2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்

(கட்டுரை : 6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவைச் சுற்றும் சந்திரயான்
உளவிச் சென்று
நாசா வோடு வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
ஆராயப் போகுது
பாரதமும் நாசாவும் ஒன்றாக !
சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாவது சந்திராயன்
மூன்றாண்டில் சென்று இறக்கும்
வாகனம், தளவுளவி ! அடுத்து
பாரத விண்வெளி விமானிகள் இயக்கும்
சீரான விண்கப்பல்
தாரணியைச் சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது ! ஆனால்
ஏவுகணைச் சோதனையில்
தோல்வி
ஏற்பட்டுள்ளது !
தாமத மாகும் அடுத்து நிலவுத்
தளவுளவிப் பயணம் !

+++++++++++

சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போது தோல்வி ஏற்பட்டுள்ளது.

அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

Fig 1G Indian Rockets


“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

“இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனைகளில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.    ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !   அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !


ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்

அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது.  மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலவின் குழிகளையும் மலைகளையும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டியுள்ளது.  நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி  இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது.  மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது.  நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது.  இந்திய நிபுணர் துணைக்கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார்.  அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும்.  இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன.  அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின.  தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன.  அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.

அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits :

The Hindu, ISRO & other Websites

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

1A Stars & Planets By : Duncan John [2006]

1B. Astronomy Facts on File Dictionary (1986)

2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

3. Indian Space Program By: Subhajit Ghosh

4  Chennai Online News Service About Insat

4B Orbiting Satellite [March 14, 2007]

5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

9. Indian Space Program By: Wikipedia

10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]

12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp

13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html

14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html (இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)

15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

17. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

19 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

20.  https://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

21.  https://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

22.  Space Expolaration Chembers Encyclopedic Guides (1992

23.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

24.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

25.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

26  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

35.  http://en.wikipedia.org/wiki/Category:Indian_space_program  (May 16, 2012)

36.  http://www.time.com/time/printout/0,8816,2040085,00.html (December 29, 2010)

37  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation

38.  http://www.isro.org/gslv-d3/gslv-d3.aspx  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)

39.  Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)

40.  Space Travel : New Moon for India  By : Morris Jones, Sydney Australia (SPX)  )May 28, 2012)

41  http://www.bharat-rakshak.com/MONITOR/Space%20Essay/entry3.htm  (Indian Space Program -2020)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (June 2, 2012)

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

(கட்டுரை : 80)

(Newfound Exoplanet may turn to dust)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

உப்பி விரியும் பிரபஞ்சத்தில்
புதிய பூமியைத் தேடுது
கெப்ளர் விண்ணோக்கி !
நுண்ணோக்கி ஒளிக்கருவி
விண்மீன் ஒளிமுன்னே
அண்டக் கோள் ஒளிநகர்ச்சி
பதிவாக்கிப்
புதிய கோள் கண்டுபிடிக்கும் !
விண்மீன் பரிதி போல்
தன்னொளி வீசும்
ஒளிமந்தை மீன்களைச் சுற்றும்
உலகங்கள் கோடி !
விண்வெளியில்
இன்றுவரை அண்டக்கோள்
எழுநூறு கண்டாலும்
மித வெப்ப  முடைய
மீறாக் குளிருடைய
நீர்க்கோள் ஒன்றை நிபுணர்
ஆராய வில்லை !
உயிர்வாழ்வுத் தகுதி அரங்கில்
அண்டக் கோள்கள்
கண்ணுக்குத் தெரியாமல் நூதனக்
கருவிகள் கண்டு பிடிக்கக்
காத்துக் கிடக்கும்
நூற்றுக் கணக்கில் !

+++++++++++

 

++++++++++++++++

“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வருவது தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோளில் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்.

சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT)

fig-1c-kepler-telescope-helio-centric-orbit

“புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.  அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய்ச் சிறுத்து எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் காலியாகப் போகும் என்று தெரிய வருகிறது.

டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team)

“நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”

ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA’s Astrophysics Division) (Feb 19 2009)

fig-1a-kepler-space-view-mission

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது !  இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”

லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)  

“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது.  இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”

அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

விண்வெளியில் ஆவியாகித் தூசியாகும் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின்  MIT  (Massachusetts Institute of Technology) பொறிநுணுக்க ஆய்வாளர்கள், மற்றும் நாசா விண்வெளி நிபுணர்கள் 1500 ஒளியாண்டு தூரத்தில் பரிதி ஒன்றை மிக்க நெருக்கத்தில் சுற்றி ஆவியாகித் தூசியாகும் ஓர் அண்டக்கோளைச் சமீபத்தில் (2012 மே மாதம் 20) கண்டிருப்பதாக வானியல்  பௌதிக இதழில் (Astrophysical Journal) அறிவித்துள்ளார்கள்.    தீக்கொப்புளம் உண்டாக்கும் அந்தக் கடும் வெப்பத்தில் சிதையும் அந்தக் கோள் தன் பரிதியை 15 மணி நேரத்துக்கு ஒருமுறை மிக்க அருகில் சுற்றி வருவதாகக் கணித்துள்ளார்கள்.   தூசி வால் நீண்ட அந்தக் கோள், ஒரு வால்மீன் போல் காணப் படுகிறது.   ஆனால் அந்த நீண்ட தூசி வால் வெளியாக்கும் தூள்கள் அண்டக்கோளின் சிதைவைக் காட்டுகின்றன.    அச்சிறிய கோள் நமது புதக் கோளை விடச் சிறியது.  புதக்கோள் போல அந்த அண்டக் கோளும் தன் சூரியனை மிக நெருக்கத்தில் வெகு வேகமாகச் சுற்றி வருகிறது.  இத்தனை நெருக்கத்தில், இத்தனை வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஓர் அண்டகோள் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை.    அத்தனை நெருக்கத்தில் சுற்றும் அந்தக் கோளின் தள வெப்ப உஷ்ணம் சுமார் 3600 டிகிரி பாரன்ஹீட் என்று கணிக்கப் பட்டுள்ளது.   அந்தக் கடும் வெப்பத்தில் கோளின் தளம் பேரளவில் சூடாகி, தள மண் உலோகங்கள் எரிந்து ஆவியாகின்றன.   ஆவியான உலோகங்கள் குளிர்ந்து தூசியாக உலர்ந்து வெளியேறுகின்றன.   இறுதியில்  கோளின் பேரளவு நிறை எரிந்து சாம்பலாகி நீங்கி, நிறை குன்றி ஈர்ப்பு விசை தளர்ந்து தன் சூரியன் தீயில் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.   அண்டக்கோள் சுற்றும் அந்த விண்மீன் : KIC – 12557548 என்று குறிப்பிடப் படுகிறது.   அக்கோள் முற்றிலும் சிதைய 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள்.

fig-6-habitable-zone-to-hunt-earth-like-planets

“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வரும் தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோள் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்” என்று சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT) கூறுகிறார்.

இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.   இது அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய் எதிர் காலத்தில் ஒன்றும் இல்லாமல் போகும் என்று தெரிய வருகிறது  என்று  கெப்ளர் விண்ணோக்கி விஞ்ஞானக் குழுவினரில் ஒருவரான டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team) விளக்குகிறார்.

அண்டக்கோள் ஆய்வாளர் பரிதியைத் தூசியோடு சுற்றும் கோளின் ஒரு கணனி   மாடலைத் தயார் செய்து பார்த்த போது, கோளைச் சுற்றியுள்ள தூசிமய வெளி திரட்சியாகவும், வால் புறத்தில் தூசிமயம் மெலிந்ததாகவும் அமையக் கண்டனர்.  அந்தத் தூசிமயத் திரட்சியில் பட்ட ஒளி, கெப்ளர் விண்ணோக்கி கண்ட வெளிச்சத்தைப் போல் இருந்ததைப் பார்த்து வியந்தனர்.

வானியல் விஞ்ஞானிகள் கெப்ளர் விண்ணோக்கியைப் பயன்படுத்தி  விண்வெளி ஒளிமந்தைகளில் இயங்கி வரும் பரிதி மண்டலக் கோள்களைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள்.    வெளிமண்டலச் சூரியன்களை நோக்கும் போது ஏற்படும் ஒளிமங்கலும், ஒளி மீட்சியும் அதனைச் சுற்றும் புறக்கோளின் நகர்ச்சியைக் காட்டும்.   தற்போது கெப்ளர் விண்ணோக்கி சுமார் 160,000 பரிதிகளை நுட்பமாய்ச் சோதித்து வருகிறது.   ஒளிமங்கும் நேரத்திலிருந்து ஒளி பொங்கும் நேரம் கோள் பரிதியைச் சுற்றும் பாதி நேரத்தைக் குறிப்பிடுகிறது.    ஒளி மிகும் நேரத்தைக் கணக்கிட்டும் கோள் தன் பரிதியைச் சுற்றும் நேரத்தைக் கணிக்கலாம்.   எரிந்து சாம்பலை வெளியாக்கும் அண்டக்கோள் தன் சூரியனை ஒருமுறைச் சுற்ற 15 மணி நேரம் பிடித்தது.

கெப்ளர் விண்ணோக்கி குறிவைக்கும் புறவெளிப் பரிதி மண்டலங்கள்

2012 மே மாதம் 21 வரை கெப்ளர் 767 புறவெளிக் கோள்கள் அல்லது புறப் பரிதிக் கோள்கள் (Exoplanets or Extrasolar Planets)  நோக்கி விபரம் அறிவித்துள்ளது.   ஏறக்குறைய 50% சூரியன்கள் தம்மைச் சுற்றும் ஏதாவது ஓர் அண்டக் கோளைக் கொண்டுள்ளன.   2012 ஆண்டு ஆய்வுப்படி நமது பால்வீதி மந்தையில் உள்ள 100 பில்லியன் பரிதிகளில் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு கோள்களைப் பிடித்துக் கொண்டுள்ளன.   அவற்றில் பெரும்பான்மையானவை நமது பூதக்கோள் வியாழன் அல்லது நெப்டியூன் போன்றவை என்பது தெரிகிறது.    நமது பூமியை ஒத்த அளவில் இருப்பவை ஒரு சிறிது அளவே.   அவற்றில் வெப்பம், குளிர் மிதமாக இருந்து பூமிபோல் உயிரினம் வாழத் தகுதி உள்ள அரங்கமா (Habitable  zone) என்று அறிதல் அவசியமாகும்.

இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறையாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்த விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b).  அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது.  இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை.  இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது,  அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப் பட்டது.  அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது.  கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது.  சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது.  கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை).  இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது.  மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்).  அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?

விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சய மாகிறது.  இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது.  மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர்.  இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது.  மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன்  கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் !

புதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்

2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது ! அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது !  நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே.  இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது.  விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கி, ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது.  2012 ஆண்டு மே மாதம் 21 வரை  766 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !   விந்தையாக இரட்டைச் சூரியனைச் சுற்றும் ஓர் அண்டக்கோளை கெப்ளர் விண்ணோக்கி கண்டுள்ளது.

2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெஃப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 (?) ஆண்டில் ஏவப்படும் “உயிரினம் தேடி” விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

++++++++++++

தகவல் :

Picture Credit : NASA Space Center

1.  Astronomy Today Chaisson & McMillan (1999)

2.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

3.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

4.  Lightnet :  Planet Orbiting Two Suns ?  (November 5, 1999)

5.  Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)

6.  UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)

7.  BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)

8  Los Angeles Times :  Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9.  Wikipedia :  Extrasolar planets (September 19, 2011)

10.  Space Daily :  Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)

11  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)

12.  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)

13.  Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Extrasolar_planet  (May 22, 2012)

14.  Space Daily :  Newfound Exoplanet may turn to dust By Jennifer Chu (MIT News)  (May 20, 2012)

15.   Wikipedia :  http://en.wikipedia.org/wiki/List_of_multiplanetary_systems (May 24, 2012)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  (May 26, 2012)
https://jayabarathan.wordpress.com/

2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

(NASA Trains Astronauts to Land on Asteroid before 2025)

(கட்டுரை -3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீன் ஒன்றை
விரட்டிச் சென்று
தூசியைப் பிடித்துக்
காசினிக்குக் கொண்டு வந்தார் !
வக்கிரக் கோள் மாதிரியை
வையத்தில் இறக்கிடும்
ஜப்பான் ‘கழுகு’ !
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டது
நாசாவின்
“புலர்ச்சி” விண்ணுளவி
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !
இரு விண்வெளி விமானிகள்
2025 ஆண்டுக்குள்
முரண்கோள் ஒன்றில்
தடம் வைப்பார்
தளவுளவி இறக்கி
உளவு செய்யப் பயிற்சி
அளிக்கிறது நாசா,
வையத்தைத் தாக்க வரும்
வக்கிரக் கோளைத்
திக்கு மாற்றித்
திசை திருப்ப !

+++++++++++++++++

 

 

தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி)  (Major Tim Peake,  ESA, European Space Agency)

முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன.   ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம்.   சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று  நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது.

போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க  முடியும்.

முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன்.   இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

ஒளிமந்தையில் (Galaxy)  வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

ஸ்டீஃபன் ஹாக்கிங்.

“(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது.  புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

“முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission)

 

 

“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு (Asteroid) அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

“பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”

ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (American Astro-physicist John Grunsfeld)

“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

சார்லஸ் போல்டன் (NASA Administrator)


“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.  அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்க நாசா விண்வெளி விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

பூமிக்கு அப்பால் போகும் முரண் கோள் ஒன்றில் நாசாவின் தளவுளவி தடம் வைக்கப் போகிறது.   1969 இல் சந்திர மண்டலத்துக்குப் பயணம் செய்து பல அமெரிக்க விண்வெளி விமானிகள் தடம் வைத்து ஆய்வு செய்து மீண்டார்கள்.   இது பெரிய விண்வெளித் தேடல் பயணம்.  2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகள் முரண் கோளில் முதமுதல் இறங்குவார் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்துள்ளார்.   நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிடும் முரண்கோள்  மணிக்கு 50,000 மைல் வேகத்தில் (மணிக்கு 80,000 கி.மீ.) பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் முரண்கோளில் ஒன்று.  அதன் தூரம் சுமார் 3 மில்லியன் மைல்.   விண்வெளி விமானிகள் பயணம் செய்து முரண்கோளில் தடம் வைத்து ஆராய்ந்து வர ஓராண்டு காலம் எடுக்கும்.   1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 240,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றும் நிலவில் கால் வைத்து மீள  எட்டு நாட்கள் எடுத்தன.    முரண்கோள் மனித மீள் பயணத்தின் விபரங்களை ஈசாவைச் சேர்ந்த மேஜர் டிமதி பீக், மே மாதம் 16, 2012 இல் அறிவிப்பு செய்தார்.     அந்தப் பயிற்சியில் டிமதி பீக், மற்றும் அவரது ஐந்து சகாக்களும்  முரண்கோளின் மெலிந்த ஈர்ப்பாற்றலில் அனுபவம் பெற அட்லாண்டிக் கடலடியில் 65 அடிக்குக் கீழ் 12 நாட்கள் உண்டு, உலவி, உறங்கி வரவேண்டும்.   அதற்கு அவர்கள் வசிக்க 43 அடி நீளம், 20 அடி அகல நெருக்கடிச் சிமிழ் (Capsule) ஒன்றில் பொழுதைக் கடக்க வேண்டும்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :-

1.  முரண்கோளின் தளவுளவியில் இறங்கித் தடம் வைத்து ஆய்வுகள் செய்யும் விண்வெளி விமானங்கள் இருவர்.

2.  முரண்கோள் மனித விண்கப்பல் பயணத்தில் பங்கு கொள்வோர் இருவரா அல்லது மூவரா என்பது இப்போது தெரிய வில்லை.

3.  முரண்கோளைச் சுற்றித் தளவுளவியைக் கண்காணிக்கும்  தாய்க் கப்பலை இயக்குபவர் விண்வெளி விமானி ஒருவர்.   தாய்க் கப்பலே தளவுளவியின் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். (இது மாறலாம்)

4.  புவியிலிருந்து சுயத் தாக்கு விண்கப்பலை அனுப்பி எப்படி முரண்கோளைத் திசை திருப்புவது என்பதே முக்கிய குறிப்பணியாக இருக்கும்.

5.  முரண்கோளின் தளவுளவுகள் ஆய்வு செய்வதின் முக்கிய குறிக்கோள்.    பாதை தவறிப் பூமிய நெருங்கித் தாக்கப் போகும் வாய்ப்பு  இருக்குமாயின் அதை எப்படித் திசை திருப்புவது என்பது அறியப்படும்.    அதாவது பூமியிலிருந்து நெருங்கும் முரண்கோள்களின் போக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.  பாதை தவறிப் பூமியை நெருங்கும் முரண்கோளின் வேகம், திசை, ஈர்ப்பாற்றல் கணிக்கப் படும்.    அதன் பின் மனிதரற்ற ஒரு சுயநகர்ச்சி விண்கப்பல் முரண்கோளை நோக்கி அனுப்பப்படும்.  முரண்கோளை  அது    குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் மோதி திசை திருப்பும்.

பூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா ?

முன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது.  பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார்.  ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் கருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது.  பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.

நீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது.  அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின.  செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது.  வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.

முரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.

2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.

விஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர்.  சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது.  விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1.  நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope).  இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன.  அத்தோடு சிக்கலான ஆர்கானிக் திடப் பொருட்களையும் (Complex Organic Solids) கண்டன.  அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டு களாகவும், நிலையற்றதாகவும் இருந்தன..  பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்

1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.

பூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம்.  நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை.  வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது.  முரண் கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.

2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்

பூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது !  அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம்.  செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”

3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.

பூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கின்றன.  ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.

4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.     

பரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது.  அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும்.  2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது.  நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே.  நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது !  ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது !  அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது !

5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார்.  அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார்.  அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி  

2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.  2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.

(தொடரும்)

************************
தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt  (July 19, 2011)
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News :  Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ?  (July 19, 2011)
25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)
26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)
27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)
28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html
(July 29, 2011)

29.  NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025  (May 16, 2012)

++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (May 18, 2012) (R-1)

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.

(கட்டுரை: 79)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கல்தோன்றி மண் வளமாகிப்
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
மீன்வளம் பெருக்கிய தெப்படி ?
மீனினம் மானுடம்
ஆனதெப்படி ?
வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீர் கொட்டிக் கிடந்தாலும்
குடிநீர் குவளை அளவு !
நீர்மயம் எப்புறம் இருப்பினும்
தூயநீர் அருந்த பூமியில்
ஓர் துளி நீரிலை !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
குவலயம் நரகம் !

++++++++++++

ஏபெக்ஸ் விண்ணோக்கி [APEX Space Telescope] மூலம் நிபுளாவின் முகிலில் [Rho Ophiuchi Nebula] மிகச் சிறிதளவு ஹைடிரஜன் பெராக்ஸைடு [H2O2]  முத்திரை இருப்பதைப் பார்த்து நாங்கள் மெய்யாக உணர்ச்சி வசப் பட்டோம்.   இந்த மூலக்கூறுடன்  மேலும் ஹைடிரஜன் சேரும் போது நீர் உண்டாகிறது.   விண்வெளிக் கோள்களில் நீர் சேர்ந்திட இது ஒருவகை  இயக்க முறையாகும்.

பெர் பெர்க்மன்  (வானியல் விஞ்ஞானி,  ஆன்ஸலா விண்வெளி நோக்கம், ஸ்வீடன்)

வால்மீன்களின் டியூடிரியம், ஹைடிரஜன் பின்னத்தையும் [Deuterium Hydrogen Ratio (D/H)] அடுத்து ஆர்கான் நீராவி விகிதத்தையும் [Argon Water Ratio (Ar/H2O)] விண்ணுளவி மூலம் அறிந்ததில் பூமியில் மோதிப் பொழிந்த நீர் வெள்ளம் 15% என்று கணக்கிடப் பட்டுள்ளது.  ஆதி காலத்தில் சூரிய வாயுக்கள் குளிர்ந்து உண்டான கரிக்கற்கள் (Carbonaceous Chondritic Material – Condensed from Solar Hot Gases) எரிந்து 10% நீர் வெள்ளம் பூமியில் சேர்ந்தது.

அமெரிக்கன் வானவியல் குழு (American Astronomical Society) (Nov 2001)

“3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்மயம் நிரம்பிய விண்கற்களும், வால்மீன்களும் பிள்ளைப் பிராயப் பூமியில் மோதி நீர் வளமாக்கின என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் !  அடர்த்தியாகப் போர்த்திய ஹைடிரஜன் வாயுப் படுகை எரிமலை ஆக்ஸைடுகளுடன் (Oxides from Earth’s Mantle) இணைந்து பேரளவு கடல் நீர் வெள்ளம் பூமியின் சுய உற்பத்தியில்தான் உண்டாகியிருக்க வேண்டும் !

ஸ்டீஃபன் அனிதெய் (Stefan Anitei -Japanese Science Editor)

“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது.  ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது.  ஏனெனில் உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற மூன்று முக்கிய மூலாதாரங்கள் அப்போதிருந்தன !  முதலாவது வெப்ப ஒளிச்சக்தி உடைய சூரியன் !  இரண்டா வது அடிப்படை இரசாயன மூலகங்கள், மூலக்கூறுகள், (ஹைடிரஜன், ஆக்ஸிஜென், நைடிரஜன், கார்பன் போன்றவை) வால்மீனிருந்து சிக்கலான ஆர்கானிக் கூட்டுகள் ! மூன்றாவது பூமியில் நீர்வளம் சேமிப்பு !  பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !”

மார்க் ஹாரிஸன் பேராசியர் பூதள இரசாயனம் (UCLA Geochemistry) (2001)

“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் !  தோற்ற காலத்திலிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க  வேண்டும் !  பூமியின் விந்தையான வாயு மண்டல அமைப்பும் புதிராக இருக்கிறது ! நிலைப்பு மாறாத “உத்தம வாயுக்கள்” எனப்படும் கிரிப்டான், ஸெனான் (Extremely Stable Noble Gases – Krypton & Xenon) ஆகியவற்றின் கலப்பு பின்னம் பூமியில் உள்ளதைப் போலவே சூரியனிலும் இருக்கிறது.  அதாவது பரிதி, பூமி இரண்டின் வாயு மண்டலக் கூட்டு மூலக்கூறுகள் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை.  நீர் வெள்ளமும், வாயு மண்டலமும் பூமிக்கோள் உண்டான போதே தோன்றி உயிரினம் உதிக்க ஏதுவான சூழ்வெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.”

நிகோலஸ் தௌஃபாஸ் (Nicolas Dauphas, University of Chicago, Illinois) 

விண்வெளி நிபுளா முகிலில் நீர் உண்டாக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு கண்டுபிடிப்பு

ஒளிமந்தைகள், விண்மீன்கள் உருவாக்கும் நிபுளா முகிலில் (Nebula Gas Cloud) 2011 ஆண்டில் விண்ணோக்கி மூலம் ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் தற்போது அறிந்துள் ளார்கள்.    கண்ட விண்வெளி அரங்கம்  “ரோ ஓஃபியூச்சி” (Rho Ophiuchi) விண்மீனுக்கு அருகில் 400 ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது.  அதனோடு ஹைடிரஜன் வாயு இணையும் போது நீர் உண்டாவதால், ஹைடிரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வானியியல், வேதியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளுக்கு மிகவும் தேவையான  ஒரு  மூலக்கூறு.   பேரளவு குளிரான (-250 டிகிரி செல்ஸியஸ்)   விண்வெளிப் பகுதியில் உள்ள நிபுளா முகிலில் மிகச் சிறிய அளவில் இருக்கும் ஹைடிரஜன் பெராக்ஸைடு இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   இந்த நிபுளா அரங்கில் உள்ள திரட்சியான அகில வாயு, (Cosmic Gas) தூசி ஆகியவை விண்மீன்கள் ஆக்கும் தகுதி பெற்றவை.  அப்படி உருவாகும் போது அத்துடன் நெருங்கித் தொடரும் ஆக்ஸிஜன், நீர் மூலக்கூறு உற்பத்திகள் உயிரினத் தோற்றத்துக்குக் மூல காரணிகளாக உருவாகுகின்றன.   இந்த இரசாயன மூலக்கூறைக் காட்டிய ஏபெக்ஸ் விண்ணோக்கி (APEX – AtacamaPathfinder Experiment Telescope) தென் அமெரிக்காவில் உள்ள சில்லி நாட்டில் 5000 மீடர் (16,000 அடி) உயரத்தில் இருக்கும் மலைப் பீடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

பூமியில்   70% பகுதியில் நிரம்பியுள்ள நீர் வெள்ளம்  விண்வெளி வாயுக் கோள்கள் மூலம் வந்திருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது.    இந்த நிபுளா முகில்களில் பொதுவாக இருப்பவை பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயுவும் மற்றும் சிற்றளவில் உதிரியாக மற்ற இரசாயன மூலங்கள் மட்டுமே.   இப்போது வானியல் குழுவினர்   ரோ ஓஃபியூச்சி முகிலிலிருந்து  ஹைடிரஜன் பெராக்சைடு ஒளிவீசி தன் முத்திரையை யிட்டுள்ளது.   விண் வெளியில் அகிலத் தூசித் தூள்களின் மேற்பகுதியில் ஹைடிரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து ஹைடிரஜன் பெராக்ஸைடு உருவாகி வருவதாகத் தெரிகிறது.   பிறகு அத்துடன் மிகுதியாக ஹைடிரஜன் வாயு  இணைந்து நீர் மூலக்கூறு உண்டாகுகிறது என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

நீர் வெள்ளம் பூமியில் தோன்றியது எப்போது ?

பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன !  சூரிய குடும்பம் தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன !  விஞ்ஞானிகள் பூமியிலே நீர் வெள்ளம் தோன்றி 4.3 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியான சான்றுகளுடன் இப்போது கூறுகிறார்கள் !  அந்த வியப்பான தகவலை 2001 ஜனவரி 11 காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தையும், ஆஸ்திரேலியா கர்டன் தொழிநுணுக்கப் பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானக் குழுவினர் “இயற்கை” இதழில் (Nature Journal) வெளியிட்டார் !  ஆனால் தற்போதைய ஆராய்ச்சி ஒன்று மாறாக 400 மில்லியன் ஆண்டுக்கு முன்புதான் நீர்வளம் பூமியில் உண்டானது என்று சொல்லி இருக்கிறது !

பூமி தோன்றிய 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் சூழ்வெளி வாயு மண்டமும், நீர் வெள்ளக் கடலும், நிலையான பூதளத் தட்டும் [(Crust) பூமிக்குக் கீழ் 10 கி.மீ. (6 மைல்) ஆழத்தட்டு] ஆகிய முன்றும் உண்டாகி விட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  4.3 பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூகோளத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உகந்த மூலாதார வசதிகள் உதித்து விட்டன என்று விண்ணுயிரியல் (Astro-Biology) வளர்ச்சிக்கு நாசா நிதிக்கொடை அளிக்கும் கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மோஜிஸிஸ் (Mojzsis) கூறுகிறார் !

மேற்கூறிய மூன்று பூகோள வசதிகளில் நீர்வளத்தை நீண்ட காலம் நிலையாக வைத்திருப்பதே மிகக் கடினமானது என்று பல பூதள இரசாயனவாதிகள் (Geo-Chemists) கருதுகிறார்கள் ! பூமியில் நீர்வளம் உண்டான சமயத்தில் வெள்ளி, செவ்வாய்க் கோள்களிலும் வேறு சில துணைக் கோள்களிலும் தோன்றி உயிரின வளர்ச்சிக்குத் தூண்டி யிருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்கள்.

பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படித் தோன்றியது ?  

சூரிய குடும்பத்தில் மட்டும் ஒன்பது கோள்களும், பனிரெண்டு துணைக் கோள்களும் ஆராய்ச்சிக்கு உதவிட உள்ளன. அவற்றில் பூமி ஒன்றில் மட்டுமே உயிரின விருத்திக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டாகி நிலை பெற்று விட்டன.  ஒருசில கோள்களிலும், மற்றும் சில துணைக் கோள்களிலும் ஒரு யுகத்தில் நீர்வளம் இருந்ததற்குச் சான்றுகள் காணப் படுகின்றன.  ஆனாலும் பூமி மட்டும்தான் பேரளவு நீர் வெள்ளத்தை பல மில்லியன் ஆண்டுகளாய் நிலையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.  வியாழக் கோளின் துணைக் கோளான ஈரோப்பாவில் (Jupiter’s Satellite Europa) நீர்க்கடல் இருந்ததாக சமீபத்தில் விண்ணுளவி ஆராய்ந்து தகவல் அனுப்பியுள்ளது.  அதனால் அங்கும் உயிரின வாழ்வுக்குத் தகுதி இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது !

பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது, நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா !  பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.  பூமியில் நீர் எப்படி உண்டானது ?  ஆரம்ப காலத்தில் பூமியில் ஏற்பட்ட பல எரிமலை வெடிப்புகளில் பேரளவு நீராவி வெளியேறி நீராய்க் குளிர்ந்து சேமிப்பானதா ?  ஹைடிரஜன் ஆக்ஸிஜென் ஆகிய இரண்டு முக்கிய வாயுக்கள் சேர்ந்து இரசாயன முறையில் பல மில்லியன் ஆண்டுகளாய் உற்பத்தியானதா ?  அல்லது ஆயில் எஞ்சின் பிஸ்டன்களில் எரிவாயு அழுத்தமாகி எரிந்து புறப்போக்கு குழலில் வெளியாகும் நீர் அல்லது நீராவி போல் உற்பத்தியானதா ?  அல்லது சூரிய வெப்ப மின்னொளி அல்லது பூகாந்த மின்சாரத்தால் வாயுக்கள் இணைந்து நீர் வெள்ளம் உண்டானதா ?  பூதகரமான நீர்க்கடல் பூமியில் தோன்றியதற்குச் பல விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள் !

வால்மீன்கள் மோதிப் பூமியில் நீர் வெள்ளப் பொழிவு !  

ஏறக்குறைய சூரிய குடும்பத்தின் எல்லாக் கோள்களும் சம காலத்தில்தான் தோன்றின என்று கருதப்படுகிறது  புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களைப் போல பூமியும் பாறைகள் கொண்ட அண்டமாக வடிவானது.  அக்கோள்கள் “பளுச் சேமிப்பு” இயக்கத்தில் (Accretion Process – அண்டையிலுள்ள பிண்டத்தை ஈர்ப்பாற்றலில் இழுத்து ஒருகோள் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பளு நிறையும் ஈர்ப்பும் மிகையாக்கிக் கொள்வது) சூடாகிச் சிறிதளவு நீருடன் கலந்து தூசி, துணுக்குகளைத் திரட்டிக் கொண்டு பெருக்கின்றன.  எரிமலை வெடிப்புகள் நேர்ந்த போது அந்த நீர் வெள்ளம் ஆவியாகி வெளியாகி இருக்க வேண்டும்.  அந்த நீரும் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு முறையால் (Photo-Dissociation By Sun’s Ultra-Violet Light) பிறகு ஆக்ஸிஜனாகவும், ஹைடிரஜனாகவும் பிரிவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

சூரிய மண்டலக் கோள்களில் தோன்றியுள்ள நீர்ப் பகுதிகள் எல்லாம் கோள்களின் வெளிப்புற மேற்தளங்களில் மேவியுள்ள துருவப் பனிப்பாறைகள் முலமாக அறிப்படுகின்றன.  துருவப் பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க்  கோள், பூமி இரண்டும் அதற்குச் சான்றுகள்.  விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் திரியும் வால்மீன்கள் ஏராளமான நீர் வெள்ளத்தைப் பனிப்பாறை வடிவத்தில் கொண்டிருப்பது அறியப் பட்டுள்ளது.  வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுப் பாதை நீண்ட நீள்வட்டம் என்பதும் அறியப் படுகிறது.  அவ்விதம் அவை நீண்ட பாதையில் வரும் போது பூமி போன்ற அகக் கோள்களின் அருகில் வர வாய்ப்புள்ளது.  நீள்வட்டப் பாதைகளில் செல்லும் வால்மீன்கள் சில சமயங்களில் பூமி நகர்ச்சியுடன் மோதி விடுகின்றன.  வால்மீனின் மேற்புறம் ஒட்டி இருப்பவை தூசி, துணுக்குகளின் பனித்திரட்சிகள்.

நமக்குத் தெரிந்த மூன்று வால்மீன்களான : ஹாலி, ஹயாகுடேக், ஹாலி-பாப் (Comets : Halley, Hyakutake & Hale-Bopp) மூன்றிலும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது.  கடல் நீரில் காணப்படும் டியூடிரியம் போல் (Deuterium – கன ஹைடிரஜன்) இரு மடங்கு அளவு அம்மூன்று வால்மீன்களில் உள்ளன !  அதாவது நீரில் பேரளவு சாதா ஹைடிரஜனும் சிறிதளவு அதன் ஏகமூலமான கன ஹைடிரஜனும் (6500 : 1) ஒப்பமைப்பில் கலந்துள்ளது.  (Heavy Hydrogen called Deuterium is an Isotope of Light Hydrogen) சாதா ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் உள்ளது.  டியூடிரியம் அல்லது கன ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்துள்ளது.  அந்த மூன்று வால்மீன்களின் நீர் வெள்ளம் பூமியில் சேரவில்லை என்று கருதும் விஞ்ஞானி களும் உள்ளார்கள் !  கன ஹைடிரஜன் (6500 : 1) கலந்துள்ள நீர் வெள்ளம் கொண்ட வேறு வால்மீன்கள் பூமியில் விழுந்து நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உள்ளார்கள் !  முரணாக அதிக சதவீத டியூடிரிய நீர் வெள்ளம் கொண்ட வால்மீன்கள் பூமிமீது நீரைப் பொழிந்திருந்தாலும் ஏற்புடையதே !  ஏனெனில் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு (ultra-Violet Photo-Dissociation ) மூலம் கன ஹைடிரஜன் பின்னால் இழப்பாகிப் பூமியில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.  கடல் நீரின் சராசரி டியூடிரியம் கொள்ளளவு அடிப்படையில் கருதினால் பூமியின் நீரளவில் (15% – 30%) பங்கு வால்மீன்கள் மோதி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

விண்கற்கள் விழுந்து பூமியில் நீர் வெள்ள நிரப்பு !

வால்மீன்களைப் போன்று சில எறிகற்களும், விண்கற்களும் (Meteorites & Asteroids) விண்வெளியில் “நீர் தாங்கியாக” (Water Bearer) கருதப்படுபவை !  அவையும் பூமி உண்டான ஆரம்ப காலத்தில் பூமிமேல் ஏராளமாக விழுந்துள்ளன.  அவற்றில் பனிப்பாறைகளாய்த் தொத்திக் கொண்டிருக்கும் பகுதியில் 20% நீர் வெள்ளம் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது.  விண்கற்கள் பரிதிக்கு அப்பால் எத்தனை மைல் தூரத்தில் உள்ளனவோ அதைப் பொருத்தது அவற்றின் நீர் கொள்ளளவு.  அவற்றின் நீர்க் கொள்ளளவை உறுதியாக அறிவது சிரமமானதால், விண்கற்கள் பூமியில் கொட்டிய நீரளவை ஊகிப்பது இயலாது !  பிரபஞ்சத்தில் தீர்வு செய்ய முடியாத பல புதிர்கள் இருப்பது போல் பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படிப் பெருகியது என்பதற்கும் உறுதியான விளக்கத்தை விஞ்ஞானிகள் சொல்ல முடியவில்லை !

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? April 2008
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world 1998
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 Nature of Comets Reconsidered By: Dr. Alan Stern, Southwest Research Institute (Aug 8, 2003)
16. Liquid Water at Earth’s Surface 4.3 Billion Years Ago, Scientists Discover (Jan 2001)
17. Origin of Water on Earth (www.thelivingcosmos.co/TheoriginofLifeonEarth/OriginofWateronEarth)
18 A Dying Comet’s Kin may have nourished Life on Earth (www.gsfc.nasa.gov/gsfc/spacesci/origins/linearwater/linearwater.htm)
19 Oceans – Made in Earth Not a Product of Asteroids – A New Theory concerning the Water’s Origin on Earth.
20 American Astronomical Society – What is the Earth made of ? (http//:adsabs.harward.edu/abs/)
21 Earth’s Early Years – Differentiation, Water & Early Atmosphere
22 Earlier Water on Earth ? Oldest Rock Suggests Hospitable Young Planet Science Daily (www.sciencedaily.com/releases/) (Jan 15, 2001)
23 New Scientist Magazine – Water Came to Earth http://www.newscientist.com/ (October 11, 2003)
24  http://en.wikipedia.org/wiki/Atacama_Pathfinder_Experiment  (APEX Telescope)  (April 16, 2012)
25.  http://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth  (May 2, 2012)
26.  Daily Galaxy -Rho Ophiuchi Nebula – A Source of Earth’s Original Water ?   (May 10, 2012)

******************

jayabarat@tnt21.com [April 12, 2012]  [Revised R-1]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை

(கட்டுரை: 78)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கண்ணுக்குத் தெரியாத
கருந்துளை
கதிர்க் கருவிக்குப் புலப்படும் !
காலவெளிக் கருங்கடலில்
பாலம் கட்டுபவை
கோலம் வரையா தவை
கருந்துளைகள் !
கதிர்கள் வீசுபவை
பிரபஞ்சக்
கலைச் சிற்பியின்
களிமண் களஞ்சியம் !
கருந்துளைக் குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒரு புதிய பிரபஞ்சம் !
ஒளி உறிஞ்சும் உடும்புகள் !
விண்மீன் விழுங்கிகள் !
காலாக்ஸி நெய்யலாம் !
பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும்
ஒரு பூதக் கருந்துளை !
கருந்துளைக் காளான்கள் வளரும்
ஒரு பிரபஞ்சத்தில் !
முறியும் விண்மீன் நெருங்கினால்
உறிஞ்சும் கருந்துளை !  அதன்
கருப்பையில்  சிசுப் போல்
உருவாகும்
ஒரு புது விண்மீன் !
பிறப்பும், இறப்பும்
ஆழிபோல் சுழலும் மனிதர்க்கு !
விண்மீன் களுக்கும்
அதே ஊழ்விதி !

கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.

சுவி. கெஸாரி  (Suvi. Gezari)  (Astronomer The Johns Hopkins University)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் !  ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பங்குப் பிண்டமாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒளிவீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது.  அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது.

விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)


விண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்

முடங்கிய ஒளிமீன்களை உறிஞ்சும் கருந்துளைத் திமிங்கலங்கள்

நாசா வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் பூதக் கருந்துளை ஒன்று ஒளியிழந்து நெருங்கித் திரிந்த விண்மீன் ஒன்றைக் கிழித்து உறிஞ்சும் ஒரு நேரடிச் சான்றைத் தொலைநோக்கி மூலம் கண்டு படம் எடுத்துள்ளார்கள்.     முடங்கித் திரியும் ஒளிமீன்கள் நெருங்கும் போது கருந்துளை அவற்றைக் கவ்வி விழுங்கும் என்று விஞ்ஞானிகள் இதற்கு முன்பு அறிந்திருந்தாலும், இதுவரை யாரும் நேராக அந்த கோர நிகழ்ச்சியை விண்ணோக்கியில் கண்டதில்லை.   குறிப்பிட்ட இந்த மீன்விழுங்கி பூதக் கருந்துளை நமது பரிதியைப் போல் பல மில்லியன் மடங்கு நிறையுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் தயாரித்த போலிக் கணனிப் படத்தில் (Computer-simulated Image) கிழிந்த  ஒரு  விண்மீனின் வாயுவை உறிஞ்சும் கருந்துளை ஒன்றைக் காணலாம்.    விண்மீனின் ஒரு பகுதி வாயு பரந்த விண்வெளியில் விரைவான வேகத்தில் வீசி எறியப் படுகிறது.    போலிப் படம் தயாரித்த விஞ்ஞானிகள் இருவர் :  ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுவி. கெஸாரி  (Suvi. Gezari) &  கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெ. குயிலோச்சன் (J. Guillochon).

வானியல் விஞ்ஞானிகள் இதற்கு முன்பாகப் பல விண்மீன் விழுங்குதலைக் குறிப்பாகக் கண்டுள்ளார் ஆயினும் தற்போதுதான் நேரடியாக அந்தக் கோர நிகழ்ச்சியை பூதள, விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் கண்டு பலியான விண்மீனைக் கையும், களவுமாகப் பிடித்துள்ளார்.    விழுங்கப்படும் அந்த விண்மீன் ஹீலிய வாயு செழிப்பாக உள்ள ஒரு மரண ஒளிமீன் (Dying Star).     முறியும் அந்த விண்மீன் வசிக்கும் காலகஸி ஒளிமந்தை 2.7 பில்லியன் ஒளியாண்டு (Light Years) தூரத்துக்கு அப்பால் உள்ளது.   இந்த புதிய அறிவிப்பு “இயற்கை”  விஞ்ஞான வெளியீட்டில் (Journal Nature) மே 3, 2012 இல் வந்துள்ளது.

 

கருந்துளையின் ஈர்ப்பு விசையால் மரண விண்மீன் முறியும் போது, அதன் சில பகுதி வாயுப் பரிமாணம்  கருந்துளைக்குள் விழுவதும்,  மீச்சப் பகுதி விரைவான வேகத்தில் வெளியேற்றம் ஆவதும் ஒருங்கே   நிகழ்கிறது.   விண்மீனின் பகுதி கருந்துளையில் விழுங்கப் படும் போது ஒருவித ஒளிமயம் எழுந்து நீண்ட காலமாய்த் தெரிகிறது.    வீசி எறியப்படும் வாயுவில் பெரும்பான்மையாக ஹீலியம் இருப்பதை நாங்கள் உறுதியாக அறிகிறோம்.   அதாவது   ஒரு தீச்செயல் காட்சியின் பலிமீனை (Victim in Crime Scene) நேரடிச் சான்றாக அறியும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது.   பலியான விண்மீனில் சிறிதளவு ஹைடிரஜனும், பெரிதளவு ஹீலியமும் இருப்பது, விண்மீன் எரிசக்தி இழந்து மரித்திடும்  நிலையைக் காட்டுகிறது.”, என்று சுவி. கெஸாரி  கூறுகிறார்.    விழுங்கப் படும் விண்மீன் எரிவாயு ஹைடிரஜன் காலியாகி மரணம் அடையும் தருவாயில் உள்ள தென்பது தெரிய வருகிறது.   முழு எரிவாயு தீர்ந்ததும் விண்மீன் உப்பி விரிந்து ஒரு பலூனாக ஊதி அது ஒரு “பூதச் செம்மீன்” (Red Giant) ஆகிப் போகும்.

 

விண்மீன் விழுங்கும் கருந்துளைக் காட்சி எதனால், எப்படிப் பதிவானது ?

முடங்கிய விண்மீன்கள்  பல நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் யூகிப்பதாய் சுவிக் கெஸாரி குறிப்பிடுகிறார்.   அத்தகைய நெருக்கமான நிகழ்ச்சிகள் 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக நேர்பவை என்று கணிக்கப் படுகிறது.

கருந்துளை விண்மீனை விழுங்கும் இந்த அரிய காட்சியைக் காண ஆயிரக்கணக்கான காலாக்ஸிகளை காலெக்ஸ் விண்ணுளைவி (Galex Space Probe) மூலமாகவும், ஹவாயியிலுள்ள பான்-ஸ்டார் தொலை நோக்கி மூலமாகவும் (Pan-STARRS Telescope, Located in Hawaii) சோதித்ததாக சுவிக் கெஸாரி கூறுகிறார்.

 

2010  ஜுன் மாதத்தில்  அந்த அரிய விண்வெளி நிகழ்ச்சியை இரண்டு சாதனங்கள் மூலமாகவும் நோக்கி விஞ்ஞானிகள் படம் பிடித்தார்.    ஒரு மாதம் கடந்து ஒளிமயம் பெருத்துப் பிறகு அடுத்த 12 மாதங்களில் ஒளிமயம் மங்க ஆரம்பித்தது.   ஒளிமய ஏற்ற இறக்கத்தைக் கணித்து கருந்துளையின் நிறையைச் சுமார் 3 மில்லியன் பரிதி நிறை என்று அறிந்தனர்.    அந்த நிறையே நமது பால்வீதி ஒளிமந்தையின் மையத்தில் இருக்கும் கருந்துளையின் நிறையை ஒத்தது என்பது தெரிகிறது.

பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?

அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ?  காலாக்ஸிகளா ?  விண்மீன்களா ?  அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

1950 ஆண்டுகளில் கலிஃபோர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.  நமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் ! 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் !  சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன !

பிரபஞ்சக் கருந்துளைகள் என்பவை எவை ?

1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறை யுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

ஒளிமந்தைக் (காலாக்ஸி) கொத்துகள் எப்படித் தோன்றின ?

பிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) !  அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் !  குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன !

ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.  சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் !  சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.

ஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை.  அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும்.  அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).  குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை .!  குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps).  நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸியானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.

(தொடரும்)

*********************

தகவல் :

Picture Credit : 1. Astronomy (August 21, 2007) & (January 2010) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004) & Hubble Site Net Center 6.  NASA

1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]

10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)

11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
[www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)

12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)

13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)

14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

15. The Hyperspace By: Michio Kaku (1994)

16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html

17. The New York Public Library S (cience Desk Reference (1995)

18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)

19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)

20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)

21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html  (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)

22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html  [பிரபஞ்ச விரிவை நோக்கிய வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)]

23 Globular Clusters Tell Tale of Star Formation in Nearby Galaxy Metropolis [August 5, 2008]

24 Wikipedia – Galaxy Clusters (November 7, 2009)

25  https://jayabarathan.wordpress.com/2009/09/03/katturai63/   (பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !)  (September 3, 2009)
26 Astronomy Magazine -Galaxy Superclusters -What They Reveal about Cosmic Expansion By :Bruce Dorminey (January 2010)

27  Daily Galaxy :  Supermassive Black ?Hole Devouring A Star (May 2, 2012)

28   Stellar Chemistry :   Black Hole caught Red-handed in Stellar Homicide (May 4, 2012)

29 Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Pan-STARRS  (Pan-SRARRS Telescope)  April 6, 2012

30.  Wikipedia –  http://en.wikipedia.org/wiki/Red_giant  (Red Giant)  May 5, 2012

******************

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  May 5, 2012

https://jayabarathan.wordpress.com/

அக்கினி புத்திரி

அக்கினி புத்திரி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.”

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & Development Organization)

“அக்கினி புத்திரி” என்றும், “ஏவுகணை மாது” (Missile Woman) என்றும் பாராட்டப் படும் பொறியியல் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஓர் அபூர்வ ராக்கெட் விஞ்ஞானி.  நோபெல் பரிசு பெற்று இந்தியாவில் பணி செய்த அன்னை தெரேஸாவின் பெயரே இவருக்கு இடப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில்,  “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது.  இவரது குருநாதரான இந்தியாவுக்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் எஞ்சினியர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

1988 ஆண்டு முதல் இந்திய இராணுவ ஆராய்ச்சி விருத்தித் துறையகத்தில் (India’s Defence Research & Development Organization DRDO) வேலை செய்து வருகிறார்.  முதல் அக்கினி (Agni -1) ஏவு கணை 1989 இல் அனுப்பப் பட்டுச் சோதனை செய்யப் பட்டது.  இந்திய இராணுவத்துக்காக டிசைன் செய்து வடிவமைத்து, சோதித்த பெரும்பான்மையான அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணைகள் அனைத்திலும் அவர் பங்கெடுத்தவர்.  சமீபத்தில் (ஏப்ரல் 19, 2012) வெற்றிகரமாக விண்ணில் ஏவி 3500 கி.மீ. பயணம் செய்த அக்கினி -5 ராக்கெட்டும் அவரது ஆளுமையில் நடந்தேறியது என்பது குறிப்பிடத் தக்கது.  தற்போது (2012) டெஸ்ஸி தாமஸ் பல்வேறு போராயுத வெடிகள் தூக்கிச் செல்லும் தனித்துவக் கட்டளை ஏவுகணை மீட்சி வாகனம் (Misson Guidance Systems for Mulitiple Independent Re-entry vehicle that carries multiple warheads) சம்பத்தப் பட்ட ஒரு புதிய ஆய்வு அமைப்புத் துறையில் மூழ்கியுள்ளார்.

ஆடவ நிபுணர் பலர் ஆளுமை செய்யும் ராக்கெட் விஞ்ஞானத்தில் இப்படி அபூர்வப் பிறவியாய் எழுந்துள்ள பெண் எஞ்சினியர் டெஸ்ஸி தாமஸ் தனித்துவத் திறமையுடன் தனியாய் ஆடவர் மத்தியில் முன்னிற்கிறார். “விஞ்ஞானத் தொழிற்துறைகளில் எந்தவிதப் பாலினப் பாகுபாடும் (Gender Discrimination) கிடையாது.  உன் திறமை கூரியதானால், ஆணோ, பெண்ணோ நீ தானாக முன்னுக்கு வருவாய் என்று உறுதியாகக் கூறுகிறார்.  தான் பணி புரியும் இடங்களில் எந்த விதப் பாலினப் பாகுபாட்டையும் எதிர்க்க வேண்டி இருந்த தில்லை என்று பொறுமையாகச் சொல்கிறார்.

2012 இல் 49 வயதாகும் டெஸ்ஸி தாமஸ் ரோமன் காத்லிக் மதத்தினரான பெற்றோருக்குத் தென் கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பிறந்தார்.  தந்தையார் ஒரு சிறு தொழில் நடத்திய வாணிபர். தாயார் கல்வி புகட்டும் தகுதி இருந்தும் வேலை செய்யாது வீட்டைப் பேணியவர். தந்தையார் கணித ஞானம் உள்ளவர். 1991 இல் தந்தை முடக்குவாத மூளை அடிப்பில் (Paralytic Stroke) மரித்தார்.  75 வயதாகும் தாயார் குஞ்சம்மாள் தாமஸ் ஆலப்புழையில் வசித்து வருகிறார்.  அவர்கள் வாழ்ந்து வந்த இடம் தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் இருந்தது.  அங்கிருந்து இடி முழக்கி விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளே அவரது சிந்தனையை ராக்கெட் விஞ்ஞானத்தில் முற்படத் தூண்டியதாகச் சொல்கிறார்.  பள்ளிக்கூடக் கல்லூரிப் படிப்புகளைக் கேரளாவில் முடித்து விட்டு தனது 20 வயதிலே பிறந்த மாநிலத்தை விட்டுவிட்டுக் கட்டளை ஏவு கணைகளில் மேல்நிலைப் பட்டப் படிப்புக்கு பூனாவுக்குச் சென்றார்.  அங்கே ராக்கெட் பொறியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.  தனது எதிர்காலக் கணவர் சரோஜ் படேலை அங்குதான் அவர் சந்தித்தார். இந்தியக் கடற்படையில் கம்மோடராக (Commodore in the Indian Navy) சரோஜ் படேல் மும்பையில் வேலை செய்து வருகிறார்.

பேரழிவுப் போராயுதம் ஏந்திச் செல்லும் அக்கினி -5 ராக்கெட் திட்டத்தில் எப்படி நீங்கள் வேலை செய்கிறீர் என்று கேட்டால், “நான் சமாதானம் உண்டாக்கும் ஓர் போராயுதப் பணியில்தான் பங்கெடுக்கிறேன்,” என்று பதில் சொல்கிறார். “அந்த வேலையில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன.  நான் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே மாறி மாறித் தாவிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார்.  “சில சமயங்களில் தேசீயப் பொறுப்பு ஏவுகணைச் சிரம வேலைக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையே முறிந்து போய் நசுங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று மனம் பொருமுகிறார். அதற்குக் கடற்படை வேலையில் பயணம் செய்யும் கணவரின் ஒத்துழைப்பும், வெல்லூரில் பொறியியல் துறையில் படிக்கும் மகன் தேஜஸ் (Tejas) இணக்கமும், ஏற்புடமையும் மிகவும் உதவியாக இருப்பதாகச் சொல்லிப் பெருமைப் படுகிறார்.  “தேஜஸ்” என்பது இந்தியா சுய முயற்சியில் உற்பத்தி செய்த போர் விமானத்தின் பெயர்.

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்தலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் அவரைப் பற்றி இப்படி அறிவித்துப் பாராட்டியது.  அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200 மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்.  பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர்.  அதே சமயம் 2011 ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப் பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

+++++++++++++++

தகவல் :

1.  https://jayabarathan.wordpress.com/2012/04/21/akkini-5-rocket/

2.  No Gender Bias in Science Says Missile Scientist Tessy Thomas By Mohammsd Shafeeq (April 23, 2012)

3.  The Rocket Science : The Missile Woman Behind Indian Test Launch (April 24, 2012)

4.  BBC News : The Missile woman Behind India’s New ICBM By Pallava Bagla (April 20, 2012)

+++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 28, 2012
https://jayabarathan.wordpress.com/

இந்தியா வெற்றிகரமாக ஏவிய அகில கண்ட நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணை

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அக்கினி -5 தாக்கு கணையை வெற்றிகரமாக ஏவி நாங்கள் ஒரு வரலாற்று மைல் கல் நட்டதாக நான் அறிவிக்கிறேன்.  அதனால் நமது தேசம் தாக்கு கணைப் பொறி நுணுக்கத்தை கற்றுக் கொண்ட பெருமை அடைகிறது.    இப்போது இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணை ஏவும் வல்லமை  பெற்றுள்ளது.    அது அடைந்த உச்ச உயரம் 600 கி.மீ. (480 மைல்).  அதன் முக்கட்ட ராக்கெட்டுகள் திட்டமிட்டபடி இயங்கி குறிப்பிட்ட பளுவைத் தூக்கின.    இன்று முதல் இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணைகள் விருத்தி செய்து தயாரிக்கும் தகுதி உடைய ஆறு உலக நாடுகளில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது.

விஜய்  ஸரஸ்வத் (V.K. Saraswat, Head of India’s Defence Research & Development Organization DRDO)

வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம் !
அசுர வல்லமை ஊக்கம் !
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுத் திறம் படைக்க
புறப்படும் எமது கனவுகள் !

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது.  படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

பாரதம் ஏவிய நீட்சி எல்லை அகில கண்டத் தாக்கு கணை  (அக்கினி – 5)

2012 ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியா ஒரிசாக் கடற் பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து  (Wheeler Island) புதிய நீட்சி எல்லை அகில கண்டத் தாக்கு கணை (Long-Range Intercontinental Ballistic Missile) ஒன்றை அனுப்பி வெற்றி கரமாகச் சோதனை செய்து  ஒரு புதிய மைல் கல்லை அண்டவெளிப் பயணத்தில் நிலைநாட்டியது.     அந்த தாக்கு கணை ஒரு டன் (1000 கி.கி.) பல்வேறு தரமுடைய அணு ஆயுதப் பளுவைச் சைனாவின் எந்தப் பகுதிக்கும்  தூக்கிச் செல்ல  வல்லமை உடையது.    அதன் பயண நீட்சி எல்லை  5500 கி.மீ.  (3400 மைல்).    உச்ச எல்லை : 8000 கி.மீ (4800 மைல்).   அடையும் உச்ச உயரத்தின் அளவு 800 கி.மீ. (480 மைல்)…  வேகம் : 24 மாக் (Mach Number : Ratio of Speed to Velocity of Sound)  (Supersonic =  ஒலிக்கு மிஞ்சிய வேகம் > 1 மாக்).   ராக்கெட்டின் மொத்த எடை : 50 டன்.   உயரம் :  17 மீடர் (56 அடி).  விட்டம் : 2 மீடர் (6.5 அடி).   மூன்று கட்ட  முவடுக்குக் கணைத் தொகுப்பு.   அந்த  ராக்கெட் திட்டத்தில் பணி செய்தவர் எண்ணிக்கை: 800 பேர்.    ராக்கெட்டுக்குப் பயன்படுவது  திடவ எரிசக்தி (Solid Fuel).   அக்கினி -5 தாக்கு கணைத் திட்டம் 1983 இல் துவங்கியது.    குறுகிய எல்லைத் திறமுடைய அக்கினி -1 அக்கினி – 2  ஏவு கணைகள் பாகிஸ்தானின் நகரங்களைக் குறியாக வைத்து தயாரிக்கப் பட்டவை.

தற்போது இந்த அசுர சாதனைத் தாக்கு கணைகளை வைத்திருப்பவை :  ஐந்து நாடுகள் பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சைனா மற்றும் அமெரிக்கா.    இந்தியா இந்த சோதனையை வெற்றி கரமாக நிகழ்த்தி ஆறாவது வல்லமை படைத்த நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது.    இந்த அக்கினி -5 திட்டத்திற்கு நிதிச் செலவு : 2.5 கோடி ரூபாய் (470 மில்லியன் டாலர்).   இந்தியா இந்த அசுர தாக்கு கணையை நேராக ஏவி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது.   மாறாக நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு காப்புக் கணையாகப் பயன்படுத்தப் படும்.    இந்தப் புது அசுர ராக்கெட் இன்னும் சில முறைச் சோதிக்கப் பட்டு 2014 -2015 ஆண்டுகளில்தான் இராணுவம்  பயன்படுத்தும் முழுத் தகுதி அடையும்.

டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் ராக்கெட் திட்டங்கள்

1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, ஒருங்கமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய ராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.  அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின.  அந்த ஐம்பெரும் ஏவுகணைத் திட்டங்களின் பெயர்கள் என்ன ?

1. நாக ஏவுகணை – ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை (NAG – An Anti-Tank Guided Missile)

2. பிருத்வி ஏவுகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளத் தாக்கு ஏவுகணை – (Prithvi – A Surface-to-Surface Battle Field Missile)

3. ஆகாய ஏவுகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile)

4. திரிசூல் ஏவுகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை (Trishul – A Quick Reaction Surface-to-Air Missile with a Shorter Range)

5.  அக்கினி ஏவுகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest)

துணைக்கோள் ஏவும் ராக்கெட் திட்டத்தில் (SLV-3) கூட்டுப் பணிசெய்து டாக்டர் அப்துல் கலாம் பெற்ற அனுபவம் தனித்துறை-பொதுத்துறை தொழில் நிறுவாகங்களை இணைத்து ஏவுகணைச் சாதனங்கள் செய்யப் பாதை வகுத்தது.  அச்சமயத்தில் திட்ட நிர்வாகத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்ற நிதிப் பொறுப்பு, நிர்வாக ஆணைப் பணிகளின் பொறுப்புகளைக் கீழிருந்த மேலதிகாரிகளிடம் விட்டுவிட்டு முக்கிய வினைகளை மட்டும் தான் மேற்கொண்டார்.

பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு

உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது.  ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப்படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை.  நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை

அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின.  இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது.  1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார்.  அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது.  பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல்வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர்.  மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!  இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.

ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்

அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.  முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

இதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!

செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன.  சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.  அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது.  2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக் கோள் முதன் முதல்  “பூகோளச் சுற்றிணைவு மாற்றுச் சுழல்வீதியில்”  [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப் பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்!  மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

+++++++++++++++++++

(தொடரும்)

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program : Wikipedia WebSite
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]
13 NUKEWARS :  With Eye on China, India Tests new Long-range Missile (Akkini-5)  April 19, 2012
14. China Downplays Indian Missile Launch  (April 19, 2012)
15. India Tests Nuclear-Capable Missile That Can Reach China  (April 20, 2012)
16 http://en.wikipedia.org/wiki/Agni-V (April 20, 2012)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 21, 2012

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !

(கட்டுரை: 76)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி
துருவங்களில்
நர்த்தனம் செய்யும்
வண்ணத் தோரணங்கள்
காணும் ! முன்பு
சனிக் கோளின்
வட துருவத்தில்
தனித்துச் சுற்று கின்ற
ஆறுகரச் சட்ட
அலை வடிவம் கண்டது !
அது வாயு முகில் கோலமா ?
பூதக்கோள் வியாழனில்
செந்திலகம் போலொரு
விந்தை முகில்
குந்தி உள்ளது
பல்லாண்டு காலமாய் !
நாசாவின் விண்ணோக்கி
பரிதி மண்ட லத்திலே
உருவில் பெரிதான
ஒளி வளையம் கண்டது
சனிக் கோளில் !
பூமித் துருவங் களில் காணும்
ஒளித் தோரணம் போல்
இப்போது
சனிக் கோளின்
இரு துருவங் களையும்
ஒளி வண்ண
ஓவியம் அலங்க ரிக்கும் !

++++++++++

ஒளித் தோரண நீள்வட்ட நகர்ச்சியைச் (Auroral Oval Movement) சனிக்கோள் சுழற்சியுடன் சேர்த்துக் காணும்போது அதே சமயத்து நகர்ச்சியாய் மின்சார ஓட்டத்தைச் சூழ்வெளியுடன் காந்தக் கோளம் (Magnetosphere) இணைத்துக் கொண்ட தொடர்புகளையும் நாங்கள் கண்டோம்.  முடிவாக, இவ்வகை நோக்குகள சனிகோளின் காந்தக் கோளச் சிக்கல்களையும் அதன் குழப்பமான சுழற்சிக் காலத்தையும் (Rotation period) எங்கள் அறிவுக்கு எட்டும் படிக்கு அருகில் எம்மைக் கொண்டு வருகின்றன.

டாக்டர் எம்மா பியூன்ஸ் (Dr. Emma Bunce, Team Leader, University of Leicester, England)

“இது ஓர் நூதன நிகழ்ச்சி !  துல்லிய வடிவ அமைப்பில் ஏறக்குறைய சமமான ஆறு நேர்கோட்டுப் பக்கங்கள் கொண்ட அமைப்பகம் இது !  வேறெந்தக் கோளிலும் இது போல் நாங்கள் கண்ட தில்லை. வட்ட வடிவில் அலைகளும், வெப்பச் சுழற்சி முகில்களும் தலை தூக்கிச் சனிக் கோளின் அடர்ந்த வாயுச் சூழ் மண்டலம் வட துருவத்தில் ஆறுகர வடிவத்தை உண்டாக்கி இருப்பதை எவரும் எதிர்பார்க்க முடியாது.”

கெவன் பெயின்ஸ் (NASA-JPL Cassini Probe Visual & Infrared Mapping Team)

“பெறும் ஒளியை விடத் தரும் ஒளி சனிக்கோளுக்கு இரு மடங்கு மிகையாய் உள்ளது என்பது பல்லாண்டுகளாய் ஒரு புதிராக விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வருகிறது. எவ்விதம் சனிக்கோளில் அவ்வித மிகையான சக்தி உண்டாகிறது என்னும் வினா எழுகிறது.”

கெவன் பெயின்ஸ் (NASA-JPL Cassini Probe Visual & Infrared Mapping Team)

“காஸ்ஸினி விண்ணுளவி அனுப்பிய தகவல் இலக்கம் (Data) ஏறக்குறைய சனிக் கோளின் முழுப்படத்தைக் காட்டுகிறது.  அதன் மூலம் பூதக் கோளில் ஒன்றான சனிக் கோளானது வெளியேற்றும் சக்தியை முதன்முதல் நாங்கள் அறிய முடிந்தது.”

லிமிங் லி (Liming Li – Cornell University, Ithaca, New York)

“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.”

டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

“ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ·போய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.  அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.”

ஆனி வெர்பிஸெர் (Anne Verbiscer, Scientist, University of Maryland)

“அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவுக் கணிப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத்துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

பரிதி மண்டலத்தில் சனிக்கோளின் வியப்புறும் புதிர்த் தோற்றம்

பல்வேறு பெரிய எழில் வளையங்கள் அணிந்த சனிக்கோள் சூரியனைச் சுற்றிவரும் கோள்களிலே மிகப் புதிரான நூதன அமைப்புக் கோளாகும்  !  2009 ஆண்டின் ஆரம்ப காலத்தில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்தனுப்பிய படக் காட்சிகளில் தெளிவாக வளையங்களின் விளிம்பையும், சனிக்கோளின் இரு துருவப் பகுதிகளையும் ஒருங்கே காண முடிந்தது.  அப்போது முதன் முறையாக துருவங்களில் கண்கொள்ளா இரட்டைக் காட்சியாக அசைந்தாடும் ஒளி வண்ணத் தோரணங்கள் வானியல் விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தன !  சனிக்கோளில் துருவ ஒளித் தோரணங்கள் எப்படி உண்டாக்கப் படுகின்றன ?  அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன ?  அவை பரிதிப் புயலில் (Solar Wind) எழும் பரமாணுக்கள், சனிக் கோளின் காந்த தளங்களைத் தாக்கும் போது ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்கள் . பூமியின் துருவ வானில் கோலமிடும் ஒளி வண்ணத் தோரணங் களை ஒத்தவை அவை என்றும் தெரிய வருகிறது.


காஸ்ஸினி விண்ணுளவி ஒளித்தோரண ஓவியத்தைப் படமெடுத்த போது பரிதியின் சமநோக்கு நிலை (*Equinox) சனிக்கோள் மீது விழுந்தது.  அந்த மட்ட நிலை வரும் போது இரு முக்கிய நிகழ்வுகள் நேருகின்றன.  பரிதியின் ஒளிவீச்சு சனிக்கோள் வளையங்களை நேராக ஒரே மட்டத்தில் தொடுகிறது.  அதாவது வளையங்களின் மேற்தளமும், கீழ்த்தளமும் ஒரே சமயத்தில் தெரிகின்றன.  இருதுருவப் பகுதிகளையும் ஒரே சமயத்தில் விண்ணுளவி காண முடிகிறது. இந்த அரிய காட்சியை சனிக்கோளில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் நோக்க முடிகிறது.  சனிக்கோள் பரிதியை ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகின்றன.  சமநோக்கு நிலையில் பரிதியானது சனிக் கோளின் மத்திய ரேகைக்கு (Equator) மேல் நிற்கிறது.  அப்போதுதான் காஸ்ஸினி விண்ணுளவி 2009 இல் முதன் முறையாக சனிகோளின் துருவங்கள் இரண்டிலும் நடனமிடும் அற்புத ஒளிவண்ணத் தோரணங்களைப் படமெடுத்துள்ளது. அப்போது பரிதியின் ஒளி இரு துருவங்களையும் சமநிலை வெளிச்சத்தில் காட்டுகிறது.  மேலோடியாகப் பார்த்தால் சனிக்கோளின் ஒளித் தோரணங்கள் சம வடிவத்தில் (Symmetric Shape) துருவப் பகுதியில் தெரிந்தன.

சனிக்கோள் துருவ ஒளித் தோரணங்களின் வேறுபாடுகள்.

ஒளித் தோரணங்கள் மேலோடியாக ஒன்றுபோல் தோன்றினாலும் கூர்ந்து நோக்கின் இரு துருவ ஒளித் தோற்றங்களில் சில வேறுபாடுகள் தென்பட்டன.  அவற்றின் மூலமாகச் சனிக்கோளின் காந்த மண்டலப் பண்பாட்டின் முக்கிய விளக்கம் வெளியானது. வட துருவத்தில் தெரிந்த ஒளித்தோரண நீள்வட்டம் தென் துருவத் தோரணத்தை விடச் சற்று சிறிதாகவும், திரட்சி மிக்கதாகவும் இருந்தது.  அதன் மூலம் சனிக் கோளின் காந்த மண்டல ஆற்றல் எல்லாப் பகுதிகளிலும் சமநிலை படைத்த அளவில இல்லை என்பது தெளிவானது.  தென் துருவத்தை விட காந்த மண்டல ஆற்றல் வட துருவத்தில் வலு மிக்கதாய் சமச் சீர்மை இல்லாமல் (Strong & Uneven) உள்ளதை அறிய முடிந்தது.

சனிக்கோள் ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவரச் சுமார் 30 வருடங்கள் ஆகும்.  அந்தக் கால இடை வெளியில் இருமுறைகள் சனிக்கோளின் துருவப் பகுதிகள் தெளிவாய்த் தெரியும்படி இரண்டுக்கும் சூரிய ஒளி பூரணமாய் விழுகிறது.  ஹப்பிள் விண்ணோக்கி 1990 ஆண்டு முதல் சனிக்கோளைப் பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பியிள்ளது.  ஆனால் 2009 ஆண்டில்தான் ஹப்பிள் தொலைநோக்கி நூதனமாய்ச் சனிக்கோளின் அற்புத வளையங்களை நேர்மட்ட நிலையில் நோக்க முடிந்தது.  அதன் இரு துருவஙகளை ஒரே சமயத்தில் பார்த்துப் பரிதி வெளிச்சத்தில் ஒளித் தோரணங்களைப் படமெடுக்க

முடிந்தது.  அப்போது வானியல் ஆய்வாளருக்குச் சனிக்கோளின் இரு துருவங்களைக் கவனித்து ஆராய நீண்ட நேரம் கிடைத்தது.  ஒரே பட நோக்கை நெடு நேரம் பதிய வைத்து நுணுக்கமாய் ஆய்வு செய்ய ஏதுவானது.  2009 ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சனிக்கோள் துருவத் தோரணங்களில் தொடர்ந்து மாறுதலைக் காண முடிந்தது.

பரிதியின் தூர ஒளிவீச்சு பாயும் சனிக்கோள் எவ்விதம் பாதகம் அடைகிறது ?

வெகுதூரத்தில் இருந்தாலும் சூரியனின் அழுத்தமான கதிரொளித் தாக்குதல் சனிக்கோளில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.  பரிதியிலிருந்து கிளம்பும் கதிர்த் துகள்கள் சூரிய மண்டலக் கோள்கள் அனைத்திலும் பரிதிப் புயலாய்ப் (Solar Wind) பாய்கின்றன.  பரிதியின் மின்னேறிய பரமாணுக்கள் (Electrically Charged Sub-atomic Particles) காந்த தளமுடைய சனிக்கோள் அல்லது நமது புவியை நெருங்கும் போது, காந்த தளம் அவற்றைக் கவ்விக் கொள்ள, அவை துருவங்களின் இடையே பந்துபோல் அங்கு மிங்கும் எறியப் படுகின்றன.  அதன் இயற்கை விளைவுகள் என்ன ?  கோளின் காந்த மண்டல வடிவமைப்பு, இரு துருவங்களுக்கு இடையே புலப்படாத காந்தப் போக்கு வீதிகள் (Invisible Magnetic Traffic Lanes).  அந்த வீதிகளில் முடக்கமான மின்னேறிய துகள்கள் அசைந்தாடி வருகின்றன !  துருவப் பகுதியில் காந்த மண்டல் ஆற்றல் வலுவானதால் மின்னேறிய துகள்கள் பேரளவில் சேமிப்பாகின்றன !  சனிக்கோளின் மேலடுக்கு மட்டத்தில் உலவி வரும் அணுக்களோடு அத்துகள்கள் மோதிப் பூமிபோல் வட தென் துருவங்களில் வண்ண மயமான ஒளித் தோரணத்தை உருவாக்குகிறது.

2004 ஆண்டில் காஸ்ஸினி- ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்தது முதல் இந்த ஆய்வு முயற்சிகளை நாசா, ஈசா (NASA & ESA -American & European Space Agencies) இரண்டும் இணைந்தே செய்து வருகின்றன.  இந்த ஆய்வுக் குழுவின் தலைவி டாக்டர் எம்மா பியூன்ஸ் (Dr. Emma Bunce). 2012 மார்ர்ச் 27 இங்கிலாந்து மான்செஸ்டரில் ஏற்பாடான தேசீய வானியல் விஞ்ஞானக் கூட்டரங்கில் (National Astronomy Conference) குழுத் தலைவி எம்மா ஓர் ஆய்வுரையை வாசித்தார்.

2009 ஆண்டில் முதன்முதல் காஸ்ஸினி விண்ணுளவி இருட்புறச் சனிக்கோளின் துருவத் தோரணம் இணைக்கும் காந்த வீதிகளைக் குறுக்கிட்டுச் சென்றது.  அப்போதுதான் டாகடர் எம்மா பியூன்ஸும் அவரது சகாக்களும் இரு துருவ ஒளித் தோரணங்களின் புறவூதாப் படங்களை (Ultraviolet Images) அழகாக எடுக்க முடிந்தது.  சுற்றி வரும் வீதி அமைப்புக் காலப்படி காஸ்ஸினி விண்ணுளவி மத்திய ரேகைப் பகுதியைச் சுற்ற 11 மணிநேரம் பிடித்தது.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் வானியல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலைநோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலைநோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார். வியாழனுடைய பட்டைகளையும், புள்ளிகளையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

++++++++++++++

* Equinox of Solar Planets

Equinox on Earth, when the Sun is positioned directly over our equator, happens twice a year. Due to Earth’s tilted rotational axis, as we orbit the Sun the latitude over which the Sun shines directly cycles north and south between the latitudes of the Tropics. On its way north to warm our (Northern Hemisphere) summers or south to leave us in the chill, the Sun crosses the equator on the equinoxes (Fall and Spring).

The same thing happens on Saturn, with two differences. First, Saturn takes nearly 30 years to orbit the Sun, so equinox comes only about every 14 years. Second, Saturn has its system of rings that encircle the planet directly above its equator, serving as a visible extension of the equator. At Saturn’s equinox, the Sun is not only directly over the equator, but sunlight strikes the rings edge-on, like a flashlight shining on a flat piece of paper from the edge, the light just grazing over the surfaces on either side.
+++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, ESA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
15 Skymania.com : Saturn’s Biggest Ring is Out of Hiding By : Paul Southerland (October 7, 2009)
16 Associated Press : NASA Telescope Discovers Giant Ring Around Saturn (October 6, 2009)
17 The Cavalier Daily : University Researchers Find Large Saturn Ring By : Katherine Raichlen (October 8, 2009)
18 NASA Release : NASA Space Telescope Discovers Largest Ring Around Saturn By : Whitney Clavin (October 6, 2009)
19 Astronomers Discover Solar System’s Largest Planetary Ring Yet Around Saturn (Update) By : John Matson (October 7, 2009)
20 NASA Report : The King of Rings – Saturn’s Infrared Ring (October 6, 2009)
21 Natural News : Giant Hexagon of Clouds Spins on Saturn While Clouds disappear from Jupiter By Mike Adams  (May 15, 2010)
22 Saturn’s Hexagon Recreated in the Laboratory By : Emily Lakdawalla (May 3, 2010)
23 Daily Galaxy – Cassini Spacecraft Delivers a New View of Saturn (November 11, 2010)
24 Daily Galaxy – The Unsolved Mystery of Saturn Hexagon – Four Times the Size of Earth (November 12,  2010)
25 Wikipidea : Saturn – North pole hexagonal cloud pattern  (November 18, 2010)
26 https://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/
27. Science Daily : Saturn’s Aurora Offer Stunning Double View By Hubble Telescope (February 11, 2010)
28. Saturn Daily : Cassini Spaceship Makes Simultaneous Measurements of Saturn’s Nightside Aurora &  Electric Current System (April 5, 2012)

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 8, 2012
http:jayabarathan.wordpress.com/

பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் !
வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை !

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

காலவெளிப் பிரபஞ்சத்தில்
வால்மீன்கள்
பால் ஒளிவீசும் விந்தையாய் !
பரிதி ஈர்ப்பு வலையில்
ஈசலாய்த்
திரிபவை வால்மீன்கள் !
வையகத்தில் உயிரினம் வளர
விதை யிட்டவை !
பரிதியை நெருங்கும் போது
வால்மீனின்
நீண்ட ஒளிவால்
நமது பூமியைத் தொடுமென
நர்லிகர் கூறுகிறார் !
வால்மீன் ஹார்ட்லியில்
சையனைடு
வாயு வெளியேறும் !
வால்மீனில் எழுந்திடும்
வாயுத் தூள்களை
வடிகட்டிப் பிடித்து வந்தார் !
வால்மீன்
வயிற்றில் எறிகணை ஏவி
உட்கருவை ஆராயும்
ஓர் விண்ணுளவி !
அதே ஆழ்மோதி விண்கப்பல்
அடுத்தோர்
வால்மீனைச் சுற்றி
ஆய்வு செய்யும் இப்போது !

++++++++++++++++

வால்மீன்கள் பூமியில் மோதிய அந்தப் பேரதிர்ச்சி உதைப்படியிலும், பூதளக் கொந்தளிப்பு நிலையிலும் உயிரின ஆக்கச் செங்கல்கள் உடையாமல், சிதறாமல் அப்படியே திரட்சியாய் இருந்தன என்பது மெய்யென்று எமது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.  வால்மீன்கள் என்பவை உயிர்த் தோற்ற இரசாயன வளர்ச்சிக்கு மூலாதாரமான அந்த உட்கூறுகளைக் பூமியில் கொட்டும் ஓர் பூரணப் பெட்டகம்.  நாங்கள் வால்மீன்களை நாடுவதற்குக் காரணம், அவற்றில் அமினோ அமிலங்கள், நீர் வெள்ளம், எரிசக்தி (Amino Acids, Water, Energy) ஆகிய மூன்றும் பேரளவில் இருப்பதால்.

டாக்டர் ஜென்னிஃபர் பிளாங்க் (ஆய்வுக் குழு தலைவி)

முன்னுரை :  பல மில்லியன் மைல்கள் நீண்ட வாலுடைய வால்மீன்கள் உறைந்து போன வாயுக்கட்டிகள், பனிநீர்த் தொட்டிகள், தூசிக் களஞ்சியங்கள், பாறைகள் சுமந்து கொண்டு சூரியனைச் சுற்றிப் போகும் ஒருவித அண்டவெளிக் கோள்கள்.  அது பரிதியைச் சுற்றும் போது அதன் நீண்ட வால் பூமியைத் தடவிச் செல்கிறது என்று இந்திய வானியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். விஞ்ஞானிகள் அண்டவெளி வால்மீன்களை “அழுக்குப் பனிப் பந்துகள்” (Dirty Snowballs) என்று கேலியாகக் கூறுவார்.  இந்த் பனிப் பந்துகள் 10 அல்லது 10 மைலுக்கு மேற்பட்ட விட்டம் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்.  பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஓர்ட் முகில் தொகுப்பிலிருந்து (Oort Cloud) அவை கிளம்பி வழிதவறி நழுவி நமது சூரிய மண்டலத்தின் ஈர்ப்பில் பிடிபட்டுச் சுற்றுபவை என்றும் அறியப்படுகிறது.  ஒரு சீரிய சுற்று விதியைப் பின்பற்றி ஒருசில வால்மீன்கள் மீண்டும் மீண்டும் பரிதியை வலம் வருபவை என்பது தெரிகிறது.

2012 மார்ச்சில் கூடும் அமெரிக்கன் இரசாயனக் குழுவகம் (American Chemical Sosiety) தனது 243 குழு ஒருங்கிணைப்பில் மேலும் சில புதிய கருத்துகளுக்கு ஆதாரம் அளிக்கிறது.  பில்லியக் கணக்கான ஆண்டுகட்டு முன்பு பூமியை அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த வால்மீன்கள் பூதள உயிரினங்களின் விருத்திக்கு வேண்டிய உபரி இரசாயன மூலங்களையும், உட்கூறுகளையும் (Ingredients) சுமந்து போய்ப் பூமிக் கோளில் உயிர்கள் பூத்தெழக் கொட்டின என்பதை உறுதிப் படுத்துகிறது.  உலகிலே மிகப்பெரிய அந்த அமெரிக்கக் கருத்தரங்குக்குச் சுமார் 15,000 விஞ்ஞானிகள் வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவர்கள் வாசித்து வெளியிடப் போகும் விஞ்ஞானத தலைப்புகள், கண்டுபிடிப்புகள் சுமார் 11,700 அளவு எண்ணிக்கை என்றும் தெரிகிறது.

விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கின் சமீபத்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன ?

மூன்றரை பில்லியன் ஆண்டுகட்கு ஈசல்கள் போல் வால்மீன்களும், முரண்கோள்களும் (Asteroids) பூமியை மீண்டும் மீண்டும் பேரளவில் தாக்கின.  அவற்றின் ஆழ் தடங்கள், குழிகள் இப்போதும் நிலாவின் பின்புறத்தில் தெரிகின்றன.  விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் பூமியில் உயிரினங்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உதித்தாக அறிய வருகிறது.  அப்படியானால அப்போது நீர், அல்லது புரோட்டின் ஆக்கும் அமினோ அமிலங்கள் இருக்க எந்த ஆதாரமுமின்றி அத்தனை சீக்கிரம் எப்படி உயிரினம் தோன்றி இருக்க முடியும் ?  காலிஃபோர்னியா நாசா-அமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கும் அவரது சகாக்களும் வால்மீன் மோதலுக்குப் பிறகு உயிரினச் செங்கற்கள் எனப்படும் அமினோ அமிலங்கள் முழுமைத் திரட்சியாய் இருந்தனவா என்று சோதிக்க ஆரம்பித்தனர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நாசா விண்ணுளவி பூமிக்குக் கொண்டுவந்த வால்மீன் தூசியில் விஞ்ஞானிகள் அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதிப் படுத்தினார்.  இப்போது ஆய்வாளர் ஒரு சோதனையில் ஆற்றல் மிக்க எரிவாயுத் துப்பாக்கிகளைப் (Gas Guns) பயன்படுத்திப் பூர்வ பூமியில் அப்போதிருந்த பேரளவு உஷ்ணத்தை உண்டாக்கவும், பேரதிர்ச்சி எழுப்பவும் ஆய்வுக் கூடத்தில் பெரு முயற்சி செய்தார்கள்.

ஆயிரக் கணக்கான கிலோ கிராம் எடையுள்ள எரிவாயுத் துப்பாக்கிகளைப் போலி அண்டங்களில் ஒலிகடந்த வேகத்தில் (Supersonic Speed) மோத விட்டுப் பேரழுத்தத்தில் வெடி அதிர்ச்சிகள் ஏற்படுத்தினர். அந்த வேகத்தில் எரிவாயுத் துப்பாக்கிகள் அமினோ ஆசிடுகள், நீர் மற்ற பண்டங்கள் இட்ட சிமிழ்களைச் சுட்டன.  விளைவுகள் என்ன ? அமினோ ஆசிடுகள் உஷ்ணத்தாலோ, அதிர்ச்சியாலோ மோதலில் உடைய வில்லை.  அவை அமினோ ஆசிட்களைப் பிணைத்து புரோடின் ஆக்கும் ‘பெப்டைடு இணைப்புகளை’ (Peptide Bonds) உண்டாக்கின.  பல்லாண்டுகளாக வால்மீன்கள், முரண்கோள்கள், எரிகற்கள் (Comets, Asteroids amd Meteorites) ஆகிய மூன்றும் பன்முறை தம் பளுக்களை இறக்கி விதைத்தன வென்று ஜென்னிஃபர் பிளாங்க் ஆலோசனை கூறுகிறார். புதிய ஆய்வின் மற்றோர் கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னேதான் கொந்தளிப்பு ஏறி இறங்கிய சூழ்நிலையில் உயிர்வளி என்னும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) நமது புவிக்கோளில் சேரத் துவங்கியது என்றும் அறியப் படுகிறது.

பூர்வ பூமி மீது வால்மீன்கள் மோதிய கணிப்பு வேகம் சுமார் மணிக்கு 25,000 மைல். வால்மீன்கள் ஆய்வுக் குழுவின் தலைவி ஜென்னிஃபர் பிளாங்க ஆய்வுக் கூடத்தில் சோதனை முறைகளை உருவகித்துக் வான்மீன்களின் உடலிலுள்ள் நிபந்தனை நிலைகளை உண்டாக்கிக் கணனி மாடல்களைத் தயாரித்துப் புதிதாய்க் கூறுவெதன்ன இப்போது ?  அவரது ஆய்வு முடிவுகள் விரிவான விஞ்ஞான் முயற்சியின் ஒரு பகுதியே யாகும்.  பல பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பாலையாய்க் கிடந்த பூர்வ பூமியில் எவ்விதம் அமினோ அமிலங்கள் புரோட்டின்களை உண்டாக்கின என்பதே அவரது ஆய்வின் முக்கியக் குறிக்கோள். அந்தப் புரோட்டின்களே நுட்ப ஜந்துக்கள் முதல் மானிடர் வரை எல்லாவித உயிரினங்களைப் படைக்கும் “வினைக் குதிரைகள்” (workhorses) என்பதும் தெளிவாய் உறுதியாயின.

அண்டார்க்டிக் ஏரியில் உயிரின மூலவிகள் எப்படிப் பூமியில் தடம் வைத்தன என்பதற்குச் சான்றுகள்

2011 ஏப்ரலில் அண்டார்க்டிக் ஏரியில் பூர்வ பூமியின் அடிப்படை ஜீவ மூலவிகள் (Primitive Life Forms) வளர்ச்சி யுற்றதற்குச் சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  காலிஃபோர்மனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதள உயிரியல் விஞ்ஞானி (Geobiologist) டான் ஸம்னரும் (Dawn Sumner) அவரது துணைக் குழுவினரும் அண்டார்க்டிக்கில் உள்ள அண்டர்சீ ஏரியில் (Lake Untersee) ‘ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர் நீர்த்தடாக வளர்ச்சிகளைக்’ (Photosynthetic Microbial Stromatolites) கண்டுபிடித்துள்ளார்.  அந்தக் கடல் வளர்ச்சிகளை அடுக்கடுக்காய் கடல் அடித்தளத்திலிருந்து மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளர்த்திருப் பவை பாக்டீரியாக்கள்.  அவை இப்போது புராதனப் பழஞ் சின்னமாய்ப் (Fossil) பூர்வ ஜந்துக்களின் சான்றாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளன.  கிழக்கு அண்டாக்டிகாவின் மிகப் பெரிய பரப்பளவு ஏரியான அண்டர்சீ ஏரி கடல் மட்டத்துக்குச் சுமார் 560 மீடர் (1900 அடி) உயரத்தில் உள்ளது,  அதன் பரப்பு 11.5 சதுர கி.மீடர்.  கடலில் பாக்டீரியாக்கள் விளைவிக்கும் பவளக் கொத்துகளை ஒத்தவை இந்த் நீர்த்தடாக வளர்ச்சித் தூண்கள்.  இவை பஹாமாஸ், தென்கரை ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில கடற் பகுதிகளில் மட்டுமே இப்போது காணப் படுகின்றன.  அண்டார்க்டிக் தூயநீர் ஏரியிலும், ஆன்டிஸ் மலை உப்புநீர் ஏரிகளிலும் அவை தென்படுகின்றன.

வால்மீன்களின் வானியல் போக்கை வகுத்த விஞ்ஞான மேதைகள்

2300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மேதை அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)]  வால்மீன்களைப் பற்றித் தெளிவாகத் தனது அரிய கருத்துக்களைக் கூறி யிருக்கிறார்!  வால்மீன்கள் விண்வெளி நிற வீச்சு [Aurora, Northern Lights] எரிமீன் [Shooting Star] போன்றவை  என்று அரிஸ்டாடில் விளக்கினார்! ‘பித்தகோரியர் [Pythagoreans] எனப்படும் சில இத்தாலியர்  வால்மீனை அண்டக் கோள் எனக் கருதியது சரியல்ல! வால்மீன்கள் நீண்ட கால  இடைவெளியில் தோன்றி மறைபவை. அவை தொடுவானுக்குச் சற்று மேலே மட்டும்  தென்படு பவை. வால்மீன்கள் வாயுக் கற்களும், ஆவிகளும் [Airy Meteors & Vapours]  கொண்டவை ‘ என்றும் அரிஸ்டாடில் கூறினார்! புதிரான வால்மீன்களைப் பற்றிய அரிய  கருத்துக்கள் பண்டைக் காலம் தொட்டே கிரேக்கர்களிடம் இருப்பினும், பிற்காலத்தில்  மகத்தான அதன் விஞ்ஞானம் தொடரப் படாமல் புறக்கணிக்கப் பட்டு விட்டது என்று  கவலைப் படுகிறார், வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி!

1540 இல் முதன் முதலாக வால்மீன் நகர்ச்சியைத் தொடர்ந்து கண்களால் நோக்கிப் படங்கள்  வரைந்தவர், ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் [Peter Appian (1501-52)]. வால்மீனின்  வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீண்டிருக்கும் என்பதை முதலில் எடுத்துக்  காட்டியவரும் அப்பையனே!

1577 இல் டென்மார்க் விஞ்ஞானி டைசோ பிராஹே [Tycho Brahe] ஒளி மிக்க ஓர்  வால்மீனைக் கண்டு, ஒரு நாள் தொடர்ந்து நோக்கியதில் இடத்திரிபு [Diural Parallax]  இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அது பூமிக்கு நிலவை விட வெகு தூரத்தில்  இருப்பதாகவும், அது சூரிய மண்டலத்தின் ஓரண்டம் என்றும் கூறினார்! நூறாண்டுகள்  கழித்து நியூட்டனின் ஆப்த நண்பர், எட்மண்ட் ஹாலி வால்மீன்கள் யாவும் சூரிய  குடும்பத்தின் கோள்கள் என்பதை முதன் முதல் நிலைநாட்டினார்! வான வீதியில் சென்ற  24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு  எட்மண்ட் ஹாலி, அவற்றின் சுற்று வீதிகளைக் கணித்து, ‘வால்மீன்களின் வானியல்  சுருக்க வரலாறு ‘ [A Synopsis of the Astronomy of Comets] என்னும் அரிய விஞ்ஞான நூலைப்  படைத்தார்!

வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி

முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில்  செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்!  வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக்  கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!

ஆனால் எட்மண்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச்  சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்! ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப்  பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து  சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை  எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை  1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607  இல் ஜொஹான் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம்  ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால்  அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும்  என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த  வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு  வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!

நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும் பான்மையான வால்மீன்கள்,  குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி  மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச்  சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த  வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல்,  பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து,  பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும்  விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும்  பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால்  [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி  இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற  நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம்  மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளை வாகிறது.

வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் விந்தை அமைப்பும்!

வானியல் வல்லுநர் ஃபிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப்  பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று  கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன  ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன  ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி  உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக்  கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி  இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம் ‘ [Oort Cloud] என்று  அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின்  பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100  பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன்  கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது!  சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து  வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர்  வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!

ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத்திற்கு அண்டையிலோ  போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய  மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட  வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி  பிறைவளைவிலோ, அல்லது விரிவளைவிலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!

வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு ‘ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின்  உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக  உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்றுகிறது!  அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி  வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி  ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப்  பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக  அறியப்படுகிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச்  சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும்  விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச்  சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப் பட்டது!  உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது!  வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2  Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன!

வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட  விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி,  அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில்  வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி  மங்குவதால், வால்மீன் ஒளி யிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும்  வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!

சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure]  வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது  சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும்  வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged]  பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன!

மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப்  பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது!  வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச்  சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின்  வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால்,  வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச்  செல்கிறது!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் [1986 February 9th] ஹாலி வால்மீன் கடைசியாகச்  சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி  ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி  ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், வெகு தூரத்தில் ஹாலி வால்மீன்  போவதைப் படம் எடுத்துள்ளன.

*********************

Information :

[Picture Credits: NASA Space Center, USA]

1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006]  [www.siliconchip.com.au/cms]
2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006
3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006]  [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]
8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
12 NASA to Study Comet Collision http://www.PhysOrg.com
13 NASA Looks for Signs of Success from Celestial Broadside http://www.PhysOrg.com [2005]
14 Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]
815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4,  2005]
15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html
16 Thinnai Article on the Significance of Deep Impact http://www.thinnai.com/sc0715051.html
17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky &  Telescope Magazine [Feb. 2006]
18. Wikipedia – Edmond Halley (Jan 22, 2011)
19. Edmond Halley – Biography.
20. https://jayabarathan.wordpress.com/2010/11/06/comet-hartley-2-flyby/ (Comet Hartley) (Nov 6, 2010)
21 Did Comet Crashes Help Spark Earth Lfe By :  Matt Schirber (September 24, 2009)
22 Early Earth – Hazy Shades of Life on Early Earth (Mach 21, 2012)
23 Comets Bombarding Early Earth Delivered the Amino Acids Needed for the Origins of Life  (March 28, 2012)
24 Early Earth – New Evidence that Comets Deposited Building Blocks of Life on Primordial Earth (March 28, 2012)
29 Daily Galaxy – Ancient Antarctic Lake Reveals How Life Got a Foothold on Earth (March 29, 2012)
30 https://jayabarathan.wordpress.com/2011/01/28/edmond-halley/ (வால்மீனின் போக்கை வகுத்த வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி)

++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 31, 2011

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு.

(கட்டுரை : 75)

(Discovery of A Planet Orbiting Two Suns)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

ஒற்றைப் பரிதியைச்
சுற்றிவரும் நமது
பண்டைக் கோள்கள் !
விண்வெளியில் இப்போது
இரட்டைப் பரிதிகள் சுற்றும்
சுற்றுக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார்
அண்ட வெளியில் !
சுற்றுக் கோளின் மாலை
அந்திப் பொழுதில் இரு பரிதிகள்
அடுத்தடுத்து அத்த மிக்கும்
விந்தை நிகழும்
தொடு வானிலே !
நேற்று
நியூட்ரான் விண்மீனைச்
சுற்றி வரும்
வைரக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார் !
புதுவிதக் கோள்களைத் தேடிப்
போகும் நாசா கெப்ளர்
விண்ணோக்கி !
கண்ணுக்குத் தெரியாமல்
வேற்று முறையில் விந்தைக் கோள்கள்
விளையாடிக் கொண்டி ருக்கும்
நூற்றுக் கணக்கில் !

 

 

“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது !  இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”

லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)  

“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது.  இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”

அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறை யாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்தக் விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b).  அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது.  இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை.  இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது,  அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப்பட்டது.  அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது.  கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது.  சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது.  கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை).  இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது.  மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்).  அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?

விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சயமாகிறது.  இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது.  மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர்.  இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது.  மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன்  கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் !

நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே.  இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது.  விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கல், ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது.  இதுவரை 563 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !

தகவல் :

Picture Credit : NASA Space Center

1.  Astronomy Today Chaisson & McMillan (1999)

2.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

3.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

4.  Lightnet :  Planet Orbiting Two Suns ?  (November 5, 1999)

5.  Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)

6.  UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)

7.  BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)

8  Los Angeles Times :  Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9.  Wikipedia :  Extrasolar planets (September 19, 2011)

10.  Space Daily :  Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)

11  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)

12.  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 20, 2011)
https://jayabarathan.wordpress.com/