காலத்தின் கோலம்

சி. ஜெயபாரதன், கனடா
காலக் குயவன் ஆழியைச் சுற்றி,
ஞாலம் உருவாக்கி
கோலம் போட்டுக்
பாலம் அமைத்தான் வரலாற் றுக்கு
ஜாலம் பண்ணி !
காலவெளி
பிரபஞ்சத்தின் பருவம் காட்டும்
கைக் கடிகாரம் !
கடவுளின் பயணக் குதிரை
காலப் பறவை !
பின்னே செல்லாது
முன்னோடும் அகிலத்தின்
முழு மூச்சு !
அரங்கத்துக்கு ஏற்றபடி
கரகம் ஆடும் காலம்
தாளம் மாறும் !

கடந்த காலம்
விடிந்தது !
நிகழ்காலம் நடை கற்குது !
எதிர்காலம் தூங்குது !
குதிரை மாயை என்றால்
தேரோட்டியும்
ஓர் மாயை தான்.
இந்த வையகம்  பொய்யா?
இந்தக் காயம் பொய்யா ?
தாய், தந்தையர்
பொய்யா ?
சிவமும் சக்தியும் மாயையா ?
காலம் மாயை என்றால்
ஒளியும் மாயையா ?
காலக் குதிரை
முதுகில் சுமக்கும்
இம்மூன்றும்
நிஜமா ?  நிழலா ? கானல் நீரா ?

 

++++++++++++++++++++

2 thoughts on “காலத்தின் கோலம்”

  1. அன்புள்ள ஜெயபாரதன் அவர்களுக்கு ,

    காலத்தின் சுழலை கவிதையில் காலா காலம் நிற்கும் வண்ணம்
    அற்புத வரிகள் படைத்து இணையத்தில் பதிக்கும் போதே தெரிகிறதே
    காலம் மாயை அல்ல..!காலத்தின் சுழற்சியில் சுழல்வதெல்லாம்
    கழன்றாலும், மீண்டும் மீண்டும் உருவாக்கிக் காப்பதும் காலமே.
    எண்ணங்கள் விரைவில் கடந்து விடும்….காலங்கள் எண்ணங்களில்
    விரைவில் கரைந்து விடும்..தான் நிஜம் என்பதை மனிதனுக்கு
    நொடிக்கு நொடி நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் அற்புத
    காலத்தை கையில் பிடிக்க முடியாமல் காலடியில் நழுவுவது
    ஏனோ?

    இருந்த இடத்தில்
    கண்ணாடி
    நேற்றும் நானடி
    இன்றும் நானடி
    நாளையும் நானடி
    நீ மட்டும் ஏனோ
    ஒவ்வொரு நாள்
    ஒவ்வொரு
    முகம் காட்டுகிறாய்…
    காலம் உன்னில்
    வரைந்த கோலம்…
    என்னில் வரையும் போது
    நீ குழந்தையாய்….!
    மீண்டும் என்முன்..!

    இப்படிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை..!

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.,

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.