சீதாயணம்!

இராவணன்

ஜானகி தேவி
கானக வாசி!
நாட்டில் பூத்த ரோஜா மலர்!
மாற்றான் தோட்டத்து மாங்கனி!
ஆயினும் அவளது
மேனி எழிலில்
ஞானம் இழந்து
மாறு வேடத்தில்
கள்ளத்தனமாய்க் கடத்தி
இலங்கா புரியில்,
அரண்மனையில்
அலங்காரச் சிறையில்,
அடைத்து வைத்து,
அடிக்கடி
அழகு பார்த்து,
பூஜை செய்த
போக்கிரி ராஜா!

இராமன்

வான வில்லை
வளைத்துப் போட்டு
வெற்றி வீரனாய்
மாலை இட்ட மங்கை!
மானசீக மனைவி!
ஜானகி தேவி!
கூனிக் கிழவி
ஞானச் சூழ்ச்சியால்
ஈரேழு ஆண்டுகள்
நாரதர் உருவில்
வனவாசம் புகுந்து,
மானைப் பிடிக்கப்போய்
மனைவியைப் பறி கொடுத்தவன்!
இறுதியில்
படை திரட்டிப் போரிட்டு
பலர் உயிரிழந்து
அனுமானைத் தூதுவிட்டு
ஈழத்தில் தீயிட்டு
தேவியை மீட்டு
அயோத்திய புரிக்கு
பட்டத் தரசனாய் மீண்டவன்!
பாரத நாரீமணியை
தீக்குளிக்க
வைத்த பின்னும்
ஐயம் தீராமல்,
அறிவு கெட்ட
வண்ணான் சொற்கேட்டு,
தர்ம பத்தினி
கர்ப்பிணி,
கதறக் கதற மீண்டும்,
கானகம் துரத்திய
ஞானப் பதி!
தன்
மானம் காத்து
மனைவி மானத்தைக் கப்பலேற்றிய
செங்கோல் ராஜா!

************
திண்ணையில் சி. ஜெயபாரதன், கனடா

அணுயுகப் பிரளய அரங்கேற்றம்

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு!
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராமன் போல்
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை!
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் மேலும் மரிப்பார், மரிப்பார்!
நாடு நகரம் வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார்,
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்!

++++++++++++

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது)

[S. Jayabarathan (April 26, 2006)]
திண்ணையில் சி. ஜெயபாரதன், கனடா