணுஉலையில், முதல் ‘அணுக்கருத் தொடரியக்கத்தை’ [Nuclear Chain Reaction]  நிகழ்த்திக் காட்டி, முதல் அணுகுண்டு அழிவுக்கும், முதல் அணு மின்சக்தி  ஆக்கத்திற்கும் காரண கர்த்தாவாக விஞ்ஞான வானில் ஒளி வீசினார்.  யுத்தத்திற்குப் பிறகு 1946 இல் சிகாகோ பல்கலைக் கழகப் பெளதிகப்  பேராசிரியராகப் பணியாற்றி, 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில்  எதிர்பாராத விதமாகப் புற்று நோயில் காலமானார். அமெரிக்கா அவரது பெயரில்  50,000 டாலர் ‘என்ரிகோ ஃபெர்மி பரிசு’ [Enrico Fermi Award] ஒன்றை ஏற்படுத்தி  உள்ளது. அவரைக் கெளரவிக்க அமெரிக்கா முதலில் அவரது சாதனைக்கு அப்பரிசை என்ரிகோ ஃபெர்மிக்கே அளித்தது!

Enrico Fermi’s grave in Chicago

************

  1. https://en.wikipedia.org/wiki/Enrico_Fermi
  2. https://www.biography.com/scientist/enrico-fermi
  3. தகவல் :-

    1.http://www.pbs.org/wgbh/amex/bomb/peopleevents/pandeAMEX52.html   [Enrico Fermi]

    2.   http://www.britannica.com/EBchecked/topic/204747/Enrico-Fermi

    3.   http://www.atomicarchive.com/Bios/Fermi.shtml

    4.  http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1938/fermi-bio.html

    5.  http://www.biography.com/people/enrico-fermi-9293405

    6.  http://www.glogster.com/lilwayne4100/enrico-fermi-/g-6lip748esmk4potl8o059a0

    7.   http://www.docstoc.com/docs/6068878/Enrico-Fermi

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 23, 2022 [R-1]

************

ஆயுத மனிதன் (பெர்னாட் ஷாவின் ஓரங்க நாடகம்)

ஆயுத மனிதன்

(The Man of Destiny)

ஓரங்க நாடகம்

அங்கம் -1 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன்.  என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம்.  இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார்.  இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன்.  எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ?  பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது.  ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன்.  முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)


நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி.  தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர்.  வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார்.  அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான்.  அப்போது நெப்போலியனுக்கு வயது 27.  அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான்.  அவனது லெஃப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும்.  ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெஃப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான்.  அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார்.  ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான்.  மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது.  எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன்.  மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன.  பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன.  இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான்.  நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன.  கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான்.  வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான்.  நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான்.  வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான்.  நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)

கியூஸெப்:  (மலர்ந்த முகத்தோடு)  இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் !  மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

நெப்போலியன்:  (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு)  எதுவும் பேசாதே !  என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்:  தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்:  (சட்டெனத் திரும்பி)  கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்:  ஐயோ சக்ரவர்த்தி !  என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்:  (கடுமையாக)  எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்:  (தயங்கிக் கொண்டு)  மேதகு சக்ரவர்த்தி !  என்னிடம் எதுவும் இல்லை !  வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்:  (கோபத்துடன்)  உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்:  மேதகு சக்ரவர்த்தி !  அது முடியாத காரியம் !  என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது !  அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்:  அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்:  எனக்குச் சுடத் தெரியாது பிரபு !  துப்பாக்கியும் கிடையாது !  நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்:  ஒயினா ?  வேண்டாம்.  அதை வீணாக்கக் கூடாது  !

கியூஸெப்:  ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்:  (ஒயினைக் குடித்துக் கொண்டு)  உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம்.  ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான்.  வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

கியூஸெப்:  (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு)  எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள்  நிறைய உள்ளன.  நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை.  உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் !  ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்:  கியூஸெப் !  குருதிக்குப் பண மதிப்பில்லை !  அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது !  (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்:  நான் கேள்விப் பட்டிருக்கிறேன் !  நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்)  தோழனே !  மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது !  (ஆசனத்தில் அமர்கிறான்)  உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது.  சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் !  அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் !  பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்:  எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் !  வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ?  தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்:  நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் !  என்ன புரியுதா ?

கியூஸெப்:  அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி !  அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் !  நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.  தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்:  (புன்னகை புரிந்தவாறு)  என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே !  ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ?  ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன்.  உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் !  ஒருத்தனைப் போல் மற்றொருவன் !  ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் !  உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ?  ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்:  கியூஸெப் !  நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் !  போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் !  ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் !  ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது !  குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் !  அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் !  மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் !  அவர் தரை வழியாகப் போனார் !  நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்:  நல்ல யோசனை பிரபு !  ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

நெப்போலியன்: அந்தப் பெரிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற எனது எஞ்சினியரை நியமித்திருக்கிறேன். இந்த பிரிட்டீஷ் வணிக நரிகளை எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிப்பது எனது குறிக்கோள்களில் ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதுவும் சொல்லாதே !

கியூஸெப்: (அருகில் வந்து குனிந்து பணிந்து) மன்னிக்க வேண்டும் பிரபு. நான் ஒரு சாதாரண விடுதிக்குச் சொந்தக்காரன் ! நீங்கள் பிரான்சின் மாபெரும் தளபதி. இப்படி யெல்லாம் நான் தங்களிடம் பேசக் கூடாது. மேன்மை மிகும் நீங்கள் மற்ற வீரத் தலைவரைப் போன்றவர் அல்லர். யுத்தக் கலையில் உங்களுக்கு நிகர் வேறு யார் ? நீங்கள் ஒருவரே !

நெப்போலியன்: அப்படியா ? என்னைப் பற்றி இத்தாலியச் சிற்றூரில் கூடப் பரவியுள்ளதே ! வேறென்ன சொல்கிறார் என்னைப் பற்றி !

கியூஸெப்: ஆஸ்டிரியப் படைகளை முறியடித்து இத்தாலியைக் காத்த மாவீரர் அல்லவா தாங்கள் ! ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் பிரபு ! உங்களுக்குத் தெரியுமா மேல் மாடியில் புதிதாய் இன்று வந்து தங்கியுள்ள ஓரிளம் பெண்ணை !

நெப்போலியன்: (நிமிர்ந்து தலைதூக்கி) இளம் பெண்ணா ? அந்தப் பெண்ணுக்கு வயதென்ன ?

கியூஸெப்: நல்ல வனப்பான வாலிப வயதுதான் !

நெப்போலியன்: வயதை எண்ணிக்கையில் சொல் ! பதினாறா அல்லது இருபதா ?

கியூஸெப்: முப்பது வயது இருக்கலாம் பிரபு !

நெப்போலியன்: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பாளா ?

கியூஸெப்: அழகு ஒப்புமையானது பிரபு ! அது அவரவர் விழியைப் பொருத்தது ! உங்கள் கண் மூலம் நான் காண முடியாது ! ஒவ்வொரு மனிதனும் அழகைத் தீர்மானிக்க வேண்டும். என் கருத்து அவள் ஒரு கவர்ச்சியான பெண் என்பது. இந்த மேஜைக்கு அவள் வந்து அமர நான் ஏற்பாடு செய்யவா ?

நெப்போலியன்: (எழுந்து நின்று) வேண்டாம். இந்த மேஜையில் எதுவும் செய்யாதே. நான் வரைப்படத்தை விரித்து வைத்துள்ளேன் ! யாரும் அதைப் பார்க்கக் கூடாது. நான் காத்திருக்கும் என் படையாள் வரும் வரை யாரையும் நான் சந்திக்க விரும்ப வில்லை. (தன் சங்கிலிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கிறான்.)

கியூஸெப்: ஓ உங்கள் படையாளியா ? இத்தனை நேரமாக வராமல் இருப்பதற்குக் காரணம் ? பிரபு ! வழியில் அவனை ஆஸ்டிரியப் பகைவர் பிடித்திருப்பார். தப்பி வந்திருந்தால் இப்படித் தாமதம் செய்வானா ?

நெப்போலியன்: (கோபத்துடன்) அப்படி நடந்திருந்தால் என் ஆறாக் கோபத்துக்கு சிலர் ஆளாவார் ! முதலில் அப்படி சொன்ன உன்னைத் தூக்கிலிடுவேன் ! அடுத்து உன் மனைவி. அப்புறம் மேல்மாடி அழகி. அத்தனை பேர் தலைகளும் தரையில் உருண்டோடும் !

கியூஸெப்: தூதரைக் கொல்வீரா ? ஆனால் தயவு செய்து என் மனைவியை விட்டு விடுங்கள் ! அப்பாவி அந்த இளம் பெண் இதில் ஒன்றும் பங்கெடுக்காதவள் !

நெப்போலியன்: உன்னை ஒருபோதும் தூக்கிலிட மாட்டேன். உயிரை இழக்க எதிர்ப்புக் காட்டாதவனைக் கொல்வதில் என்ன பயன் ?

கியூஸெப்: உண்மைதான் பிரபு ! என்னுயிர் பிழைத்தது ! ஐயமின்றி நீங்கள் பெரிய மனிதர் ! பொறுப்பதில் உங்களை மிஞ்சுவோர் இல்லை. நியாயத்தை நிறுத்துப் பார்ப்பதில் நீங்கள்தான் உயர்ந்த நியாதிபதி !

நெப்போலியன்: போதும் உமது முகத்துதி ! வாயை மூடு. போ வெளியே நில் ! என் படையாளி வந்தவுடன் உள்ளே அவனை அழைத்து வா ! (மறுபடியும் வரைப்படத்தில் கவனம் செலுத்து கிறான்)

கியூஸெப்: அப்படியே செய்கிறேன். அவன் வருகையை உடனே தெரிவிக்கிறேன் (வெளியே போகிறான்)

நெப்போலியன்: (வரைப்படத்தைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து) முதலில் இத்தாலி, அடுத்து ஆஸ்டிரியா, அப்புறம் ஹாலண்டு. அடுத்த ஆண்டுக் கடைசியில் எகிப்து ! சூயஸ் கால்வாய்த் திட்டம் துவங்க வேண்டும். இந்தியாவுக்குப் புதிய கடல் மார்க்கம் சூயஸ் வழியாக !

பெண்ணின் குரல்: (தூரத்திலிருந்து இனிமையான குரலில்) கியூ……..ஸெப் ! ஹலோ ! கியூஸெப் ! எங்கே இருக்கிறாய் ? காது கேட்கிறதா ?

நெப்போலியன்: யார் குரல் அது ?

கியூஸெப்: (உள்ளே எட்டிப் பார்த்து) அதுதான் பிரபு ! மேல்மாடி அழகி ! அவள் பேசுவது இசைபோல் இனிக்கும் !

நெப்போலியன்: மேல்மாடி மங்கையா ?

கியூஸெப்: அவள் ஓர் அதியசப் பெண் ! புதிரானவள் ! பிரபு !

நெப்போலியன்: அதியசப் பிறவியா ? பெண் எப்போதும் புதிரானவள்தானே ! அவள் எந்த நாட்டுக்காரி ? எப்படி வந்தாள் ?

கியூஸெப்: யாருக்குத் தெரியும் ? தாங்கள் குதிரை வாகனத்தில் வந்து தங்குவதற்குச் சற்று முன்னேதான் அவள் வந்தாள். யாரும் அவளுடன் வரவில்லை. ஒரு பெட்டி, கைப் பையுடன் வந்தாள். அவள் வாகனத்தை ஓட்டி வந்தவன் அவள் குதிரையை “கோல்டன் ஈகிள்” விடுதியில் விட்டு வந்ததாகச் சொல்கிறான். அவளது குதிரை அலங்கார அணிகள் பூண்டிருந்ததாம்.

நெப்போலியன்: என்ன ? அணிசெய்த குதிரையோடு ஓரிளம் மங்கையா ? அவள் ஆஸ்டிரிய நாட்டிச் சேர்ந்தவளா ? அல்லது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளா ?

கியூஸெப்: பிரெஞ்ச் நாடாக இருக்கலாம்..

நெப்போலியன்: ஐயமின்றி அது அவளது கணவனின் குதிரை ! லோதி யுத்தத்தில் செத்துப் போயிருப்பான் ! பாவம் !

பெண்ணின் குரல்: (இனிமையாக) கியூஸெப் !

நெப்போலியன்: (எழுந்து நின்று) நேற்றுப் போரில் இறந்தவன் மனைவி, வாயில் வரும் குரல் இல்லை அது !

கியூஸெப்: கணவர்கள் செத்துப் போவது எப்போதும் துக்கமாக இருப்பதில்லை பிரபு ! (பெண் குரல் வரும் திசை நோக்கி) இதோ வருகிறேன் பெண்ணே ! (உள்ளெ போகிறான்)

நெப்போலியன்: (அவனைத் தடுத்து நிறுத்தி) நில் போகாதே ! அவளே இங்கு வரட்டும்.

பெண்ணின் குரல்: (பொறுமை இழந்து) கியூஸெப் ! இங்கு சற்று வருகிறாயா ?

கியூஸெப்: பிரபு ! என்னை அனுமதியுங்கள். என் கடமை அது ! யாரும் என்னுதவியைத் தேடி விடுதியில் அழைத்தால் நான் உடனே போக வேண்டும்.

ஆடவன்: (அப்போது வெளியிலிருந்து ஆடவன் ஒருவன் குரல் கேட்கிறது) விடுதியின் அதிபரே ! எங்கிருக்கிறீர் ? (தடதட வென்று பூட்ஸ் சத்தமுடன் ஓர் இராணுவ அதிகாரி நுழைகிறான்.)

நெப்போலியன்: (அவசரமாய்த் திரும்பி) அதோ ! என் படையாளி வந்து விட்டான். போ நீ உள்ளே ! அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேள் !

(கியூஸெப் உள்ளே போகிறான்)

நெப்போலியன்:  (பொறுமை இழந்து)  கடைசியாய் வந்து சேர்ந்தாயே !  என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ?  காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ?  ஏன் தடுமாறுகிறாய் ?  என்ன நடந்தது ?  குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ?  விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ !  குதிரைக்கு ஒரு கால் போனதா ?  அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

லெஃப்டினென்ட்:  (நடுங்கிக் கொண்டு)  குதிரை காணாமல் போனது பிரபு !  நடந்து வர வில்லை !  ஓடி வந்தேன் !  களைத்துப் போய் வாய் குழறுகிறது.

நெப்போலியன்:  எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

லெஃப்டினென்ட்:  (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

நெப்பொலியன்:  கடிதங்களுக்கு இறக்கை இல்லை !  அவை எப்படிக் களவு போகும் ?

லெஃப்டினென்ட்:  எனக்குத் தெரியாது பிரபு !

நெப்போலியன்:  உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

லெஃப்டினென்ட்::  நான் பண்ணியது தவறுதான் பிரபு !  தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு !  படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை !  அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

நெப்போலியன்:  என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே !  உன் வேலை என்ன ?

லெஃப்டினென்ட்:  தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

நெப்போலியன்:  அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

லெஃப்டினென்ட்:  பிரபு !  என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான்.  அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் !  வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் !  பார்த்தால் ஆடு போல் தெரிவான் !  பாசாங்குக்காரன் !

நெப்போலியன்:  எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ?  குதிரை எப்படிக் காணாமல் போனது ?  இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ?  அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது !  ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !

லெஃப்டினென்ட்:  அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு !  அதுதான் எனது முதல் வேலை !

நெப்போலியன்:  உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது.  போ முதலில் அதைச் செய் !  நான் காத்திருக்கிறேன்.  போ ! நில்லாதே என் முன்பு !

லெஃப்டினென்ட்:  அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான்.  அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் !  என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் !  ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் !  ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

நெப்போலியன்:  அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

லெஃப்டினென்ட்:  அது மட்டுமில்லை !  அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

நெப்போலியன்:  ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

லெஃப்டினென்ட்:  என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

நெப்போலியன்:  அறிவு கெட்டவனே !  உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் !  என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

நெப்போலியன்:  மதி கெட்டவனே !  அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு !  உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே !  எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

லெஃப்டினென்ட்:அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு !  அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் !  அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் !  காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

நெப்போலியன்:  அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ?  போ போய் அவன் காலில் விழுந்து  நமது கடிதங்களைப் பெற்று வா !  கையை முறிக்கவும் வேண்டாம்.  காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் !  அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

லெஃப்டினென்ட்:  அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு !  அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?

நெப்போலியன்:  ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் !  அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் !  நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !

லெஃப்டினென்ட்:  அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ?  நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)

நெப்போலியன்:  (உரக்கப் பேசி) கியூஸெப் !  இங்கே வா !  உடனே வா !

கியூஸெப்:  (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?

நெப்போலியன்:  (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு)  இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் !  முதலில் உண்பதற்கு உணவைக் கொடு !  ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் !  இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.

கியூஸெப்:  அப்படியே செய்கிறேன் பிரபு !  வாருங்கள் தளபதி ஐயா !

(லெஃப்டினென்ட்:  மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)

லெஃப்டினென்ட்: (தனக்குள் முணுமுணுத்து)  முதலில் உண்பதா ?  அல்லது படுக்கையில் விழுவதா ?

கியூஸெப்:  முதலில் உங்கள் அறையைக் காட்டுகிறேன் !  படுக்கையில் விழுந்தால் உமது பட்டினி வயிறு தூங்க விடாது.  உண்ட பிறகு உறங்கலாம் !

லெஃப்டினென்ட்:  உண்ணும் போதே மேஜையில் நான் உறங்கி விடுவேன் !

கியூஸெப்:  தளபதியாரே !  ஆஸ்டிரியன் யாராவது உம்மைத் தாக்கியுள்ளானா ?

லெஃப்டினென்ட்:  என்னைத் தாக்குவானா ஓர் ஆஸ்டிரியன் ?  அவன் முதுகெலும்பை முறித்து விட மாட்டேனா ?  என்னை ஏமாற்றியவன் ஓர் ஆஸ்டிரியனாக இருக்கலாம் !  என்னை உயிர் தோழன் என்று வாய்ச் சொற்களால் குளிப்பாட்டினான் !  என்னைப் போல் ஒருவனைச் சந்திக்க வில்லை என்று இனிமையாய்ப் பேசிக் கவர்ந்தான்.  தன் கைக் குட்டையால் என் கழுத்தைச் சுற்றி அணிந்தான் !  இதோ அந்தக் கைக்குட்டை !  (பையிலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.)

கியூஸெப்:  (கைக்குட்டையை உளவி, மோந்து பார்த்து)  கமகமவென மணக்கிறது.  ஒரு பெண்ணின் கைக்குட்டைபோல் தெரிகிறது !

நெப்போலியன்:  (நடந்து போய் கைக்குட்டையை வாங்கி, முகர்ந்து)  ஆமாம் ! நறுமணமுள்ள இது ஒரு பெண்ணின் கைக்குட்டைதான் !  (முன் பைக்குள் அதை வைத்துச் சிரித்துக் கொண்டு)  என் காதலியை நான் மறக்காமல் இருக்கக் கைக்குட்டை நறுமணம் நினைவூட்டும் !

லெஃப்டினென்ட்:  ஜெனரல் ! என் உறுதி மொழி இது!  அந்த வாலிபன் மட்டும் என் கையில் அகப்பட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது !

மாடியிலிருந்து பெண்ணின் குரல்:  கியூஸெப் !  மேலே சற்று வருவீரா ?

லெஃப்டினென்ட்:  யார் அரவம் அது ?  குரல் இனிமையாக உள்ளது !

கியூஸெப்:  அது மாடிப் பெண்ணின் இசைக் குரல் தளபதி !

லெஃப்டினென்ட்:  யார் அந்த மாடிப் பெண் ?

மாடிப் பெண்:  எங்கே இருக்கிறாய் கியூஸெப் ?  மேலே வா ?

லெஃப்டினென்ட்: (கியூஸெப்பைத் தொடர்ந்து லெ·ப்டினென்ட் மாடிப்படியில் ஏறி) கியூஸெப் !  மேஜை மீதுள்ள என் வாளை எடுத்துக் கொடு !

கியூஸெப்:  சொல்வது உமது காதில் விழவில்லையா ?  அவள் ஓரிளம் மங்கை !  உடைவாள் எதற்கு ?

லெஃப்டினென்ட்:  அவன் குரல் போல் கேட்கிறது !  என்னை ஏமாற்றியவன் !  என் குதிரையைக் களவாடியவன் !  அரசாங்கக் கடிதங்களை அபகரித்தவன் !  (வாளை உருவிக் கொண்டு அறை திறப்பதைப் பார்க்கிறான்.)

(நெப்போலியன் மாடிப் படி அருகில் நின்று நோக்குகிறான்.  அறைக்கதவு திறந்ததும் ஓரிளம் அழகி மெல்ல வருகிறாள்.  ஒய்யாரமாக நிமிர்ந்து நிற்கிறாள்.  நல்ல உயரம்.  பளிங்குச் சிலைபோல் எடுப்பான தோற்றம்.  கண்களில் அறிவுச்சுடர் வீசுகிறது.  அவளது பொங்கும் இளமை மேனியில் பெண்மை பளிச்செனத் தெரிகிறது.  கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள். கம்பீரமாக நடந்து வருகிறாள்.  மங்கையின் மயக்கும் விழிகளைக் கண்டதும் நெப்பொலியனின் மனம் வல்லமை இழந்து அவளிடம் சரண்டைகிறது !  வாளை ஓங்கி வந்த லெ·ப்டினென்ட் வாளைத் கீழே தணித்துக் கொள்கிறான். அவன் கண்களை அவன் நம்ப முடியவில்லை.  மங்கை அவனைக் கண்டும் காணாத போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.  அவள் லெ·ப்டினென்ட் முகத்தைக் கூர்ந்து நோக்கியதும் அவன் மூஞ்சில் கோபம் கொதித்தெழுகிறது.  எதையும் காட்டிக் கொள்ளாமல் இளம் மங்கை அவனைக் கடந்து செல்கிறாள்.)

கியூஸெப்:  மிஸ் மேடம் !  நீ ஓர் அழகி !  வந்தனம் !  சக்ரவர்த்தி நெப்போலியன் சார்பாக உன்னை நான் வரவேற்கிறேன்.

மாடிப் பெண்:  நன்றி கியூஸெப் !  பிரெஞ்ச் சக்ரவர்த்தியா இந்த விடுதியில் தங்கியுள்ளார் ?

கியூஸெப்:  (சிரித்துக் கொண்டு)  ஆமாம் மிஸ் மேடம் !

மாடிப் பெண்:  என் பெயர் ஹெலினா !

நெப்போலியன்:  (முணுமுணுத்து)  ஹெலினா ?  தோற்றத்தைப் போல் இனிய பெயர் !

(நெப்போலியன் புன்னகை செய்கிறான்.  பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து பார்க்கிறான்.)

லெஃப்டினென்ட்:  (ஆவேசமாய்)  ஆகா !  அகப்பட்டுக் கொண்டாய் அயோக்கிய வாலிபனே !  பெண்ணைப் போல் வேடம் போட்டாலும் நீ தப்ப முடியாது !  உன் வேடத்தைக் கலைத்து உன் கழுத்தை நெரிக்கிறேன்.  (கோபமாய்ப் பெண்ணை நெருங்குகிறான்)

கியூஸெப்:  பொறுப்பீர் தளபதி !  என்ன சொல்கிறீர் ?  அவளொரு வனிதை !  வாலிபன் என்று ஏன் சொல்கிறீர் ?

ஹெலினா:  (பயந்து போய் நெப்போலியன் பின்னால் ஒளிந்து கொண்டு)  ஜெனரல் ஸார் !  காப்பாற்றுவீர் என்னை !  இந்தப் பயங்கரவாதி என்னைச் சீண்டுகிறான் !  நான் ஓர் அப்பாவிப் பெண் !  யாரையோ நினைத்து என்னை ஆடவனாய் நினைக்கிறான் !  காப்பாற்ற மாட்டீரா என்னை ?

நெப்போலியன்:  நெருங்காதே அவளை !  அறிவு கெட்டவனே !  கத்தியைக் கீழே போடு ! புத்தியின்றி ஒரு பெண்ணிடமா உன் வீரத்தைக் காட்டுகிறாய் !  வழியில் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வனிதை மேல் ஏன் பாய்கிறாய் ?  எட்டி நில் !  அவளைப் பார்த்தால் ஆணைப் போல் தெரிய வில்லை !  அவள் ஓர் அழகிய மாது !  நமது மதிப்புக்கும் பரிவுக்கும் உரிய மங்கை அவள் !  (பெண்ணைப் பார்த்து) கவலைப் படாதே ஹெலினா !  அவன் மதி இல்லாத லெ·ப்டினென்ட் !  குதிரையைப் பறிகொடுத்துப் பட்டினியோடு கால் நடையில் வந்திருக்கிறான் !

(தொடரும்)

***************************

“எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட் இதிகாசத்தை (Greek Epic Iliad -The Siege of Troy) உருவாக்குகிறேன் ! அனுதினமும் அதைத்தான் நான் ஆக்கி வருகிறேன்.”

“படைவீரன் ஒருவன் வர்ண நாடா (Coloured Ribbon) ஒன்றைப் பெறக் கடுமையாக நீண்ட காலம் போரில் சண்டை செய்வான்.”

“இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒற்றர்களின் வாயிலிருந்து அவற்றை வரவழைக்கத் துன்புறுத்தும் காட்டிமிராண்டித்தனமான பழக்க முறை தவிர்க்கப் பட வேண்டும். இம்மாதிரி அவரைச் சித்திரவதை செய்து கேள்விகள் கேட்பதால் பயனுள்ள எதுவும் விளையாது.”
“அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !”

“போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர்.  அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்.”

“போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்”

“போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு.  படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு.”

நெப்போலியன், “யுத்தக் கலை” (1798)

*************************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon –Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 27, 2010)

பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்

(1908–2003)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.”

ரோமானியப் பொன்மொழி

“சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும்.”

எட்வர்டு டெல்லர்

ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன!

எட்வெர்டு டெல்லரின் இடருற்ற வாழ்க்கை வரலாறு!

எட்வெர்டு டெல்லர் 1908 ஜனவரி 15 ஆம் தேதி ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹங்கேரியில் அரசியல், சமூகக் கொந்தளிப்புக்கள் உச்ச நிலையில் நாட்டை ஆட்டிக் கொண்டிருந்ததால், டெல்லர் தன் இளமை வாழ்க்கையில் மிகவும் அவதி யுற்றார்! அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy]! அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி! முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை! ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று! அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller]! அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள்! பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள்! மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர்! பிற்காலத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையும், சோவியத் யூனியன் ஸ்டாலினையும் டெல்லர் மிகவும் வெறுத்ததற்கு அவரது வாலிபக் காலக் கொடும் போர்களே காரணம்!

முதலில் டெல்லர் தாய்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுப் பிறகு ஜெர்மனிக்குச் சென்று கார்ல்ஸ்ரூ பொறியியல் கூடத்தில் [Karlsruhe Institute of Technology] பயின்று, கெமிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றார்! அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார்! மியூனிச்சில் மாணவனாக இருந்த போது, ஓடும் மின்சார வண்டியின் அடியில் விழுந்து, அவரது வலது கால் வெட்டப் பட்டுப் பிறகு பொய்க்காலில் வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய தாயிற்று!

டெல்லர் அடுத்து டென்மார்க் சென்று அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ரிடம் [Neils Bohr], படித்து அணுவியல் பெளதிகத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். பிறகு 1931-1933 இ ல் ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] ஆசிரியராகப் பணி யாற்றினார். அங்கே புகழ் பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுடன் [George Gamow (1904-1968)] பழகும் வாய்ப்பு டெல்லருக்குக் கிடைத்தது. அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் அதிபதி யானதும், அங்கே விஞ்ஞானக் கல்வி புகட்டிப் பிழைக்கலாம் என்ற டெல்லரின் ஆசை நாசமானது!

புத்துலகம் அமெரிக்கா நோக்கி டெல்லர் புறப்பாடு

1935 இல் அவரும் அவரது மனைவி அகஸ்டா ஹார்க்கனி [Augusta Harkanyi] இருவரும் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஸிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] சேர்ந்து டெல்லர் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே பணிபுரிந்த விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமாவை [George Gamow] மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார்! கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் [Radiactive Decay of Heavier Elements] போது பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்துப் புதியக் கோட்பாடுகளை எழுதினர்கள். அவற்றில் ஒன்று காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay]. மேலும் விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றியும் இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் [Otto Hahn & Strassmann] ஆகிய இருவரும் யுரேனிய அணுவைப் பிளந்ததாக நீல்ஸ் போஹ்ர் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு டெல்லர் பிரமிப்பும், அதிர்ச்சியும் அடைந்தார்! அப்போது அமெரிக்க ஜனாதிபதி பிராங்கலின் ரூஸவெல்ட் அமெரிக்க விஞ்ஞானிகளை நோக்கி, நாஸிக் ஜெர்மனியை எதிர்த்து அமெரிக்காவைப் பாதுகாக்க உதவும்படி ஆணையிட்ட போது, எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆக்கத்திற்குத் திட்ட மிட்டுத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தார்!

1941 இல் டெல்லர் அமெரிக்கக் குடியினன் [U.S. Citizen] ஆகி, மன்ஹாட்டன் மறைமுக அணு ஆயுத ஆக்கத் திட்டத்தில் [Top Secret Manhattan Project] ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமையின் கீழ்ப் பணி புரியப் புகுந்தார்! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார்! செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர்! அணு குண்டு உண்டாக்கும் பேரளவுத் தீப்பிழம்பைப் [Hot Plasma] பயன்படுத்தி ஹைடிரஜன் மூலகத்தின் [Hydrogen Element] ஏகமூலமான, டிட்டிரியம், டிரிடியம் [Deuterium & Tritium, Isotopes of Hydrogen] பளுவைக் கொளுத்தி, வெப்ப அணுக்கரு இயக்கத்தை ஏற்படுத்தி ஒரு குட்டிச் சூரியனைப் படைத்து விடலாம் என்று ஓர் ஆலோசனையைக் கூறினார்! 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார்! மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார்! அநேக விஞ்ஞானிகளுக்கு டெல்லரின் பைத்தியகாரப் போக்கு சிறிது கூடப் பிடிக்க வில்லை!

முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிப்பில் எட்வெர்டு டெல்லர்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லர் லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவை விட்டு விட்டு, சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து பேராசிரியர் பதவி பெற்றார். 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறிக்கோள் ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று அரசாங்க அதிகாரிகளுடன் வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகாரமும் அளித்தார்!

லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு எதிர்மறையாக, லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] புதியதாகக் கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன! அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன! அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் முடிவில் நிகழும் பளு இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது! அவ்வாறு எழும் பளு இழப்பு எவ்வளவு சக்தியை உண்டாக்கும் என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பளு சக்திச் சமன்பாடு ‘ [Mass Energy Equation] மூலம் கணக்கிட்டு அறியலாம்!

ஹைடிரஜன் குண்டு மெய்யாக ஓர் ‘பிளவுப் பிணைவுக் குண்டு ‘ [A Fission Fusion Bomb]. அதனுள்ளே இரு ஆயுதங்கள் அமைப்பட்டுள்ளன. முதலாவது தூண்டும் அணுப்பிளவுக் குண்டு [Fission Bomb]. இரண்டாவது முடிவில் வெடிக்கும் ணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டு. அணுப்பிளவு இயக்கம் முதலில் வெடித்து, அளப்பரிய அழுத்தமும், வெப்பமும் உண்டாகி அணுப்பிணைவு எருவை எரித்துப் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில், சூரியன் போன்று வெப்ப அணுக்கரு இயக்கத்தைத் தூண்டி, தொடரியக்கம் நிகழ்கிறது! அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீச்சும் எழுகின்றன! அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும்! இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம்! டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்று முடிவான அமைப்பைச் செய்தார்! முடிவான அந்த வெப்ப அணுக்கரு முறை ‘டெல்லர்-உலாம் அமைப்பு ‘ [Teller-Ulam Configuration] என அழைக்கப் படுகிறது.

1952 நவம்பர் முதல் தேதி டெல்லர்-உலாம் அமைப்பில் தயாரான 10 மெகா டன் TNT வெடிப்பாற்றல் உள்ள முதல் ஹைடிரஜன் குண்டு, பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் வெற்றி கரமாக வெடிக்கப் பட்டுச் சோதிக்கப் பட்டது! அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது! ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை! பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது! ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது! எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம்! முரட்டுப் பிடிவாதத்தில் இறுதியாக ராட்சத அழிவு ஆயுதத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற எட்வெர்டு டெல்லர், ஆயுதச் சோதிப்புக்குப் பின்பு பல உலக விஞ்ஞான மேதைகளின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்!

உலக நாடுகளின் அணு ஆயுதப் பந்தயம்! ஆயுதக் கட்டுப்பாடு!

அணுகுண்டுகளின் வெடிப்பாற்றலை கிலோ டன் டியென்டியில் [Kiloton TNT] குறிப்பிடும் போது, குறைந்தது 1000 மடங்கு அதிக அழிவு சக்தியுடைய, ஹைடிரஜன் குண்டுகளை மெகா டன் டியென்டியில் [Megaton TNT] கணக்கிடுகிறார்கள்! 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன! ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன! மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன! 1980-1990 ஆண்டுகளில் மட்டும் 40,000 பேரளவு அழிவியற்றும் வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் [Weapons of Mass Destruction] தயாரிக்கப் பட்டு, மனித இனத்தை அழித்துவிடப் பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அறியப் படுகின்றது!

35 ஆண்டுகள் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாய் அணு ஆயுதங்களையும், அவற்றை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணை களையும் அதிகரித்து அடுக்கிக் கொண்டே போயுள்ளன! 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன! அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின! ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன! ஆயினும் முடிவில் நடந்த தென்ன ? இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன! அமெரிக்கா மட்டும் 10,000 போராயுதக் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளது!

1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆதிக்கம் குடை சாய்ந்து, அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கு இடையே ஊமைப் போரின் உக்கிரம் குறைந்து போனதும், அந்த அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது!

வாள்முனையை ஏர்முனையாய் உலக நாடுகள் மாற்றுமா ?

அணுகுண்டு உற்பத்தி, அணு ஆயுதச் சோதனைகளை உடனே நிறுத்தும்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு, லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க், பெர்டிரான்டு ரஸ்ஸல் போன்ற உலக மேதைகள் கூக்குரல் எழுப்பினர்! ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர்! அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி! ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார்! ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும்! ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது! ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை! உலக நாடுகள் இப்போது தமது வாள்களின் முனைகளைக் கூர்மையாகத் தீட்டுவதோடு, புதுப் புது ஆயுதங்களை உற்பத்தி செய்து பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன!

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில், முற்பட்ட அணு ஆயுதங்களின் விருத்திக்கும், அவற்றைச் சோதிப்பதற்கும் எப்போதும் சலிப்படையாமல் டெல்லர் பேராதரவு அளித்தார்! வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர்! 1980 ஆண்டுகளில் ஜனாதிபதி ரேகனுக்கு ‘வானவெளிப் போர்கள் ‘ [Star Wars] என்ற திட்டமிட்டப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு [Strategic Defense Initiative] எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கிறார்!

எட்வெர்டு டெல்லரின் முரண்பாடான பேச்சுகள்!

அமெரிக்க அணு ஆயுத வினைகளில் வேலை செய்த விஞ்ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் கடுமை, முரண்பாடு மிகுந்து பலரது எதிர்ப்புக்களையும் மீறி, வெப்ப அணுக்கரு ஆயுதத்தை ஆக்கியே ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளில் வெற்றி பெற்றக் கர்மவாதி, எட்வெர்டு டெல்லர்! படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர்! பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர்! 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார்! ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகப் பேசவில்லை! அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார்! ‘அப்போதும் சரி, இப்பவும் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவின் மேல் கொண்டிருந்த தேசப் பற்றின் மீது எனக்கு ஐயப்பாடு இல்லை ‘ என்று டெல்லர் தன் நூல் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்!

நோபெல் பரிசைப் பற்றி ஒருவர் டெல்லரைக் கேட்ட போது அவர் கூறியது: “எனக்கு நோபெல் பரிசு கிடைத் திருந்தால், எதற்காக உனக்குக் கொடுத்துத் தொலைத்தார்கள், என்று கடிவார்கள் பொது நபர்கள்! அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள்! முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது!”  “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்! அதற்கு எனது பதில், இல்லை! இல்லை! இல்லை! அணுகுண்டில் மாண்டு போனவருக்காக, காயம் அடைந்தோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்! ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை! ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார்! அவரது ஒரே ஓர் அந்தரங்க பயம், ஹிட்லர் அணு ஆயுத உற்பத்தியில் முந்திக் கொண்டிருந்தால், உலகின் கதி என்ன வாயிருக்கும் என்பதே!

எட்வெர்டு டெல்லர் பெற்ற மதிப்புகள், பரிசுகள்!

டெல்லர் எழுதிய நூல்கள்: விஞ்ஞான ரகசியங்களைப் பற்றிய உரையாடல்கள் [Conversations on the Dark Secrets of Physics (1991)], கத்தியை விடக் கவசமே மேல் [Better a Shield Than a Sword (1987)], எளிமையை நோக்கி முற்பாடு [Pursuit of Simplicity (1980)], விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும் சக்தி [Energy from Heaven & Earth (1979)]. எட்வெர்டு டெல்லர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பரிசு, அடுத்து 1962 இல் அமெரிக்காவின் மதிப்புள்ள என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தையும் பெற்றார். ஸ்ரேல் பொறியியல் கூடத்தின் ஹார்விப் பரிசு, மற்றும் தேசிய விஞ்ஞானப் பதக்கத்தையும் பெற்றார்.

டெல்லர் 1956 முதல் 1958 வரை அமெரிக்க அணுசக்திப் பேரவையின் [U.S. Atomic Energy Commission] ஆலோசகராக இருந்திருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வெண்ணிற மாளிகை விஞ்ஞானக் குழுவினரின் [White House Science Council] அங்கத்தினராகவும், அமெரிக்க விமானப்படை விஞ்ஞான ஆலோசகராகவும் [Scientific Advisory Board of the U.S. Air Force] இருந்திருக்கிறார்! மேலும் அவர் அமெரிக்க அணுவியல் கழகம் [American Nuclear Society], அமெரிக்க விஞ்ஞானக் கழகம் [American Academy of Science] ஆகியவற்றின் சிறப்புநராக ஆக்கப் பட்டார்.

எட்வெர்டு டெல்லர் 2003 இல் காலமானார்.  95 வயதில் கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்று அவர் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அவரது மூளை கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருந்தது! அவரது அருமை மனைவி 2000 ஆம் ஆண்டு காலமானார்.  அடிக்கடி அவர் கூறும் ரோமானியப் பொன்மொழி, ‘ஒருவர் நாட்டில் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும் ‘ என்பது. ‘சமாதானத்தை விழைவோர் கையில் உன்னத ஆயுதப் பலம் இருந்தால் தான், உலகில் அமைதி நிலவும்’ என்று அழுத்தமாகக் கருதியவர்.

******************

Information:
1.  http://en.wikipedia.org/wiki/Edward_Teller (January 10, 2009)

2. Creams & Dreams.org Bomb Pioneer Edward Teller Dies (September 10, 2003)

++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 21, 2014