பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்

Hoover Dam

Hoover Dam, USA

 

பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் 

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

https://youtu.be/XnPi3FdNBYc

https://youtu.be/mMUzO1b_q1E

+++++++++++++

சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக

சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ

வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக

விழிமயங்கி நோக்குவாய் போ போ போ ….

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

மகாகவி பாரதியார்

‘பாதுகாப்பான நீர்வளப் பரிமாற்றம், அனைவருக்கும் போதிய சுகாதாரக் கழிவுநீக்க அமைப்புகள் ஆகிய இரண்டைத் தவிர, முன்னேறும் நாடுகளில் மனித உயிர்களைக் காக்கவும், நோய்களைக் குறைக்கவும் தனிப்பட்ட வேறு முறைகள் எவையும் மேன்மையாக இருக்க முடியாது!

சுத்தமான குடிநீர், குளிப்புநீர், கழுவுநீர், உணவுப்பயிர் வளர்ச்சிக்கு நீர்ப்பாசான வசதிகள் ஆகியவை கிடைக்க வாய்ப்புக்கள் இல்லாததால், உலகில் ஒரு பில்லியன் குடும்பங்கள் பெரும் இடருக்குள் தவித்து வருகின்றன! நாடுகளுக் கிடையே நிலவும் வெறுப்பு உணர்ச்சிகள் மிஞ்சிக் கடினம் ஆவதற்கோ அல்லது தணிப்பாகிப் பிணைப்பதற்கோ நதிகளின் நீர்வளப் பங்கீடுகள் தூண்டுதல் செய்யாலாம். அகிலப் புதுநீர்வள ஆண்டான 2003 உலக அரசுகள், சமூகக் குழுவினங்கள், வர்த்தத் துறைகள், மற்றும் தனியார் துறைகள் யாவற்றுக்கும் திசைகாட்டித் தேவையான நீர்வள ஆக்கவழிகளில் முற்பட முக்கிய அங்கம் வகுக்கும் ‘.

கோஃபி ஆன்னன், ஐக்கிய தேசப் பேரவை அதிபதி [Kofi Annan, UN Secretary General (2003)]

‘நர்மதா நதிப் பள்ளத்தாக்குப் பாமர மக்கள், நடைமுறையில் மெய்யான ஒரு யுத்தத்தில் வாழும் உயிர்களின் உரிமைப் போராகப் போராடி வருகிறார்கள் ‘

மிஸ். மேதா பட்கர் [சமூகப் போராட்டவாதி (1997)]

 

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பாரத மக்களின் முதலிரு தேவைகள்

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பாரத மக்களின் முதல் தேவை நீர்வளத் தேக்கம். இரண்டாம் தேவை மின்சக்தி உற்பத்தி. இவ்விரு முக்கிய அவசரத் தேவைகளுக்கும் இந்தியாவில் இடையூறுகள் இழைத்து, நாட்டு முன்னேற்றத்தைத் தடுத்து, மக்களுக்கு அபாயம் விளைவிக்க முற்படும் எதிர்ப்பாளிகள் இந்தியராயினும், தேசப் பற்றில்லாத பிற்போக்கு அன்னிய மனிதர்களே! இந்திய ஜனப்பெருக்கம் ஒரு பில்லியனைத் தாண்டி, ஆண்டு தோறும் மிகையாகி வருகிற போது, அதே விகித வேகத்தில் வாழ்வு நலப்பெருக்கும் விரிந்திட தற்போது நதியிணைப்பும், நீர்த்தேக்கங்களும் நாடெங்கும் நீர்வளம், நீர்ப்பாசானம் அளிக்கப் போவதைப் பேரணை எதிர்ப்பாளிகள் தடுக்கவும் கூடாது, புறக்கணிப்பதும் தவறு!

Hoover Dam -2

இப்போதும், எதிர்காலத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இன்னும் அதிகமான அணை நீர்த் தேக்கங்கள் நதிகளில் அமைக்க வேண்டிய கட்டாயம் நெருங்கி விட்டது! சமூகப் போராட்டவாதிகள் கட்டிவரும் அணைகளைத் தடுப்பதும், கட்டப் போகும் அணைகளுக்கு தடைகள் செய்வதும், நீர்ப் பங்கீடுகளில் உடன்படாமையும் நெறியற்ற, முறையற்ற செயல்கள். முன்னோடியாய் அரசாங்கம் சீரான திட்ட மிட்டாலும், நீதி மன்றங்கள் எத்தனை சட்டமிட்டாலும், இடப்பெயர்ச்சிக் குடியேற்ற அமைப்புகளில் குறைபாடுகள் நேரத்தான் செய்யும்! புகார் பிரச்சனைத் தீர்ப்பு அளிப்புகளில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் திருப்தி செய்வது இயலாத காரியம்! பெரும்பான்மையான இடப்பெயர்ச்சி வேதனைகள் குறுகிய காலத் தவிப்பே! ஆனால் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை என்பது நீண்ட காலத் தவிப்பு! பேரணைகள் கட்டும் போது மக்கள் படும் வேதனைகளை விட, பேரணைகள் இல்லாத போது மாந்தர் படும் நீர்ப் பற்றாக்குறை வேதனைகள் கொடியவை! கொடியவை!! கொடியவை!!!

கட்டுரை ஆசிரியர்

 

மரணமா அன்றி வாழ்வா என்று நெருக்கடி தரும் தண்ணீர்!

ஐக்கிய நாடுகளின் பேரவை உலகெங்கும் நோக்கி, 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடு, நீர்வள நெருக்கடி, நீர்ப்பாசானக் குறைபாடு ஆகியவற்றைக் கண்டறிந்து கீழ்க்காணும் தகவலை வெளியிட்டிருக்கிறது:

1. உலகிலே 1.2 பில்லியன் மாந்தர் சுத்தமான குடிநீர் அருந்த வாய்ப்பில்லாது உள்ளனர்.

2. உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் (2.4 பில்லியன்), போதிய சுகாதாரக் கழிவுநீக்க வசதிகள் இல்லாமல் இருக்கின்றார்.

3. துர்மாசு நிரம்பிய நீர் சார்ந்த நோயில், குறைந்தது 3 மில்லியன் மக்கள் ஆண்டு தோறும் மரணம் அடைகிறார்.

4. கடந்த நூற்றாண்டில் உலகத்தின் பாதிப்பகுதி ஈரடிப்பு நிலங்கள் [Wetlands] அழிந்து சீர்கெட்டுப் போயின.

2000 ஆண்டு செப்டம்பரில் உலக நீர்வள நிபுணர்கள் ஐக்கிய நாடுகளின் ஆயிரத்தாண்டு கூட்டவையில் ஒன்று கூடி முடிவு செய்தது: 2015 ஆண்டுக்குள் பாதுகாப்பான குடிநீர் வசதிக்கு வாய்ப்பில்லா மாந்தரின் எண்ணிக்கையைப் பாதியாக்குவது.

2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஜொகானஸ்பர்கில் நடந்த நீர்வளக் கூட்டவையில் முடிவு செய்தது:

2015 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரக் கழிவுநீக்க வசதிக்கு வாய்ப்பில்லாத மக்களின் எண்ணிக்கையும் பாதியாகப் பணி செய்தது.

இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற முயலும் உலக நாடுகள் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலரைச் செலவழித்து வருகின்றன.

பேரணைத் தடுப்புகளில் வேதனை மக்களுக்கே !

பாரத நாட்டின் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை கோரப் பற்களால் மக்களைக் கடித்துக் கொண்டிருக்கிறது! இன்னலுற்றுக் குருதி சிந்தும் மாந்தர்கள் மாநில அரசாங்கத்தின் கழுத்தை நெரித்துக் ‘குடிநீர் கொண்டுவா ‘ என்று போராட்டம் செய்து வருவது ஒருபுறம்! மாநில அரசாங்கம் மத்திய அரசின் சிரசைத் தடியால் அடித்து, அண்டை மாநில நதி வெள்ளத்தைக் கால்வாய் மூலம் எங்கள் தேக்கத்தில் இணைத்துவிடு என்று மன்றாடுவது மறுபுறம்! இந்தியப் பெரு நதிகளைச் சிறுநதிகளுடன் பிணைத்திட மத்திய அரசு திட்டம் வகுத்தால், நடக்காது என்று எதிர்ப்பதும், தடை செய்வதும் யார் ? மாநில அதிகாரிகள், நிபுணர்கள், பொதுமக்கள்! இடப்பெயர்ச்சி, நில ஒதுக்கம், நிதியீடு, குடியேற்றப் பிரச்சனைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு, பேரணைகள் தேவையில்லை என்று வட இந்தியாவில் போரிடும் அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற போராட்டவாதிகள், நீர்வளப் பற்றாக்குறை பற்றிய எதிர்காலச் சிந்தனை இன்றி எளிய மக்களை தெளிவு படுத்தாமல் இழுத்துக் கொண்டு அரசாங்கம் மீது, ஆவேசமாகப் படையெடுத்து வருவது மறுபுறம்!

இடப்பெயர்ச்சிக் குடியேற்றப் பிரச்சனைகளை இருதரப்பினருக்கும் உடன்பாடாக ஓரளவு தீர்க்க முடியுமே தவிர, பூரணமாக நிறைவேற்றப் பல்லாண்டுகள் ஆகும்! ஆயினும் அனைத்து மக்களையும் திருப்தி செய்ய இயலாது! முன்னோடித் திட்டமிட்டாலும் குடியேற்ற அமைப்புகளில் குறைபாடுகள் நேரத்தான் செய்யும்! புகார் பிரச்சனைகளில் தீர்ப்பு அளிப்புகள் திருப்தி செய்யவில்லை என்றால், போராட்டத் தலைவியோ அல்லது தலைவரோ அணை வேலைகளைத் தடை செய்யாது, மற்ற வழிகளில் தர்மப் போர் புரிய வேண்டும். கோடிக் கணக்கான ரூபாய்ச் செலவில் வடிவாகி வரும் பேரணையைக் கட்ட விடாமல் தடுப்பது, கால தாமதப் படுத்துவது அரசாங்கத்தைத் தண்டிப்பதாகத் தோன்றினாலும், மெய்யாகப் பார்த்தால் மக்களே மக்களைத் தண்டித்துக் கொள்கிறார்கள்! நதியிணைப்புப் பணி நிறுத்தங்களில் நிதியிழப்பும், கால விரையமும் மத்திய அரசை மட்டு மன்று, மாநில மக்களையும் பாதிக்கின்றன! இறுதியில் நீர்ப் பற்றாக்குறைத் தவிப்பில் தண்டிக்கப் படுவது அரசாங்க மன்று, பாரத மக்களே!

பேரணைப் போராட்ட அன்னை மிஸ் மேதா பட்கர்

நர்மதா நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்களில் இடப்பெயர்ச்சி, இழப்புநிதி ஈடுபாடு, குடியேற்றக் குறைபாடுகளை நிமிர்த்திட, பாமர ஏழைகள் சார்பாக பல்லாண்டுகள் வாதாடிப் போராடித் தர்மப் போர் புரிந்துவரும் பாரத வீராங்கனை மிஸ் மேதா பட்கர். நர்மதா காப்புக் கட்சியைத் [Narmada Bachao Andolan] தோற்றுவித்தவரும், கட்சியின் தலைவியும் அவரே. ‘மேதா அன்னை ‘ என்று விளிக்கப்பட்டுப் பல்லாயிரம் பாமர மக்களின் தர்மப் போர் தலைவியாக நர்மதா நதிப் போராட்டங்களில் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டு, உலகப் புகழ் பெற்றவர்! 2000-2002 ஆண்டுகளில் அணைகளின் உலகப் பேரவைக் [World Commission on Dams (WCD)] குழுவினரில் இந்தியாவின் சார்பில் ஒருவராகப் பங்கெடுத்து, எளியவரின் இடப்பெயர்ச்சி, புதுக் குடியேற்றப் பிரச்சனைகளை எடுத்துப் பறைசாற்றி யிருக்கிறார். போராட்ட மக்கள் தேசியக் கூட்டுறவு [National Alliance of People ‘s Movements] நிறுவகத்தின் துவக்கவாதியும் அவரே.

மிஸ் மேதா பட்கர் மொம்பையில் 1954 டிசம்பர் முதல் தேதியில் பிறந்தார். தந்தையார் பாரத விடுதைப் போரில் நேரடியாகப் போராடிப் பின் பாட்டாளிகளின் தொழிற்சங்க வாதியாகப் [Trade Unionist] பணியாற்றியவர். தாயார் சுவதார் [Swadhar] என்னும் பெண்டிர் பேரவையில் பணி புரிபவர். டாடா சமூகவியல் கல்விக் கூடத்தில் [Tata Institute of Social Science] M.A. பட்டதாரியாகப் படித்து, ஐந்தாண்டுகள் பாம்பே அழுக்குத்தெரு குடிசைப் [Slums] பாமர நிறுவனங்களிலும், குஜராத்தில் இரண்டாண்டுகள் பழங்குடி மக்கள் பகுதிகளிலும் சமூகத் தொண்டு செய்தவர். டாடா சமூகக் கல்விக் கூடத்தை விட்டுப் பாதியிலே Ph.D. படிப்பையும் புறக்கணித்து, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசக் குடியானவர், பழங்குடி மாந்தர் குறைகளின் சார்பில் சமூகப்பணி புரிய முழு நேரமும் மூழ்கினார்.

நர்மதா நதிவள விருத்தித் திட்டங்களில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை போன்ற பேரணைகளால் புதுக் குடியேற்ற இடப்பெயர்ச்சிக் கட்டாயத்தில் வெளியே தள்ளப்பட்டுத் தவிக்கும் ஆயிரக் கணக்கான பாமர மக்களின் சார்பில், முன்னின்று மாநில அரசாங்கத்துடன் போராடினார். இறுதியில் அணைக்கட்டு அமைப்பு முன்னேற்ற மானதால், குடியேற்றத் தீர்ப்புகள் நிறைவேற முடியாது கைவிடப்பட்டன. பிறகு மேதா பட்கர் சர்தார் சரோவர் பேரணையின் பூர்வீக டிசைன் விதிகளில் முரண்பாடுகளும், குறைபாடுகளும் உள்ளன வென்று எதிர்ப்புப் போராட்டங்கள் [1985-1997] நடத்தி வேலை நிறுத்தம் செய்தார். அதன் பின் உலக வங்கி திட்டத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது! அடுத்து உச்ச நீதி மன்றத்திற்கு மனுப்போட்டு, சர்தார் சரோவர் பேரணை வேலைகள் அனைத்தையும் முடக்கினார்! பிறகு மாநில அரசு தனி ஆய்வுக்குழு ஒன்றை நியமித்து ஆராய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு, அணைத் திட்டங்களின் டிசைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட்டன. இறுதியில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை மாற்றி, அணையின் பணிகள் தொடர்ந்தன.

மிஸ் மேதா பட்கர் பல வெகுமதிகளையும், அகிலச் சூழ்மண்டலக் காப்புப் பரிசுகளையும் [Deena Nath Mangeshkar Award, Mahatma Phule Award, Right Livelihood Award, Golden Environment Prize, Green Ribbon Award By BBC, Human Rights Defender ‘s Award By Amnesty International] பெற்றுள்ளார்.

 

வட அமெரிக்காவிலே மிகப் பெரிய ஹூவர் பேரணை [Hoover Dam]

இருபதாம் நூற்றாண்டு யந்திர யுகத்தில் மனிதர் படைத்த ஏழு உலக அற்புதங்களில் 1935 ஆம் ஆண்டு அமெரிக்காவிலே கட்டுமானமாகிய பிரம்மாண்டமான ஹூவர் பேரணை ஒன்று! அது கட்டப் பட்டதின் முக்கிய நோக்கம் இரண்டு. 1) கொலராடோ நதியில் நீர்வெள்ளக் கட்டுப்பாடு. 2) 2000 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி. ஹூவர் பேரணை உலகிலே மிகப் பெரிய செயற்கை நீர்த் தேக்கமான மீடு ஏரியில் [Lake Mead] அமைக்கப் பட்டுள்ளது. கொலராடோ நதியில் கட்டப்பட்ட மீடு ஏரியின் பரப்பு: 229 சதுர மைல்! சுற்றளவு: 550 மைல்! பேரணையின் உயரம்: 727 அடி! [70 மாடி உயரம்]. அணைப்பீடம் அமர்ந்துள்ள அடித்தளத்தின் அகலம்: 660 அடி! அணைக்குத் தேவையான காங்கீரிட் கொள்ளளவு: 3.4 மில்லியன் கியூபிக் மீடர்! 1928 ஆண்டு நாணய மதிப்பீடில் 165 மில்லியன் டாலர் நிதிச் செலவில் பேரணையும், நீர்மின்சார நிலையமும் உருவாயின. கொலராடோ மாநிலத்தில் போல்டர் நகரம் ஹூவர் பேரணை கட்டிய ஆயிரக் கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும் தங்கிப் பணி புரிவதற்கு அமைக்கப் பட்டது.

Hoover Dam -1

நீர்வள விருத்திக்குத் தேவைப்படும் பேரணைகள்

அகில உலகில் 5000 ஆண்டுகளாக அணைநீர்த் தேக்கங்கள் உறுதியான நீர் வெள்ளப் பரிமாற்றத்தை மக்களுக்கு அளித்து வந்திருக்கின்றன. மழைப் பொழிவுக் காலங்களில் பெருகியோடும் மிஞ்சிய நீர் வெள்ளத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு, வறட்சிக் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள அணைகள் உதவுகின்றன! வெள்ளப் பெருக்குச் சேதாரங்களைத் தவிர்க்க அணைகள் துணைபுரியும். நீர்ப்பாசானக் கால்வாய்களில் நீரனுப்பி, நிலங்களில் உணவுத் தானிய வளர்ச்சிகளுக்கு அணைகள் வழி வகுக்கும். தொழிற் சாலைளுக்கும், இல்லங்களுக்கும் மின்சக்தி அளிக்க நீர்மின்சார நிலையங்கள் அமைக்க அணைகள் நீரோட்டமும், நீரழுத்தமும் தருகின்றன. நீர்வழிப் போக்கு வரத்துக்கு அணைகளும், கால்வாய்களும் பளுக்களைத் தூக்கிச் செல்லும் நீர்ப்பாதையாய் பயன்தரும்.

உலக ஜனப்பெருக்கம் ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் மேலாக மிகை யாகி வருகிற போது, அதே வீத வேகத்தில் வாழ்வு நலப்பெருக்கும் விரிய, தற்போது 40,000 பேரணைகள் நீர்வளம், நீர்ப்பாசானம் அளித்து வருகின்றன. இப்போது உலகத்தில் 24 நாடுகள் தமது மக்களுக்குப் போதிய நீர்வளம் அளித்து, ஆதாரமாக இருக்க இயலாத நெருக்கடியில் உள்ளன! ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மாந்தர் பட்டினியாலோ, அல்லது சத்தற்ற சக்கை உணவை உண்டோ உயிர் வாழ்கின்றனர். அநேக நாடுகளில் உணவு தானிய விளைச்சல்கள், நீர்ப்பாசான வசதிகள் மேம்பட்டால்தான் விருத்தி செய்ய முடியும். பூமியின் அடித்தள நீர்ச் சுரங்கங்கள் வற்றிக் குன்றிய தாலும், தேக்கங்களில் நீர் உயரம் கீழானதாலும், அந்த நாடுகளின் தானிய விளைச்சல்கள் குறைந்து கொண்டு வருகின்றன. ஆகவே இப்போதும், எதிர்காலத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இன்னும் அதிகமான அணைகளை நதிகளில் அமைக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதே தவிர, போராட்டவாதிகள் கட்டும் அணைகளைத் தடுப்பதும், கட்டப் போகும் அணைகளுக்கு முட்டுக்கட்டை இடுவதும் நெறியற்ற எதிர்ப்புகளாய் நிகழ்ந்து வருகின்றன.

ஒரு நாட்டின் செல்வ வளர்ச்சியை எடைபோட வேண்டுமானால், அதன் தொழிற் சாலைகளையும், உற்பத்திச் சாதனங்களையும், தொழில் சக்கரங்களைச் சுற்றும் மின்சக்தி ஆற்றலின் தகுதியையும் உற்று நோக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக ஏராளமான மின்சக்தி ஆற்றல் ஒரு நாட்டில் நிலைத்து இயங்கி வரவேண்டும். பல நாடுகளில் நீர்மின்சார ஆற்றல் மட்டுமே மின்சக்தி பரிமாறி வருகிறது. உலக உற்பத்தியில் 20% பங்கு மின்சக்தியை, நீர்மின்சார நிலையங்களே ஆக்குகின்றன. நீர்மின்சக்தியே உலக மீள்பிறப்பு மின்சார ஆற்றலாய் எல்லாவற்றுக்கும் மிக்கதாக முன்னணியில் இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நீர்மின்சக்தி ஆற்றல் போன்று, இன்னும் உலகத்தில் ஆறுமடங்கு நீர்மின்சக்தி எடுக்கப்படும் தகுதி பெற்று எதிர்காலத்தில் பயன்படப் போவதாய் தெரிகிறது. அணைகள் கட்டுவதின் பயன்கள் என்ன ? குடிநீர், தொழிற்துறை நீர்ப் பரிமாற்றம்; வேளாண்மை நீர்ப்பாசானக் கால்வாய்களில் நீரோட்டம்; நீர்வெள்ள அடிப்புக் கட்டுப்பாடு; மின்சக்தி உற்பத்தி; பொழுது போக்குத் துறை விருத்தி; கால்வாய் நீர்ப் போக்குவரத்து வசதிகளில் பளுக் கடத்தல் போன்றவை.

 

உலகப் பேரணைக் கூட்டவையின் ஆய்வுரைகள்

2000 ஆண்டில் ‘உலக அணைகளின் தேர்வுப் பேரவை ‘ [World Commission on Dams] சார்பாக 52 நாடுகள் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஒன்று கூடி, உலகிலே உள்ள 125 பேரணைகளைப் பல கோணங்களில் நோக்கி ஆராய்ச்சி செய்து ஒரு பெரும் முடிவறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அவற்றைக் கூர்ந்து உளவாய்வு செய்ய 100 பங்களிப்பார்கள் அணைகளைப் பற்றி முழுத் தகவல்களை உதவி இருக்கிறார்கள். உலக நாடுகள் அணைப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சுமார் 900 தலைப்புகளில் சமர்ப்பித்துள்ளன. மொத்தம் 154 பேரணைகளின் தகவல்கள் தேர்வுக்கு எடுத்துக் கொண்டதில் 80% பேரணைகளின் அறிக்கைகள் கிடைக்கப்பட்டு, ஒத்துப் பார்க்கப் பட்டன. உலகத் தேர்வுப் பேரவையின் பிரதம குறிக்கோள்: இதுவரை கட்டுப்பட்டு இயங்கிவரும் பூகோளப் பேரணைகளின் பூர்வீகப் பணி நிறைவேற்றம், பாதிப்புகள், பழுதுகள், உடைப்புகள் ஆகியவற்றைத் துருவி ஆராய்ச்சிகள் செய்து, அவற்றின் அமைப்புப் பாணிகளையும், போக்கு நியமங்களையும் [Patterns & Trends] கண்டறிவது. அந்தச் சுற்றாய்வு விளைவுகளில் [Survey Results] பாங்குகள், போக்குகள் இரண்டும் உலக அரங்குகளுடன் கொண்டிருக்கும் இணைப்பு முக்கியமாகத் தெரிந்தது!

நீர்வளத்தை விருத்தி செய்யத் திட்டமிட வேண்டியவை

முன்னேறும் நாடுகளில் இன்றும், எதிர்காலத்திலும் நீர்ப்பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய நதிநீர்ப் பங்கீடுகள், நதிநீர்த் தேக்கங்கள், நதிநீர் இணைப்புகள், நதிநீர்ச் சுத்தீகரிப்புகள் நிகழப் போவது தவிர்க்க முடியாதவை! அவற்றைத் தீர்மானம் செய்யும் விவாத அவை யரங்குகளில் எதிர்க்கட்சிகள், சூழ்மண்டலக் காப்பாளிகள், அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற சமூகவாதிகள், பூதளவாதிகள் [Geologists], பூகம்ப நிபுணர்கள், பாதிக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள், நீர்த்துறைப் பொறியாளர்கள், பேரணை, நீர்மின்சக்தி நிலையம், கால்வாய், மலைக்குகை அமைக்கும் பொறிநுட்ப வாதிகள், நிதியுதவும் நிறுவனங்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். இடப்பெயர்ச்சி, இழப்புநிதி ஈடளிப்பு, புதுக்குடியேற்ற முறைபாடுகளில் முரண்பாடுகள் இல்லாமல் நடந்தேறப் பாதிக்கப்படும் மாந்தர், சமூகவாதிகள், மதவாதிகள், இனவாதிகள், உள்ளூர் கட்சித் தலைவர்கள் போன்றோர் பங்கெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நதிசார்ந்த திட்டமும், இறுதிவரை ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிக் குழு ஒன்றால் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.

[கட்டுரை தொடரும்]

தகவல்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]

32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.

33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).

34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.

35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.

36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).

37 R. Rangachari, Nirmal Sengupta, R. Ramaswamy Iyer, Pranab Banerji, and Shekar Singh, – Large Dams: India ‘s Experience, a WCD case study prepared as an input to the World Commission on Dams, Cape Town, http://www.dams.org [November 2000]

38 Narmada River Dams, India -Evaluation Against World Commission on Dams Guidelines.

39 Proponents & Critics of Dams Agree to Work Together -World Conservation Union [Apr 11, 1997]

40 Sardar Sarovar Dam Overflows as Main Canal Ruptures. Earthquake also Registered near Reservoir By: Yogini Khanolkar & Ashish Mandloi [Aug 16, 2004]

41 Medha Patkar, Goldman Prize Recipient Profile [www.goldmanprize.org/recipients/] [1997]

42. http://www.newworldencyclopedia.org/entry/Hoover_Dam

43.  http://www.history.com/topics/hoover-dam

44.  https://en.wikipedia.org/wiki/Hoover_Dam  [March 22, 2016]

*******************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 31, 2016 [R-1]

வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

Welland Canal Seaway

[St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++++

https://youtu.be/aTRIqCgSxYQ

https://youtu.be/9HNTxtWkxUc

https://youtu.be/heRLwTPpSMc

https://youtu.be/EfVzOz1nqnE

+++++++++++++

எங்கெங்கு காணினும் ஏரிகளாம்! திசை

எப்புறம் நோக்கினும் ஆறுகளாம்!

கப்பலை ஏற்றி இறக்கும் நீர்த் தடாகம்!

ஐம்பெரும் ஏரிகள் இணைப்புக் கடல் மார்க்கம்!

[வட அமெரிக்கக் கண்டம்]

+++++++++++++

St Lawrence Seaway Locks -1

உலகிலே நீளமான உள்நாட்டுக் கடல் மார்க்கம்!

பூகோளத்தின் ஏறக்குறைய கால் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மேலே வடதுருவம் வரைப் பரவும் புதிய பூதக் கண்டமான வட அமெரிக்கா நீர் வளமும், நிலவளமும் செழித்து, நீண்ட மலை வளமும் மிக்கது! முப்பெரும் குடியாட்சித் தேசங்களான கனடா, அமெரிக்கக் கூட்டு நாடுகள், மெக்ஸிகோ மற்றும் சில சிறு நாடுகளையும் கொண்டது. முப்புறம் கடல்கள் சூழ்ந்து வெப்பக் காற்றும், குளிர்காற்றும் அடிக்கடி மோதிக் காலநிலைகள் மாறி, ஹர்ரிகேனும் சூறைப் புயலும் இன்னல் தரும் ஒப்பற்ற கண்டம் அது! மேற்றிசை ஓரத்தில் ராக்கி மலைத்தொடர் மலைப் பாம்புபோல் பல்லாயிரம் மைல் நீளமாய்ப் படுத்திருக்கிறது! 14,000 ஆயிரங்களுக்கு முன்பு வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் ‘பனிப்பாறை மந்தைகள் ‘ [Glaciers] பரவி, பனிகட்டி ஈட்டிகள் பளுவாலும் அழுத்தத்தாலும் கடைந்து ஆயிரக் கணக்கான குட்டை, குளங்கள், ஏரிகள் அங்கே தோன்றின! அப்போது உண்டான ஆழமான பூத ஏரிகள்தான் ஐம்பெரும் ஏரிகள் [The Great Lakes] எனப்படும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ [Superior, Michigan, Huron, Erie, Ontario] ஆகிய ஏரிகள். பனி மலைகளும், பனிப்பாறை மந்தைகளும் உருகி மிஸ்ஸிசிப்பி, மிஸ்ஸோரி, கொலராடோ, ஆர்கன்ஸாஸ் நதிகள் அமெரிக்காவிலும், செயின்ட் லாரென்ஸ், நெல்ஸன், சர்ச்சில், மெக்கென்ஸி, பிரேஸர் நதிகள் கனடாவிலும் தோன்றின!

Soo Locks

St Lawrence Seaway Locks -5

வட அமெரிக்காவின் நடுவில் கனடா, அமெரிக்காவுக்குப் பொதுவான ஐம்பெரும் ஏரிகள் இணைந்து, செயின்ட் லாரென்ஸ் நதியில் கலந்து, ஆற்றோட்டம் 2350 மைல் தூரம் கடந்து அட்லாண்டிக் கடலை அடைகிறது! வரை படத்தில் மட்டமாகத் தெரியும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ என்று அழைக்கப்படும் ஏரிகள் ஒவ்வொன்றின் நீர் மட்டம் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமானது! அவற்றைச் சேர்க்கும் ஆறுகள் சில இடங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போல் விழுந்து மட்டத்தைக் குறைத்துக் கடலை நோக்கி ஓடிச் சங்கமம் ஆகின்றன. ஐம்பெரும் குடிநீர் ஏரிகள் இயற்கையாகவே நதிகளால் இணைக்கப் பட்டு அமெரிக்கா, கனடாவில் உள்ள எட்டு மாநிலங்களின் துறைமுக நகரங்களைத் தொட்டு ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடன் வணிகப் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள கப்பல் போக்குவரத்துக்கு வசதியாய் அமைந்துள்ளன.

St Lawrence Seaway Locks -4

அமெரிக்கக் கனேடிய கூட்டுப் பணியாக 470 மில்லியன் டாலர் [1959 நாணய மதிப்பு] செலவில் திட்டமான செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway] 1954 இல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1959 இல் முடிந்து கப்பல்கள் செல்லக் கால்வாய் திறக்கப் பட்டது. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைதான் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியில் கப்பல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப் படும். குளிர்காலத்தில் ஏரி நீர்ப் பனியாக உறைந்து, பனிக்கட்டிகள் மிதந்து, ஆற்றோட்டம் தணிந்து சீரான கப்பல் பயணங்கள் தடைப்படுகின்றன. கடந்த [1959-1999] 40 ஆண்டுகளாக 250,000 கப்பல்கள் 2 பில்லியன் டன்னுக்கு மேற்பட்ட இரும்பு, நிலக்கரி, தானியம், பெட்ரோலியம் போன்ற பளு பாரங்களைக் கடல்வீதி வழியாகக் கொண்டு சென்றுள்ளன. அத்துடன் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிப் போக்குவரத்து 40,000 பேருக்குப் பிழைப்பு வேலைகள் அளித்தும், ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெருக்கியும் வந்திருக்கிறது.

St Lawrence Seaway Connecting Cities

Locks Locations

உலகிலே பெரிய ஐம்பெரும் குடிநீர்ப் பூத ஏரிகள்!

ஐம்பெரும் ஏரிகளின் நீர்ப்பரப்பு உலகிலே மிகப் பெரிய குடிநீர்ப் பகுதியாகக் கருதப்படுகிறது! அவற்றின் பரப்பளவை ஒப்பு நோக்கினால், பிரான்ஸ் நாட்டை விடப் பெரிதாக இருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது! கனடாவில் உள்ள அண்டாரியோ மாநிலத்தில் மட்டும் சுமார் 250,000 ஏரிகள் உள்ளன வென்று அறியப்படுகிறது! ஐந்து ஏரிகளின் நீர்க் கொள்ளளவைக் கனடாவின் முழுப் பரப்பளவில் கொட்டினால், 12 அடி உயரம் நிரப்பும் என்று கணிக்கப் படுகிறது! ஐந்திலும் மிகப் பெரிதான சுப்பீரியர் ஏரியில் மட்டும் சுமார் 200 ஆறுகள் ஆண்டு முழுவதும் நீரைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன! ஏரிகள் ஐந்தைச் சுற்றிலும் எந்த விதப் பெரும் மலைகளின் நீரோட்டம் இன்றிக் காலநிலை மழையாலும், குளிர்காலப் பனிப்பூ [Snow] வீழ்ச்சிகளாலும், ஏரிகளில் நீர் மட்டம் சதா காலமும் நிரம்பி வருகிறது! புயல் காற்று வீசும் சமயங்களில் ஏரியின் அலைகள் கடலைப் போன்று 15 அடி முதல் 25 அடி உயரத்தில் எழும்பிக் கரையை நோக்கி அடிக்கின்றன! பூமிக்கு மேல் 600 மைல் உயரத்தில் சுற்றும் ஒரு துணைக்கோள் [Satellite] ஐம்பெரும் ஏரிகளின் முழுப் பரப்புகளையும் படமெடுக்க முடியும்!

Map with Locks

உலகிலே பெரிய முதல் ஏரியான சுப்பீரியர் கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் உள்ளது. அடுத்து மிச்சிகன் ஏரி 577 அடி, ஹூரான் 577 அடி, ஈரி 569 அடி, அண்டாரியோ 243 அடி அளவுகளில் நீர் மட்ட உயரங்களைக் கொண்டுள்ளன. சுப்பீரியர் ஏரியின் நீளம்: 350 மைல்! அகலம்: 160 மைல்! மிச்சிகன் ஏரியின் நீளம்: 307 மைல்! அகலம்: 118 மைல்! ஹூரான் ஏரியின் நீளம்: 206 மைல்! அகலம்: 183 மைல்! ஈரி ஏரியின் நீளம்: 241 மைல்! அகலம்: 57 மைல்! அண்டாரியோ ஏரியின் நீளம்: 193 மைல்! அகலம்: 53 மைல்! 483 அடி தாழ்ந்த சுப்பீரியர் ஏரியே எல்லாவற்றிலும் ஆழமானது! ஆழம் குன்றிய ஈரி 62 அடி தாழ்ந்தது. கொள்ளளவு 2900 கியூபிக் மைல் கொண்ட சுப்பீரியர் ஏரியே ஐந்து ஏரிகளிலும் அதிகமான கொள்ளளவு நீர் வெள்ளத்தைக் கொண்டது!

Levels in the Five Great Lakes

செயின்ட் லாரென்ஸ் கடல் வீதியின் ஆரம்பமும் முடிவும்

சுப்பீரியர் ஏரியிலிருந்து நீரோட்டம் செயின்ட் மேரி நதி மூலமாக ஹூரான் ஏரியில் கலக்கிறது. இரண்டு ஏரிகளுக்கும் மிடையே நீர்மட்டங்கள் 23 அடி வித்தியாசம் இருப்பதால், அவற்றிடையே கப்பல் பயணம் செய்ய நீரடைப்புத் தொட்டிகள் [Hydraulic Locks] அமைக்கப் பட்டுள்ளன. மிச்சிகன் ஏரியும், ஹூரான் ஏரியும் அகண்ட ஆழமான ‘மாக்கிநாக் நீர்ச்சந்தியில் ‘ [Mackinac Straits] இணைவதால், இரண்டின் நீர்மட்டங்களும் ஒன்றாகி விடுகின்றன. மிச்சிகன்-ஹூரான் ஏரிகளின் நீரோட்டம் பிறகு செயின்ட் கிளேர் ஆற்றின் [St. Clair River] வழியாக செயின்ட் கிளேர் ஏரியை அடைந்து, அடுத்து டெட்ராய்ட் ஆற்றில் [Detroit River] ஓடி ஈரியில் சங்கமம் ஆகிறது. ஹூரான், ஈரி ஆகிய இரண்டு ஏரிகளின் நீர்மட்ட வேறுபாடு 8 அடியாக இருப்பதால் நீரடைப்புத் தொட்டி அவற்றிடையே தேவை யில்லை.

Welland Canal, Niagara Falls, Canada

Welland Canal Locks

ஆனால் ஈரி ஏரிக்கும், அண்டாரியோ ஏரிக்கும் உள்ள நீர்மட்ட வேறுபாடு 326 அடி எல்லாவற்றிலும் மிகையானது! அந்த ஏரிகளின் இடையேதான் உலகப் பெயர் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி விழுந்து, நயாகரா ஆற்றில் ஓடி அண்டாரியோ ஏரியில் சேர்கிறது! பயங்கரமான அந்த உயரத்தைக் கடக்கத் தனியாக ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] நிலப்பகுதியில் வெட்டப்பட்டு இரண்டு ஏரிகளையும் இணைக்கிறது! வெல்லண்டு கால்வாயில் கப்பல்கள் ஈரியிலிருந்து, அண்டாரியோ ஏரிக்கு இறங்கப் படிப்படியாக எட்டு நீரடைப்புத் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன! ஈரி ஏரியின் நீரோட்டத்தில் 5% அளவே தனித்து வெல்லண்டு கால்வாய் வழியாகப் புகுத்தப் படுகிறது. அண்டாரியோ ஏரியிலிருந்து நீரோட்டம் செயின்ட் லாரென்ஸ் ஆற்றின் வழியாக ஓடி, அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. அண்டாரியோ ஏரியின் நீர்மட்டம் 243 அடி கடல் மட்டத்தை விட உயர்ந்திருப்பதால், மான்டிரியால் குயூபெக் பகுதியில் [Montreal Quebec Region] ஏழு நீரடைப்புத் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன.

பூத ஏரிகளின் நீர்க் கொள்ளளவு ஏராளமாகச் சேமிக்கப் பட்டிருப்பதாலும், செயின்ட் லாரென்ஸ் நதியில் குறைந்த அளவு நீரோட்டம் 1%, கூடிய அளவு நீரோட்டம் 2.3% கொள்ளளவாக இருப்பதாலும், ஏரிகள் மழை காலத்திலும், பனியுருகும் வசந்த காலத்திலும் மிகையாகச் சேரும் நீர்மட்டத்தை சமாளித்து, செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியில் சீரான முறையில் சதா காலமும் நீரோட்டம் நிகழ்ந்து வருகிறது! குளிர் காலத்தில் ஏரியின் மேற்தளம் உறைந்து பனி மூடி யிருந்தாலும், பொதுவாக நீரோட்டம் அடித்தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் வருகிறது!

Welland Canal Locks

வெல்லண்டு நீர்மார்க்க இணைப்பு

செயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கக் கால்வாயின் அமைப்பு

செயின்ட் லாரென்ஸ் கடல்வீதியின் நெடுவே சுப்பீரியர் ஏரியிலிருந்து, கடலை அடைவது வரை மொத்தம் 19 நீரடைப்புத் தடாகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சுப்பீரியர் ஏரி ஹூரான் ஏரியுடன் கப்பல் போக்கிற்கு ஏதுவாகச் சேர்க்க, சூஸென் மேரியில் [Sault Ste. Marie] உள்ள செயின்ட் மேரி நதியில் 23 அடி இறக்கும் ஒரே அனுப்புப் போக்கான, நான்கு இணைத் தொட்டிகள் [Four Parallel Locks (One Transit)] கட்டப் பட்டுள்ளன. சூ நீரடைப்பு தடாகங்கள் [Soo Locks] எனப் பெயர் பெறும் அவை நான்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவை. அடுத்து ஈரி, அண்டாரியோ ஏரிகளுக்கு இடைப் பட்ட பீடத்தில் கட்டப் பட்டுள்ள, நயாகரா நீர்வீழ்ச்சியைச் சுற்றித் தவிர்க்கும் ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] எட்டு நீரடைப்புத் தடாகங்கள் அடுத்தடுத்து அமைக்கப் பட்டுக், கப்பல் 326 அடி தணிந்து செல்ல வசதி செய்யப் பட்டுள்ளது.

St Lambert Lock

உலகப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி ஈரி ஏரியிலிருந்து, சுமார் 175 அடி விழுந்து நயாகரா ஆற்றில் பல மைல் ஓடி அண்டாரியோ ஏரியில் கலக்கிறது! வெல்லண்டு கால்வாயும், எட்டுப் புனல் தொட்டிகளும் கனடாவுக்குச் சொந்தமானவை. அவற்றை மேற்பார்ப்பதும், பராமரிப்பு செய்வதும் கனடாவின் பொறுப்பு. இறுதி நிலையில் அண்டாரியோ விலிருந்து கப்பல் அட்லாண்டிக் கடலை அடைய 243 அடி இறக்கப் படவேண்டும். குபெக்கில் உள்ள மான்ட்ரியால் [Montreal, Quebec] நகருக்கு அருகே, அமெரிக்காவுக்குச் சொந்தமான இரண்டு, கனடாவுக்குச் சொந்தமான ஐந்து நீரடைப்புத் தடாகங்கள் செயின்ட் லாரென்ஸ் நதியில் அமைக்கப் பட்டுள்ளன.

Ice Breaker

கப்பல்கள் சுப்பீரியர் ஏரியின் 600 அடி நீர்மட்டத்திலிருந்து மிச்சிகன், ஹூரான் ஏரிகளின் நீர்மட்டத்திற்கு [577 அடி] இறங்க நீரடைப்புத் தொட்டிகள் [Hydraulic Locks] கட்டப் பட்டுள்ளன. ஈரி ஏரியின் 569 அடி மட்டத்திலிருந்து அண்டாரியோ நீர்மட்டம் 243 அடி அளவுக்கு இறங்க ‘வெல்லண்டு கால்வாய் ‘ [Welland Canal] வெட்டப்பட்டு எட்டு நீரடைப்புத் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. நயாகார நீர்வீழ்ச்சி ஈரி எரியிலிருந்து, அண்டாரியோ ஏரிக்கு இயற்கையாக விழுந்து நயாகார ஆறாக ஓடி இன்னும் 326 அடியைக் குறைகிறது. அடுத்து ஐந்து ஏரிகளின் நீர் செயின்ட் லாரென்ஸ் ஆறாக இன்னும் ஏழு நீரடைப்புத் தொட்டிகளின் வழியாக ஓடிக் கடலில் சங்கமமாகிறது. கனடாவின் கார்ன்வாலில் (1900-1995) ஆண்டுப் பதிவுகளின் அறிக்கைப்படி செயின்ட் லாரென்ஸ் நதியில் சராசரி நீர்ப்போக்கின் கொள்ளளவு வினாடிக்கு 244,000 குயூபிக் அடி [6910 cubic meter/sec]! இந்த நீரோட்ட அளவு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாக அறியப்படுகிறது.

Eisenhover Locks

பத்தொன்பது நீரடைப்புத் தடாகங்கள் மூலமாக 600 அடி நீர்மட்டம் தாழ்ந்து, 2350 மைல் தூரப் பயணம் சென்று, கப்பல் போக்குவரத்தில் உள்நாட்டிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை செல்லும் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி உலகிலே மகத்தான ஒரு சாதனையாகக் கருதப் படுகிறது! அவற்றின் மூலம் 740 அடி நீளம், 78 அடி அகலக் கப்பல்கள் செல்ல முடியும்! நீர்மட்டத்துக்கு மேல் இருக்கும் கப்பலின் உயரம் 116.5 அடியைத் தாண்டக் கூடாது. நீரடைப்புத் தொட்டிகளின் அளவு: நீளம் 859 அடி, அகலம் 80 அடி, ஆழம் 30 அடி. ஒரு தடாகத்தைக் கடக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகின்றன! தொட்டியை நிரப்பிக் கப்பலைத் தூக்க 24 மில்லியன் காலன் நீர் தேவைப்படும். தடாகத்தை நிரப்பவோ, குறைக்கவோ 10 நிமிடங்களே எடுக்கின்றது!

Three Locks in Seried -5A

சூஸென் மேரியில் உள்ள அமெரிக்காவின் சூ நீரடைப்பு தடாகங்கள்

1852 இல் அமெரிக்கன் காங்கிரஸ் முடிவு செய்து சூப்பீரியர் ஏரியில் கட்டத் திட்டமிடப் பட்ட நீரடைப்புத் தடாகங்கள் அவை. 1969 இல் அவை புதுப்பிக்கப் பட்டு 23 அடித் தாழும் நீர்ப்படித் தொட்டிகள் இணையாக நான்கு ஒருபோக்கு வழியாகக் [Four Parallel Locks (One Transit)] கட்டப் பட்டவை. மேன்மைப் படுத்தப் பட்ட அவற்றின் வழியாக அமெரிக்காவின் பெருங் கப்பல்கள் [1000 அடி நீளம்] எளிதாகக் கடந்து செல்ல முடியும்! நீரடைப்புத் தொட்டி ஒன்றின் நீளம்: 1200 அடி! அகலம்: 110 அடி! அப்பெருங் கப்பல் ஒன்று ஒரே சமயத்தில் 60,000 டன் பளுப் பாரத்தைக் கொண்டு செல்ல முடியும்! தற்போது அவற்றின் வழியாக ஓராண்டுக்கு வேறுபாடான அளவுள்ள சுமார் 10,000 கப்பல்கள் ஏறி இறங்கிக் கடக்கின்றன!

ஆனால் 1932 இல் அமைக்கப் பட்ட வெல்லண்டு கால்வாய் வழியாக 1000 அடி நீளக் கப்பல்கள் புகுந்து செல்ல முடியாது! உச்ச அளவு 740 அடி நீளம், 78 அடி அகலக் கப்பல்களே எட்டு நீரடைப்புத் தொட்டிகள் மூலம் போய் வர முடியும். அச்சிறிய கப்பல்களின் பளு சுமக்கும் ஆற்றல் உச்ச அளவு 32,000 டன்!

175 ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கப்பல் வணிகத்துறை வளர்ச்சிக்கு, வெல்லண்டு கால்வாய் பெரும்பணி ஆற்றியுள்ளது.

வெல்லண்டு கால்வாய் மாற்றங்களும் நீர்மட்டப் புனல் தொட்டிகளும்

கப்பலை 326 அடி நீர்மட்டம் இறக்கும் எட்டுத் தடாகத் தொட்டிகளை உடைய ‘வெல்லண்டு கால்வாய் ‘ இருபதாம் நூற்றாண்டின் மகத்தானப் பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது! 1996 இல் வெல்லண்டுக் கால்வாய் மூலம் கடல் வழியாகச் சென்ற கப்பல்கள்: 900. அதே சமயம் உள்நாட்டுக்குள் போய் வந்தவை: 2400 கப்பல்கள். கால்வாயின் நீளம்: 26 மைல்கள். ஒவ்வொரு தடாகப் புனலும் 46.5 அடி உயரம் கப்பலைத் தூக்கவோ, தணிக்கவோ ஆற்றல் உடையது. கால்வாயின் ஆழம் குறைந்தது 27 அடி இருக்கும்படித் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது.

Superior-Huron Locks

வெல்லண்டு கால்வாயின் பிதா எனப்படும் வில்லியம் ஹாமில்டன் மெர்ரிட் [William Hamilton Merritt] 1824 இல் 8 மில்லியன் டாலர் செலவில் 40 நீரடைப்பு மரத்தொட்டிகளை முதலில் திட்டமிட்டுத் துவங்கி 1829 இல் கட்டி முடித்தார். 1833 இல் பல முறைகளில் கால்வாய் திருத்தமானது. பிறகு இரண்டாவது வெல்லண்டு கால்வாய் 27 தடாகங்களுடன் 1842 இல் அமைக்கப் பட்டது. அடுத்து மூன்றாவது கால்வாய் 1887 இல் 26 தடாகத் தொட்டிகளுடன் கற்களால் கட்டப்பட்டுத் தயாரிக்கப் பட்டது. தற்போதைய நான்காவது மாடல் வெல்லண்டு கால்வாய் 1913-1932 ஆண்டுகளில் முடிக்கப் பட்டது! 870 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட எட்டு நீர்ப்படித் தடாகங்களுடன் புதிய முறையில் அமைக்கப் பட்டது.

Soo Locks

நயாகரா நீர்வீழ்ச்சிப் போக்கில் மின்சக்தி உற்பத்தி

நயாகரா நதி இளவயதானது! அது ஓட ஆரம்பித்து 12,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்று கனடாவின் தளப்பண்பு ஆய்வுமூலம் [Geological Study] அறியப் படுகின்றது. பனிப்பாறை ரம்பங்கள் அறுத்து உண்டாக்கிய நயாகரா ‘செங்குத்துப் பள்ளத்தாக்கு ‘ [Niagara Escarpment] அதற்கும் முன்பாகவே தோன்றியது! உலகத்தில் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகக் கருதப்படும் நயாகரா, அமெரிக்க நீர்வீழ்ச்சி என்றும், கனடா நீர்வீழ்ச்சி என்றும் பிரித்து அழைக்கப் பட்டாலும், இரண்டும் ஒரே நீரோட்ட வீழ்ச்சிகள்தான்! 1060 அடி அகண்ட அமெரிக்க நீர்வீழ்ச்சி 176 அடி உயரத்திலிருந்தும், 2600 அடி அகண்ட கனடா நீர்வீழ்ச்சி 167 அடி உயரத்திலிருந்தும் விழுகின்றன! ஈரி ஏரியிலிருந்து ஓடும் நீரோட்டம் இரண்டாகப் பிரிந்து, தனியாக இரு பகுதியில் விழுந்தாலும், இரண்டும் மீண்டும் ஒன்றாகி ஒரே நீரோட்டமாக நயாகரா நதியில் 15 மைல் ஓடி அண்டாரியோ ஏரியில் கலக்கிறது! அமெரிக்க வீழ்ச்சியில் வினாடிக்கு 150,000 காலன் வெள்ளமும், கனடா நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 600,000 காலன் வெள்ளமும் மழையாய்க் கொட்டுகின்றன. அந்தப் பயங்கர நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கவசக் கலசத்தில் உள்ளமர்ந்து குதித்துக் [Barrel Jump Hero] காட்டிய தீரர் இருவர்!

இரண்டு ஏரிகளின் நீர்மட்டம் 326 அடி வேறு படுவதால், மிகப் பெரும் நீரோட்ட மின்சார நிலையங்கள் [Hydro Electric Power Plants] அமைக்க வழியுள்ளது. அமெரிக்கா 2575 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையங்களும், கனடா 2045 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையங்களும் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில் நிறுவகமாகி மின்சாரம் பரிமாறி வருகின்றன. நீர்வீழ்ச்சிகளுக்கு முன்பாகவே, மின்சார நிலையங்களுக்கு வேண்டிய நீர் வெள்ளம், எடுத்துக் கொள்ளப்படுகிறது. குளிர்காலத்தில் ஏரிகளின் நீர் மேலாக உறைந்து விடுவதால், மிதந்து வரும் பனித்துண்டுகள் டர்பையன் சுழலிகளைத் [Turbine Blades] தாக்காதவாறு நுழைவாயில் வடிகட்டப் படவேண்டும்.

Hydro Electric Power Station, Niagara Falls

செயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கத்தில் செய்த மேம்பாடுகள்

கடந்த 45 ஆண்டுகளாக உலக நாடுகளிடையே அமெரிக்காவும், கனடாவும் கப்பல் வணிகத்துறைப் போக்கு வைத்துக் கொள்ள, செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி பெரும்பணி யாற்றியுள்ளது. 1954 ஆண்டு துவக்கத்தில் கடல்வீதிக் கால்வாய் ஆழம் 25 அடியாகத் திட்டமிடப் பட்டது, 1959 இல் முடிவு பெறும் போது 27 அடியாக அதிகமாக்கப் பட்டது. கப்பல்களின் போக்குவரத்துக் கடல்வீதி வழியே அதிகரித்து விடுவதாலும், எதிர்பாராமல் ஏற்படும் தகுதி யற்ற காலநிலைக் கோளாறுகளாலும், வரிசையில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கைக் கால்வாய்க் கடப்பு ஆற்றலை ஏறக்குறைய எட்டி வருகிறது! 1967 இல் ‘புதிய போக்குவரத்துக் கண்காணிப்பு ஏற்பாடு ‘ [New Traffic Control System] ஒன்று அமைக்கப் பட்டது. அம்முறைப்படி கப்பல்களின் போக்கைப் பின்பற்றும் டெலிவிஷன் காட்சி அரங்கம், தூர அறிவிப்பு ஏற்பாடுகள் [Close Circuit Television & Telemetry] அமைக்கப் பட்டு, ஆட்சி அரங்கில் தொடர்ந்து நோக்கிவர முடிகிறது. அதன் விளைவுகள்: நீரடைப்புத் தடாகங்களில் கப்பல் கடப்பு நேரக் குறைப்பு, சுற்றுப் பயணக் கப்பல்களின் காலக் குறைப்பு போன்றவை. வெல்லண்டு கால்வாயில் ‘மையக் கட்டுப்பாட்டு அரங்கம் ‘ [Central Control Area] அமைக்கப் பட்டு, 1, 2, 3, 7 & 8 தடாகத் தொட்டிகள் சுய இயக்க முறைகளைப் பின்பற்றிக் கண்காணிப்படுகின்றன. செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிக் கப்பல் போக்குவரத்தால், வெல்லண்டு கால்வாய்ப் பணிகள் மட்டும் ஆண்டுக்கு 160 மில்லியன் டாலர் வருமானத்தை நயாகரா பகுதியில் [Niagara Region] உண்டாக்கி, மாந்தருக்கு பணி அளிக்கும் பெரும் பிழைப்பு நிறுவனமாய்ப் பெயர் பெற்று வருகிறது!

தகவல்:

1. The Great Lakes (Natural Science of Canada) By: Robert Thomas Allen [1970]

2. The St. Lawrence Valley (Natural Science of Canada) By: Ken Lefolii [1970]

3. National Geographic Picture Atlas of our World [1990]

4. Teaching About the Great Lakes & St. Lawrence Seaway [www.canadainfolink.ca/glks.htm]

5. The Welland Canal Section of the St. Lawrence River [www.greatlakes-seaway.com] [March 2003]

6. Great Lakes Ports & Shipping to the Ocean & Beyond [www.seaway.ca/en/]

7. The St. Lawrence Seaway [Combined Traffic by Commodity Report (1996)]

8. The Great Lakes -St. Lawrence System Profile By: David Schweiger & Charles Southam

9. [www.usace.army.mil] [2000]

10.  https://en.wikipedia.org/wiki/Welland_Canal   [March 29, 2016]

11. http://www.infoniagara.com/attractions/welland_canal/canal_map.aspx

12.  https://en.wikipedia.org/wiki/Saint_Lawrence_Seaway  [February 27, 2016]

13.  http://www.greatlakes-seaway.com/en/seaway/locks/index.html

14.  http://www.greatlakes-seaway.com/en/seaway/locks/

15. http://www.canadiangeographic.ca/magazine/ja09/seaway.asp

16. http://www.thecanadianencyclopedia.ca/en/article/st-lawrence-seaway/

****

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 30, 2016 [R-1]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2

Khafre enthroned

(The Great Pyramids of Egypt)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

https://youtu.be/T4cA6oGwzvk

https://youtu.be/Jt6ZdheNyek

https://youtu.be/xo2f4IVhuPshttp://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

http://www.bing.com/videos/search?q=Pyramid+paintings%2c+statues&&view

+++++++++++++++++

அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்!

ஒயில் மிகும் கணிதக் கட்டடம்,

நைல் நதி நாகரிகக் கற் கோபுரம்.

ஐயாயிர வயது தாண்டிய கோணகம்,

சதுரப் பீடம்மேல் சாய்ந்த மேடகம்.

புரவலர் உடல்களைப் புதைத்த பெட்டகம்,

சிற்பம், சின்னம் அடங்கிய களஞ்சியம்.

கற்பாறை அடுக்கிக் கட்டிய சிற்பகம்,

அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்!

+++++++++++++

‘புராதன எகிப்திய நிபுணர் போன்று, இதுவரைப் பண்டைய அல்லது நவீன மாந்தர் தேசீய மயமான ஓர் உன்னதக் கட்டடக் கலைத்துவத் திறனைச் சிறுமை சிறிதுமின்றி, மகத்தான முறையில் பிரம்மாண்டமாகச் சிந்தையில் கொண்டு படைத்தவர், எவரும் இந்த உலகிலே கிடையாது. ‘

ஜான் ஃபிராங்காய்ஸ் சாம்பொலையன் [Jean Francois Champollion, Founder of Modern Egyptology]

எகிப்து வரலாற்றைக் கூறும் பிரமிட் கோபுரங்கள்

5000 ஆண்டுகளாக உலகத்தின் புராதன ஏழு விந்தைகளில் ஒன்றான எகிப்தின் பிரமிட் ஒன்றுதான் கால வெள்ளம் தகர்த்து அழிக்காதபடிக் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது! மற்ற ஆறு விந்தைகளும் அழிந்து இப்போது நமக்குத் தெரியாமல் போய்விட்டன. பிரமிட் கோபுரங்களைக் கட்டிய ஃபாரோ சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கு முன்பு, எகிப்தின் நைல் நதி தீரத்தைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம். புராதன எகிப்தியர் தமது செழிப்பான நிலப்படுகையைக் ‘கீமெத் ‘ [Kemet] என்று அழைத்தனர். கீமெத் என்றால் கருமண் என்று பொருள். ஒவ்வோர் ஆண்டிலும் மழைக் காலத்தில் நைல் நதி நீரோட்டத்தால் நிரம்பி வழிந்தபின், வயல்களில் தங்கிப் போன செழிப்பான கரிய களி மண்ணையே கீமெத் குறிப்பிடுகிறது. எகிப்திய பாலைவன மணலின் நிறம் மஞ்சள் கலந்த செந்நிறம். அவர்கள் பாலைவனத்தை அந்த நாளில் ‘டெஸ்ரெட் ‘ [Deshret] என்று குறிப்பிட்டார்கள். டெஸ்ரெட் என்றால் செந்நிறம் என்று அர்த்தம். அச்சொல்லே பின்னால் டெஸர்ட் [Desert] என்று யாவராலும் அழைக்கப் பட்டது.

கி.மு.3000 ஆண்டு காலத்தில் தலைதூக்கி வளர்ச்சி அடைந்துள்ள எகிப்தின் நாகரீக வரலாற்றை, அதன் பொற்கால யுகம் என்று குறிப்பிடலாம். அந்த காலத்து வேந்தர் உடலைப் புதைக்க பிரம்மாண்டமாகக் கட்டிய பிரமிட் கோபுரங்கள் அவற்றுக்குச் சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. பாலை வனச் செந்நிற மண் படலம் எகிப்த் நாட்டின் பரப்பில் 95% பகுதியைச் சிவப்புக் கம்பளம் போல் ஆக்கிரமித்துள்ளது. இடையே உள்ள நைல் நதியின் செழிப்பான இருபுறக் கரைகளிலும் பசுமைக் கம்பளங்கள் செழிப்பாய் விரிக்கப் பட்டுள்ளன. உலகிலே மிக நீளமான நைல் நதி 4160 மைல் தூரம் ஓடி, ஆஃபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்திருக்கிறது.

எகிப்த் நாட்டில் உறுதியான பீடங்களின் மீது எழுப்பி யிருக்கும் 104 பிரமிட் கோபுரங்கள் நாகரீகச் சின்னங்களாய் அசையாமல், அழியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கின்றன. மேலும் வெறும் அடித்தளக் கட்டிடங்களோடு முழுமை பெறாது 54 பிரமிட் கோபுரங்களும் சில இடங்களில் நிற்கின்றன. அந்த மகத்தான கோபுரங்களைக் கட்டியவர் அங்கே ஒரு காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அல்லர்! அழிந்து போன ஒரு நாகரீக இனத்தின் முன்னோர்கள் அல்லர். அவர்கள் யாவரும் வேறு கண்டத்திலிருந்தோ அல்லது அண்ட கோளத்திலிருந்தோ அந்த பூமிக்கு வந்தவரும் அல்லர். சீரும், சிறப்பாகவும் வாழ்ந்த அவர்கள் முழுக்க முழுக்க அக்கால எகிப்திய இனத்தவர்களே. புதைக்கப் பட்ட அவர்களது எலும்புக் கூடுகளைப் பின்னால் சோதித்த அறிவியலார், மருத்துவ ஆய்வாளர், புதைச்சின்ன நோக்காளர் ஆகியோரது கருத்துகள் மூலம் தெரிந்தது, அவர் அனைவரும் எகிப்தியர் என்பதுதான்.

பிரமிட் யுகத்தின் கடவுளான ஃபாரோ சக்ரவர்த்திகள்

கி.மு.3000 இல் எகிப்த் நாடு வடபுற, தென்புறப் பகுதிகள் ஒன்றாய் இணைந்து, ஓர் ஐக்கியப் பேரரசாய் இயங்கி வந்தது. அப்போதுதான் ஃபாரோ பேரரசர்களின் பரம்பரை அரசாட்சி [Pharaoh Dynasity] மேலோங்கி மிளிர்ந்து இருந்ததது. வல்லமையும், ஞானமும் மிக்க ஃபாரோ மன்னர்கள் அனைவரும் அக்கால மக்களால் கடவுளாக மதிக்கப் பட்டவர். ஃபாரோ ராஜியத்தின் முதல் மன்னன் பெயர், மெனெஸ் [Menes] என்பது. மெனெஸைப் பின் தொடர்ந்து முப்பத்தி ஒன்று அரச சந்ததிகள் கி.மு.3188 முதல் கி.மு.332 வரை எகிப்தை ஆண்டு வந்தன. அவரது காலத்தி லிருந்துதான் ஃபாரோ வேந்தர்களின் புதைப்பு மாளிகையிலும், களஞ்சியங்களிலும் அவரது வாழ்க்கை வரலாறுகளைப் பொறிக்கும் பண்பாடு ஆரம்பித்தது. எகிப்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே இருக்கும் செழிப்பான தளத்தில், மெனெஸ் தனது புகழ் பெற்ற தலைநகரைக் கோட்டைச் சுவருடன் நிறுவினார். அந்த நகருக்கு அவர் ‘வெள்ளை மதில்கள் ‘ [White Walls] என்ற பெயரை இட்டார். இப்போது அது மெம்ஃபிஸ் [Memphis] என்ற கிரேக்கப் பெயருடன் நிலவி வருகிறது.

சுமார் 3000 ஆண்டுகளாக மெம்ஃபிஸ் நாகரீக நகரம் ஃபாரோ வேந்தர்களின் தலைநகராக கொடிகட்டி ஓங்கி இருந்தது. மெம்ஃபிஸ் நகருக்கு வடக்கே 20 மைல் தூரத்தில்தான் தற்போதைய தலைநகர் கெய்ரோ இருக்கிறது. எகிப்தின் முதல் கரடு முரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. புகழ் பெற்ற கீஸாவின் [Giza] மூன்று பிரமிட்களும், மனிதத் தலை கொண்ட பூதச்சிங்கமும் [Sphynx] நாலாவது தலைமுறை ஃபாரோ வேந்தனால் அமைக்கப் பட்டன.

பூதச்சிங்கம் ஃபாரோ மன்னர்களின் பராக்கிரமச் சின்னமாகக் கருதப் பட்டது. கூஃபு வேந்தன் நாலாவது சந்ததியில் இரண்டாவது மன்னன். எல்லாவற்றிலும் பெரிய பிரமிட்டை கீஸாவில் கட்ட சுமார் 20 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. அந்த பிரம்மாண்டமான கோபுரத்திற்கு கற்களை 480 அடி உயரம் வரை ஏற்றிச் செல்லும் சாய்வுத் தளத்தை [Ramp] நைல் நதி தீரத்திலிருந்து அமைக்க சுமார் 10 ஆண்டுகள் எடுத்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அடுத்துப் பட்டம் சூடிய கூஃபுவின் மகன் காஃப்ரி [Khafre] தான் அடக்கமாகப் போகும் இரண்டாம் பிரமிட்டைப் பூதச்சிங்கத்துடன் கீஸாவில் கட்டினான். பிறகு காஃபிரியின் மகன் மென்கெளரி [Menkaure] மூன்றாவது சிறிய பிரமிட்டைத் தனக்காக அமைத்தான்.

Cutaway Section of Pyramid

பிரமிட்டிற்குக் கற்பாறைகள் எவ்விதம் கொண்டு வரப்பட்டன ?

கூஃபு பேரரசன் தனக்காகக் கட்டிய எல்லாவற்றிலும் பெரிய பிரமிடில் சுமார் 2,300,000 பாறைத் துண்டுகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. பாறைக் கற்களின் சராசரி எடை 2.5 டன் என்றும் உச்ச எடை 15 டன்னாகவும் கணிக்கப் பட்டுள்ளன. கூஃபு வேந்தன் அடக்கம் ஆகி யிருக்கும் புதை மாளிகையின் மேல்தளக் கூரைத் தட்டுகள் 40-60 டன் எடை உள்ளதாய் காணப்பட்டன. எண்ணிக்கையிலும், எடையிலும் உயர்ந்த இத்தனைப் பாறைக் கற்கள் எந்த மலைக் குன்றுகளில் வெட்டி எடுக்கப் பட்டன என்பது முதல் விந்தை! அங்கிருந்து அவை அனைத்தும் எவ்விதம் நகர்த்தப் பட்டுக் கொண்டு வரப்பட்டன என்பது அடுத்த விந்தை! பிரமிட் தளத்திற்கு அருகிலும், 500 மைல் தூரத்திற்கு அப்பாலும் உள்ள பாறை வெட்டுக் குழிகளிலிருந்து [Stone Quarries], செம்மை செய்யப்பட்ட பாதைகள், சாய்வுத் தளங்கள் மீது உருளைத் தூண்கள் மூலமாக நகர்த்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. பாறைக் கற்களை இழுக்க பெரிய வடங்கள், பாபிரஸ் முறுக்கு நாண்கள் [Papyrus Twines] பயன்பட்டிருப்ப தாகத் அறியப் படுகின்றது.

நைல் நதியில் கட்டுமரம் கட்டி மிதக்க விட்டுப் பெரும் பாறைகள் பிரமிட் கட்டுமான வேலைகளுக்குக் கொண்டு வரப்பட்டன. ஆண்டு தோறும் நைல் நதியில் வெள்ளம் மிகுந்து கரைவயற் பகுதிகளில் நீர் நிரம்பிய போது, வேளாண்மைப் பணியாட்கள் வேலை யில்லாத சமயங்களில், பிரமிட் கட்ட முன்வந்ததாக அறியப்படுகிறது. வெள்ளம் வந்த காலங்களில் ஒரு தற்காலிய துறைமுகத் தளம் உண்டாக்கப் பட்டு, கட்டுமர மிதப்பிகளில் கற்பாறைகள் கொண்டு வரப்பட்டன. சில சுண்ணக் கற்கள் தூரா [Lime Stones from Tura] என்னும் இடத்திலிருந்தும், கனத்த பாறைகள் அஸ்வான் [Aswan] பகுதியிலும், கருவிகளுக்குப் பயன்படும் தாமிர உலோகம் சினாய் மலைக் குன்றிலும் [Copper Metal from Mount Sinai] கிடைத்தன. பிரமிட் திட்ட வேலை களுக்கும், மரப் படகுகளுக்கும் தேவையான மரக் கம்பங்கள் [Cedar] லெபனானிலிருந்து கிடைத்தன. கல் கொத்தனார்களுக்கு பாறைக் கற்களை வெட்டுவதற்குத் தாமிரக் கொத்திகள், செதுக்கிகள் பயன்பட்டன.

பிரமிட்களின் அடித்தளம் & வெளிப்புற அமைப்புகள்

பிரமிட்களின் அடித்தளங்கள் கொத்தனார் தாமிரச் செதுக்கிகளால் [Copper Chisels] வெட்டிய சுண்ணக்கல் கட்டிகளால் [Limestone Blocks] கட்டுமானம் ஆனவை. எகிப்தின் மணல் பூமிமேல் எழுப்பப் பட்டுள்ளது என்று எண்ணும் பொதுநபர் கருத்துக்கு மாறாகப் பிரமிட் கோபுரம் பாறைப் பீடத்தின் மீது உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கூஃபு பிரமிட் ஒரு உட்தளக் குன்றின் மீது அமர்ந்துள்ளது. முக்கியமாகச் சுண்ணக் கற்களாலும், பாறைக் கற்களாலும் அது கட்டப் பட்டது. அதற்கு முன்னோடி யாகவும் மற்றும் பின்னோடியாகவும் கட்டப்பட்ட சிறிய பிரமிட்களில் எண்ணற்ற செங்கற்கள் பயன்பட்டன. அடுத்து காஃபிரி, மென்கெளரி கட்டிய பிரமிட்களில் கீழடுக்கு வரிசைகளில் பாறைக் கற்களும், மேலடுக்கில் சுண்ணக் கற்களும் உபயோகப் படுத்தப் பட்டன. கீஸா பிரமிட்களின் வெளிப்புறச் சாய்வு சுற்றுப் புறங்களில் பளபளக்கும் வெந்நிறச் சுண்ணக் கற்கள் அமைக்கப் பட்டு, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாய்ப் பால் நிறத்தில் அவை மிளிர்ந்தன.

காஃபிரி பிரமிடின் கூம்புத் தலைப் பகுதியைத் தவிர, பளபளக்கும் பால்நிறச் சுண்ணக் கற்கள் யாவும் மூன்று பிரமிட்களிலிருந்தும் பிற்காலத்தில் களவு போய்விட்டன. அதே சமயத்தில் அவற்றில் சில பல்லாயிரம் ஆண்டுகளில் அடுத்தடுத்து அடித்த பாலைவன மணற்புயல் காற்றில் [Desert Sand Storm] நேர்ந்த உராய்வுத் தேய்வால் [Erosion] சிறுகச் சிறுகக் கரைந்து போயின என்றும் கருத இட மிருக்கிறது. வெள்ளைத் தட்டுகள் பிரமிட்களிலிருந்து உரித்து எடுக்கப்பட்டு, கெய்ரோவின் பெரிய மாளிகைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. காஃபிரி பிரமிடின் கீழடுக்குப் பாறைக் கற்கள் யாவும், எகிப்தின் 19 ஆவது ஃபாரோ சந்ததியினர் காலத்தில் சிறிதும், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் சிறிதுமாகக் களவு போய் விட்டன என்று அறியப் படுகின்றது! கெய்ரோ நகரக் கட்டிடங்களைக் கட்டி அலங்கரிக்க கீஸா பிரமிட்களின் சுண்ணக் கற்களும் நாளடைவில் திருடப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது!

(தொடரும்)

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. A History of Invention & Engineering from Pyramids to Space Shuttle, Works of Man By: Ronald W. Clark [1985]

10. Selections from National Geographic, Death on the Nile [2004]

11. Secrets of the Great Pyramid By : Peter Tompkins (1971) & (1978)

12.  http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

13.  https://en.wikipedia.org/wiki/Pyramid_(geometry)  February 7, 2016

14.  http://science.nationalgeographic.com/science/archaeology/giza-pyramids/

15.  https://en.wikipedia.org/wiki/Khafre_Enthroned  [July 19, 2015]

15.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

16. https://en.wikipedia.org/wiki/Giza_pyramid_complex  [March 9, 2016]

17.  https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza  [March 23, 2016]

*********************

jayabarathans@gmail.com [S. Jayabarathan]  (March 27, 2016)

https://jayabarathan.wordpress.com

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1

 

Pyramid 10

(The Great Pyramids of Egypt)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++

https://youtu.be/T4cA6oGwzvk

https://youtu.be/Jt6ZdheNyek

https://youtu.be/xo2f4IVhuPs

http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

+++++++++++++++++

நைல் நதி நாகரீகக் கற் கோபுரம்

ஐயாயிரம்  ஆண்டுக் கால மேடகம்

ஒயில் மிக்க உன்னதக் கூம்பகம்

சதுரப் பீடம்மேல் எழும்சீர்க் கோணகம்!

புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!

சிற்பம், சின்னம் செதுக்கிய களஞ்சியம்!

கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!

பூர்வீக நாட்டின் பொற்காலக் கட்டடம்!

++++++++++++++

Pyramid 9

5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டினர்.

Upper Cover

புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!

எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.

பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.

 

5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.

Pyramid -1

பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?

எகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோணச் சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!

பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.

Pyramid 11

ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

Paintings

(தொடரும்)

தகவல்

1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

2. Atlas of the World History By: Harper Collins (1998)

3. The Ancient World, Quest for the Past (1984)

4. How in The World By: Reader ‘s Digest (1990)

5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

7. The History of Art for Young People By: H.W. Janson.

8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

9. Secrets of the Great Pyramid By : Peter Tompkins (1971) & (1978)

10.  http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

11.  https://en.wikipedia.org/wiki/Pyramid_(geometry)  February 7, 2016

12.  http://science.nationalgeographic.com/science/archaeology/giza-pyramids/

13.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

14.  https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza  [March 23, 2016]

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 25, 2016

அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

Safe casks 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee] இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் தோன்றியது. முதல் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய எருக்களைத் தயாரிக்கவும், அவற்றைத் தூய்மைப் படுத்தவும் ஓக் ரிட்ஜில் அணு உலைகளும், அணு எருச் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் அமைக்கப் பட்டன! அந்த முன்னோடிச் சேமிப்பகம் பயன்படுத்தப் பட்ட பிறகு அதில் பெற்ற அனுபவத்தால், பலவித முறைகளில் அது இன்னும் விருத்தி அடைந்தது! அதைப் போன்ற பல சேமிப்பகங்கள் மற்ற நாடுகளிலும் ஆரம்ப காலத்தில் கையாளப் பட்டன. ஆனால் தொட்டி போன்ற அந்த முன்னோடிச் சேமிப்பகம் வீரியக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை!

தற்போது ஆஸ்டிரியா, வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் [International Atomic Energy Agency (IAEA)] ஆலோசனைப்படி உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலை, உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்காக பலவிதக் குழிகளும், பாதாளக் கிடங்குகளும் அமைப்பாகி யுள்ளன. அம்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கீழ்நிலைச் சேமிப்புக் குழிகள் பயன்பட்டு வருவதோடு, 42 புதிய பூதளக் கிடங்குகளும் [Geological Repositories] டிசைன் செய்யப் பட்டு, விருத்தி யடைந்து தயாராகி வருகின்றன.

அகில நாடுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு, ஆராய்ச்சி அணு உலைகள், மின்சக்தி அணு உலைகள் இயக்கம், முதுமை எய்திய அணு உலைகள் முடக்கம், அணுவியல் எருக்கள் தனித்தெடுப்பு, சுத்தீகரிப்பு, எருக்கோல்கள் வடிப்பு [Fuel Fabrication], செறிவு யுரேனியத் தயாரிப்பு [Uranium Enrichment], தீய்வு எருக்கோல்கள் மீள் சுத்திகரிப்பு [Spent Fuel Reprocessing Plant] ஆகிய பல் வேறு பணிகளால் அனு தினமும் கதிர்வீசும் கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன!

Nuclear feul cycle

IAEA அகில நாடுகளின் அனுபவக் கூட்டறிவையும், பயன்படும் தனியறிவையும், முன்னேறும் நாடுகளுக்கும், தேவையான பிற நாடுகளுக்கும் அளித்து, அணுத்துறைக் கழிவுகள் பாதுகாப்பாக அடக்க மாவதற்கு உதவி செய்து வருகிறது. அணுமின் சக்தி உற்பத்திச் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவே, அதன் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைப்புக்குத் தேவைப் படுகிறது!

கதிர்வீச்சுக் கழிவுகள் அடக்கமாகும் புதைப்புத் தளம் தேர்ந்தெடுப்பு

புதைப்புத் தளம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அது பல தகுதி விதி முறைகளை நிறைவேற்ற வேண்டும்.

1. பூதளவியல் பண்பு [Geological Characteristics]

2. பூதள நீரோட்ட அமைப்பு [Hydrology or Hydrogeology].

3. பூதள இரசாயனவியல் பாதிப்பு [Geochemistry].

4. பூதள அதிர்வு அபாயம் [Tectonics & Seismicity].

5. மேற் பரப்பு இயக்கம் [Surface Process].

6. காலநிலைப் பாதிப்பு [Meteorology].

7. மனிதர் தூண்டும் நிகழ்ச்சிகள் [Human-induced Events].

8. கழிவுகளைக் கடத்த வாகனப் போக்குவரத்து வசதி [Transportation of Wastes].

9. பூதளப் பயன்பாடு [Land Use].

10. மக்கள் வசிக்கும் திணிவு [Population Density or Distribution].

11. சூழ்வெளிப் பாதுகாப்பு முறைகள் [Environmental Protection].

12. முக்கியமாக இறுதியில் பொதுநபர் அங்கீகாரம் [Public Acceptance]. இவற்றுடன் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு ஆகியவற்றின் அழுத்தமான உடன்பாடு, உறுதிப்பாடு, முடிவில் ஒப்பந்தம்!

 

தற்போது உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகள் சேமிக்க 17 இடங்கள் தேர்வாகிக் கட்டும் லைஸென்ஸ் பெற்றுள்ளன! மேலும் 17 நாடுகளில் 25 பூதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் ஒன்று சைனா. சைனா கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் [Low Level, Medium Level Radioactive Wastes] சேமிக்க வடமேற்கு கோபி பாலை வனப் பகுதியில் இரண்டு, தெற்குப் பகுதியில் இரண்டாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

சில தேசங்களில் புதைப்புக் கிடங்குகள் அணுத்துறைச் சாதனங்களின் அருகே அமைக்கப் பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்தில் டிரிக் [Drigg, U.K.], பிரான்ஸில் மான்ச் மையம் [Centre de la Manche], ஜப்பானில் ராக்கஷோ [Rakkasho, Japan], பின்லாந்தில் ஒகிலெளட்டு [Olkiluoto, Finland] போன்ற பூதளப் புதைப்பு இடங்கள் அணுவியல் கூடங்களுக்கு அருகிலே உள்ளன! பல நாடுகள் ஒன்றாக இணைந்து பொதுப் புதைப்புக் கிடங்குகள் [Regional Multi-national Repository] நிறுவிப் பயன்படுத்த ஐரோப்பிய நாடுகள் சில ஒப்புக் கொண்டு உள்ளன!

பூதளப் புதைப்பிடத்தின் சிறப்பு டிசைன் தேவைகள்

புதைப்பிடத் தேர்வு ஒரு நாட்டின் பூதள நீர், நில வளத்தையும், கீழ்த்தள நீரோட்டத் தன்மையும், அணுசக்திக் கட்டுப்பாடுப் பேரவையின் விதிகளையும் பொறுத்தது. அவற்றின் டிசைன் குறிக்கோள்

1. கதிர்வீச்சுத் தீண்டல் குறைப்பு அல்லது கதிர் அணுக்கருத் துணுக்குகள் கசிந்து உயிரியல் கோளத்தில் [Biospere] வெளியேறிப் பரவும் அளவுக் கட்டுப்பாடு

2. பொதுநபர், பணியாளிகள் ஆகியோருக்கு மிகக் குன்றிய கதிரடித் தாக்குதல்

3. மிகக் குறைந்த பராமரிப்பு வினைகள்

4. கண்காணிப்பு வசதிகள்

5. 24/7 நாள் மணி நேரப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.

பூதள புதைப்பிடங்களின் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குக் கவசங்களாகப் பயன்படும் பல்லடுக்குப் பொறியியல் அரண்கள் [Multiple Engineered Barriers] அமைக்கப் பட்டுள்ளன. அவை யாவும் காங்கரிட் அரண்கள் [Concrete Vaults]. அந்த அரணில் மீள்நிரப்பிப் பண்டம் [Backfilling Material], இரசாயனத் தடுப்பி [Chemical Barrier], வாயு வெளி நீக்கி [Gas Vent], தளர்ச்சிக் களம் [Buffer Zone] போன்றவை இணைக்கப் பட்டுள்ளன.

 

அகில நாடுகளில் பலவிதப் புதைப்புக் கிடங்குகள் டிசைன் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் 62% அமைப்புகள் தரை மட்டத்துக்கு 34 அடிக்குக் [40 மீட்டர்] கீழ் உள்ளன. 18% எளிதான தரை மட்ட ஏற்பாடுகள். 7% சுரங்கப் பாதாளக் குழிகள். 4% 2000-4000 அடிக்குக் கீழான பூதளக் கிடங்குகள்.

அகில நாடுகளில் அமைந்துள்ள கழிவுக் கிடங்குகள்

அமெரிக்காவில் 1980 ஆம் ஆண்டு ‘கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவு விதி ‘ [Low Level Radioactive Waste Policy] அமுலான பிறகு, புதிதாக எந்த இடமும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எட்டு மாநிலங்களில் பூதளத் தேர்வு முன்னேறி வருகிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட நான்கு இடங்கள்:

1. நெப்ராஸ்காவில் மத்திய புதைப்பகம் [Nebraska (Central Interstate Compact)],

2. வட கரோலினாவில் தென்கிழக்குப் புதைப்பகம் [North Carolina (Southeast Compact)],

3. காலிஃபோர்னியாவில் தென்மேற்குப் புதைப்பகம் [California (Southwest Compact)],

4. டெக்ஸஸில் டெக்ஸஸ் புதைப்பகம் [Texas, (Texas Compact pending)] லைஸென்ஸ் பெறப் போகின்றன.

கனெக்டிகெட்டில் [Connecticut] பொது நபர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ‘பூதளத் தேர்வு, கட்டுப்பாடு ‘ [Choice & Contorl] ஆகிய இரண்டு முறைகளிலும் பொது மக்கள் ஈடுபட வசதி செய்யப் பட்டது!

ரஷ்யாவில் 1960-1970 ஆண்டுகளில் பல தரப்பட்ட கதிரியக்கக் கழிவுகளைப் புதைக்க பல விதக் கிடங்குகள் உருவாக்கப் பட்டன. அவற்றைப் போல மற்ற கிழக்கு ஈரோப் நாடுகளிலும் அமைக்கப் பட்டன. பூதளத்தின் கீழ் நீரோட்ட மட்டத்திற்கு 15 அடி மேலாக அவை யாவும் அமைய டிசைன் செய்யப் பட்டன. ஸெர்கீவ் போஸாட் [Sergiev Posad] என்னும் இடத்தில் ‘காங்கிரிட் அரண்கள் ‘ [Concrete Vaults] தரைக்குக் கீழ் கட்டப் பட்டன. இரட்டைக் காங்கிரிட் சுவர்கள் கொண்டு, பிட்டுமென் தார் [Bitumen Tar] அடுக்காய்ப் பூசப்பட்டவை. கழிவுத் திட்டுகள் [Waste Packages] அரணுள்ளே தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, செமென்ட் காரையால் நிரப்பப்படும். அரண் நிரம்பியதும் காங்கிரிட் ஊற்றி அடைக்கப்பட்டு, மேலே உறுதியாக்கப்பட்ட காங்கிரிட் உலோக மூடியால் மூடப்பட்டு, மேலும் செமெண்டால் இணைக்கப்படும்.

Uranium Storage Process

ஆஸ்திரேலியாவில் பொறி நுணுக்கமான ஒரு பூதளக் கிடங்கு தேர்வாகப் பொது மக்கள் முழுப் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப் பட்டது. கனடாவில் ரேடியம், யுரேனியம் சுத்திகரிப்புக் கழிவுகளைப் புதைப்பது பொது மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் தாமதமாகி, அரசாங்கம் முதல் பூதளத்தை நிராகரித்தது! பின்னால் தனியார் பணிக்குழு முன்வந்து அளித்த, நகராட்சி உறுப்பினர் பங்கு கொள்ளும் ஐந்து கட்டத் திட்டம் நிறைவேறிப் பூதளப் புதைப்பிடங்கள் தேர்வாயின.

ஹங்கேரியில் முதலிரண்டு இடங்கள் தடுக்கப்பட்டுக் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்க தேசீயப் புதைப்பிடம் ஒன்றை 1992 இல் ஹங்கேரி அணுத்துறைப் பேரவை [Hungarian Atomic Energy Commission] முடிவு செய்தது. அதைப் பின்பற்றி மக்கள் சமூகமே முன்வந்து, இன்னும் ஆறு புதைப்பு இடங்களைக் குறித்துத் தந்தது!

இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் வெளிடாதவை!

இந்தியாவில் சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் இரட்டை [1000 MWe ஆற்றல் கொண்ட] அணுமின் உலைகளில் ஒன்று ஓராண்டுக்கு முழு ஆற்றலில் இயங்கினால் சுமார் 100 கன அடி [cu.ft] மேல்நிலைக் கழிவு விளையும்! உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவான [High Level Radioactive Waste] அந்தக் கொள்ளளவில் 20 மில்லியன் கியூரி [curie] நீள் ஆயுள் கதிரியக்கம் [long Half Life Radioactivity] எழுகிறது! அவை 67,000 வாட்ஸ் [watts] வெப்பத்தை வெளியேற்றி நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. இரட்டை அணு உலைகள் 10 ஆண்டு இயங்கினால், 2000 கன அடிக் கழிவுகள் சேரும்!

இதுவரை 14 அணுமின் உலைகளும், சில ஆராய்ச்சி அணு உலைகளும் 30 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இடை இடையே பாராமரிப்புக்கு நிறுத்தமாகி இயங்கி வந்துள்ளன! அத்துடன் மூன்று தீய்ந்த எரு சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Reprocessing Plants], எருக்கோல் வடிப்புச் சாலைகள் [Fuel Bundle Fabrication Plants], யுரேனியச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்கள் [Uranium Separation Plants] ஆகியவை தினமும் கதிர்வீச்சுக் கழிவுகளை விளைவித்து வருகின்றன!

Dry Cask

2001 ஆண்டு முடிவு அறிக்கையில் [2001 Annual Report] கூட உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் எத்தனைக் கன அடி, திரவக் கழிவுகள் எத்தனை காலன், திடக்கட்டி ஆக்கப்பட்ட கழிவுகள் எத்தனை டன் என்னும் விபரங்களைத் தவிர இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் [Atomic Energy Regulatory Board] மற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது! முக்கியமாக உயர்நிலைக் கழிவுகள் எங்கே, எப்படி நிரந்தரமாக அடக்கம் செய்யப் படுகின்றன என்னும் முக்கிய விபரங்கள் இந்திய அணுத்துறை அகிலவலை முகப்புகளில் எதனிலும் காணப்பட வில்லை!

இப்போது [2015 ]இயங்கி வரும் 21 இந்திய அணுமின் உலைகள், ஆராய்ச்சி அணு உலைகள் யாவும் 220, 540, 1100 MWe மின்னாற்றலை மிஞ்சியவை அல்ல! பாரதத்தில் கட்டப் பட்டு எதிர்காலத்தில் இயங்கி வரும் புதிய பூத அணுமின் உலைகள்தான் [500 MWe, 1100 MWe] ஏராளமான அணுவியல் கழிவுகளை வெளியாக்கப் போகின்றன! உலக நாடுகளில் உச்சமான 1300 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் உலைகள் சில நாடுகளில் இயங்கி வருகின்றன! அகில நாடுகள் வெளியாக்கும் கதிர்வீச்சுக் கழிவுகளின் அளவை ஒப்பிட்டால், இந்திய அணு உலைகளின் அணுவியல் கழிவுகள் மிகவும் குறைந்தவை என்று சொல்லலாம்!

தீய்ந்த எரிக்கோல் தங்கும் நீர்த் தடாகம்

IAEA அறிக்கையின்படி பாம்பேயில் இருக்கும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் [Bhabha Atomic Energy Centre] அருகே ஆறு கீழ்நிலை, இடைநிலைக் கழிவுப் புதைப்புக் கிடங்குகள் உள்ளதாக தெரிய வருகிறது! அவை யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரிட் தொட்டிகள் [Reinforced Concrete Trenches], மற்றும் பல்வேறு விதமான கழிவுகளை அடக்கம் செய்யும் ஆழக் குழிகள் [Tile Holes]. காங்கிரிட் தொட்டிகள் யாவும் நீர்க்கசிவுகள் இல்லாதவை! அடுத்து மழைநீர் ஊடுறுவ முடியாதவை [Waterproof]. காங்கிரிட் மூடியால் அவை இறுக்கமாக மூடப் பட்டவை. கதிர்வீச்சு புறத்தே உள்ளவரைத் தாக்கா வண்ணம், அவைக் கவசமாகப் பெட்டியாகவும் உள்ளன. பேய் மழை கொட்டும் மழைக்காலச் சமயத்தில் நீர் இறங்காதபடி, நீரகற்றித் திரவங்கள் [Water Repellents] பூசப்பட்டவை. ஆழக் குழிகள் 15 அடி ஆழம் கொண்டவை. காங்கிரிட் தொட்டிகள் கதிர்வீச்சைக் குறைக்க முடியாத கழிவுகளும், ஆல்ஃபாக் கதிர்கள் [Alpha Rays] வீசும் கழிவுகளும் ஆழக் குழிகளில் புதைக்கப் பட்டன.

முடத்துவமான ஸ்பெயின் அணுமின் உலையின் கதிரியக்கக் கழிவுகள்

17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்பெயின் வாண்டெலாஸ்-1 [480 MWe மின்னாற்றலுள்ள Vandellos-1] அணுமின் உலையின் உயர் அழுத்த டர்பைன் கலத்தில் [High Pressure Turbine] 1989 இல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு 1990 இல் நிரந்தரமாக மூடப் பட்டது! இந்தியாவில் டெல்லிக்கு அருகில் இருக்கும் நரோரா அணுமின் நிலையத்தில் இதே போல்தான் 1993 இல் கீழ் அழுத்த டர்பைன் சுழலியில் தீப் பற்றிப் பெரும் சேதம் விளைந்தது! இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களுக்கு இடையூறு விளைவித்தாலும், அணு உலையால் தீ விபத்துத் தூண்டப் படவில்லை!

கோடிக் கணக்கான நிதியைச் செலவு செய்து, நரோரா செப்பணிடப் பட்டுத் தற்போது இயங்கி வருகிறது! ஆனால் வாண்டெலாஸ் அணு உலைத் திரள்கரி மிதவாக்கியைப் பயன்படுத்தி வாயுவால் வெப்பம் நீக்கப்படும் [Graphite moderated & Gas cooled Reactor] பிற்போக்குச் செர்நோபிள் மாடலைச் சேர்ந்தது! 1986 இல் செர்நோபிள் வெடித்துச் சிதைந்து போன காரணத்தால், டர்பைனில் தீப்பற்றிய ஸ்பெயினின் திரள்கரி அணுமின் உலையும் மூடப்பட்டு, 1996 இல் முடத்துவ மானது [Decommissioned]!

1. வாண்டெலாஸின் எருக்கோல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, நீர்த் தடாகத்தில் [Storage Water Pool] சேமிக்கப் பட்டன. அணு உலைச் சாதன இயக்கங்களால் விளைந்த கீழ்நிலைத் திடக் கழிவுகள், கதிர்வீசும் உலோகத் துண்டுகள், சுத்தீகரிப்பு இரசாயனக் கழிவுகள் [Chemically treated Liquid Wastes], யாவும் உலோகத் தொட்டிகளில் காங்கிரீட் கட்டிகளாய்ச் சுருக்கப்பட்டன!

2. 200,000 திரள்கரி உறைகள், மிதவாக்கிக் கட்டிகள், தயாரான மூன்று காங்கிரிட் அரண்கள் ஒன்றில் அடைக்கப் பட்டன!

3. அமுக்கிச் சிறுக்கும் கழிவுகள் [Compactable Wastes] 200 லிட்டர் கொள்ளளவுள்ள 900 கலன்களில் அடைக்கப் பட்டு மூடப்பட்டன. அவற்றுடன் 492 கட்டுப்பாடு செய்யும் நியூட்ரான் உறிஞ்சிக் கோல்களும் [Absorber Rods] சேமிக்கப் பட்டன.

4. காங்கிரிட் அரண்களின் உள்ளே இருந்த கழிவுகளின் பேரளவு கதிர்வீச்சு, புறத்தே மணிக்கு 4 மில்லி ரெம் [4 mRem/hour] கதிரடி வீதத்தில் இருந்தது.

அமெரிக்காவில் பேரளவு கதிர்வீச்சுக் கழிவுகளின் சேமிப்பு!

சோவியத் யூனியன் பொதுடமைக்கு எதிராக ‘ஊமைப்போர் ‘ நிலவிய சமயத்தில் [Cold War (1952-1989)] அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அடுக்கிக் கொண்டே போன போது, அமெரிக்கா மட்டும் 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளைத் [Nuclear Warheads] தயாரித்தது! அவற்றுக்கு அணு எருக்களாகப் பயன்பட்ட செறிவு யுரேனியம்-235 [90% மேல்], தூய்மையான புளுடோனியம்-239 ஆகியவற்றைத் தனித்தெடுக்க, செறிவாக்க, தூய்மைப் படுத்தும் வினைகளில் விளைந்த கழிவுகளின் கொள்ளளவு [114 அணுமின் உலைகளின் தீய்ந்த எருக்களின் கழிவையும் சேர்த்து] 52,000 டன்! புளுடோனிய திரவக் கழிவு மட்டும் 91 மில்லியன் காலன்!

பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

 

Spent fuel burial

 

புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

‘தன்வினை தன்னைச் சுடும் ‘, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘ என்பவை தமிழ்ப் பழமொழிகள். உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! எண்ணற்ற மாந்தரை அழிக்க வல்ல [Mass Destruction] அந்தக் கோர ஆயுதங்களை ஆக்கிய அமெரிக்கத் தளங்கள், இப்போது தங்கிவிட்ட கதிரியக்கக் கழிவுகளால், அமெரிக்க மக்களுக்கே பல்லாண்டு தீங்கு விளைவிக்கும் விதைகளை பல மாநிலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் தெளித்துள்ளன!

+++++++++++++++++++++

தகவல்:

1. Radioactive Waste Disposal, Global Experience & Challenge, IAEA Bulletin 39/1 [www.iaea.or.at/worldatom/]

2. Nuclear Science & Society By: Bernard Cohen [1974]

3. Atomic Science, Bombs & Power By: David Dietz [1962]

4. The Careless Atom By: Sheldon Novick [1969]

5. Living With Radiation, National Geographic [April 1989]

6. Nuclear Waste By: National Geographic [July 2002]

7. Indian Atomic Energy Regulatory Board Bombay, Annual Report [2001]

8. https://www.iaea.org/About/Policy/GC/GC50/GC50InfDocuments/English/gc50inf-3-att5_en.pdf  [2006]

9.  http://issues.org/28-2/alvarez/  [2012]

10.  http://www.nucleartourist.com/systems/spfuel1.htm

11.  https://en.wikipedia.org/wiki/Dry_cask_storage  [September 9, 2015]

12.  http://www.nrc.gov/waste/spent-fuel-storage.html  [October 15, 2015]

++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 20, 2016]  R-1]

 

அமெரிக்க அணுவியல் துறைத் தணிக்கை நெறி முறைகள் இந்தியாவுக்கு ஏற்றவையா ? 

 Nakasaki -2

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

 

‘இந்தியா விழித்துக் கொண்டது! மெதுவாக நடக்கும் ஒரு யானைதான், இந்தியா! ஆனால் அது நடக்க ஆரம்பித்தால், அழுத்தமான சக்தியோடு நடக்கிறது! ‘

முரளி மனோகர் ஜோஷி

[இந்தியக் குடியரசைப் பற்றிக் கூறிய மானிடத் துறைகளின் விருத்தி மந்திரி]

முகவுரை: அணுவியல் துறைகளைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு, அணுவியல் தளங்களில் நிகழும் தவறுகளைக் கண்காணித்துத் தடுக்கும் ஓர் இறுதிநிலைக் காவல் அரண் [Final Stage Barrier]! ஆனால் அதற்கு முன்பே விபத்து நேராவண்ணம் அடுத்தடுத்து நிறுத்தவோ, குறைக்கவோ பலவித அரண்கள் பாரத அணு உலைகளில் அமைப்பாகிக் காத்துக் கொண்டு நிற்கின்றன! அணுசக்தி உற்பத்தியின் போது தவிர்க்க முடியாமல் தாவும் கதிரியக்கத்தைக் காணும் கருவிகளும், தீவிர விளைவுகளைக் கட்டுப் படுத்தி மாந்தரைக் காத்துக் கொள்ள ‘பல்லடுக்கு அரண்கள் ‘ [Multi-Stage Barriers] அணு உலை அமைப்பின் போதே கட்டப் படுகின்றன. அணுசக்திக் கமிஷனுக்குக் கீழ் பணியாற்றிலும் சரி, அல்லது விடுதலை பெற்றுத் தனித்து நின்று கண்காணித்தாலும் சரி, கட்டுப்பாட்டுக் குழுவினர் தீர்மானிக்கும் தடுப்புமுறை முடிவுகள் யாவும், உரிமையாளர் கைவசம் உள்ள ‘நிதித்தொகைக்கு ‘ [Budget Improvement Funds] ஏற்ப செயல் படுத்தப்படலாம், தாமதிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம்!

பாரத அணுமின் நிலையங்கள் எத்தனை வகையானவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை, எப்போது செம்மையானவை என்னும் விபரங்களை அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில் கிடக்கும் சில தவறான கருத்துகளை மெய்யானவை என்று காட்டி வருகிறார்! இந்திய அணு உலைகளின் அம்சம், பண்பு, தகுதி, பாதுகாப்பு அரண்களைப் பற்றித் தெளிவாகத் தெரியாத ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழருக்குப் பறைசாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது!

பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?

இந்தியா அழுகிப் போகும் ‘வாழைப்பழக் குடியரசா ‘ [Banana Republic], அல்லது உறுதியான ‘பலாப்பழக் குடியரசா ‘ [Jackfruit Republic] என்பது பிரச்சனைகள் எழும்போது மக்களின் நாகரீகப் போக்குகளே நிர்ணயம் செய்கின்றன! உன்னதச் சட்டங்களின் கீழ் உயர்நீதி மன்றங்கள் தமது கடமையைச் செய்தாலும், இனத் தளபதிகளும், அவரது மந்தைச் சீடர்களும் உள்ளவரை, பாரத மெங்கும் நியாயம் நிலைபெற முடியாது! நீதி மன்றம் வேலி போட்டுக் காத்த சமயத்திலும், பாப்ரி மசூதி ஓரிரவில் எப்படித் தரை மட்டமானது என்பதை யாவரும் அறிவார்! ஆயினும் ரவி ஸ்ரீநிவாஸ் காட்டிய 1996 ஆண்டு AERB, DAE அணுத்துறை ஆதிக்க வாதங்களில் மறுக்கப் பட்ட போதிலும், தனித்துவச் செயலாளர் பலர் நியாயமாக, வலுவாக எடுத்துக் கூறிய வாசகங்கள் அச்சாகித் தெரியவந்தது, பாரதத்தில் ‘குடியரசுக்கு ‘ மதிப்புள்ளதையே தெளிவாகக் காட்டுகிறது.

அணு உலைகளை, அணுத்துறைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அரிய ‘அணுசக்திச் சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] சீராகப் பாரதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. மாந்தருக்கு அணுத்துறைக் கதிரியக்கத்தால் உடற்பாதிப்புகள் நேர்ந்தால், அவர்கள் அரசாங்கத்தின் மீதும் வழக்குத் தொடர்ந்து, ‘பணநட்ட ஈடு ‘ பெற்றுத் தமது பிறப்புரிமைகளை நிலைநாட்டலாம். இந்தியா தேசம் இன்னும் அநாகரீகக் காட்டுமிராண்டி நாடாக மாறவில்லை! அதே சமயம் இந்தியா ஆன்மீகம் செழித்த பொற்றாமரைப் பூமியும் அன்று!

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுரைக்கு மூன்று முக்கிய தலைப்புகளில் எனது பதிலுரையைத் தருகிறேன். 1. இந்திய அணுமின் உலைகள் பழைய 1957 ஸிப்பிங்போர்ட் மாடலா ? 2. அமெரிக்க முறையில் NRC/DOE [Nuclear Regulatory Commission, Dept of Energy] போன்று இந்தியாவின் AERB [Atomic Energy Regulatory Board] இயங்க முடியுமா ? 3. அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் திண்டாடும் அணுத்துறைத் தளங்களில் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

இந்திய அணுமின் நிலையங்கள் பற்றித் தவறான தகவல்கள்!

முதலாவது கிறிஸ்டியன் விஞ்ஞான மானிடரில் [Christian Science Monitor] வந்ததாக ரவி ஸ்ரீநிவாஸ் தந்த செய்தி. ‘இந்தியாவில் 14 அணுமின் நிலையங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை 1957 இல் உருவான ஷிப்பிங்போர்ட் அமெரிக்க அணுமின் நிலைய மாடல் [Shippingport Power Reactor] அமைப்பில் கட்டப் பட்டவை! ….. அவற்றில் மூன்று அணுமின் உலைகள்தான் நெறிநிலைக்கு [International Atomic Energy Agency (IAEA) Standard] உட்பட்டவை!

இது முற்றிலும் தவறானது. திண்ணையில் வந்த எனது அணுசக்திக் கட்டுரைகளை அவர் மெய்யாகப் படித்திருந்தால், இவ்விதப் பெரும் பிழைக் கருத்துக்களை எழுதித் தன் அறியாமையை வெளிப்படுத்திருக்க வேண்டாம். பாரத அணுவியல் திட்டங்களை விளக்கும் எனது அணுசக்திக் கட்டுரைகளைப் படிக்காத பலரில் ஒருவர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை அறிய வருத்தம் அடைகிறேன். புளுகு அறிக்கைகளை ஆங்கில அகிலவலைப் பின்னல்களில் படித்த ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுமின் உலைகள் எந்த மாடல்களில் டிசைன் செய்யப் பட்டவை என்று அறியாமல், பாரத அணு உலைகள் எவற்றையும் ஒருமுறை கூடப்

பார்த்து அறியாமல் இந்திய அணுசக்தித் துறைகள் எவ்விதம் அமைக்கப் படவேண்டும், எவ்விதம் கட்டுப் படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுகிறார்!

இந்திய அணுமின் உலைகள் எத்தனை வகையானவை ? அவை திருத்தம் அடைந்து எப்போது செம்மைப் படுத்தப் பட்டன என்பது ரவி ஸ்ரீநிவாஸ் அறியாதவர் என்பது திண்ணை வாசகர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆராய்ச்சி அணு உலைகள், அணுமின் நிலை உலைகள் என்று பெரும் பிரிவாக இரண்டு வகைகள். 1979 ஆம் ஆண்டில் நேர்ந்த அமெரிக்கன் திரிமைல் தீவு அணு உலை [American Three Mile Island Reactor (TMI)] விபத்துக்குப் பிறகு, IAEA வெளியிட்ட திருத்தங்களைப் பாரதம் ஆராய்ந்து அனைத்து அணுமின் நிலையங்களும் சில பாதுகாப்பு முறைகளில் செம்மைப் படுத்தப் பட்டன. [1979-1982] ஆண்டுகளில் TMI விபத்து ஆய்வுக்குழுவில் ஒருவனாகப் பணியாற்றி, புதிய பாதுகாப்பு டிசைன் மாறுதல்களைப் புகுத்திய எஞ்சினியர்களில் ஒருவனாக வேலை செய்தேன்]. அடுத்து 1986 இல் செர்நோபிள் அணுமின் உலை வெடிப்புக்குப் பிறகு மீண்டும் IAEA பல திருத்தங்களை வெளியிட்டது. அதன் பின்னும் இந்திய அணுமின் உலைகளின் பாதுகாப்பு முறைகள், நெறிகள் மாற்றம் அடைந்து செம்மைப் படுத்தப் பட்டன. ஐம்பது ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று, மாறி வரும் எந்த தொழில் நுணுக்கமும், அந்தந்த நாட்டு அணு உலைகளுக்கு ஏற்ப, நிதிவள இருப்புக்கு ஏற்ப ஓரளவுதான் மேம்படுத்த முடியும்!

India’s operating nuclear power reactors:

Reactor State Type MWe net, each Commercial operation Safeguards status
Tarapur 1 & 2 Maharashtra BWR 150 1969 item-specific
Kaiga 1 & 2 Karnataka PHWR 202 1999-2000
Kaiga 3 Karnataka PHWR 202 2007
Kakrapar 1 & 2 Gujarat PHWR 202 1993-95 in 2012 under new agreement
Kalpakkam 1 & 2 (MAPS) Tamil Nadu PHWR 202 1984-86
Narora 1 & 2 Uttar Pradesh PHWR 202 1991-92 in 2014 under new agreement
Rajasthan 1 Rajasthan PHWR 90 1973 item-specific
Rajasthan 2 Rajasthan PHWR 187 1981 item-specific
Rajasthan 3 & 4 Rajasthan PHWR 202 1999-2000 early 2010 under new agreement
Rajasthan 5 & 6 Rajasthan PHWR 202 Feb / Mar 2010 Oct 2009 under new agreement
Tarapur 3 & 4 Maharashtra PHWR 490 2006 / 2005
Total (20) 4780 MWe

Kalpakkam also known as Madras/MAPS
Rajasthan/RAPS is located at Rawatbhata and sometimes called that
Kaiga = KGS, Kakrapar = KAPS, Narora = NAPS
dates are for start of commercial operation.

முற்றிலும் வேறான பலவித அணுமின் உலைகள் யாவும் பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் என்றும், மூன்று அணுமின் உலைகள்தான் IAEA நெறிப்பாடுகளுக்கு உட்பட்டவை, மற்றவை AERB விதித்த தேசிய நெறிப்பாடுகளைப் [National Standards] பின்பற்றுவவை என்றும் ரவி ஸ்ரீநிவாஸ் தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக் கிறார்! AERB கட்டுப்பாடு விதிகளைப் போட்டுள்ளதே தவிர, அணுமின் நிலைய டிசைன் அமைப்புகளுக்கு, [1955 முதல் IAEA இல் ஓர் முக்கிய அங்கம் வகிக்கிறது, இந்தியா] IAEA நெறிப்பாடுகளை அனைத்து அணு உலைகளுக்கும் பயன்படுத்த மேற்பார்த்து வருகிறது. மேலும் ‘அணுவியல் இயக்குநரின் அகிலக் கூட்டவையின் ‘ WANO [World Associations of Nuclear Operators (http://www.wano.org.uk/)%5D அரிய நெறிப்பாடுகள் பாரதத்தின் புதிய அணுமின் உலைகளில் [1989 ஆண்டுக்குப் பிறகு] கையாளப்பட்டன.

இந்திய அணு உலைகள் எப்போது திருத்தப் பட்டவை ?

1. ஆராய்ச்சி அணு உலைகள் [Atomic Research Reactors]: அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா,காமினி போன்றவை [Apsara, Zerlina, CIRUS, Dhuruva, Purnima, Kamini] இந்த ரகத்தைச் சேர்ந்தவை. நியூட்ரான் தாக்கல் சோதனைகளுக்குப் பயன்படும் இந்த அணு உலைகளில் வெப்பசக்தி மட்டும் வெளியாகும். மின்சார உற்பத்தி எதுவும் கிடையாது. ஸைரஸ், துருவா அணு உலைகளில் புளுடோனியம் எரிக்கழிவில் கிடைக்கிறது. ஸைரஸ் அணு உலை மட்டும் கனடாவின் நிதிக்கொடையில், கனேடியப் பொறியியல், விஞ்ஞான நிபுணர்களால் டிசைன் செய்யப்பட்டு கட்டப் பட்டது. துருவா உள்பட மற்ற நான்கும் முழுக்க முழுக்க இந்திய டிசைனில் உருவானவை.

2. அணுமின் நிலைய உலைகள் [Nuclear Power Reactors]: தாராப்பூர் [மகாராஷ்டிரா], ராவட்பாடா [ராஜஸ்தான்], கல்பாக்கம் [சென்னை], நரோரா [உத்தர் பிரதேஷ்], கக்கரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], கூடங்குளம் [சென்னை] ஆகியவை யாவும் (160-220) MWe மின்சக்தி உற்பத்தி செய்கின்றன. மேலும் அவற்றின் அணுக்கழிவில் புளுடோனியம் கிடைக்கிறது.

தாராப்பூரில் இரண்டு (1960-1965) திருத்த மாடல் BWR கொதிநீர் உலைகள் (G.E. First Generation Boiling Water Reactor) [1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல] உள்ளன. எளிய நீரில் [Light Water] இயங்கும், இந்த அணுமின் உலைகளுக்குத் தேவையான 2.4% செறிவு யுரேனியம் [Enriched Uranium] அமெரிக்காவிலிருந்து வர வேண்டியிருப்பதால், BWR கொதிநீர் மாடல் அணு உலைகள் பின்னால் கட்டப் படவில்லை! 1969 ஆண்டு முதல் மின்சாரம் பரிமாறி வயதாகிப் போனதால், அதன் 210 MWe மின்னாற்றல் 160 MWe ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் தாராப்பூர் கொதிநீர் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

தாராப்பூரில் புதிதாய்க் கட்டப்படும் இரட்டை 500 MWe மின்னாற்றல் அணுமின் நிலையங்கள் கனடாவின் கான்டு அணு உலைகளின் டிசைன் [Canadian Deuterium Uranium CANDU Reactors] கையாளப் பட்டுகிறது.

இந்த அணு உலைகளுக்கு செறிவு யுரேனியம் தேவை யில்லை. பூமியில் கிடக்கும் இயற்கை யுரேனியம் போதுமானது. ஆனால் இதற்கு தேவைப்படும் விலை மிகுந்த கன நீர் [Heavy Water], இந்தியாவிலே உற்பத்தி செய்யப் படுகிறது. இவை இரண்டும் 1980 ஆண்டு முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு மாடல் டிசைன்களைப் பின்பற்றிக் கட்டப் படுகின்றன [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் கான்டு அணுமின் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

ராஜஸ்தான், சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள இரட்டை அணுமின் உலைகள் 1965 முதற் பிறவி கனேடியன் டிசைன் கான்டு அணு உலைகள். [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களுக்குப் பிறகு சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. முதற் பிறவி ராஜஸ்தான் யூனிட் 1 கவசத் தட்டில் கசிவுகள் தொடர்ந்து வழிந்ததால், நிரந்தரமாக மூடப் பட்டது. கல்பாக்க இரட்டை யூனிட்டுகளின் 220 MWe மின்னாற்றல் 170 MWe ஆகக் குறைக்கப் பட்டது.

நரோரா, கக்கரபார், கைகா ஆகியவற்றின் (220 MWe) இரட்டை அணு உலைகள், ராஜஸ்தான் புதிய யூனிட் 3, யூனிட் 4 (220 MWe) அணு உலைகள் அனைத்தும் 1980 முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு கனநீர் அழுத்த அணு உலைகள். ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் நரோரா கனநீர் அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த பெரிய தீ விபத்து யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

கூடங்குளம் இரட்டை அணுமின் உலைகள் (1100 MWe) மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் செம்மை ஆக்கப்பட்ட VVER டிசைனைப் பின்பற்றியவை. இது செர்நோபிள் வெடி விபத்திற்குப் பிறகு சீராக்கப்பட்ட ரஷ்ய அணுமின் நிலையம். இது அழுத்தநீர் அணு உலை PWR [Pressurized Light Water Reactor] ரகத்தைச் சேர்ந்தது. இது இயங்க (2%-4%) செறிவு யுரேனிய எரிகோல் தேவைப்படுகிறது. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் கூடங்குள VVER அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் செர்நோபிள் போல் பெரிய விபத்து நிகழுமா என்பவற்றை ஆய்வு செய்து எழுதி யிருக்கிறேன்.

இந்திய அணு உலைகளை மேல்நாட்டு நெறிநிலைக்கு இணையாக இயக்க முடியமா ?

‘இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை ‘ என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி [Christopher Sherry, Research Director of the Safe Energy Communication Council, Washington] என்று சுட்டியுள்ளதை ரவி ஸ்ரீநிவாஸ் எடுத்துக் கூறி யிருக்கிறார்! What A Great Discovery by Ravi Srinivas! அதற்கு முக்கிய காரணம் நமது பாரதக் கலாச்சாரம்! No Big Deal! நாம் ஆங்கிலம் பேசினாலும், ஆங்கிலச் சினிமா பார்த்தாலும் இந்தியர் இந்தியரே! [Good Feathers Do Not Make Good Birds!]. நாம் என்ன வேடம் போட்டு நாட்டியம் ஆடினாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ ஆகவே முடியாது! நாம் அன்னிய தொழிற்துறைகளை அப்படியே அசல்நகல் எடுத்து பாரத மண்ணில் ஊன்றியவுடன் அவை கலாச்சாரத்தால் மாறுபடுகின்றன! நமது ஜாதி, மதம், இனம், மொழி, மாநிலப் பிரிவு, யூனியன் அமைப்பு, யூனியன் பிளவு யாவும் அன்னியத் தொழிற்துறைகளை இந்திய மயமாக்குகின்றன! போபால் இரசாயனத் தொழிற் சாலை விபத்துக்கு இம்மாதிரி கலாச்சார மாறுதல் ஒரு முக்கிய காரணமானது! இது ரவி ஸ்ரீநிவாஸுக்குப் புரியாமல் போனதில் வியப்பில்லை!

அணு உலையை இயக்குபவர், பணியாளிகள் அனைவரும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாமல் இந்திய மொழியில் ஊட்டி வளர்க்கப் பட்டவர்! விஞ்ஞானிகளும், எஞ்சினியர்களும் ஆங்கிலம் படித்த அளவுக்குச் சமமாக அவருக்குக் கீழ் பணி செய்பவர் பலர் ஆங்கிலம் பேச முடிவதும் இல்லை! படிக்க முடிவதும் இல்லை! பணியாட்கள் பலரிடம் ஆங்கில மூலம் தொடர்பு கொள்வது முடியாததால், பொறி நுணுக்கங் களில் பூரணப் பயிற்சி முறைகள் அவருக்குத் தர முடிவ தில்லை! பயிற்சி அளிப்பதற்கு உரிய அடிப்படை விஞ்ஞான அறிவு பணியாட்களுக்குக் கிடையாது! குட்டுத்தனமாக வேலை செய்யும் பணியாளிகள் பலர்! புரியாமல் வேலை செய்பவர் பலர்! அமெரிக்காவிலோ, ஈரோப்பிலோ வேலை செய்யும் பணியாளிகளின் அடிப்படை விஞ்ஞானப் படிப்பறிவு மிகையானது.

அடுத்தது பணியாட்களின் பொறி நுணுக்க அனுபவத் திறன்! தொழிற்சாலையில் பணி புரியும் [குப்பை அள்ளும் பணியாளி உட்பட] அத்தனை பேரும் கார் ஒட்டுகிறார்கள். பெரும்பாலோர் காரைத் தாமே பழுது பார்த்துச் செப்பணிடுகிறார்கள். உதவி யில்லாமல் கூடியவரைத் தாமே படித்து எந்த பொறி யந்திரத்தையும் அவர்களால் இயக்க முடிகிறது! தொழிற்கூடங்களில் மேற்பார்வையாளர் அருகே கண்காணிப்பின்றித் தாமே வேலையை முடித்து, ஆங்கிலத்தில் லாக்புக்கில் [Log Book] பதிவு செய்கிறார்கள். நமது தொழிற்சாலையில் ஒரு பணியாள் செய்யும் வேலைக்கு மூவர் [பணியாள், உதவி ஆள், மேற்பார்வை ஆள்] தேவைப் படுகிறது! மேற்பார்வை ஃபோர்மன் கண்பார்வையிலிருந்து நீங்கி விட்டால், பணியாள் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பது யாவருக்கும் தெரியும்! தொழிற்துறை யுகத்தைத் தோற்றுவித்து முன்னேறிய ஈரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பணிநெறிகள் [Work Ethics] வேறு! தொழிற்துறை யுகத்தைப் புரியாமல் காப்பி அடித்து, வற்புறுத்திப் புகுத்தப்படும் இந்திய மாந்தர் பணிநெறிகள் [Work Ethics] வேறு!

 

ஆகவே இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே நோய் பீடித்துள்ளது! கதிரியக்கத் தளங்களில் கனடா, அமெரிக்க நாடுகளில் ஒருவன் வேலை செய்து பாதுகாப்பான கதிரடி வாங்கும் போது, இந்திய அணுமின் உலைகளில் அதை விட அதிகமானக் கதிரடி மூன்று பேர் வாங்கிக் கொள்கிறார்கள்! [காரணம் ஒருவர் முடிக்கக் கூடிய பணியை மூவர் செய்யும் போது கால நேரமும் நீடிக்கிறது!]. ஆகவே நாம் எந்தப் போர்வையைச் சுற்றிக் கொண்டாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ இந்திய மண்ணில் காலை வைத்துக் கொண்டு நடிக்க முடியாது! அதே சமயத்தில் அமெரிக்கா கனடாவுக்குப் பயிற்சிக்கு வந்த, பாரதப் பணியாட்கள் வட அமெரிக்க மண்ணில் கால்வைத்து, இங்குள்ள வெள்ளையருடன் வேலை செய்யும் போது, அவர்களைப் பார்த்துத் திறமையாக வேறு விதமாகப் பணியாற்றினர்! மீண்டும் இந்தியாவுக்கு வந்து பாரத அணு உலைகளில் பணியைத் துவங்கும் போது, அவரது நாய்வால் மறுபடியும் முன்புபோல் சுருண்டு கொண்டது!

இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி என்று குறிப்பிட்டது முற்றிலும் மெய்யானது. அதன் காரணத்தை அறியாமல் அதைத் தவறாக எடுத்துக் காட்டிய ரவி ஸ்ரீநிவாஸ், இந்தியத் தொழிற் சாலைப் பணி நெறிகளை மாற்றுவது கடினம் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

அணுத்துறை நெறிக்குழுவை தனித்தியங்க விடுதலை செய்!

(1993-1996) ஆண்டுகளில் AERB அதிபராய்ப் பணிசெய்த டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் ‘அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணைக்குழுவைத் தனித்தியங்க விடு ‘ [ ‘Set AERB Free ‘] என்று முன்னாள் அணுசக்திக் கமிஷன் அதிபதி டாக்டர் R. சிதம்பரம் அவர்களிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அவரது ஆலோசனை சரியா, தப்பா என்பதைச் சற்று ஆராய்வோம்.

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஓர் அணுவியல் எஞ்சியனர். நான் 1957 இல் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் [Bhabha Atomic Energy Centre] சேர்ந்து, ஸைரஸ் [CIRUS] அணு ஆராய்ச்சி உலையில் பணி செய்து வந்த காலத்தில் [1958-1966] கோபாலகிருஷ்ணன் சேர்ந்து என்னுடன் வேலை செய்தவர். ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்த பின், மேற்படிப்புக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்று டாக்டர் பட்டம் [Ph.D. in Nuclear Engineering] பெற்று, பல ஆண்டுகள் கழித்து பாரதத்திற்கு மீண்டவர். அவர் இந்திய அணுமின் நிலையங்களில் என்னைப் போல் எஞ்சினியரிங் பணி புரியா விட்டாலும், அமெரிக்க அணு உலைகளில் அவருக்குப் பயிற்சி உண்டு. அவர் கூறிய ஆலோசனை அமெரிக்காவுக்குப் பொருந்துகிறது. ஆனால் இந்திய அமைப்புக்கு அந்த மாறுதலால் பெறும் பயன்கள் மிகக் குறைவே! அதற்குப் பல காரணங்கள் கூறலாம்.

அமெரிக்கக் குடியரசும், பாரதக் குடியரசும் ஒத்தவைபோல் தோன்றினும் அவை வேறுபட்டவை! பாரதத்தில் கதம்பக் கட்சிகளின் கூட்டாட்சி ஆளும்போது, அமெரிக்காவில் போட்டி யிடுபவை இரண்டு கட்சிகளே! ஆகவே பல காரியங்களை இணைந்து செய்வது எளிதாகிறது. அமெரிக்காவில் அணுமின் நிலையங்களைக் கட்டி இயக்கி வருபவர் அனைவரும் தனியார் நிறுவனங்கள். அரசாங்கம் சில ஆராய்ச்சி அணு உலைகள், புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Enrichment Plants], யுரேனியச் செறிவுச் சாலைகள் [Uranium Enrichment Plants], அணு ஆயுத உற்பத்திச் சாலைகள் ஆகியவற்றைத் தனக்குக் கீழ் வைத்துள்ளது. ‘தேசியப் பாதுகாப்பு விதியைக் ‘ [National Security] கையாண்டு அமெரிக்க அரசு அவற்றை எரிசக்தித் துறையகத்தின் DOE [Dept of Energy] கீழ் கட்டுப்படுத்தி வருகிறது. அமெரிக்க NRC [Nuclear Regulatory Commission] அணுமின் நிலையங்களின் உரிமைக்கார தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தித் தண்டனைகள், அபராதங்கள் விதிக்க முடியும். ஆனால் DOE கண்காணிக்கும் ஆய்வு உலைகளையோ, புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்களையோ NRC முழுக் கட்டுப்பாடு செய்ய முடியாது. ஆலோசனைகள் மட்டுமே அளிக்க முடியும்.

1948 ஆகஸ்டில் விஞ்ஞான ஆய்வுத்துறையின் கீழ் [Dept of Scientific Research] இந்திய அணுசக்திக் கமிஷன் [Atomic Energy Commission] முதலில் அமைக்கப் பட்டது. 1954 இல் தோன்றியது, அணுசக்தித் துறையகம் DAE [Dept of Atomic Energy]. பிறகு அதன் கீழ் 1958 மார்ச்சில் அணுசக்திக் கமிஷன் திருப்ப மானது. முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணுசக்திக் கமிஷனுக்கு [Atomic Energy Commission] 1958 இல் டாக்டர் ஹோமி. ஜெ. பாபாவை முதல் அதிபதி ஆக்கினார். அணுசக்திக் கமிஷன் அதிபதியே, பிரதம மந்திரியின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இந்திய அணுமின் நிலையங்களை, அரசாங்கப் பங்கீடு கொண்ட NPCIL [Nuclear Power Corporation of India Ltd] பொதுத்துறை நிறுவகம் கண்காணித்து வருகிறது. DAE ஆராய்ச்சி அணு உலைகள், வேகப் பெருக்கி சோதனை ஆய்வுலை [FBTR], வேகப் பெருக்கி அணுமின் நிலையம், புளுடோனியச் சுத்தீகரிப்புச் சாலைகள், IREL [Indian Rare Earths Ltd], ECIL [Electronic Corporation of India Ltd], UCIL [Uranium Corporation of India Ltd], Heavy Water Plants [National Fertilizer Ltd], NPCIL [Nuclear Power Corporation of India Ltd] அனைத்தையும் மேற்பார்வை செய்கிறது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களா அணுமின்சார உற்பத்தி செய்கிறது ?

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் [Security Act], இந்திய அரசாங்கம் புளுடோனியம் ஆக்கும் அணு உலைகளையும், அணுமின் உலைகளையும், புளுடோனியத்தைப் பிரிக்கும் மீள் சுத்தீகரிப்புச் சாலைகளையும், தன்கைக்குள் [DAE] வைத்துள்ள போது, AERB மட்டும் தனியாக்கப் பட்டு எப்படி அரசாங்கக்தைக் கட்டுப்படுத்த முடியும் ? DAE அணுத்துறையைக் கட்டுப்படுத்தினாலும், AERB தனிப்பட்டு ஆட்சி செய்தாலும், அவருக்குக் கையுதவி இப்போதுள்ள பைபிள் வேத நூல் ‘அணுசக்தி சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] ஒன்றுதான்! பாரத அரசாங்கம் அணு ஆயுத நாடாக மாறி, அணு ஆயுத உற்பத்தியை இரகசியமாய்ச் செய்து வருவதால், ‘தனித்துவ நெறிப்பாடு ஆணைக்குழு ‘ இந்தியாவில் அமைக்கப் பட்டு, பாதுகாப்பு ஆலோசனைகள் தந்தாலும், பாரத அரசாங்கம் அவற்றை யாவும் ஒப்புக் கொள்ளும் என்று உறுதி கூற முடியாது! மெய்யாக தற்போதுள்ள AERB அதே முறையில்தான் DAE மேற்பார்க்கும் அணு உலைகளையும் [அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி (Apsara, Zerlina, Cirus, Dhruva, Purnima I,II,III, Kamini, FBTR)] மற்ற புளுடோனிய, யுரேனிய, தோரிய உற்பத்தித் தொழிற்கூடங்களையும் முழுக்கட்டுப்பாடு இன்றி கண்காணித்து வருகிறது.

பாபா அணுசக்திக் கூட/கல்பாக்க ஆய்வு அணு உலைகளின் பாதுகாப்புகள்

அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி போன்ற ஆய்வு அணு உலைகளில் அப்ஸரா [1MW,47y], ஜெர்லினா [100W,42y], ஸைரஸ் [40MW,43y] ஆகிய மூன்றும் பழையவை. அடைப்பில் காட்டப் படுபவை [MW வெப்பவாற்றல், Year வயது]. மற்ற ஆய்வு அணு உலைகள்: துருவா [100MW, 18y], பூர்ணிமா-I [1W,31y], பூர்ணிமா-II [10mW,19y], பூர்ணிமா-III [1W,13y], காமினி [30KW,7y] புதியவையும் அல்ல, பழையவையும் அல்ல. வயதில் இரண்டுக்கும் இடைப்பட்டவை. ஆய்வு அணு உலைகளின் வெப்பவாற்றல் [Thermal Power] ஸைரஸ் [40MWt], துருவா [100MWt] இரண்டையும் தவிர மற்றவை யாவும் மிகக் குன்றியவை! அக்குன்றிய ஆற்றலைத் தர மிகக் குறைந்த அணுவியல் எருநிறையே [புளுடோனியம்-239, யுரேனியம்-233] பயன்படுகிறது! ஆதலால் பிரமாண்டமான 200 MWe, 500 MWe, 1100 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் போன்று பல்விதப் பாதுகாப்பு அம்சங்கள் வேண்டியதில்லை! அணு ஆயுத நியூட்ரான் சோதனைகளுக்குப் பயன்படும் அந்த ஆய்வுலைகள் தொடர்ந்து இயங்குவதும் இல்லை. அதே சமயத்தில் புளுடோனியம் பிரித்தெடுக்கும் மீள் சுத்தீகரிப்புக் கூடங்கள், வேகப் பெருக்கி அணு உலைகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நெறிகள் அதிகம் கையாளப் படவேண்டும்.

திரிமைல் தீவு, செர்நோபிள் அணுமின் நிலையங்களின் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் நிலையங்களில் பெருத்த மாற்றங்கள் புகுத்தப் பட்ட போது, ஆய்வு அணு உலைகளில் அவ்வித மிகையான பாதுகப்புகள் அமைக்கத் தேவைப் படவில்லை. காரணம் அவற்றில் மின்சக்தி உற்பத்தி யில்லாததால் பல உபகரணங்கள், சாதனங்கள் கிடையா.

அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆதரிக்கும் அமெரிக்க அணுத்துறைக் கண்காணிப்பு, தணிக்கை நெறி முறைகள் உயர்ந்தவைதான். ஆனால் பின்னால் நான் காட்டும் மெய்யானப் பிரச்சனைகளைப் பார்த்தால், அமெரிக்கன் நெறிக்கட்டுப்பாடு முறைகளிலும் ஓட்டைகள் உள்ளன வென்று தெரிகிறது! அமெரிக்க NRC/DOE/Military [Nuclear Regulatory Commission /Dept of Energy] தணிக்கை நெறி முறைகளை ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய அணுத்துறை இயக்கங்களில் புகுத்த வேண்டும் என்று உதாரணம் காட்டி யிருக்கிறார். கீழே நான் எடுத்துக் காட்டும் மெய்யான நிகழ்ச்சிகளைப் படித்தபின் அமெரிக்கக் கண்காணிப்பு முறைகளைப் பாரதம் பின்பற்ற வேண்டுமா என்று வாசகர்களே தீர்மானம் செய்யலாம்! தனியார் துறைக்குழுத் தணிக்கையோ, தனிப்பட்ட அணுத்துறைக் குழுவினர் தணிக்கையோ என்ன ஆணைகள் விதித்தாலும், இறுதியில் நிதி ஒதுக்கம் இல்லாதால், பாதுகாப்புப் பணிகள் யாவும் நடத்தப் படாமல் முடங்கிக் கிடக்கின்றன! நிதிமுடைகள் செல்வம் கொழித்த அமெரிக்கவிலே உள்ள போது, பாதுகாப்பை முன்னிட்டு கவசங்களைப் பூரணமாகப் பாரதம் அமைக்க மறுக்கிறது என்று குறை கூறுவதில் அர்த்தம் இல்லை!

1. அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

2. நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிக்க 1942 ஆண்டு முதல் அணுவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், 1982 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அரசு தனது, ‘கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதியை ‘ [Nuclear Waste Storage Policy] முதன் முதலில் தயாரித்து வெளியிட்டது.

3. 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு 200,000 அமெரிக்க ராணுவத்தினர், பூமிக்குமேல் மேற்கொண்டும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்ய முற்பட்டனர்! அமெரிக்கக் காங்கிரஸின் ஓர் அறிக்கைப்படிச் சோதனைகளில் சில அமெரிக்கர் ‘பலி ஆடுகளாய்ப் ‘ பயன்படுத்தப் பட்டனர்! அமெரிக்க ஆற்றல் துறையகத்தின் [Dept of Energy (DOE)] நிபுணர்கள் யுரேனிய, புளுடோனியத் திரவங்களைச் சில அமெரிக்கருக்கு ஊசி மூலம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர்! அணுகுண்டு வெடிப்பின் கதிரியக்கப் பொழிவுப் பொருட்களைச் சிலருக்குத் தின்னக் கொடுத்து, அவர்கள் சோதிக்கப் பட்டனர்! கதிரியக்க வாயுக்களை சிலர் நுகரும் படிச் செய்யப் பட்டனர்! சோதனைக்குச் சிலர் கதிரியக்க மீன்களை உண்ணும்படி வற்புறுத்தப் பட்டனர்!

4. பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

5. அணு ஆயுதச் சோதனைகள், அணு ஆயுத உற்பத்திச் சாலைகள், மருத்துவத் துறையகங்கள், யுரேனியச் சுரங்கங்கள், யுரேனிய உற்பத்திச் சாலைகள், புளுடோனியச் சுத்திகரிப்புச் சாலைகள், நெவேடா அணு வெடிப்புப் பயிற்சித் தளம் ஆகியவற்றில் பணி புரிந்த மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள், கடந்த 55 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடி பெற்றுள்ளார்கள்! 1988 டிசம்பரில் அமெரிக்க ஆற்றல் துறையகம் DOE வெளியிட்ட அறிக்கையில் 16 அணு ஆயுதத் தொழிற் கூடங்களில் கதிரடி பட்ட 155 வேலை யாட்கள் கதிரியக்கத் தீங்குப் பட்டியலில் உள்ளதாக அறியப் படுகிறது! எல்லாவற்றை விடவும் மோசமாக, இதாகோ தேசியப் பொறியியல் ஆய்வகத்தில் [Idaho National Engineering Laboratory] கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் பாம்பு ஆற்றில் [Snake River] கலந்து விட்டதாகவும் அறிக்கை கூறியது!

6. வாஷிங்டனில் உள்ள ‘ஹான்ஃபோர்டு வேகத் திரட்சி அணு உலை ‘ [Hanford Fast-flux Reactor] விவாதத்துக்குள் மாட்டிக் கொண்ட ஓர் எருப்பெருக்கி வேக அணு உலை [Fast Breeder Reactor]! அங்கு பணி செய்யும் இயக்குநர், எட்வெர்டு பிரிக்கர் கூறுகிறார்: ஹான்ஃபோர்டு, அணு யுகத்தின் இருண்ட முகத்தை எடுத்துக் காட்டும் ஓர் உதாரணமாக உள்ளது! போதிய அணு உலைப் பாதுகாப்பு முறைகள் கிடையா! சாதனங்கள் பழையதாய்ப் போய் விட்டன! மேலதிகாரிகள் பொறுப்பான கண்காணிப்பும் அங்கு இல்லை! எட்வெர்டு முதலில் புளுடோனியம் உற்பத்தி சாலையில் வேலை செய்யும் போது, வேலையாளிகள் கவன மின்றிப் புளுடோனியம் கையாளுவதைக் கண்டு வெகுண்டார்! பாதுகாப்பு ஒழுக்க முறைகள் போதாதவை என்றார்! அணு உலை ஆட்சி செய்யும் இயக்குநர்கள் லைஸென்ஸ் பெறாமலே அங்கு பணி புரிந்து வருவதாகக் கூறினார்! நிலையத்தில் நிறுவனமான சாதனங்களைச் சரியாக எடுத்துக் காட்டாத பொறியியல் வரைபடங்கள் [Engineering Drawing] அங்கே பயன்படுத்தப் பட்டன என்றும் கூறினார்!

7. ஹான்ஃபோர்டு நிலையத்தில் 40 ஆண்டுகளாகச் சேர்ந்து விட்ட பிரம்மாண்டமான அணுவியல் கழிவுகள் [Nuclear Wastes] பெரும் பிரச்சனையை உண்டாக்கி விட்டன! அவற்றைச் அகற்றிப் புதைத்துச் சுத்தம் செய்ய 57 பில்லியன் டாலர் தேவைப் படுகிறது! போதிய நிதி ஒதுக்கப் படாததால், பிரச்சனை முற்றிக் கொண்டே போகிறது! ஹான்ஃபோர்டில் உள்ள 27 வீடுகளில் 25 இல்லங்களில் வசிப்போர், கதிரியக்கம் தாக்கி தைராய்டு சிகிட்சை பெற்றுக் கொண்டும், இருதய நோய் புற்று நோயில் அவதிப் பட்டுக் கொண்டும், பிறக்கும் பிள்ளைகள் அங்க ஈனமாய்ப் பிறப்பதால் வேதனை பட்டுக் கொண்டும் வருவதாக அறியப் படுகிறது!

8. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் சமயம், அணு ஆயுதத்துக்கு புளுடோனியம் தயாரித்த ஸ்போகேன், வாஷிங்டனில் [Spokane, Washington] சில குழந்தைகள் தமது தைராய்டு சுரப்பியில் வீரிய கதிரடி 256 rem வாங்கி யுள்ளதாக அறியப் படுகிறது! ஹான்போர்டு அணு உலைக்கு அருகில் வாழ நேர்ந்தால், ஒருவர் 2295 rem கதிரடி வாங்க வாய்ப்புள்ளது! 1987-1988 ஆண்டுகளில் அமெரிக்கக் காங்கிரஸ் 1.4 மில்லியன் டாலர் நிதி விடுவித்து ஹான்ஃபோர்டு கதிர்வீச்சுப் பிரச்சனைகளை உளவு செய்யுமாறு கட்டளை யிட்டது! அதுபோல் வாஷிங்டன், ஆரகன் [Oregon] மாநிலங்களும் 1987 இல் கதிரியக்கத் தீங்குகளை ஆய்வு செய்ய 15 மில்லியன் டாலர் திரட்டி உளவு செய்தன!

9. புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

Paradise Lost

திண்ணையில் எனது அணுவியல் கட்டுரைகள் என்ன பறைசாற்றுகின்றன ?

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம்.

அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

‘அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல ‘ என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது! மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும்!

இந்திய அணுசக்தித் துறைகளைப் பற்றிய தகவல்கள்:

1. Dept of Atomic Energy /Atomic Energy Commission [Atomic Energy Acts 1962] http://www.dae.gov.in

2. Atomic Energy Regulatory Board [AERB] Regulations in http://www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

3. Atomic Power Plants Performance Reports in http://www.npcil.org [Updated Sep 22, 2003]

4. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002]

5. Dr. Anil Kakodkar, Present Chairman, Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Dr. R. Chidambaram, Former Chairman, Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

7. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

Click to access annrpt.pdf

8. Kalpakkam, Indra Gandhi Centre for Atomic Research http://www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

9. Bhabha Atomic Research Centre, Bombay http://www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

10 National Geographic Magazines [June 1986, April 1989]

11. http://www.barc.gov.in/

12.  http://www.igcar.ernet.in/

13.  http://www.npcil.nic.in/

14.  https://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 16, 2016  [R-1]

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீளமான கடலடிக் கணவாய்

 

 Twin Tunnells

[World ‘s Longest Subsea Eurotunnel

Connecting Britain to Europe

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 

https://youtu.be/L7GFFntXi8I

UnderseaTunnel Link

முன்னுரை: 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் மேல் முதலாவது குகை அமைப்பு திட்டம் 1802 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது. அத்திட்டப்படி இடையில் இருந்த ஒரு தீவுடன் இணைத்து இரண்டு குகைகள் அமைத்துக் குதிரை வண்டிப் போக்குவரத்தைத் துவக்குவதாய் இருந்தது. சிறிது காலம் நீடித்த ‘அமியன்ஸ் சமாதானத் ‘ தருணத்தில் [Peace of Amiens] நெபோலியனின் திட்டத்தை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டிருந்தது! ஆனால் ஓராண்டுக் குள்ளே பிரிட்டன் மீது நெப்போலியன் கொண்டிருந்த வெறுப்பு மறுபடியும் திரும்பவே, அத்திட்டம் அத்துடன் கைவிடப்பட்டது!

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொழிற்புரட்சி நுணுக்கம் மிகுந்து, இருப்புப்பாதை இரயில் யுகம் பிறக்கவே, பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் கால்வாய்க் குகை [Channel Tunnel or Chunnel] ஒன்றைக் கட்டும் எண்ணம் மீண்டும் உருவெடுத்தது! அதே சமயத்தில் பகைவர் படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்துக்கு இயற்கையாகவே ஏற்பாட்டுள்ள கடல் அரணைக் கால்வாய் குகை நீக்கிவிடும் என்று சிந்தித்து, பிரிட்டனும் அந்தப் பாதுகாப்பு வேலியை இழக்கத் தயாராக இல்லை! அக்குறையைத் தவிர்க்க முன்னோடித் திட்டங்களில் குகைக் கணவாயை, யுத்த சமயத்தில் கடல் வெள்ளத்தால் மூழ்க்க பூதத் திறப்பிகள் [Giant Valves] அமைக்கப் பட்டிருந்தன!

1861 இல் ஜேம்ஸ் சாமர்ஸ் கடலடிக் கண்வாய் இரயில் பாதையை அமைக்க [The Channel Railway Connecting England & France By James Chalmers] முழு டிசைன் பணிகளைச் செய்து, விபரங்கள் அடங்கிய திட்டத்தைத் தயாரித்து, நிதி மதிப்பீடையும், நிதி சேர்ப்பு விளக்கத்தையும் வெளியிட்டார். அவரது திட்டத்தில் மாபெரும் இரும்புக் குழலை [Huge Iron Tube on the Seabed] கடல்தளத்தில் கிடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த டிசைனில் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்ததால் அத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது பிறகு கைவிடப் பட்டது!

1860, 1880, 1920, 1945 ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய புதிய முயற்சிகள் முளைத்து எழுவதற்கு முன்பே மறுபடியும் முடக்கப் பட்டன. இறுதியாக 1987 ஆம் ஆண்டில் முழு மூச்சில் பிரிட்டன், பிரான்ஸ் இரண்டு வல்லரசு நாடுகளும் கூடி உழைத்து, 150-250 அடி ஆழத்தில் இங்கிலீஷ் கால்வாய்க் கடலடியைக் குடைந்து இருபதாம் நூற்றாண்டின் சிரமமான, பிரமிக்கத் தக்க ஈரோ கணவாயை 1994 இல் கட்டி முடித்தார்கள். பிரிட்டனில் ஃபோக்ஸ்டோன், பிரான்ஸில் சங்கத் [Folkestone, Sangatte] ஆகிய இரு நகரங்களை இருப்புப் பாதை மூலமாக இணைத்து இரயிலில் பயணிகளும், வாகனங்களும், பளு பாரங்களும் போய்வர ஏதுவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர், பிரென்ச் அதிபர் பிரான்கொ மிட்டிரான்ட் [Margaret Thatcher & Francois Mitterand] ஆகியோர் இருவரும் 1995 ஆண்டில் இரயில் போக்குவரத்துப் பாதையான ‘ஈரோ குகைக்குத் ‘ [Eurotunnel] திறப்பு விழாவை நிகழ்த்தினார்கள். 21 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடித்த ஈரோடன்னல், இருபதாம் நூற்றாண்டின் உன்னத பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது! அந்த நிதி மதிப்பு ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா மீதுள்ள பொன்வாயில் பாலத்தைக் [Golden Gate Bridge] கட்டிய தொகையைப் போல் 700 மடங்கு என்று கருதப்படுகிறது!

Eurotunnel -4

ஈரோக்குகை வழியாகச் செல்லும் இரயில் போக்குவரத்துகள்

ஈரோ குகை வழியாக நான்கு வகை வாகன வண்டிகள் அனுதினமும் பயணம் செய்கின்றன. மின்சார வண்டியான ‘மீட்சி இரயில் ‘ எனப்படும் ஷட்டில் [Le Shuttle], ஈரோப் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்யும் டாசல் எஞ்சின் இழுக்கும் வேக வண்டி, ‘ஈரோஸ்டார் ‘ [Eurostar], பார இரயில் [Goods Train] ஆகிய பெரிய வாகனங்களும், பராமரிப்பு செய்யும் சிறிய பணி வண்டிகளும் குகைகளின் வழியாகச் செல்பவை. 7600 hp [Horse Power] இழுக்கும் ஆற்றல் கொண்டு 2000 டன் எடையுள்ள மீட்சி இரயில் குகைப் பாதை நிலையங்களுக் கிடையே மட்டும் திரும்பத் திரும்பப் பயணம் செய்பவை. கார்கள், பஸ்கள் கூட ஏற்றப் பட்டு மீட்சி வண்டி மூலமாக அனுதினம் கடலைக் கடக்கின்றன.

Eurotunnel -5

பிரான்ஸ், பிரிட்டன் இரட்டை நாட்டுக்குச் சொந்தமான, 3600 பேர் பணி புரியும் ஈரோடன்னல் கம்பேனி [Eurotunnel Consortium] இரயில் கணவாய்க் கண்காணிக்கும் பொறுப்பை 2086 ஆண்டுவரை ஏற்றுக் கொண்டுள்ளது. 2000 ஆண்டில் மட்டும் 2.8 மில்லியன் கார்கள், 80,000 பஸ்கள், 1.1 மில்லியன் டிரக்குகள் ஈரோக் கணவாய் வழியாகச் சென்றுள்ளன! அதே காலத்தில் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஈரோஸ்டார் இரயில் பயணத்தில் [Eurostar Rail Service] குகை வழியாக 7.1 மில்லியன் மாந்தர் பயணம் செய்ததாக அறியப் படுகிறது! மேலும் 2.9 மில்லியன் டன் பாரங்களும் இரயில் பளு வண்டிகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன.

Cutawawy

கடலடிக் குகையைக் குடையும் தொழிற்துறை நுணுக்கம்

தளர்ந்த மண்ணடங்கும் [Soft Soil] கடலடியிலோ அல்லது ஆற்றுக்கு அடியிலோ கணவாய்க் குகையைக் குடைந்து அமைப்பது, இன்னல்களைத் தரும் ஓர் அசுரப் பணி! மனிதர் யந்திரங்களைக் கொண்டு தோண்டும் போது, திடாரென மண்திட்டுகள் சரிந்து விழுவதும், வெள்ளம் கசிந்து குகையை மூடுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் எதிர்பாராத இடர் நிகழ்ச்சிகள்! ‘கடற்புழு ‘ அல்லது ‘கடல் நத்தை ‘ [Shipworm or Marine Mollusks] எனப்படும் ‘குகை தோண்டிக் கூடு ‘ கண்டுபிடிக்கும் வரை நீருக்கு அடியில் குகையைக் குடைவது முடியாத வினையாகக் கருதப்பட்டது! அக்கருவி பாதுகாப்பு அரண் ஒன்றைக் கொண்டு குடைந்து வெட்டும் உளிப்பற்கள் உள்ளும், புறமும் நத்தைபோல் நகர வசதி செய்யப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்து, வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் அந்த விபத்தில் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டுக் குகையில் வெள்ளம் அடித்துச் சென்றது!

அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அடித்துச் சென்றது!

Eurotunnel -3

1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஞ்சினியர் பீட்டர் பார்லோ [Peter Barlow] என்பவர் புருனெல் கருவியைச் செம்மைப் படுத்தி ஒற்றை இரும்புத் தகடைப் பயன்படுத்தி நேருளை வடிவத்தில் [Cylinderical Shape] பாதுக்காப்பு வெட்டுக் கருவியை அமைத்தார். பார்லோவின் சீடரான ஜேம்ஸ் ஹென்ரி கிரேஹெட் [James Henry Greathead] இரட்டை நேருளை வெட்டுக் கருவியை ஆக்கி, கடலடித் தூண்கள் போன்று காற்றின் அழுத்த விசையைப் பயன்படுத்திக் கருவியின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தத்தை நிலைப்படுத்தி, நவீனப் பாதுகாப்பு வெட்டுக் கருவியைத் தோற்றுவித்தார்!

1919 இல் நியூ யார்க் ஹட்ஸன் நதிக்குக் கீழே மன்ஹாட்டன் பகுதியை நியூ ஜெர்ஸியுடன் இணைக்கும் ‘ஹாலண்டு குகையைக் ‘ [Holland Tunnel] கிலிஃபோர்டு ஹாலண்டு [Clifford Holland] ஆரம்பித்து, 1927 இல் பின்பு மற்றவர்களால் முடிக்கப் பட்டது! 1950 ஆண்டு முதல் வெட்டுக் கருவியின் வெளிப் பாதுகாப்புக் கவசம், ‘நுழைக்கும் குழல்களாக ‘ [Sunken Tubes] மாற்றப் பட்டன! துளையைக் குடைந்ததும் கருவியின் மேற்புறம் சுற்றியுள்ள பெரும் இரும்புச் குழல்கள் நுழைக்கப்பட்டு குகை மண்ணைத் தாங்கும் அரணாக அமைக்கப் படுகிறது! பிறகு முன்வார்த்த வளைத் தட்டுகள் [Prefabricated Sections] செருகி இணைக்கப் பட்டு, வட்டக் குகை இடைவெளி மண்ணால் நிரப்பப் படுகிறது.

Eurotunnel -2

பிரிட்டிஷ் கால்வாய்க் கடலடியில் அமைத்த மூன்று குகைகள்

24 மைல் அகன்ற இங்கிலீஷ் கால்வாய்க் கடலுக்கு அடியே செல்லும், உலகிலே மிகப்பெரும் நீளமுள்ள குகைப் பாதையைக் கட்ட சுமார் 250 ஆண்டுகளாக பிரான்சும் பிரிட்டனும் முயன்று வந்திருக்கிறார்கள்! ஜப்பானின் செய்கான் கடற்குகை [Seikan Tunnel] அதைவிட நீளமானதாக இருந்தாலும், மெய்யாகக் கடக்கும் கடல் அகலம் [15 மைல்] அதைவிட ஒன்பது மைல் குன்றியது! 18 பில்லியன் டாலர் [1990 நாணய மதிப்பு] நிதி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட ஈரோடன்னல் முயற்சிபோல் வரலாற்றில் செலவு மிக்க எந்தத் தனியார் துறை நிதி திரட்டுத் திட்டமும் அதுவரை துவக்கப்பட வில்லை! இறுதியில் ஈரோடன்னல் அமைக்கச் செலவான தொகை: 21 பில்லியன் டாலர்! குகை அமைப்பைப் பின்பற்றி இரண்டு தடவை 1880, 1974 ஆண்டுகளில் நிலத்தைத் தோண்டத் துவங்கினாலும், தொடரப்படாமல் திட்டம் ஏதோ ஒரு காரணத்தல் நிறுத்தமானது! ‘டோவர் [பிரிட்டன்], காலே [பிரான்ஸ்] ஆகிய இரு நகரையும் கடலடி இரயில் குகை மூலம் இணைக்கும் பாதை போன்று, ஆழ்ந்த விருப்பு வெறுப்பு மிகுந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று 1936 இல் பிரிட்டிஷ் பிரமுகர், வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) ஆத்திரமாகக் கூறினாராம்!

உலகிலே நீண்ட குகை குடையப் பட்ட போது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாய் பல பிரச்சனைகளை உண்டாக்கியது! எவ்விதம் நூற்றுக் கணக்கான வேலை ஆட்களை உள்ளே அனுப்பி, வெளியே பாதுகாப்பாய்க் கொண்டு வருவது ? எவ்விதம் கட்டுமானச் சாதனங்களை குகைக்குள் அனுப்புவது ? எவ்விதம் மில்லியன் டன் கணக்கில் தோண்டிய மண்ணையும், புழுதியையும் தொடர்ந்து அகற்றுவது ? மாபெரும் யந்திர சாதனங்களை ஈரடிப்பும், நீரடிப்பும் மண்டிய புழுதியில், பல மைல் தூரம் குகைக்குள்ளே எப்படி இழுத்துச் செல்வது ? குகை தோண்டும் யந்திர வெட்டிகள் [Rotary Cutters], குப்பைமண் அகற்றிகள் [Conveyor Belts] அடிக்கடிச் சிக்கிக் கொள்ளும் போது, வெகு சிரமப் பணிகள் செய்து அவை தளர்த்தப்பட வேண்டும்!

இறுதியாக 1987 இல் பிரான்சும் பிரிட்டனும் இருபுறமும் தோண்ட ஆரம்பித்து, 1990 டிசம்பர் முதல் தேதி வரலாற்று முக்கிய நாளில், அட்லாண்டிக் கடலடில் 200 அடி ஆழத்தில் கைகோர்த்து இணைப்பு விழாவைக் கொண்டாடினர்! இரு குழுவினரும் திக்குத் தெரியாத வெப்பக் குகைக்குள்ளே தோண்டும் போது, ஒருவரை ஒருவர் மறைமுகமாக அணுகும்படித் தளநோக்குத் திசை அறிவிக்க [Survey Direction By Natigation Satellites, Triangulation & Plumb] நவீன அண்டவெளித் துணைக்கோள் பாதை காட்டும் நுணுக்க முறைகள் பயன்படுத்தப் பட்டன. லேசர் கதிருடன் இணைக்கப்பட்ட மின் கணனிகள் [Guided by Computer Linked Lasers] குகை குடையும் பணியாளிகளுக்கு தொடர்ந்து திசை காட்டின.

கணவாயின் இருபுறத்திலும் பூதப் புழுக்கள் போல் கடல் மடியைக் குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machines (TBM)] மணிக்கு 2400 டன் மண்ணைக் குடைந்து வெளியே தள்ளின! அந்தப் பூத யந்திரங்கள் சுற்றும் டங்ஸ்டன் வெட்டுப் பற்களைக் கொண்டவை! ஒரே சமயத்தில் குடைந்து, ஒரே சமயத்தில் மண்ணை அகற்றி, ஒரே சமயத்தில் குகைக்கு உட்கவசம் [Lining Shell] பூணும் திறமை கொண்டவை! குகை முடிந்ததும் சேர்ந்து போன மண்குவியல் 8 மில்லியன் கியூபிக் மீடர் கொள்ளளவுக் கோபுரமாக உயர்ந்தது! குகைப்பணி மையத்தில் முடிந்ததும் பிரிட்டிஷ் தோண்டும் யந்திரம் குகைக்குள்ளே புதைக்கப் பட்டது! பிரென்ச் யந்திரம் தொடர்ந்து தோண்டி கணவாய்க் குகையை முழுவதையும் தோண்டி முடித்தது!

இங்கிலீஷ் கால்வாயின் கடல்நீர்க் கடியில் 150-250 அடி ஆழத்தில் இறுகிய சுண்ணாம்பு அடுக்குகளைக் [Chalk Layers] குடைந்து, மூன்று இணையான குகைகள் [Three Parallel Tunnels] தோண்டப்பட்டன. குகைகளின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீடர்]. கடக்கும் கடலின் நீளம்: 24 மைல். 25 அடி விட்டமுள்ள இரண்டு இரயில் பாதைக் குகைகள், அவற்றுக்கு இடையே 50 அடி தூர மையத்தில் 16 அடி விட்டமுள்ள பணிக்குகை [Service Tunnel] ஒன்றும் ஆக மூன்று குகைகள் அமைக்கப்பட்டன. பணிக்குகையில் பராமரிப்பு, செப்பணிடும் வாகனங்கள் உலவ முடியும். மையக் குகை 1230 அடிக்கு ஒருதரமாக 270 இடங்களில் மற்ற பக்கத்துக் குகைகளோடு இணைக்கப் பட்டுள்ளது. பணிக்குகையில் காற்றழுத்தம் மற்ற இரண்டு குகைகளை விடவும் சற்று அதிகமாக்கப்பட்டு, அபாய நிகழ்ச்சியின் போது ‘அடைப்பு முறம் ‘ [Dampers] திறந்து இணைப்பாகி, பயணிகளுக்கு புதுக் காற்றையும், பாதுகாப்பையும் அளிக்க ஏதுவாகிறது.

இருபுறமும் அமைந்த இரயில் குகைகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இரயில் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் காற்றுப் போக்கு இழுப்பைத் [Aerodynamic Drag] தவிர்த்துச் சமநிலைப் படுத்த, ‘விடுவிப்புக் குழல் இணைப்புகள் ‘ [Relief Ducts Joints] அமைக்கப் பட்டுள்ளன. இரயிலின் பொதுவான வேகம் மணிக்கு 87 மைல்; உச்ச வேகம் மணிக்கு 100 மைல். பிரிட்டனிலிருந்து குகைவழியாகப் பிரான்சுக்கு இரயில் 35 நிமிடங்களில் வந்து விடுகிறது. நேர்த்திசை இரயில் ஒரு குகையிலும், எதிர்த்திசை இரயில் அடுத்த குகையிலும் செல்கின்றன. தேவைப் பட்டால் திசை மாற்றி இரயில் வேறு குகையில் செல்லவும் இருப்புப் பாதைக் குறுக்கு இணைப்புகள் செய்யப் பட்டுள்ளன.

முப்பத்து மைல் நீண்ட குகை, 24 மைல் நீளமான கடலுக்குக் கீழே 150 அடி முதல் 250 அடி ஆழத்தில் செல்கிறது. அவ்விதம் நீண்ட குகையில் புவிநிலை வாயு அழுத்தம் [Atmospheric Pressure] சீராகக் காற்று நுழையும் செங்குத்து ‘விடுவிப்பித் துளைகள் ‘ [Venting Shafts] இரண்டு நிலப் பகுதியில் [பிரிட்டன் கரையில் ஒன்றும், பிரென்ச் கரையில் ஒன்றும்] அமைக்கப் பட்டுள்ளன. ஈரோ குகையின் உள்ளே முப்பது மைல் பாதைகளில் எங்காவது தீ விபத்து நேர்ந்தால், பயணிகளையும் சாதனங்களையும் முதலில் பாதுகாப்பது, ஈரோடன்னல் அதிகாரிகளின் தலையாய பணியாகிறது! மின்சார இரயில் வண்டிகள் 25,000 வோல்ட் அழுத்தமுள்ள மேல்தளத் தொங்கு கம்பிகளில் மின்சக்தியை உறிஞ்சிக் கொண்டு மணிக்கு 100 மைல் உச்ச வேகத்தில் செல்லும் போது, மின்சாரத் தீ விபத்து நேர வாய்ப்புள்ளது! அடுத்து இரசாயனப் பளுக்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளில் தீப்பற்றி எழவும் வாய்ப்புக்கள் உள்ளன!

ஈரோக்குகை ஆட்சி அரங்கு, பாதுகாப்பு மையங்கள்

இரயில் வண்டிகளின் பயணப் போக்குகள், வேகங்கள், திசைகள், ஓடு மிடங்கள் யாவும், ஈரோடன்னல் ஆட்சி அரங்கில் [Eurotunnel Control Centre] தொடர்ந்து அல்லும் பகலும் கண்காணிக்கப் படுகின்றன. மின்சாரச் சமிக்கை ஏற்பாடுகள் [The Electric Signalling System] அனைத்தும் பிரென்ச் கண்காணிப்பு ஏற்பாடுகளில் [French TVM-430] இயங்கி வருகின்றன. சமிக்கை மின்னோட்டங்கள் இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள சாதனங்கள் மூலம், ஓட்டுநர் காண எஞ்சின் ஆட்சி அரங்குக்கு அனுப்பப் படுகின்றன. வண்டியின் வேகம் உச்ச அளவைத் [மணிக்கு 100 மைல்] தாண்டும் போது, மைய ஆட்சி அரங்கின் சுயக் கட்டுப்பாடு சாதனம் எஞ்சின் சக்கிரங்களுக்குத் தடை உராய்வு அளித்து [Automatic Brake Application] வேகத்தைக் குறைக்கிறது!

ஈரோக் குகையின் இருபுறமும் தீவிபத்தைக் கட்டுப்படுத்த ‘தீ கண்காணிப்பு மையம் ‘ [Fire Management Centre] அமைக்கப் பட்டுள்ளது. அவற்றின் முக்கிய பணிகள்:

சுழலும் கூரிய தோண்டி

1. குகையில் அனைத்துத் தீப்புகை அறிவிப்புச் சாதனங்களையும், தீயணைப்பு பாதுகாப்புக் கருவிகளையும் [Monitor Fire Detection & Suppression Equipment] கண்காணித்து வருதல்.

2. எதிர்பாராது தீவிபத்து நேர்ந்தால், மைய ஆட்சி அரங்கிற்கு எச்சரிப்பது.

3. ஒவ்வொரு கண்காணிப்பு மையத்திலும், தீயணைப்புச் சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டு, போதிய தீயணைப்புப் படையினர் இராப் பகலாகப் 24 மணிநேரப் பணியில் தயாராக இருப்பது.

4. தீயணைப்பு மையங்கள் யாவும் வெளிப்புறம் நிறுவகமான எல்லா அபாய நிகழ்ச்சி மையங்களுடன் சுயமான எச்சரிக்கைத் தொடர்பைக் கொண்டிருப்பது.

செப்பணிடும் சிறிய நடுக்குகை

 Fire Escape

ஈரோக் கணவாயில் ஏற்பட்ட முதல் தீவிபத்து!

1996 நவம்பர் 18 ஆம் தேதி இரவு 8:45 மணி பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் பாரம் ஏற்றிச் சென்ற 29 பெட்டி மீட்சி இரயிலில் [29-Car Vehicle Shuttle (Carrier Wagon)] முதல் ஈரோடன்னல் தீ விபத்து ஏற்பட்டது! பிரான்ஸ் முனைக் கலே [Calais] நிலையத்தைக் கடந்து, குகைக்குள் நுழையும் போது பார வண்டியின் கடைசிப் பெட்டியில் தீ கிளம்பி யிருக்க வேண்டும் என்று தீயணைப்புப் படையினர் கருதுகிறார்கள். தீ எழுச்சி உடனே ஈரோகுகை ஆட்சி அரங்குக்கு அறிவிக்கப் பட்டது! தீயணைப்பு விதிகளின்படி, பார வண்டியின் பயணம் தொடர அனுமதிக்கப் பட்டுப் பிரிட்டன் நிலையத்தில் தீ அணைக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது! அம்முடிவு எஞ்சின் ஓட்டுநருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் தீ பெருகி விட்டதாகத் தெரிகிறது!

குகையின் முனையில் தயாராக இருக்கும் பிரென்ச் பகுதியின் ‘முன்னோடிக் காப்புக் குழு ‘ [First Line of Response Team (FLOR)], மையத்தில் உள்ள பணிக்குகையில் தீக்கட்டுப்பாடு சாதனங்களைப் பயன்படுத்த எதிர்பார்த்திருந்தது. மையத்தில் இருந்த பிரிட்டன் பகுதி தீயணைப்புப் படையும் தயாராக இருந்தது. அச்சமயம் எஞ்சின் அறைக் கருவி அரங்கில், ‘வண்டியில் முரண்பாடு நிகழ்ச்சி ‘ இருப்பதாகக் காட்டி, ‘இரயில் தண்டவாளத்திலிருந்து புரண்டு விடும் ‘ என்று ஒரு சிவப்பு சமிக்கை எச்சரிப்பு விடுத்தது! விதிப்படி உடனே வண்டி குகை நடுவே ஓட்டுநரால் நிறுத்தப் பட்டது! அப்போது வண்டி அடைந்த தூரம் கலே யிலிருந்து 12 மைல்!

வண்டியின் மேற்பார்வை அதிபதி [Chef De Train] என்ன நிகழ்கிறது என்று கதவைத் திறக்க, புகை மண்டலம் உண்டி வாகனத்தில் நுழைந்தது! உடனே அதன் உள்ளிருந்த 33 நபர் பாதுகாப்பான மையக் குகைக்குள் அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது எதிர்த்திசையில் வந்த இரயில் நிறுத்தப் பட்டு 33 நபர் அந்த வண்டியில் மீண்டும் கலே நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். தீப் பற்றிய பெட்டியும், மற்ற ஏழு பெட்டிகளும் தீயில் எரிந்து முழுவதும் மாய்ந்தன! கொளுந்து விட்டுப் பற்றிய நெருப்பு, குகையின் 1330 அடி [400 மீடர்] நீளக் காங்கிரீட் கவசத்தை 16 அங்குல ஆழத்துக்குச் சிதைத்தது!

தீக் கட்டுப்பாடு காலை 5:00 மணிக்கு செய்ய முடிந்து, 11:15 மணிக்குத் தீ முழுவதும் அணைக்கப் பட்டது! பதினைந்து நாட்கள் தீப் பற்றிய குகையில் பயணம் நிறுத்தமாகி, மறுபுறம் உள்ள குகையில் மட்டும் வாகனப் போக்குகள் தொடர்ந்தன. 1996 டிசம்பர் 10 முதல் மறுபடியும் இரயில் பயணங்கள் இரண்டு திசையிலும் சீராகின. சுற்றுப் பயண இரயில் போக்குகள் 1997 ஜனவரி 6 முதல் மறுபடியும் அனுமதிக்கப் பட்டன!

இங்கிலீஷ் கால்வாய்ப் பயணத்தின் எதிர்கால நிலைப்பாடு

1998 ஆண்டில் மட்டும் 3.45 மில்லியன் சுற்றுப் பயண வாகனங்கள் ஈரோ கணவாய் வழியாகச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. ஈரோடன்னலில் பயண மக்கள் அடர்த்தியும், வாகனப் போக்குகள் எண்ணிக்கையும் மிகையாகி வருவதால், புதிய ஏற்பாடுகளை பிரான்சும், பிரிட்டனும் சிந்தித்துக் கொண்டு வருகின்றன! ஏகக் குறுகிய இருப்புப் பாதையாய்த் தனித்தியங்கி வரும் ஈரோடன்னலுக்குப் போட்டியாக அடுத்தொரு கடற்குகை வெகு சீக்கிரத்தில் இங்கிலீஷ் கால்வாயில் வரப் போவதாக அறியப்படுகிறது! அத்திட்டத்தில் இரண்டு குகைகள் அமைக்கப்பட விருக்கின்றன. முதல் குகை: ஒரு திசையில் போகும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதைகளை ஒரு மட்டத்தில் கொண்டு, அதற்கு மேல் மட்டத்தில் எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதையும் அமைப்பதாக உள்ளது. இரண்டாம் குகை: முதல் குகைபோல் ஒரு திசையில் செல்லும் இரட்டை இருப்புப் பாதை ஒரு மட்டத்திலும், அடுத்த மட்டத்தில் எதிர்த்திசையில் செல்லும் இரயிலுக்கு இருப்புப் பாதை இரண்டும் கட்டப் போவதாகத் தெரிகிறது.

தகவல்:

1. The Seven Wonders of the World By Life [Dec 15, 2003]

2. National Geographic Sosiety -Underwater Tunnels, Marvels of Engineering [1992]

3. National Geographic France Celebrates Its Bicentennial [July 1989]

4. The E-Learing Zone -Facts & Figures of the Channel Tunnel [www.cornwallis.kent.uk/intranet/elearn/science/eurotunn] [2004]

5. Channel Tunnel (Chunnel) Vital Statics

6. English Channel Tunnel Fire National Fire Protection Association, Quincy, MA, USA. [Nov 16, 1996]

7. Le Shuttle Arriving in France -Jeremy Lennard & Agencies [Apr 7, 2004]

8. The Tunnel Boring Details, About Eurotunnel [Feb 23, 2004]

9. The History of Eurotunnel [www.eurotunnel.co.uk/]

10.  https://en.wikipedia.org/wiki/Eurostar  [March 8, 2016]

11.  https://en.wikipedia.org/wiki/Channel_Tunnel   [March 9, 2016]

*************

jayabararathans@gmail.com [S. Jayabarathan]  March 12, 2016 [R-1]

 

குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

 Rail tunnel -1

[Japan ‘s Seikan Subsea Mountain Tunnel]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++

https://youtu.be/HX-yhXFK7ss

https://youtu.be/7lcwecXiL0I

https://youtu.be/5nYGzo7QcUM

முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது! 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும்! ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை! ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன! அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன! ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது!

1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் சுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர்! பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது! அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங்களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது!

செய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்

பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை! பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33! அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது!

Rail tunnel Drilling

சுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை! காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று! மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.

செய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்

ஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது! அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி! 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது! அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர்! ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது!

1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளியேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது!

1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது! பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது! பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது! நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை! ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன!

ஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்

மலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி ? முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன! குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின!

தொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின! ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாறைக் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.

சுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை! கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்

வெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது! 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன! கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது! பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.

33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறுகிய அகற்சி, பெருகிய அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.

ஜப்பான் புள்ளெட் வேக ரயில்

நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!

ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லை!! இல்லை!!! ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!

1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.

!

பூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு!

மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி! ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது!

புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது! நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர்! வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன! ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர்! யாரும் மரண மடைய வில்லை! 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது! தொழிற் சாலைகளில் தீப் பற்றின! காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன! நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன! கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன! விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது! நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது! நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை!.

செய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்

ஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கன் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம்! 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது!

நான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை! எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்கு பயன்பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது!

ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை!

பிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது! 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன! 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன! 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.

ஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்டப் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது! ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது! சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை! மேலும் மொராக்கோவிலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது!

தகவல்:

1. National Geographic Picture Atlas of our World [1990]

2. The Seikan Tunnel -A Short History of the Tsugaru Straits Line [www.pref.aomori.jp/]

3. Science & Technology: The World ‘s Longest Tunnels [www.Swishweb.com/]

4. Mountain Tunnels, Tunnels & Bridges -Seikan Undersea Tunnel.

5. A Short History of Japan By: InfoPage Corporation [2003]

6. Bullet Trains Programmed to Stop, if a Quake occurs [And Life Goes On By: G.Bhaskaran, The Hindu Jan, 2002]

7. Powerful Earth Quake Shakes Northern Japan [Sep 26, 2003]

8. World Data Center for Seismology, Denver U.S. Geological Survey [Sep 25, 2003]

9. Spain & Morocco Agree to Rail under Gibraltar Strait By Vicky Short [Jan 5, 2004]

10. http://www.railway-technology.com/projects/seikan-tunnel/

12. http://web-japan.org/atlas/architecture/arc02.html

13.  https://en.wikipedia.org/wiki/Seikan_Tunnel  [March 2, 2016]

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] [March 5, 2016] [R-1]

 

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -2

(கட்டுரை -2)
(பிப்ரவரி 10, 2012)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜயார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகளில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக்கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் கட்டுமான  பங்கு தாருக்கும் உரியது.   இந்நிகழ்ச்சி  அணுமின் நிலையங்களின் கார்பன் மாசற்ற சூழ்நிலை,  இயக்கப் பாதுகாப்பு , மின்சக்தி உறுதி அளிப்பு  ஆகியவற்றை மீண்டும் நிச்சயப் படுத்தும்.

உலக அணுசக்திச் செய்தி (World Nuclear News)  பிப்ரவரி 9, 2012

பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

BBC News (June 23, 2011)

ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

BBC News (May 30, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை:    2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

Hiroshima Now

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (டிசம்பர் 2015)

ஜப்பான் புகுஷிமாவுக்கு அருகில் 9 ரிக்டர் அளவு நேர்ந்த பூகம்பத்தில்  இயங்கிய ஏழு அணுமின் நிலையங்களிலும், பராமரிப்பில் இருந்த மூன்று நிலையங்களிலும்  எந்த ஒரு நிலையக் கட்டமைப்பும் பாதிக்கப் படவில்லை.   இயங்கிய அனைத்து ஏழு அணுமின் நிலையங்களும் சுயமாய்,  பாதுகாப்பாய் நிறுத்தம் அடைந்தன.   நிறுத்தமான 4 அணுமின் உலைகளுக்குச் சுனாமியால் அபாயப் பாதுகாப்பு டீசல் மின் ஜனனிகள் கடல் வெள்ளத்தில் மூழ்கி  மின்சாரம் அனுப்பாது முடங்கிப் போயின.   ஆதலால் தீயந்த எருக்கோல் தண்டுகள் (Spent Fuel Bundles) வெப்பம் தணிக்கும் நீரோட்டப்  பம்புகள் இயங்க முடியாது  வரண்டு போயின.    அதனால் எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகிச் சில கோல்கள் உருகிப் போயின.   வெப்பக் கோல்கள் நீராவியுடன் இணைந்து ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெடித்து மேல்தளத்தைத் தூளாக்கியது.   பிளந்த சாதனங்கள் வழியாகக் கதிரியக்க நீர் கசிந்து கடலிலும், சுற்றுப் புறத்திலும் கதிரியக்கம் பரவியது.  இப்போது [டிசம்பர் 2015]  புகுஷிமா அணு உலைகளின் வெப்ப ஏற்றம் தணிந்து சீர்மை நிலைப்பாடடு ஏற்பட்டுள்ளது.  டிசம்பர் 21, 2015 வரை 36,376 m^3  கதிர்வீச்சு திரவக் கழிவுகள் சோதிக்கப் பட்டு, நாள் ஒன்றுக்கு 360 m^3 வீதம்  கடலில் தள்ளப் பட்டுள்ளது.  அணு உலைக்  கலத்தின் உட்புறக் கதிர்வீச்சை அறிய சுய இயங்கிச் சாதனங்கள் [Robots] பயன்படுத்தப் படுகின்றன.  இப்பணிகள் செய்ய உச்ச அளவு ஊழியர்கள் 7450 பேர் தேவைப்பட்டார்.

புகுஷிமா : யூனிட் 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அக்டோபர் 5, 2015 இல் யூனிட் 1  அணு உலை மேல் மூடித் திறப்புக்குத் தயாரானது.

Fuhushima Radioactivity Release

புகுஷிமா : யூனிட் 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.  கதிர்த்தீண்டிய தீவிரக் கழிவுத் திரவ நீக்கம் ஜுலை 10, 2015 இல் முடிந்துள்ளது.

புகுஷிமா : யூனிட் 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.  கதிர்வீச்சுத் தீவிரம்   குறைக்கப் பட்டு  தீய்ந்த எருக்கோல் தடாகத்திலிருந்து, பெரும் கழிவுக் குப்பைகள் நீக்கப் பட்டன [நவம்பர் 21, 2015].

புகுஷிமா : யூனிட் 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால், தீயும் வெடிப்பும் நேர்ந்தன.  இப்போது [டிசம்பர் 22, 2014] தீய்ந்த எருக்கோல்கள் அனைத்தும் தடாகத்திலிருந்து நீக்கப் பட்டுப் பாதுகாப்பாய் ஒதுக்கப்பட்டுள்ளன.  கதிர்த்தீண்டிய தீவிரக் கழிவுத் திரவ நீக்கம் டிசம்பர் 21, 2015 இல் முடிந்துள்ளது.

புகுஷிமா : யூனிட் 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலை யங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங் களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங் களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :   (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

(முன் வாரத் தொடர்ச்சி)

11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும்
அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவுகளை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக் களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

முடிவுரை: 

இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1100 மெகா வாட் அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக்கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் கட்டுமான  பங்குதாருக்கும் உரியது.   இந்நிகழ்ச்சி  அணுமின் நிலையங்களின் கார்பன் மாசற்ற சூழ்நிலை,  இயக்கப் பாதுகாப்பு , மின்சக்தி உறுதி அளிப்பு  ஆகியவற்றை மீண்டும் நிச்சயப் படுத்தும்.

பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப் படுகின்றன.

Nagasaki Now

அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  இந்த யந்திர யுகத்தில் மின்சாரத்தைப் பரிமாறுவதோடு பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

1945 இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் அணுகுண்டுகள் தகர்ப்புக்குப் பிறகு, 1979 இல் அமெரிக்க திரிமைல் தீவு அணுமின்னுலை விபத்துக்குப் பின்னும், 1986 இல் செர்நோபில் வெடிப்புக்குப் பிறகும், 2011 ஜப்பானில் மூன்று புகுஷிமா அணுமின் உலைகள் கோர விபத்துக்குப் பின்னும், 21 ஆம் நூற்றாண்டில் 30 உலக நாடுகள் இன்னும் பாதுகாப்பாய் 439 அணுமின் நிலயங்களை இயக்கி மின்சாரம் பரிமாரி வருகின்றன.  இப்போது ஜப்பான் கதிர்வீசும் தளங்களைத் தூயதாக்கிப் புதுப்பித்து ஹிரோஷிமா, நாகசாக்கி முன்னை விடச் சுடரும் சொர்க்க புரிகளாய் மின்னுகின்றன.  அதே முற்போக்கு நோக்கில் ஜப்பான் புகுஷிமாவில் நான்கு அணுமின் நிலையங்களில் இழந்த 2720 MWe  ஆற்றலை மீண்டும் பெற புதிய தளங்களில் புதுமுறைப் பூத அணுமின் நிலையங்களை நிறுவி மின்சாரம் பரிமாறப் போவதை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

http://fukushimaupdate.com/current-state-of-post-accident-operations-at-fukushima-npp-july-to-december-2015/

http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

(தொடரும்)

***************

தகவல்:

1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Operations) (June 14, 2011)

24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

25.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_nuclear_power  (Nuclear Power by Country)  (June 2011)

26. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2001)

27.  http://www.eia.gov/forecasts/ieo/index.cfm  (International Energy Outlook 2011)  (September 19, 2011)

28.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_electricity_production_from_renewable_sources (List of countries by electricity production from renewable sources)

29.  http://world-nuclear.org/info/fukushima_accident_inf129.html  (2011 Fukushima Accident Report World Nuclear News (January 30, 2012)

30.  http://www.world-nuclear-news.org/RS_Approval_for_first_nuclear_new_build_in_America_0902121.html  (Approval to build New Nuclear Power Plant in America, World Nuclear News (February 9, 2012)

31.  http://fukushimaupdate.com/current-state-of-post-accident-operations-at-fukushima-npp-july-to-december-2015/  [December 2015]

************************
S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 7 , 2016  (R-2)
http:jayabarathan.wordpress.com/

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக அணு மின்சார நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றித் தீர்மானங்கள் -1

(March 9, 2016)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++++++++

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

++++++++++++++

உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதி இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங் களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

கட்டுரை ஆசிரியர்

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]



ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத் தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.


தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சி போன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :

1. அர்ஜென்டைனா : தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.

2. பிரேசில் : புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.

3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.

4. கனடா : கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.

5. சைனா : அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.

6  ஃபின்லாந்து : பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.

7. ஃபிரான்ஸ் : ஃபிரென்ச் நாட்டின் 75% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

8. ஜெர்மனி : 2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.


9. இந்தியா : புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங் களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

10 ஜப்பான் : ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.

World nuclear power production

 

முடிவுரை: உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஹிரோஷிமா, நாகசாக்கி, திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா கதிரியக்க விபத்துக்களுக்குப் பிறகு செம்மைப் படுத்தி  2012 இல் 30 உலக நாடுகள் 430 மேற்பட்ட  அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

24.  http://www.eia.gov/forecasts/ieo/index.cfm  (International Energy Outlook 2011)  (September 19, 2011)

25.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_electricity_production_from_renewable_sources (List of countries by electricity production from renewable sources)

26.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_nuclear_power  (Nuclear Power by Country)  (June 2011)

27. http://www.worldwatch.org/nuclear-power-after-fukushima  [2013]

28.  https://en.wikipedia.org/wiki/Fukushima_Daiichi_nuclear_disaster [March 2, 2016]

29.  http://www.dailymail.co.uk/news/article-3468819/3-ex-execs-utility-charged-Fukushima-disaster.html  [February 29, 2016]

30.  https://www.iaea.org/newscenter/statements/nuclear-power-after-fukushima  [October 21, 2014]

31.  http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

************************

S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 9,  2016  (R-3)

http:jayabarathan.wordpress.com/