அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

Safe casks 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee] இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் தோன்றியது. முதல் அணு ஆயுதங்களுக்கு வேண்டிய யுரேனியம்-235, புளுடோனியம்-239 ஆகிய எருக்களைத் தயாரிக்கவும், அவற்றைத் தூய்மைப் படுத்தவும் ஓக் ரிட்ஜில் அணு உலைகளும், அணு எருச் சுத்திகரிப்புத் தொழிற் கூடங்களும் அமைக்கப் பட்டன! அந்த முன்னோடிச் சேமிப்பகம் பயன்படுத்தப் பட்ட பிறகு அதில் பெற்ற அனுபவத்தால், பலவித முறைகளில் அது இன்னும் விருத்தி அடைந்தது! அதைப் போன்ற பல சேமிப்பகங்கள் மற்ற நாடுகளிலும் ஆரம்ப காலத்தில் கையாளப் பட்டன. ஆனால் தொட்டி போன்ற அந்த முன்னோடிச் சேமிப்பகம் வீரியக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை!

தற்போது ஆஸ்டிரியா, வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் [International Atomic Energy Agency (IAEA)] ஆலோசனைப்படி உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலை, உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகளுக்காக பலவிதக் குழிகளும், பாதாளக் கிடங்குகளும் அமைப்பாகி யுள்ளன. அம்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கீழ்நிலைச் சேமிப்புக் குழிகள் பயன்பட்டு வருவதோடு, 42 புதிய பூதளக் கிடங்குகளும் [Geological Repositories] டிசைன் செய்யப் பட்டு, விருத்தி யடைந்து தயாராகி வருகின்றன.

அகில நாடுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு, ஆராய்ச்சி அணு உலைகள், மின்சக்தி அணு உலைகள் இயக்கம், முதுமை எய்திய அணு உலைகள் முடக்கம், அணுவியல் எருக்கள் தனித்தெடுப்பு, சுத்தீகரிப்பு, எருக்கோல்கள் வடிப்பு [Fuel Fabrication], செறிவு யுரேனியத் தயாரிப்பு [Uranium Enrichment], தீய்வு எருக்கோல்கள் மீள் சுத்திகரிப்பு [Spent Fuel Reprocessing Plant] ஆகிய பல் வேறு பணிகளால் அனு தினமும் கதிர்வீசும் கழிவுகள் சேர்ந்து கொண்டே போகின்றன!

Nuclear feul cycle

IAEA அகில நாடுகளின் அனுபவக் கூட்டறிவையும், பயன்படும் தனியறிவையும், முன்னேறும் நாடுகளுக்கும், தேவையான பிற நாடுகளுக்கும் அளித்து, அணுத்துறைக் கழிவுகள் பாதுகாப்பாக அடக்க மாவதற்கு உதவி செய்து வருகிறது. அணுமின் சக்தி உற்பத்திச் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவே, அதன் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைப்புக்குத் தேவைப் படுகிறது!

கதிர்வீச்சுக் கழிவுகள் அடக்கமாகும் புதைப்புத் தளம் தேர்ந்தெடுப்பு

புதைப்புத் தளம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அது பல தகுதி விதி முறைகளை நிறைவேற்ற வேண்டும்.

1. பூதளவியல் பண்பு [Geological Characteristics]

2. பூதள நீரோட்ட அமைப்பு [Hydrology or Hydrogeology].

3. பூதள இரசாயனவியல் பாதிப்பு [Geochemistry].

4. பூதள அதிர்வு அபாயம் [Tectonics & Seismicity].

5. மேற் பரப்பு இயக்கம் [Surface Process].

6. காலநிலைப் பாதிப்பு [Meteorology].

7. மனிதர் தூண்டும் நிகழ்ச்சிகள் [Human-induced Events].

8. கழிவுகளைக் கடத்த வாகனப் போக்குவரத்து வசதி [Transportation of Wastes].

9. பூதளப் பயன்பாடு [Land Use].

10. மக்கள் வசிக்கும் திணிவு [Population Density or Distribution].

11. சூழ்வெளிப் பாதுகாப்பு முறைகள் [Environmental Protection].

12. முக்கியமாக இறுதியில் பொதுநபர் அங்கீகாரம் [Public Acceptance]. இவற்றுடன் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு ஆகியவற்றின் அழுத்தமான உடன்பாடு, உறுதிப்பாடு, முடிவில் ஒப்பந்தம்!

 

தற்போது உலக நாடுகளில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகள் சேமிக்க 17 இடங்கள் தேர்வாகிக் கட்டும் லைஸென்ஸ் பெற்றுள்ளன! மேலும் 17 நாடுகளில் 25 பூதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் ஒன்று சைனா. சைனா கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் [Low Level, Medium Level Radioactive Wastes] சேமிக்க வடமேற்கு கோபி பாலை வனப் பகுதியில் இரண்டு, தெற்குப் பகுதியில் இரண்டாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

சில தேசங்களில் புதைப்புக் கிடங்குகள் அணுத்துறைச் சாதனங்களின் அருகே அமைக்கப் பட்டுள்ளன. உதாரணமாக இங்கிலாந்தில் டிரிக் [Drigg, U.K.], பிரான்ஸில் மான்ச் மையம் [Centre de la Manche], ஜப்பானில் ராக்கஷோ [Rakkasho, Japan], பின்லாந்தில் ஒகிலெளட்டு [Olkiluoto, Finland] போன்ற பூதளப் புதைப்பு இடங்கள் அணுவியல் கூடங்களுக்கு அருகிலே உள்ளன! பல நாடுகள் ஒன்றாக இணைந்து பொதுப் புதைப்புக் கிடங்குகள் [Regional Multi-national Repository] நிறுவிப் பயன்படுத்த ஐரோப்பிய நாடுகள் சில ஒப்புக் கொண்டு உள்ளன!

பூதளப் புதைப்பிடத்தின் சிறப்பு டிசைன் தேவைகள்

புதைப்பிடத் தேர்வு ஒரு நாட்டின் பூதள நீர், நில வளத்தையும், கீழ்த்தள நீரோட்டத் தன்மையும், அணுசக்திக் கட்டுப்பாடுப் பேரவையின் விதிகளையும் பொறுத்தது. அவற்றின் டிசைன் குறிக்கோள்

1. கதிர்வீச்சுத் தீண்டல் குறைப்பு அல்லது கதிர் அணுக்கருத் துணுக்குகள் கசிந்து உயிரியல் கோளத்தில் [Biospere] வெளியேறிப் பரவும் அளவுக் கட்டுப்பாடு

2. பொதுநபர், பணியாளிகள் ஆகியோருக்கு மிகக் குன்றிய கதிரடித் தாக்குதல்

3. மிகக் குறைந்த பராமரிப்பு வினைகள்

4. கண்காணிப்பு வசதிகள்

5. 24/7 நாள் மணி நேரப் பாதுகாப்பு ஏற்பாடுகள்.

பூதள புதைப்பிடங்களின் கதிர்வீச்சுக் கழிவுகளுக்குக் கவசங்களாகப் பயன்படும் பல்லடுக்குப் பொறியியல் அரண்கள் [Multiple Engineered Barriers] அமைக்கப் பட்டுள்ளன. அவை யாவும் காங்கரிட் அரண்கள் [Concrete Vaults]. அந்த அரணில் மீள்நிரப்பிப் பண்டம் [Backfilling Material], இரசாயனத் தடுப்பி [Chemical Barrier], வாயு வெளி நீக்கி [Gas Vent], தளர்ச்சிக் களம் [Buffer Zone] போன்றவை இணைக்கப் பட்டுள்ளன.

 

அகில நாடுகளில் பலவிதப் புதைப்புக் கிடங்குகள் டிசைன் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் 62% அமைப்புகள் தரை மட்டத்துக்கு 34 அடிக்குக் [40 மீட்டர்] கீழ் உள்ளன. 18% எளிதான தரை மட்ட ஏற்பாடுகள். 7% சுரங்கப் பாதாளக் குழிகள். 4% 2000-4000 அடிக்குக் கீழான பூதளக் கிடங்குகள்.

அகில நாடுகளில் அமைந்துள்ள கழிவுக் கிடங்குகள்

அமெரிக்காவில் 1980 ஆம் ஆண்டு ‘கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவு விதி ‘ [Low Level Radioactive Waste Policy] அமுலான பிறகு, புதிதாக எந்த இடமும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எட்டு மாநிலங்களில் பூதளத் தேர்வு முன்னேறி வருகிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட நான்கு இடங்கள்:

1. நெப்ராஸ்காவில் மத்திய புதைப்பகம் [Nebraska (Central Interstate Compact)],

2. வட கரோலினாவில் தென்கிழக்குப் புதைப்பகம் [North Carolina (Southeast Compact)],

3. காலிஃபோர்னியாவில் தென்மேற்குப் புதைப்பகம் [California (Southwest Compact)],

4. டெக்ஸஸில் டெக்ஸஸ் புதைப்பகம் [Texas, (Texas Compact pending)] லைஸென்ஸ் பெறப் போகின்றன.

கனெக்டிகெட்டில் [Connecticut] பொது நபர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ‘பூதளத் தேர்வு, கட்டுப்பாடு ‘ [Choice & Contorl] ஆகிய இரண்டு முறைகளிலும் பொது மக்கள் ஈடுபட வசதி செய்யப் பட்டது!

ரஷ்யாவில் 1960-1970 ஆண்டுகளில் பல தரப்பட்ட கதிரியக்கக் கழிவுகளைப் புதைக்க பல விதக் கிடங்குகள் உருவாக்கப் பட்டன. அவற்றைப் போல மற்ற கிழக்கு ஈரோப் நாடுகளிலும் அமைக்கப் பட்டன. பூதளத்தின் கீழ் நீரோட்ட மட்டத்திற்கு 15 அடி மேலாக அவை யாவும் அமைய டிசைன் செய்யப் பட்டன. ஸெர்கீவ் போஸாட் [Sergiev Posad] என்னும் இடத்தில் ‘காங்கிரிட் அரண்கள் ‘ [Concrete Vaults] தரைக்குக் கீழ் கட்டப் பட்டன. இரட்டைக் காங்கிரிட் சுவர்கள் கொண்டு, பிட்டுமென் தார் [Bitumen Tar] அடுக்காய்ப் பூசப்பட்டவை. கழிவுத் திட்டுகள் [Waste Packages] அரணுள்ளே தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, செமென்ட் காரையால் நிரப்பப்படும். அரண் நிரம்பியதும் காங்கிரிட் ஊற்றி அடைக்கப்பட்டு, மேலே உறுதியாக்கப்பட்ட காங்கிரிட் உலோக மூடியால் மூடப்பட்டு, மேலும் செமெண்டால் இணைக்கப்படும்.

Uranium Storage Process

ஆஸ்திரேலியாவில் பொறி நுணுக்கமான ஒரு பூதளக் கிடங்கு தேர்வாகப் பொது மக்கள் முழுப் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப் பட்டது. கனடாவில் ரேடியம், யுரேனியம் சுத்திகரிப்புக் கழிவுகளைப் புதைப்பது பொது மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் தாமதமாகி, அரசாங்கம் முதல் பூதளத்தை நிராகரித்தது! பின்னால் தனியார் பணிக்குழு முன்வந்து அளித்த, நகராட்சி உறுப்பினர் பங்கு கொள்ளும் ஐந்து கட்டத் திட்டம் நிறைவேறிப் பூதளப் புதைப்பிடங்கள் தேர்வாயின.

ஹங்கேரியில் முதலிரண்டு இடங்கள் தடுக்கப்பட்டுக் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்க தேசீயப் புதைப்பிடம் ஒன்றை 1992 இல் ஹங்கேரி அணுத்துறைப் பேரவை [Hungarian Atomic Energy Commission] முடிவு செய்தது. அதைப் பின்பற்றி மக்கள் சமூகமே முன்வந்து, இன்னும் ஆறு புதைப்பு இடங்களைக் குறித்துத் தந்தது!

இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் வெளிடாதவை!

இந்தியாவில் சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் இரட்டை [1000 MWe ஆற்றல் கொண்ட] அணுமின் உலைகளில் ஒன்று ஓராண்டுக்கு முழு ஆற்றலில் இயங்கினால் சுமார் 100 கன அடி [cu.ft] மேல்நிலைக் கழிவு விளையும்! உயர்நிலைக் கதிர்வீச்சுக் கழிவான [High Level Radioactive Waste] அந்தக் கொள்ளளவில் 20 மில்லியன் கியூரி [curie] நீள் ஆயுள் கதிரியக்கம் [long Half Life Radioactivity] எழுகிறது! அவை 67,000 வாட்ஸ் [watts] வெப்பத்தை வெளியேற்றி நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. இரட்டை அணு உலைகள் 10 ஆண்டு இயங்கினால், 2000 கன அடிக் கழிவுகள் சேரும்!

இதுவரை 14 அணுமின் உலைகளும், சில ஆராய்ச்சி அணு உலைகளும் 30 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை இடை இடையே பாராமரிப்புக்கு நிறுத்தமாகி இயங்கி வந்துள்ளன! அத்துடன் மூன்று தீய்ந்த எரு சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Reprocessing Plants], எருக்கோல் வடிப்புச் சாலைகள் [Fuel Bundle Fabrication Plants], யுரேனியச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்கள் [Uranium Separation Plants] ஆகியவை தினமும் கதிர்வீச்சுக் கழிவுகளை விளைவித்து வருகின்றன!

Dry Cask

2001 ஆண்டு முடிவு அறிக்கையில் [2001 Annual Report] கூட உயர்நிலை, இடைநிலை, கீழ்நிலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் எத்தனைக் கன அடி, திரவக் கழிவுகள் எத்தனை காலன், திடக்கட்டி ஆக்கப்பட்ட கழிவுகள் எத்தனை டன் என்னும் விபரங்களைத் தவிர இந்திய அணுத்துறைக் கட்டுப்பாடு வாரியம் [Atomic Energy Regulatory Board] மற்ற நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது! முக்கியமாக உயர்நிலைக் கழிவுகள் எங்கே, எப்படி நிரந்தரமாக அடக்கம் செய்யப் படுகின்றன என்னும் முக்கிய விபரங்கள் இந்திய அணுத்துறை அகிலவலை முகப்புகளில் எதனிலும் காணப்பட வில்லை!

இப்போது [2015 ]இயங்கி வரும் 21 இந்திய அணுமின் உலைகள், ஆராய்ச்சி அணு உலைகள் யாவும் 220, 540, 1100 MWe மின்னாற்றலை மிஞ்சியவை அல்ல! பாரதத்தில் கட்டப் பட்டு எதிர்காலத்தில் இயங்கி வரும் புதிய பூத அணுமின் உலைகள்தான் [500 MWe, 1100 MWe] ஏராளமான அணுவியல் கழிவுகளை வெளியாக்கப் போகின்றன! உலக நாடுகளில் உச்சமான 1300 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் உலைகள் சில நாடுகளில் இயங்கி வருகின்றன! அகில நாடுகள் வெளியாக்கும் கதிர்வீச்சுக் கழிவுகளின் அளவை ஒப்பிட்டால், இந்திய அணு உலைகளின் அணுவியல் கழிவுகள் மிகவும் குறைந்தவை என்று சொல்லலாம்!

தீய்ந்த எரிக்கோல் தங்கும் நீர்த் தடாகம்

IAEA அறிக்கையின்படி பாம்பேயில் இருக்கும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் [Bhabha Atomic Energy Centre] அருகே ஆறு கீழ்நிலை, இடைநிலைக் கழிவுப் புதைப்புக் கிடங்குகள் உள்ளதாக தெரிய வருகிறது! அவை யாவும் உறுதியாக்கப் பட்ட காங்கிரிட் தொட்டிகள் [Reinforced Concrete Trenches], மற்றும் பல்வேறு விதமான கழிவுகளை அடக்கம் செய்யும் ஆழக் குழிகள் [Tile Holes]. காங்கிரிட் தொட்டிகள் யாவும் நீர்க்கசிவுகள் இல்லாதவை! அடுத்து மழைநீர் ஊடுறுவ முடியாதவை [Waterproof]. காங்கிரிட் மூடியால் அவை இறுக்கமாக மூடப் பட்டவை. கதிர்வீச்சு புறத்தே உள்ளவரைத் தாக்கா வண்ணம், அவைக் கவசமாகப் பெட்டியாகவும் உள்ளன. பேய் மழை கொட்டும் மழைக்காலச் சமயத்தில் நீர் இறங்காதபடி, நீரகற்றித் திரவங்கள் [Water Repellents] பூசப்பட்டவை. ஆழக் குழிகள் 15 அடி ஆழம் கொண்டவை. காங்கிரிட் தொட்டிகள் கதிர்வீச்சைக் குறைக்க முடியாத கழிவுகளும், ஆல்ஃபாக் கதிர்கள் [Alpha Rays] வீசும் கழிவுகளும் ஆழக் குழிகளில் புதைக்கப் பட்டன.

முடத்துவமான ஸ்பெயின் அணுமின் உலையின் கதிரியக்கக் கழிவுகள்

17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்பெயின் வாண்டெலாஸ்-1 [480 MWe மின்னாற்றலுள்ள Vandellos-1] அணுமின் உலையின் உயர் அழுத்த டர்பைன் கலத்தில் [High Pressure Turbine] 1989 இல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு 1990 இல் நிரந்தரமாக மூடப் பட்டது! இந்தியாவில் டெல்லிக்கு அருகில் இருக்கும் நரோரா அணுமின் நிலையத்தில் இதே போல்தான் 1993 இல் கீழ் அழுத்த டர்பைன் சுழலியில் தீப் பற்றிப் பெரும் சேதம் விளைந்தது! இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களுக்கு இடையூறு விளைவித்தாலும், அணு உலையால் தீ விபத்துத் தூண்டப் படவில்லை!

கோடிக் கணக்கான நிதியைச் செலவு செய்து, நரோரா செப்பணிடப் பட்டுத் தற்போது இயங்கி வருகிறது! ஆனால் வாண்டெலாஸ் அணு உலைத் திரள்கரி மிதவாக்கியைப் பயன்படுத்தி வாயுவால் வெப்பம் நீக்கப்படும் [Graphite moderated & Gas cooled Reactor] பிற்போக்குச் செர்நோபிள் மாடலைச் சேர்ந்தது! 1986 இல் செர்நோபிள் வெடித்துச் சிதைந்து போன காரணத்தால், டர்பைனில் தீப்பற்றிய ஸ்பெயினின் திரள்கரி அணுமின் உலையும் மூடப்பட்டு, 1996 இல் முடத்துவ மானது [Decommissioned]!

1. வாண்டெலாஸின் எருக்கோல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, நீர்த் தடாகத்தில் [Storage Water Pool] சேமிக்கப் பட்டன. அணு உலைச் சாதன இயக்கங்களால் விளைந்த கீழ்நிலைத் திடக் கழிவுகள், கதிர்வீசும் உலோகத் துண்டுகள், சுத்தீகரிப்பு இரசாயனக் கழிவுகள் [Chemically treated Liquid Wastes], யாவும் உலோகத் தொட்டிகளில் காங்கிரீட் கட்டிகளாய்ச் சுருக்கப்பட்டன!

2. 200,000 திரள்கரி உறைகள், மிதவாக்கிக் கட்டிகள், தயாரான மூன்று காங்கிரிட் அரண்கள் ஒன்றில் அடைக்கப் பட்டன!

3. அமுக்கிச் சிறுக்கும் கழிவுகள் [Compactable Wastes] 200 லிட்டர் கொள்ளளவுள்ள 900 கலன்களில் அடைக்கப் பட்டு மூடப்பட்டன. அவற்றுடன் 492 கட்டுப்பாடு செய்யும் நியூட்ரான் உறிஞ்சிக் கோல்களும் [Absorber Rods] சேமிக்கப் பட்டன.

4. காங்கிரிட் அரண்களின் உள்ளே இருந்த கழிவுகளின் பேரளவு கதிர்வீச்சு, புறத்தே மணிக்கு 4 மில்லி ரெம் [4 mRem/hour] கதிரடி வீதத்தில் இருந்தது.

அமெரிக்காவில் பேரளவு கதிர்வீச்சுக் கழிவுகளின் சேமிப்பு!

சோவியத் யூனியன் பொதுடமைக்கு எதிராக ‘ஊமைப்போர் ‘ நிலவிய சமயத்தில் [Cold War (1952-1989)] அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அடுக்கிக் கொண்டே போன போது, அமெரிக்கா மட்டும் 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளைத் [Nuclear Warheads] தயாரித்தது! அவற்றுக்கு அணு எருக்களாகப் பயன்பட்ட செறிவு யுரேனியம்-235 [90% மேல்], தூய்மையான புளுடோனியம்-239 ஆகியவற்றைத் தனித்தெடுக்க, செறிவாக்க, தூய்மைப் படுத்தும் வினைகளில் விளைந்த கழிவுகளின் கொள்ளளவு [114 அணுமின் உலைகளின் தீய்ந்த எருக்களின் கழிவையும் சேர்த்து] 52,000 டன்! புளுடோனிய திரவக் கழிவு மட்டும் 91 மில்லியன் காலன்!

பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

 

Spent fuel burial

 

புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

‘தன்வினை தன்னைச் சுடும் ‘, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘ என்பவை தமிழ்ப் பழமொழிகள். உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! எண்ணற்ற மாந்தரை அழிக்க வல்ல [Mass Destruction] அந்தக் கோர ஆயுதங்களை ஆக்கிய அமெரிக்கத் தளங்கள், இப்போது தங்கிவிட்ட கதிரியக்கக் கழிவுகளால், அமெரிக்க மக்களுக்கே பல்லாண்டு தீங்கு விளைவிக்கும் விதைகளை பல மாநிலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் தெளித்துள்ளன!

+++++++++++++++++++++

தகவல்:

1. Radioactive Waste Disposal, Global Experience & Challenge, IAEA Bulletin 39/1 [www.iaea.or.at/worldatom/]

2. Nuclear Science & Society By: Bernard Cohen [1974]

3. Atomic Science, Bombs & Power By: David Dietz [1962]

4. The Careless Atom By: Sheldon Novick [1969]

5. Living With Radiation, National Geographic [April 1989]

6. Nuclear Waste By: National Geographic [July 2002]

7. Indian Atomic Energy Regulatory Board Bombay, Annual Report [2001]

8. https://www.iaea.org/About/Policy/GC/GC50/GC50InfDocuments/English/gc50inf-3-att5_en.pdf  [2006]

9.  http://issues.org/28-2/alvarez/  [2012]

10.  http://www.nucleartourist.com/systems/spfuel1.htm

11.  https://en.wikipedia.org/wiki/Dry_cask_storage  [September 9, 2015]

12.  http://www.nrc.gov/waste/spent-fuel-storage.html  [October 15, 2015]

++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 20, 2016]  R-1]

 

அமெரிக்க அணுவியல் துறைத் தணிக்கை நெறி முறைகள் இந்தியாவுக்கு ஏற்றவையா ? 

 Nakasaki -2

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

 

‘இந்தியா விழித்துக் கொண்டது! மெதுவாக நடக்கும் ஒரு யானைதான், இந்தியா! ஆனால் அது நடக்க ஆரம்பித்தால், அழுத்தமான சக்தியோடு நடக்கிறது! ‘

முரளி மனோகர் ஜோஷி

[இந்தியக் குடியரசைப் பற்றிக் கூறிய மானிடத் துறைகளின் விருத்தி மந்திரி]

முகவுரை: அணுவியல் துறைகளைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு, அணுவியல் தளங்களில் நிகழும் தவறுகளைக் கண்காணித்துத் தடுக்கும் ஓர் இறுதிநிலைக் காவல் அரண் [Final Stage Barrier]! ஆனால் அதற்கு முன்பே விபத்து நேராவண்ணம் அடுத்தடுத்து நிறுத்தவோ, குறைக்கவோ பலவித அரண்கள் பாரத அணு உலைகளில் அமைப்பாகிக் காத்துக் கொண்டு நிற்கின்றன! அணுசக்தி உற்பத்தியின் போது தவிர்க்க முடியாமல் தாவும் கதிரியக்கத்தைக் காணும் கருவிகளும், தீவிர விளைவுகளைக் கட்டுப் படுத்தி மாந்தரைக் காத்துக் கொள்ள ‘பல்லடுக்கு அரண்கள் ‘ [Multi-Stage Barriers] அணு உலை அமைப்பின் போதே கட்டப் படுகின்றன. அணுசக்திக் கமிஷனுக்குக் கீழ் பணியாற்றிலும் சரி, அல்லது விடுதலை பெற்றுத் தனித்து நின்று கண்காணித்தாலும் சரி, கட்டுப்பாட்டுக் குழுவினர் தீர்மானிக்கும் தடுப்புமுறை முடிவுகள் யாவும், உரிமையாளர் கைவசம் உள்ள ‘நிதித்தொகைக்கு ‘ [Budget Improvement Funds] ஏற்ப செயல் படுத்தப்படலாம், தாமதிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம்!

பாரத அணுமின் நிலையங்கள் எத்தனை வகையானவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை, எப்போது செம்மையானவை என்னும் விபரங்களை அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில் கிடக்கும் சில தவறான கருத்துகளை மெய்யானவை என்று காட்டி வருகிறார்! இந்திய அணு உலைகளின் அம்சம், பண்பு, தகுதி, பாதுகாப்பு அரண்களைப் பற்றித் தெளிவாகத் தெரியாத ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழருக்குப் பறைசாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது!

பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?

இந்தியா அழுகிப் போகும் ‘வாழைப்பழக் குடியரசா ‘ [Banana Republic], அல்லது உறுதியான ‘பலாப்பழக் குடியரசா ‘ [Jackfruit Republic] என்பது பிரச்சனைகள் எழும்போது மக்களின் நாகரீகப் போக்குகளே நிர்ணயம் செய்கின்றன! உன்னதச் சட்டங்களின் கீழ் உயர்நீதி மன்றங்கள் தமது கடமையைச் செய்தாலும், இனத் தளபதிகளும், அவரது மந்தைச் சீடர்களும் உள்ளவரை, பாரத மெங்கும் நியாயம் நிலைபெற முடியாது! நீதி மன்றம் வேலி போட்டுக் காத்த சமயத்திலும், பாப்ரி மசூதி ஓரிரவில் எப்படித் தரை மட்டமானது என்பதை யாவரும் அறிவார்! ஆயினும் ரவி ஸ்ரீநிவாஸ் காட்டிய 1996 ஆண்டு AERB, DAE அணுத்துறை ஆதிக்க வாதங்களில் மறுக்கப் பட்ட போதிலும், தனித்துவச் செயலாளர் பலர் நியாயமாக, வலுவாக எடுத்துக் கூறிய வாசகங்கள் அச்சாகித் தெரியவந்தது, பாரதத்தில் ‘குடியரசுக்கு ‘ மதிப்புள்ளதையே தெளிவாகக் காட்டுகிறது.

அணு உலைகளை, அணுத்துறைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அரிய ‘அணுசக்திச் சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] சீராகப் பாரதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. மாந்தருக்கு அணுத்துறைக் கதிரியக்கத்தால் உடற்பாதிப்புகள் நேர்ந்தால், அவர்கள் அரசாங்கத்தின் மீதும் வழக்குத் தொடர்ந்து, ‘பணநட்ட ஈடு ‘ பெற்றுத் தமது பிறப்புரிமைகளை நிலைநாட்டலாம். இந்தியா தேசம் இன்னும் அநாகரீகக் காட்டுமிராண்டி நாடாக மாறவில்லை! அதே சமயம் இந்தியா ஆன்மீகம் செழித்த பொற்றாமரைப் பூமியும் அன்று!

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுரைக்கு மூன்று முக்கிய தலைப்புகளில் எனது பதிலுரையைத் தருகிறேன். 1. இந்திய அணுமின் உலைகள் பழைய 1957 ஸிப்பிங்போர்ட் மாடலா ? 2. அமெரிக்க முறையில் NRC/DOE [Nuclear Regulatory Commission, Dept of Energy] போன்று இந்தியாவின் AERB [Atomic Energy Regulatory Board] இயங்க முடியுமா ? 3. அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் திண்டாடும் அணுத்துறைத் தளங்களில் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

இந்திய அணுமின் நிலையங்கள் பற்றித் தவறான தகவல்கள்!

முதலாவது கிறிஸ்டியன் விஞ்ஞான மானிடரில் [Christian Science Monitor] வந்ததாக ரவி ஸ்ரீநிவாஸ் தந்த செய்தி. ‘இந்தியாவில் 14 அணுமின் நிலையங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை 1957 இல் உருவான ஷிப்பிங்போர்ட் அமெரிக்க அணுமின் நிலைய மாடல் [Shippingport Power Reactor] அமைப்பில் கட்டப் பட்டவை! ….. அவற்றில் மூன்று அணுமின் உலைகள்தான் நெறிநிலைக்கு [International Atomic Energy Agency (IAEA) Standard] உட்பட்டவை!

இது முற்றிலும் தவறானது. திண்ணையில் வந்த எனது அணுசக்திக் கட்டுரைகளை அவர் மெய்யாகப் படித்திருந்தால், இவ்விதப் பெரும் பிழைக் கருத்துக்களை எழுதித் தன் அறியாமையை வெளிப்படுத்திருக்க வேண்டாம். பாரத அணுவியல் திட்டங்களை விளக்கும் எனது அணுசக்திக் கட்டுரைகளைப் படிக்காத பலரில் ஒருவர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை அறிய வருத்தம் அடைகிறேன். புளுகு அறிக்கைகளை ஆங்கில அகிலவலைப் பின்னல்களில் படித்த ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுமின் உலைகள் எந்த மாடல்களில் டிசைன் செய்யப் பட்டவை என்று அறியாமல், பாரத அணு உலைகள் எவற்றையும் ஒருமுறை கூடப்

பார்த்து அறியாமல் இந்திய அணுசக்தித் துறைகள் எவ்விதம் அமைக்கப் படவேண்டும், எவ்விதம் கட்டுப் படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுகிறார்!

இந்திய அணுமின் உலைகள் எத்தனை வகையானவை ? அவை திருத்தம் அடைந்து எப்போது செம்மைப் படுத்தப் பட்டன என்பது ரவி ஸ்ரீநிவாஸ் அறியாதவர் என்பது திண்ணை வாசகர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆராய்ச்சி அணு உலைகள், அணுமின் நிலை உலைகள் என்று பெரும் பிரிவாக இரண்டு வகைகள். 1979 ஆம் ஆண்டில் நேர்ந்த அமெரிக்கன் திரிமைல் தீவு அணு உலை [American Three Mile Island Reactor (TMI)] விபத்துக்குப் பிறகு, IAEA வெளியிட்ட திருத்தங்களைப் பாரதம் ஆராய்ந்து அனைத்து அணுமின் நிலையங்களும் சில பாதுகாப்பு முறைகளில் செம்மைப் படுத்தப் பட்டன. [1979-1982] ஆண்டுகளில் TMI விபத்து ஆய்வுக்குழுவில் ஒருவனாகப் பணியாற்றி, புதிய பாதுகாப்பு டிசைன் மாறுதல்களைப் புகுத்திய எஞ்சினியர்களில் ஒருவனாக வேலை செய்தேன்]. அடுத்து 1986 இல் செர்நோபிள் அணுமின் உலை வெடிப்புக்குப் பிறகு மீண்டும் IAEA பல திருத்தங்களை வெளியிட்டது. அதன் பின்னும் இந்திய அணுமின் உலைகளின் பாதுகாப்பு முறைகள், நெறிகள் மாற்றம் அடைந்து செம்மைப் படுத்தப் பட்டன. ஐம்பது ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று, மாறி வரும் எந்த தொழில் நுணுக்கமும், அந்தந்த நாட்டு அணு உலைகளுக்கு ஏற்ப, நிதிவள இருப்புக்கு ஏற்ப ஓரளவுதான் மேம்படுத்த முடியும்!

India’s operating nuclear power reactors:

Reactor State Type MWe net, each Commercial operation Safeguards status
Tarapur 1 & 2 Maharashtra BWR 150 1969 item-specific
Kaiga 1 & 2 Karnataka PHWR 202 1999-2000
Kaiga 3 Karnataka PHWR 202 2007
Kakrapar 1 & 2 Gujarat PHWR 202 1993-95 in 2012 under new agreement
Kalpakkam 1 & 2 (MAPS) Tamil Nadu PHWR 202 1984-86
Narora 1 & 2 Uttar Pradesh PHWR 202 1991-92 in 2014 under new agreement
Rajasthan 1 Rajasthan PHWR 90 1973 item-specific
Rajasthan 2 Rajasthan PHWR 187 1981 item-specific
Rajasthan 3 & 4 Rajasthan PHWR 202 1999-2000 early 2010 under new agreement
Rajasthan 5 & 6 Rajasthan PHWR 202 Feb / Mar 2010 Oct 2009 under new agreement
Tarapur 3 & 4 Maharashtra PHWR 490 2006 / 2005
Total (20) 4780 MWe

Kalpakkam also known as Madras/MAPS
Rajasthan/RAPS is located at Rawatbhata and sometimes called that
Kaiga = KGS, Kakrapar = KAPS, Narora = NAPS
dates are for start of commercial operation.

முற்றிலும் வேறான பலவித அணுமின் உலைகள் யாவும் பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் என்றும், மூன்று அணுமின் உலைகள்தான் IAEA நெறிப்பாடுகளுக்கு உட்பட்டவை, மற்றவை AERB விதித்த தேசிய நெறிப்பாடுகளைப் [National Standards] பின்பற்றுவவை என்றும் ரவி ஸ்ரீநிவாஸ் தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக் கிறார்! AERB கட்டுப்பாடு விதிகளைப் போட்டுள்ளதே தவிர, அணுமின் நிலைய டிசைன் அமைப்புகளுக்கு, [1955 முதல் IAEA இல் ஓர் முக்கிய அங்கம் வகிக்கிறது, இந்தியா] IAEA நெறிப்பாடுகளை அனைத்து அணு உலைகளுக்கும் பயன்படுத்த மேற்பார்த்து வருகிறது. மேலும் ‘அணுவியல் இயக்குநரின் அகிலக் கூட்டவையின் ‘ WANO [World Associations of Nuclear Operators (http://www.wano.org.uk/)%5D அரிய நெறிப்பாடுகள் பாரதத்தின் புதிய அணுமின் உலைகளில் [1989 ஆண்டுக்குப் பிறகு] கையாளப்பட்டன.

இந்திய அணு உலைகள் எப்போது திருத்தப் பட்டவை ?

1. ஆராய்ச்சி அணு உலைகள் [Atomic Research Reactors]: அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா,காமினி போன்றவை [Apsara, Zerlina, CIRUS, Dhuruva, Purnima, Kamini] இந்த ரகத்தைச் சேர்ந்தவை. நியூட்ரான் தாக்கல் சோதனைகளுக்குப் பயன்படும் இந்த அணு உலைகளில் வெப்பசக்தி மட்டும் வெளியாகும். மின்சார உற்பத்தி எதுவும் கிடையாது. ஸைரஸ், துருவா அணு உலைகளில் புளுடோனியம் எரிக்கழிவில் கிடைக்கிறது. ஸைரஸ் அணு உலை மட்டும் கனடாவின் நிதிக்கொடையில், கனேடியப் பொறியியல், விஞ்ஞான நிபுணர்களால் டிசைன் செய்யப்பட்டு கட்டப் பட்டது. துருவா உள்பட மற்ற நான்கும் முழுக்க முழுக்க இந்திய டிசைனில் உருவானவை.

2. அணுமின் நிலைய உலைகள் [Nuclear Power Reactors]: தாராப்பூர் [மகாராஷ்டிரா], ராவட்பாடா [ராஜஸ்தான்], கல்பாக்கம் [சென்னை], நரோரா [உத்தர் பிரதேஷ்], கக்கரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], கூடங்குளம் [சென்னை] ஆகியவை யாவும் (160-220) MWe மின்சக்தி உற்பத்தி செய்கின்றன. மேலும் அவற்றின் அணுக்கழிவில் புளுடோனியம் கிடைக்கிறது.

தாராப்பூரில் இரண்டு (1960-1965) திருத்த மாடல் BWR கொதிநீர் உலைகள் (G.E. First Generation Boiling Water Reactor) [1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல] உள்ளன. எளிய நீரில் [Light Water] இயங்கும், இந்த அணுமின் உலைகளுக்குத் தேவையான 2.4% செறிவு யுரேனியம் [Enriched Uranium] அமெரிக்காவிலிருந்து வர வேண்டியிருப்பதால், BWR கொதிநீர் மாடல் அணு உலைகள் பின்னால் கட்டப் படவில்லை! 1969 ஆண்டு முதல் மின்சாரம் பரிமாறி வயதாகிப் போனதால், அதன் 210 MWe மின்னாற்றல் 160 MWe ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் தாராப்பூர் கொதிநீர் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

தாராப்பூரில் புதிதாய்க் கட்டப்படும் இரட்டை 500 MWe மின்னாற்றல் அணுமின் நிலையங்கள் கனடாவின் கான்டு அணு உலைகளின் டிசைன் [Canadian Deuterium Uranium CANDU Reactors] கையாளப் பட்டுகிறது.

இந்த அணு உலைகளுக்கு செறிவு யுரேனியம் தேவை யில்லை. பூமியில் கிடக்கும் இயற்கை யுரேனியம் போதுமானது. ஆனால் இதற்கு தேவைப்படும் விலை மிகுந்த கன நீர் [Heavy Water], இந்தியாவிலே உற்பத்தி செய்யப் படுகிறது. இவை இரண்டும் 1980 ஆண்டு முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு மாடல் டிசைன்களைப் பின்பற்றிக் கட்டப் படுகின்றன [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் கான்டு அணுமின் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

ராஜஸ்தான், சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள இரட்டை அணுமின் உலைகள் 1965 முதற் பிறவி கனேடியன் டிசைன் கான்டு அணு உலைகள். [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களுக்குப் பிறகு சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. முதற் பிறவி ராஜஸ்தான் யூனிட் 1 கவசத் தட்டில் கசிவுகள் தொடர்ந்து வழிந்ததால், நிரந்தரமாக மூடப் பட்டது. கல்பாக்க இரட்டை யூனிட்டுகளின் 220 MWe மின்னாற்றல் 170 MWe ஆகக் குறைக்கப் பட்டது.

நரோரா, கக்கரபார், கைகா ஆகியவற்றின் (220 MWe) இரட்டை அணு உலைகள், ராஜஸ்தான் புதிய யூனிட் 3, யூனிட் 4 (220 MWe) அணு உலைகள் அனைத்தும் 1980 முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு கனநீர் அழுத்த அணு உலைகள். ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் நரோரா கனநீர் அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த பெரிய தீ விபத்து யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

கூடங்குளம் இரட்டை அணுமின் உலைகள் (1100 MWe) மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் செம்மை ஆக்கப்பட்ட VVER டிசைனைப் பின்பற்றியவை. இது செர்நோபிள் வெடி விபத்திற்குப் பிறகு சீராக்கப்பட்ட ரஷ்ய அணுமின் நிலையம். இது அழுத்தநீர் அணு உலை PWR [Pressurized Light Water Reactor] ரகத்தைச் சேர்ந்தது. இது இயங்க (2%-4%) செறிவு யுரேனிய எரிகோல் தேவைப்படுகிறது. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் கூடங்குள VVER அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் செர்நோபிள் போல் பெரிய விபத்து நிகழுமா என்பவற்றை ஆய்வு செய்து எழுதி யிருக்கிறேன்.

இந்திய அணு உலைகளை மேல்நாட்டு நெறிநிலைக்கு இணையாக இயக்க முடியமா ?

‘இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை ‘ என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி [Christopher Sherry, Research Director of the Safe Energy Communication Council, Washington] என்று சுட்டியுள்ளதை ரவி ஸ்ரீநிவாஸ் எடுத்துக் கூறி யிருக்கிறார்! What A Great Discovery by Ravi Srinivas! அதற்கு முக்கிய காரணம் நமது பாரதக் கலாச்சாரம்! No Big Deal! நாம் ஆங்கிலம் பேசினாலும், ஆங்கிலச் சினிமா பார்த்தாலும் இந்தியர் இந்தியரே! [Good Feathers Do Not Make Good Birds!]. நாம் என்ன வேடம் போட்டு நாட்டியம் ஆடினாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ ஆகவே முடியாது! நாம் அன்னிய தொழிற்துறைகளை அப்படியே அசல்நகல் எடுத்து பாரத மண்ணில் ஊன்றியவுடன் அவை கலாச்சாரத்தால் மாறுபடுகின்றன! நமது ஜாதி, மதம், இனம், மொழி, மாநிலப் பிரிவு, யூனியன் அமைப்பு, யூனியன் பிளவு யாவும் அன்னியத் தொழிற்துறைகளை இந்திய மயமாக்குகின்றன! போபால் இரசாயனத் தொழிற் சாலை விபத்துக்கு இம்மாதிரி கலாச்சார மாறுதல் ஒரு முக்கிய காரணமானது! இது ரவி ஸ்ரீநிவாஸுக்குப் புரியாமல் போனதில் வியப்பில்லை!

அணு உலையை இயக்குபவர், பணியாளிகள் அனைவரும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாமல் இந்திய மொழியில் ஊட்டி வளர்க்கப் பட்டவர்! விஞ்ஞானிகளும், எஞ்சினியர்களும் ஆங்கிலம் படித்த அளவுக்குச் சமமாக அவருக்குக் கீழ் பணி செய்பவர் பலர் ஆங்கிலம் பேச முடிவதும் இல்லை! படிக்க முடிவதும் இல்லை! பணியாட்கள் பலரிடம் ஆங்கில மூலம் தொடர்பு கொள்வது முடியாததால், பொறி நுணுக்கங் களில் பூரணப் பயிற்சி முறைகள் அவருக்குத் தர முடிவ தில்லை! பயிற்சி அளிப்பதற்கு உரிய அடிப்படை விஞ்ஞான அறிவு பணியாட்களுக்குக் கிடையாது! குட்டுத்தனமாக வேலை செய்யும் பணியாளிகள் பலர்! புரியாமல் வேலை செய்பவர் பலர்! அமெரிக்காவிலோ, ஈரோப்பிலோ வேலை செய்யும் பணியாளிகளின் அடிப்படை விஞ்ஞானப் படிப்பறிவு மிகையானது.

அடுத்தது பணியாட்களின் பொறி நுணுக்க அனுபவத் திறன்! தொழிற்சாலையில் பணி புரியும் [குப்பை அள்ளும் பணியாளி உட்பட] அத்தனை பேரும் கார் ஒட்டுகிறார்கள். பெரும்பாலோர் காரைத் தாமே பழுது பார்த்துச் செப்பணிடுகிறார்கள். உதவி யில்லாமல் கூடியவரைத் தாமே படித்து எந்த பொறி யந்திரத்தையும் அவர்களால் இயக்க முடிகிறது! தொழிற்கூடங்களில் மேற்பார்வையாளர் அருகே கண்காணிப்பின்றித் தாமே வேலையை முடித்து, ஆங்கிலத்தில் லாக்புக்கில் [Log Book] பதிவு செய்கிறார்கள். நமது தொழிற்சாலையில் ஒரு பணியாள் செய்யும் வேலைக்கு மூவர் [பணியாள், உதவி ஆள், மேற்பார்வை ஆள்] தேவைப் படுகிறது! மேற்பார்வை ஃபோர்மன் கண்பார்வையிலிருந்து நீங்கி விட்டால், பணியாள் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பது யாவருக்கும் தெரியும்! தொழிற்துறை யுகத்தைத் தோற்றுவித்து முன்னேறிய ஈரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பணிநெறிகள் [Work Ethics] வேறு! தொழிற்துறை யுகத்தைப் புரியாமல் காப்பி அடித்து, வற்புறுத்திப் புகுத்தப்படும் இந்திய மாந்தர் பணிநெறிகள் [Work Ethics] வேறு!

 

ஆகவே இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே நோய் பீடித்துள்ளது! கதிரியக்கத் தளங்களில் கனடா, அமெரிக்க நாடுகளில் ஒருவன் வேலை செய்து பாதுகாப்பான கதிரடி வாங்கும் போது, இந்திய அணுமின் உலைகளில் அதை விட அதிகமானக் கதிரடி மூன்று பேர் வாங்கிக் கொள்கிறார்கள்! [காரணம் ஒருவர் முடிக்கக் கூடிய பணியை மூவர் செய்யும் போது கால நேரமும் நீடிக்கிறது!]. ஆகவே நாம் எந்தப் போர்வையைச் சுற்றிக் கொண்டாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ இந்திய மண்ணில் காலை வைத்துக் கொண்டு நடிக்க முடியாது! அதே சமயத்தில் அமெரிக்கா கனடாவுக்குப் பயிற்சிக்கு வந்த, பாரதப் பணியாட்கள் வட அமெரிக்க மண்ணில் கால்வைத்து, இங்குள்ள வெள்ளையருடன் வேலை செய்யும் போது, அவர்களைப் பார்த்துத் திறமையாக வேறு விதமாகப் பணியாற்றினர்! மீண்டும் இந்தியாவுக்கு வந்து பாரத அணு உலைகளில் பணியைத் துவங்கும் போது, அவரது நாய்வால் மறுபடியும் முன்புபோல் சுருண்டு கொண்டது!

இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி என்று குறிப்பிட்டது முற்றிலும் மெய்யானது. அதன் காரணத்தை அறியாமல் அதைத் தவறாக எடுத்துக் காட்டிய ரவி ஸ்ரீநிவாஸ், இந்தியத் தொழிற் சாலைப் பணி நெறிகளை மாற்றுவது கடினம் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

அணுத்துறை நெறிக்குழுவை தனித்தியங்க விடுதலை செய்!

(1993-1996) ஆண்டுகளில் AERB அதிபராய்ப் பணிசெய்த டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் ‘அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணைக்குழுவைத் தனித்தியங்க விடு ‘ [ ‘Set AERB Free ‘] என்று முன்னாள் அணுசக்திக் கமிஷன் அதிபதி டாக்டர் R. சிதம்பரம் அவர்களிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அவரது ஆலோசனை சரியா, தப்பா என்பதைச் சற்று ஆராய்வோம்.

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஓர் அணுவியல் எஞ்சியனர். நான் 1957 இல் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் [Bhabha Atomic Energy Centre] சேர்ந்து, ஸைரஸ் [CIRUS] அணு ஆராய்ச்சி உலையில் பணி செய்து வந்த காலத்தில் [1958-1966] கோபாலகிருஷ்ணன் சேர்ந்து என்னுடன் வேலை செய்தவர். ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்த பின், மேற்படிப்புக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்று டாக்டர் பட்டம் [Ph.D. in Nuclear Engineering] பெற்று, பல ஆண்டுகள் கழித்து பாரதத்திற்கு மீண்டவர். அவர் இந்திய அணுமின் நிலையங்களில் என்னைப் போல் எஞ்சினியரிங் பணி புரியா விட்டாலும், அமெரிக்க அணு உலைகளில் அவருக்குப் பயிற்சி உண்டு. அவர் கூறிய ஆலோசனை அமெரிக்காவுக்குப் பொருந்துகிறது. ஆனால் இந்திய அமைப்புக்கு அந்த மாறுதலால் பெறும் பயன்கள் மிகக் குறைவே! அதற்குப் பல காரணங்கள் கூறலாம்.

அமெரிக்கக் குடியரசும், பாரதக் குடியரசும் ஒத்தவைபோல் தோன்றினும் அவை வேறுபட்டவை! பாரதத்தில் கதம்பக் கட்சிகளின் கூட்டாட்சி ஆளும்போது, அமெரிக்காவில் போட்டி யிடுபவை இரண்டு கட்சிகளே! ஆகவே பல காரியங்களை இணைந்து செய்வது எளிதாகிறது. அமெரிக்காவில் அணுமின் நிலையங்களைக் கட்டி இயக்கி வருபவர் அனைவரும் தனியார் நிறுவனங்கள். அரசாங்கம் சில ஆராய்ச்சி அணு உலைகள், புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Enrichment Plants], யுரேனியச் செறிவுச் சாலைகள் [Uranium Enrichment Plants], அணு ஆயுத உற்பத்திச் சாலைகள் ஆகியவற்றைத் தனக்குக் கீழ் வைத்துள்ளது. ‘தேசியப் பாதுகாப்பு விதியைக் ‘ [National Security] கையாண்டு அமெரிக்க அரசு அவற்றை எரிசக்தித் துறையகத்தின் DOE [Dept of Energy] கீழ் கட்டுப்படுத்தி வருகிறது. அமெரிக்க NRC [Nuclear Regulatory Commission] அணுமின் நிலையங்களின் உரிமைக்கார தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தித் தண்டனைகள், அபராதங்கள் விதிக்க முடியும். ஆனால் DOE கண்காணிக்கும் ஆய்வு உலைகளையோ, புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்களையோ NRC முழுக் கட்டுப்பாடு செய்ய முடியாது. ஆலோசனைகள் மட்டுமே அளிக்க முடியும்.

1948 ஆகஸ்டில் விஞ்ஞான ஆய்வுத்துறையின் கீழ் [Dept of Scientific Research] இந்திய அணுசக்திக் கமிஷன் [Atomic Energy Commission] முதலில் அமைக்கப் பட்டது. 1954 இல் தோன்றியது, அணுசக்தித் துறையகம் DAE [Dept of Atomic Energy]. பிறகு அதன் கீழ் 1958 மார்ச்சில் அணுசக்திக் கமிஷன் திருப்ப மானது. முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணுசக்திக் கமிஷனுக்கு [Atomic Energy Commission] 1958 இல் டாக்டர் ஹோமி. ஜெ. பாபாவை முதல் அதிபதி ஆக்கினார். அணுசக்திக் கமிஷன் அதிபதியே, பிரதம மந்திரியின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இந்திய அணுமின் நிலையங்களை, அரசாங்கப் பங்கீடு கொண்ட NPCIL [Nuclear Power Corporation of India Ltd] பொதுத்துறை நிறுவகம் கண்காணித்து வருகிறது. DAE ஆராய்ச்சி அணு உலைகள், வேகப் பெருக்கி சோதனை ஆய்வுலை [FBTR], வேகப் பெருக்கி அணுமின் நிலையம், புளுடோனியச் சுத்தீகரிப்புச் சாலைகள், IREL [Indian Rare Earths Ltd], ECIL [Electronic Corporation of India Ltd], UCIL [Uranium Corporation of India Ltd], Heavy Water Plants [National Fertilizer Ltd], NPCIL [Nuclear Power Corporation of India Ltd] அனைத்தையும் மேற்பார்வை செய்கிறது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களா அணுமின்சார உற்பத்தி செய்கிறது ?

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் [Security Act], இந்திய அரசாங்கம் புளுடோனியம் ஆக்கும் அணு உலைகளையும், அணுமின் உலைகளையும், புளுடோனியத்தைப் பிரிக்கும் மீள் சுத்தீகரிப்புச் சாலைகளையும், தன்கைக்குள் [DAE] வைத்துள்ள போது, AERB மட்டும் தனியாக்கப் பட்டு எப்படி அரசாங்கக்தைக் கட்டுப்படுத்த முடியும் ? DAE அணுத்துறையைக் கட்டுப்படுத்தினாலும், AERB தனிப்பட்டு ஆட்சி செய்தாலும், அவருக்குக் கையுதவி இப்போதுள்ள பைபிள் வேத நூல் ‘அணுசக்தி சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] ஒன்றுதான்! பாரத அரசாங்கம் அணு ஆயுத நாடாக மாறி, அணு ஆயுத உற்பத்தியை இரகசியமாய்ச் செய்து வருவதால், ‘தனித்துவ நெறிப்பாடு ஆணைக்குழு ‘ இந்தியாவில் அமைக்கப் பட்டு, பாதுகாப்பு ஆலோசனைகள் தந்தாலும், பாரத அரசாங்கம் அவற்றை யாவும் ஒப்புக் கொள்ளும் என்று உறுதி கூற முடியாது! மெய்யாக தற்போதுள்ள AERB அதே முறையில்தான் DAE மேற்பார்க்கும் அணு உலைகளையும் [அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி (Apsara, Zerlina, Cirus, Dhruva, Purnima I,II,III, Kamini, FBTR)] மற்ற புளுடோனிய, யுரேனிய, தோரிய உற்பத்தித் தொழிற்கூடங்களையும் முழுக்கட்டுப்பாடு இன்றி கண்காணித்து வருகிறது.

பாபா அணுசக்திக் கூட/கல்பாக்க ஆய்வு அணு உலைகளின் பாதுகாப்புகள்

அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி போன்ற ஆய்வு அணு உலைகளில் அப்ஸரா [1MW,47y], ஜெர்லினா [100W,42y], ஸைரஸ் [40MW,43y] ஆகிய மூன்றும் பழையவை. அடைப்பில் காட்டப் படுபவை [MW வெப்பவாற்றல், Year வயது]. மற்ற ஆய்வு அணு உலைகள்: துருவா [100MW, 18y], பூர்ணிமா-I [1W,31y], பூர்ணிமா-II [10mW,19y], பூர்ணிமா-III [1W,13y], காமினி [30KW,7y] புதியவையும் அல்ல, பழையவையும் அல்ல. வயதில் இரண்டுக்கும் இடைப்பட்டவை. ஆய்வு அணு உலைகளின் வெப்பவாற்றல் [Thermal Power] ஸைரஸ் [40MWt], துருவா [100MWt] இரண்டையும் தவிர மற்றவை யாவும் மிகக் குன்றியவை! அக்குன்றிய ஆற்றலைத் தர மிகக் குறைந்த அணுவியல் எருநிறையே [புளுடோனியம்-239, யுரேனியம்-233] பயன்படுகிறது! ஆதலால் பிரமாண்டமான 200 MWe, 500 MWe, 1100 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் போன்று பல்விதப் பாதுகாப்பு அம்சங்கள் வேண்டியதில்லை! அணு ஆயுத நியூட்ரான் சோதனைகளுக்குப் பயன்படும் அந்த ஆய்வுலைகள் தொடர்ந்து இயங்குவதும் இல்லை. அதே சமயத்தில் புளுடோனியம் பிரித்தெடுக்கும் மீள் சுத்தீகரிப்புக் கூடங்கள், வேகப் பெருக்கி அணு உலைகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நெறிகள் அதிகம் கையாளப் படவேண்டும்.

திரிமைல் தீவு, செர்நோபிள் அணுமின் நிலையங்களின் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் நிலையங்களில் பெருத்த மாற்றங்கள் புகுத்தப் பட்ட போது, ஆய்வு அணு உலைகளில் அவ்வித மிகையான பாதுகப்புகள் அமைக்கத் தேவைப் படவில்லை. காரணம் அவற்றில் மின்சக்தி உற்பத்தி யில்லாததால் பல உபகரணங்கள், சாதனங்கள் கிடையா.

அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆதரிக்கும் அமெரிக்க அணுத்துறைக் கண்காணிப்பு, தணிக்கை நெறி முறைகள் உயர்ந்தவைதான். ஆனால் பின்னால் நான் காட்டும் மெய்யானப் பிரச்சனைகளைப் பார்த்தால், அமெரிக்கன் நெறிக்கட்டுப்பாடு முறைகளிலும் ஓட்டைகள் உள்ளன வென்று தெரிகிறது! அமெரிக்க NRC/DOE/Military [Nuclear Regulatory Commission /Dept of Energy] தணிக்கை நெறி முறைகளை ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய அணுத்துறை இயக்கங்களில் புகுத்த வேண்டும் என்று உதாரணம் காட்டி யிருக்கிறார். கீழே நான் எடுத்துக் காட்டும் மெய்யான நிகழ்ச்சிகளைப் படித்தபின் அமெரிக்கக் கண்காணிப்பு முறைகளைப் பாரதம் பின்பற்ற வேண்டுமா என்று வாசகர்களே தீர்மானம் செய்யலாம்! தனியார் துறைக்குழுத் தணிக்கையோ, தனிப்பட்ட அணுத்துறைக் குழுவினர் தணிக்கையோ என்ன ஆணைகள் விதித்தாலும், இறுதியில் நிதி ஒதுக்கம் இல்லாதால், பாதுகாப்புப் பணிகள் யாவும் நடத்தப் படாமல் முடங்கிக் கிடக்கின்றன! நிதிமுடைகள் செல்வம் கொழித்த அமெரிக்கவிலே உள்ள போது, பாதுகாப்பை முன்னிட்டு கவசங்களைப் பூரணமாகப் பாரதம் அமைக்க மறுக்கிறது என்று குறை கூறுவதில் அர்த்தம் இல்லை!

1. அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

2. நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிக்க 1942 ஆண்டு முதல் அணுவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், 1982 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அரசு தனது, ‘கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதியை ‘ [Nuclear Waste Storage Policy] முதன் முதலில் தயாரித்து வெளியிட்டது.

3. 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு 200,000 அமெரிக்க ராணுவத்தினர், பூமிக்குமேல் மேற்கொண்டும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்ய முற்பட்டனர்! அமெரிக்கக் காங்கிரஸின் ஓர் அறிக்கைப்படிச் சோதனைகளில் சில அமெரிக்கர் ‘பலி ஆடுகளாய்ப் ‘ பயன்படுத்தப் பட்டனர்! அமெரிக்க ஆற்றல் துறையகத்தின் [Dept of Energy (DOE)] நிபுணர்கள் யுரேனிய, புளுடோனியத் திரவங்களைச் சில அமெரிக்கருக்கு ஊசி மூலம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர்! அணுகுண்டு வெடிப்பின் கதிரியக்கப் பொழிவுப் பொருட்களைச் சிலருக்குத் தின்னக் கொடுத்து, அவர்கள் சோதிக்கப் பட்டனர்! கதிரியக்க வாயுக்களை சிலர் நுகரும் படிச் செய்யப் பட்டனர்! சோதனைக்குச் சிலர் கதிரியக்க மீன்களை உண்ணும்படி வற்புறுத்தப் பட்டனர்!

4. பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

5. அணு ஆயுதச் சோதனைகள், அணு ஆயுத உற்பத்திச் சாலைகள், மருத்துவத் துறையகங்கள், யுரேனியச் சுரங்கங்கள், யுரேனிய உற்பத்திச் சாலைகள், புளுடோனியச் சுத்திகரிப்புச் சாலைகள், நெவேடா அணு வெடிப்புப் பயிற்சித் தளம் ஆகியவற்றில் பணி புரிந்த மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள், கடந்த 55 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடி பெற்றுள்ளார்கள்! 1988 டிசம்பரில் அமெரிக்க ஆற்றல் துறையகம் DOE வெளியிட்ட அறிக்கையில் 16 அணு ஆயுதத் தொழிற் கூடங்களில் கதிரடி பட்ட 155 வேலை யாட்கள் கதிரியக்கத் தீங்குப் பட்டியலில் உள்ளதாக அறியப் படுகிறது! எல்லாவற்றை விடவும் மோசமாக, இதாகோ தேசியப் பொறியியல் ஆய்வகத்தில் [Idaho National Engineering Laboratory] கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் பாம்பு ஆற்றில் [Snake River] கலந்து விட்டதாகவும் அறிக்கை கூறியது!

6. வாஷிங்டனில் உள்ள ‘ஹான்ஃபோர்டு வேகத் திரட்சி அணு உலை ‘ [Hanford Fast-flux Reactor] விவாதத்துக்குள் மாட்டிக் கொண்ட ஓர் எருப்பெருக்கி வேக அணு உலை [Fast Breeder Reactor]! அங்கு பணி செய்யும் இயக்குநர், எட்வெர்டு பிரிக்கர் கூறுகிறார்: ஹான்ஃபோர்டு, அணு யுகத்தின் இருண்ட முகத்தை எடுத்துக் காட்டும் ஓர் உதாரணமாக உள்ளது! போதிய அணு உலைப் பாதுகாப்பு முறைகள் கிடையா! சாதனங்கள் பழையதாய்ப் போய் விட்டன! மேலதிகாரிகள் பொறுப்பான கண்காணிப்பும் அங்கு இல்லை! எட்வெர்டு முதலில் புளுடோனியம் உற்பத்தி சாலையில் வேலை செய்யும் போது, வேலையாளிகள் கவன மின்றிப் புளுடோனியம் கையாளுவதைக் கண்டு வெகுண்டார்! பாதுகாப்பு ஒழுக்க முறைகள் போதாதவை என்றார்! அணு உலை ஆட்சி செய்யும் இயக்குநர்கள் லைஸென்ஸ் பெறாமலே அங்கு பணி புரிந்து வருவதாகக் கூறினார்! நிலையத்தில் நிறுவனமான சாதனங்களைச் சரியாக எடுத்துக் காட்டாத பொறியியல் வரைபடங்கள் [Engineering Drawing] அங்கே பயன்படுத்தப் பட்டன என்றும் கூறினார்!

7. ஹான்ஃபோர்டு நிலையத்தில் 40 ஆண்டுகளாகச் சேர்ந்து விட்ட பிரம்மாண்டமான அணுவியல் கழிவுகள் [Nuclear Wastes] பெரும் பிரச்சனையை உண்டாக்கி விட்டன! அவற்றைச் அகற்றிப் புதைத்துச் சுத்தம் செய்ய 57 பில்லியன் டாலர் தேவைப் படுகிறது! போதிய நிதி ஒதுக்கப் படாததால், பிரச்சனை முற்றிக் கொண்டே போகிறது! ஹான்ஃபோர்டில் உள்ள 27 வீடுகளில் 25 இல்லங்களில் வசிப்போர், கதிரியக்கம் தாக்கி தைராய்டு சிகிட்சை பெற்றுக் கொண்டும், இருதய நோய் புற்று நோயில் அவதிப் பட்டுக் கொண்டும், பிறக்கும் பிள்ளைகள் அங்க ஈனமாய்ப் பிறப்பதால் வேதனை பட்டுக் கொண்டும் வருவதாக அறியப் படுகிறது!

8. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் சமயம், அணு ஆயுதத்துக்கு புளுடோனியம் தயாரித்த ஸ்போகேன், வாஷிங்டனில் [Spokane, Washington] சில குழந்தைகள் தமது தைராய்டு சுரப்பியில் வீரிய கதிரடி 256 rem வாங்கி யுள்ளதாக அறியப் படுகிறது! ஹான்போர்டு அணு உலைக்கு அருகில் வாழ நேர்ந்தால், ஒருவர் 2295 rem கதிரடி வாங்க வாய்ப்புள்ளது! 1987-1988 ஆண்டுகளில் அமெரிக்கக் காங்கிரஸ் 1.4 மில்லியன் டாலர் நிதி விடுவித்து ஹான்ஃபோர்டு கதிர்வீச்சுப் பிரச்சனைகளை உளவு செய்யுமாறு கட்டளை யிட்டது! அதுபோல் வாஷிங்டன், ஆரகன் [Oregon] மாநிலங்களும் 1987 இல் கதிரியக்கத் தீங்குகளை ஆய்வு செய்ய 15 மில்லியன் டாலர் திரட்டி உளவு செய்தன!

9. புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

Paradise Lost

திண்ணையில் எனது அணுவியல் கட்டுரைகள் என்ன பறைசாற்றுகின்றன ?

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம்.

அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

‘அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல ‘ என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது! மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும்!

இந்திய அணுசக்தித் துறைகளைப் பற்றிய தகவல்கள்:

1. Dept of Atomic Energy /Atomic Energy Commission [Atomic Energy Acts 1962] http://www.dae.gov.in

2. Atomic Energy Regulatory Board [AERB] Regulations in http://www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

3. Atomic Power Plants Performance Reports in http://www.npcil.org [Updated Sep 22, 2003]

4. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002]

5. Dr. Anil Kakodkar, Present Chairman, Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Dr. R. Chidambaram, Former Chairman, Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

7. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

Click to access annrpt.pdf

8. Kalpakkam, Indra Gandhi Centre for Atomic Research http://www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

9. Bhabha Atomic Research Centre, Bombay http://www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

10 National Geographic Magazines [June 1986, April 1989]

11. http://www.barc.gov.in/

12.  http://www.igcar.ernet.in/

13.  http://www.npcil.nic.in/

14.  https://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 16, 2016  [R-1]

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீளமான கடலடிக் கணவாய்

 

 Twin Tunnells

[World ‘s Longest Subsea Eurotunnel

Connecting Britain to Europe

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 

https://youtu.be/L7GFFntXi8I

UnderseaTunnel Link

முன்னுரை: 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் மேல் முதலாவது குகை அமைப்பு திட்டம் 1802 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது. அத்திட்டப்படி இடையில் இருந்த ஒரு தீவுடன் இணைத்து இரண்டு குகைகள் அமைத்துக் குதிரை வண்டிப் போக்குவரத்தைத் துவக்குவதாய் இருந்தது. சிறிது காலம் நீடித்த ‘அமியன்ஸ் சமாதானத் ‘ தருணத்தில் [Peace of Amiens] நெபோலியனின் திட்டத்தை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டிருந்தது! ஆனால் ஓராண்டுக் குள்ளே பிரிட்டன் மீது நெப்போலியன் கொண்டிருந்த வெறுப்பு மறுபடியும் திரும்பவே, அத்திட்டம் அத்துடன் கைவிடப்பட்டது!

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தொழிற்புரட்சி நுணுக்கம் மிகுந்து, இருப்புப்பாதை இரயில் யுகம் பிறக்கவே, பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளை இணைக்கும் கால்வாய்க் குகை [Channel Tunnel or Chunnel] ஒன்றைக் கட்டும் எண்ணம் மீண்டும் உருவெடுத்தது! அதே சமயத்தில் பகைவர் படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்துக்கு இயற்கையாகவே ஏற்பாட்டுள்ள கடல் அரணைக் கால்வாய் குகை நீக்கிவிடும் என்று சிந்தித்து, பிரிட்டனும் அந்தப் பாதுகாப்பு வேலியை இழக்கத் தயாராக இல்லை! அக்குறையைத் தவிர்க்க முன்னோடித் திட்டங்களில் குகைக் கணவாயை, யுத்த சமயத்தில் கடல் வெள்ளத்தால் மூழ்க்க பூதத் திறப்பிகள் [Giant Valves] அமைக்கப் பட்டிருந்தன!

1861 இல் ஜேம்ஸ் சாமர்ஸ் கடலடிக் கண்வாய் இரயில் பாதையை அமைக்க [The Channel Railway Connecting England & France By James Chalmers] முழு டிசைன் பணிகளைச் செய்து, விபரங்கள் அடங்கிய திட்டத்தைத் தயாரித்து, நிதி மதிப்பீடையும், நிதி சேர்ப்பு விளக்கத்தையும் வெளியிட்டார். அவரது திட்டத்தில் மாபெரும் இரும்புக் குழலை [Huge Iron Tube on the Seabed] கடல்தளத்தில் கிடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த டிசைனில் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்ததால் அத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது பிறகு கைவிடப் பட்டது!

1860, 1880, 1920, 1945 ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய புதிய முயற்சிகள் முளைத்து எழுவதற்கு முன்பே மறுபடியும் முடக்கப் பட்டன. இறுதியாக 1987 ஆம் ஆண்டில் முழு மூச்சில் பிரிட்டன், பிரான்ஸ் இரண்டு வல்லரசு நாடுகளும் கூடி உழைத்து, 150-250 அடி ஆழத்தில் இங்கிலீஷ் கால்வாய்க் கடலடியைக் குடைந்து இருபதாம் நூற்றாண்டின் சிரமமான, பிரமிக்கத் தக்க ஈரோ கணவாயை 1994 இல் கட்டி முடித்தார்கள். பிரிட்டனில் ஃபோக்ஸ்டோன், பிரான்ஸில் சங்கத் [Folkestone, Sangatte] ஆகிய இரு நகரங்களை இருப்புப் பாதை மூலமாக இணைத்து இரயிலில் பயணிகளும், வாகனங்களும், பளு பாரங்களும் போய்வர ஏதுவாக்கப் பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர், பிரென்ச் அதிபர் பிரான்கொ மிட்டிரான்ட் [Margaret Thatcher & Francois Mitterand] ஆகியோர் இருவரும் 1995 ஆண்டில் இரயில் போக்குவரத்துப் பாதையான ‘ஈரோ குகைக்குத் ‘ [Eurotunnel] திறப்பு விழாவை நிகழ்த்தினார்கள். 21 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடித்த ஈரோடன்னல், இருபதாம் நூற்றாண்டின் உன்னத பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது! அந்த நிதி மதிப்பு ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா மீதுள்ள பொன்வாயில் பாலத்தைக் [Golden Gate Bridge] கட்டிய தொகையைப் போல் 700 மடங்கு என்று கருதப்படுகிறது!

Eurotunnel -4

ஈரோக்குகை வழியாகச் செல்லும் இரயில் போக்குவரத்துகள்

ஈரோ குகை வழியாக நான்கு வகை வாகன வண்டிகள் அனுதினமும் பயணம் செய்கின்றன. மின்சார வண்டியான ‘மீட்சி இரயில் ‘ எனப்படும் ஷட்டில் [Le Shuttle], ஈரோப் கண்டம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்யும் டாசல் எஞ்சின் இழுக்கும் வேக வண்டி, ‘ஈரோஸ்டார் ‘ [Eurostar], பார இரயில் [Goods Train] ஆகிய பெரிய வாகனங்களும், பராமரிப்பு செய்யும் சிறிய பணி வண்டிகளும் குகைகளின் வழியாகச் செல்பவை. 7600 hp [Horse Power] இழுக்கும் ஆற்றல் கொண்டு 2000 டன் எடையுள்ள மீட்சி இரயில் குகைப் பாதை நிலையங்களுக் கிடையே மட்டும் திரும்பத் திரும்பப் பயணம் செய்பவை. கார்கள், பஸ்கள் கூட ஏற்றப் பட்டு மீட்சி வண்டி மூலமாக அனுதினம் கடலைக் கடக்கின்றன.

Eurotunnel -5

பிரான்ஸ், பிரிட்டன் இரட்டை நாட்டுக்குச் சொந்தமான, 3600 பேர் பணி புரியும் ஈரோடன்னல் கம்பேனி [Eurotunnel Consortium] இரயில் கணவாய்க் கண்காணிக்கும் பொறுப்பை 2086 ஆண்டுவரை ஏற்றுக் கொண்டுள்ளது. 2000 ஆண்டில் மட்டும் 2.8 மில்லியன் கார்கள், 80,000 பஸ்கள், 1.1 மில்லியன் டிரக்குகள் ஈரோக் கணவாய் வழியாகச் சென்றுள்ளன! அதே காலத்தில் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஈரோஸ்டார் இரயில் பயணத்தில் [Eurostar Rail Service] குகை வழியாக 7.1 மில்லியன் மாந்தர் பயணம் செய்ததாக அறியப் படுகிறது! மேலும் 2.9 மில்லியன் டன் பாரங்களும் இரயில் பளு வண்டிகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளன.

Cutawawy

கடலடிக் குகையைக் குடையும் தொழிற்துறை நுணுக்கம்

தளர்ந்த மண்ணடங்கும் [Soft Soil] கடலடியிலோ அல்லது ஆற்றுக்கு அடியிலோ கணவாய்க் குகையைக் குடைந்து அமைப்பது, இன்னல்களைத் தரும் ஓர் அசுரப் பணி! மனிதர் யந்திரங்களைக் கொண்டு தோண்டும் போது, திடாரென மண்திட்டுகள் சரிந்து விழுவதும், வெள்ளம் கசிந்து குகையை மூடுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் எதிர்பாராத இடர் நிகழ்ச்சிகள்! ‘கடற்புழு ‘ அல்லது ‘கடல் நத்தை ‘ [Shipworm or Marine Mollusks] எனப்படும் ‘குகை தோண்டிக் கூடு ‘ கண்டுபிடிக்கும் வரை நீருக்கு அடியில் குகையைக் குடைவது முடியாத வினையாகக் கருதப்பட்டது! அக்கருவி பாதுகாப்பு அரண் ஒன்றைக் கொண்டு குடைந்து வெட்டும் உளிப்பற்கள் உள்ளும், புறமும் நத்தைபோல் நகர வசதி செய்யப் பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்து, வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் அந்த விபத்தில் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டுக் குகையில் வெள்ளம் அடித்துச் சென்றது!

அத்தகைய பாதுகாப்பு வெட்டுக் கருவியை 1825 இல் அமைத்த முதல் பிரிட்டிஷ் எஞ்சினியர், மார்க் இஸாம்பார்டு புருனெல் [Marc Isambard Brunel]. புருனெல் அக்கருவியைப் பயன்படுத்தி, உலகின் முதல் நீரடிக் குகையைத் தேம்ஸ் நதியின் கீழே குடைந்து அமைத்துக் காட்டினார். ஆனால் 1828 ஜனவரி 12 இல் குகையை ஆறு உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி ஆறு நபர்களை மூழ்க்கியது! நல்ல வேளையாக புருனெலின் புதல்வன் மூழ்காமல் தப்பினான்! பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்த தேம்ஸ் நதித் திட்டத்தில், ஐந்து முறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அடித்துச் சென்றது!

Eurotunnel -3

1864 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஞ்சினியர் பீட்டர் பார்லோ [Peter Barlow] என்பவர் புருனெல் கருவியைச் செம்மைப் படுத்தி ஒற்றை இரும்புத் தகடைப் பயன்படுத்தி நேருளை வடிவத்தில் [Cylinderical Shape] பாதுக்காப்பு வெட்டுக் கருவியை அமைத்தார். பார்லோவின் சீடரான ஜேம்ஸ் ஹென்ரி கிரேஹெட் [James Henry Greathead] இரட்டை நேருளை வெட்டுக் கருவியை ஆக்கி, கடலடித் தூண்கள் போன்று காற்றின் அழுத்த விசையைப் பயன்படுத்திக் கருவியின் உள்ளும், புறமும் ஒரே அழுத்தத்தை நிலைப்படுத்தி, நவீனப் பாதுகாப்பு வெட்டுக் கருவியைத் தோற்றுவித்தார்!

1919 இல் நியூ யார்க் ஹட்ஸன் நதிக்குக் கீழே மன்ஹாட்டன் பகுதியை நியூ ஜெர்ஸியுடன் இணைக்கும் ‘ஹாலண்டு குகையைக் ‘ [Holland Tunnel] கிலிஃபோர்டு ஹாலண்டு [Clifford Holland] ஆரம்பித்து, 1927 இல் பின்பு மற்றவர்களால் முடிக்கப் பட்டது! 1950 ஆண்டு முதல் வெட்டுக் கருவியின் வெளிப் பாதுகாப்புக் கவசம், ‘நுழைக்கும் குழல்களாக ‘ [Sunken Tubes] மாற்றப் பட்டன! துளையைக் குடைந்ததும் கருவியின் மேற்புறம் சுற்றியுள்ள பெரும் இரும்புச் குழல்கள் நுழைக்கப்பட்டு குகை மண்ணைத் தாங்கும் அரணாக அமைக்கப் படுகிறது! பிறகு முன்வார்த்த வளைத் தட்டுகள் [Prefabricated Sections] செருகி இணைக்கப் பட்டு, வட்டக் குகை இடைவெளி மண்ணால் நிரப்பப் படுகிறது.

Eurotunnel -2

பிரிட்டிஷ் கால்வாய்க் கடலடியில் அமைத்த மூன்று குகைகள்

24 மைல் அகன்ற இங்கிலீஷ் கால்வாய்க் கடலுக்கு அடியே செல்லும், உலகிலே மிகப்பெரும் நீளமுள்ள குகைப் பாதையைக் கட்ட சுமார் 250 ஆண்டுகளாக பிரான்சும் பிரிட்டனும் முயன்று வந்திருக்கிறார்கள்! ஜப்பானின் செய்கான் கடற்குகை [Seikan Tunnel] அதைவிட நீளமானதாக இருந்தாலும், மெய்யாகக் கடக்கும் கடல் அகலம் [15 மைல்] அதைவிட ஒன்பது மைல் குன்றியது! 18 பில்லியன் டாலர் [1990 நாணய மதிப்பு] நிதி மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட ஈரோடன்னல் முயற்சிபோல் வரலாற்றில் செலவு மிக்க எந்தத் தனியார் துறை நிதி திரட்டுத் திட்டமும் அதுவரை துவக்கப்பட வில்லை! இறுதியில் ஈரோடன்னல் அமைக்கச் செலவான தொகை: 21 பில்லியன் டாலர்! குகை அமைப்பைப் பின்பற்றி இரண்டு தடவை 1880, 1974 ஆண்டுகளில் நிலத்தைத் தோண்டத் துவங்கினாலும், தொடரப்படாமல் திட்டம் ஏதோ ஒரு காரணத்தல் நிறுத்தமானது! ‘டோவர் [பிரிட்டன்], காலே [பிரான்ஸ்] ஆகிய இரு நகரையும் கடலடி இரயில் குகை மூலம் இணைக்கும் பாதை போன்று, ஆழ்ந்த விருப்பு வெறுப்பு மிகுந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று 1936 இல் பிரிட்டிஷ் பிரமுகர், வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) ஆத்திரமாகக் கூறினாராம்!

உலகிலே நீண்ட குகை குடையப் பட்ட போது நிபுணர்களுக்குப் பெரும் சவாலாய் பல பிரச்சனைகளை உண்டாக்கியது! எவ்விதம் நூற்றுக் கணக்கான வேலை ஆட்களை உள்ளே அனுப்பி, வெளியே பாதுகாப்பாய்க் கொண்டு வருவது ? எவ்விதம் கட்டுமானச் சாதனங்களை குகைக்குள் அனுப்புவது ? எவ்விதம் மில்லியன் டன் கணக்கில் தோண்டிய மண்ணையும், புழுதியையும் தொடர்ந்து அகற்றுவது ? மாபெரும் யந்திர சாதனங்களை ஈரடிப்பும், நீரடிப்பும் மண்டிய புழுதியில், பல மைல் தூரம் குகைக்குள்ளே எப்படி இழுத்துச் செல்வது ? குகை தோண்டும் யந்திர வெட்டிகள் [Rotary Cutters], குப்பைமண் அகற்றிகள் [Conveyor Belts] அடிக்கடிச் சிக்கிக் கொள்ளும் போது, வெகு சிரமப் பணிகள் செய்து அவை தளர்த்தப்பட வேண்டும்!

இறுதியாக 1987 இல் பிரான்சும் பிரிட்டனும் இருபுறமும் தோண்ட ஆரம்பித்து, 1990 டிசம்பர் முதல் தேதி வரலாற்று முக்கிய நாளில், அட்லாண்டிக் கடலடில் 200 அடி ஆழத்தில் கைகோர்த்து இணைப்பு விழாவைக் கொண்டாடினர்! இரு குழுவினரும் திக்குத் தெரியாத வெப்பக் குகைக்குள்ளே தோண்டும் போது, ஒருவரை ஒருவர் மறைமுகமாக அணுகும்படித் தளநோக்குத் திசை அறிவிக்க [Survey Direction By Natigation Satellites, Triangulation & Plumb] நவீன அண்டவெளித் துணைக்கோள் பாதை காட்டும் நுணுக்க முறைகள் பயன்படுத்தப் பட்டன. லேசர் கதிருடன் இணைக்கப்பட்ட மின் கணனிகள் [Guided by Computer Linked Lasers] குகை குடையும் பணியாளிகளுக்கு தொடர்ந்து திசை காட்டின.

கணவாயின் இருபுறத்திலும் பூதப் புழுக்கள் போல் கடல் மடியைக் குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machines (TBM)] மணிக்கு 2400 டன் மண்ணைக் குடைந்து வெளியே தள்ளின! அந்தப் பூத யந்திரங்கள் சுற்றும் டங்ஸ்டன் வெட்டுப் பற்களைக் கொண்டவை! ஒரே சமயத்தில் குடைந்து, ஒரே சமயத்தில் மண்ணை அகற்றி, ஒரே சமயத்தில் குகைக்கு உட்கவசம் [Lining Shell] பூணும் திறமை கொண்டவை! குகை முடிந்ததும் சேர்ந்து போன மண்குவியல் 8 மில்லியன் கியூபிக் மீடர் கொள்ளளவுக் கோபுரமாக உயர்ந்தது! குகைப்பணி மையத்தில் முடிந்ததும் பிரிட்டிஷ் தோண்டும் யந்திரம் குகைக்குள்ளே புதைக்கப் பட்டது! பிரென்ச் யந்திரம் தொடர்ந்து தோண்டி கணவாய்க் குகையை முழுவதையும் தோண்டி முடித்தது!

இங்கிலீஷ் கால்வாயின் கடல்நீர்க் கடியில் 150-250 அடி ஆழத்தில் இறுகிய சுண்ணாம்பு அடுக்குகளைக் [Chalk Layers] குடைந்து, மூன்று இணையான குகைகள் [Three Parallel Tunnels] தோண்டப்பட்டன. குகைகளின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீடர்]. கடக்கும் கடலின் நீளம்: 24 மைல். 25 அடி விட்டமுள்ள இரண்டு இரயில் பாதைக் குகைகள், அவற்றுக்கு இடையே 50 அடி தூர மையத்தில் 16 அடி விட்டமுள்ள பணிக்குகை [Service Tunnel] ஒன்றும் ஆக மூன்று குகைகள் அமைக்கப்பட்டன. பணிக்குகையில் பராமரிப்பு, செப்பணிடும் வாகனங்கள் உலவ முடியும். மையக் குகை 1230 அடிக்கு ஒருதரமாக 270 இடங்களில் மற்ற பக்கத்துக் குகைகளோடு இணைக்கப் பட்டுள்ளது. பணிக்குகையில் காற்றழுத்தம் மற்ற இரண்டு குகைகளை விடவும் சற்று அதிகமாக்கப்பட்டு, அபாய நிகழ்ச்சியின் போது ‘அடைப்பு முறம் ‘ [Dampers] திறந்து இணைப்பாகி, பயணிகளுக்கு புதுக் காற்றையும், பாதுகாப்பையும் அளிக்க ஏதுவாகிறது.

இருபுறமும் அமைந்த இரயில் குகைகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இரயில் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் காற்றுப் போக்கு இழுப்பைத் [Aerodynamic Drag] தவிர்த்துச் சமநிலைப் படுத்த, ‘விடுவிப்புக் குழல் இணைப்புகள் ‘ [Relief Ducts Joints] அமைக்கப் பட்டுள்ளன. இரயிலின் பொதுவான வேகம் மணிக்கு 87 மைல்; உச்ச வேகம் மணிக்கு 100 மைல். பிரிட்டனிலிருந்து குகைவழியாகப் பிரான்சுக்கு இரயில் 35 நிமிடங்களில் வந்து விடுகிறது. நேர்த்திசை இரயில் ஒரு குகையிலும், எதிர்த்திசை இரயில் அடுத்த குகையிலும் செல்கின்றன. தேவைப் பட்டால் திசை மாற்றி இரயில் வேறு குகையில் செல்லவும் இருப்புப் பாதைக் குறுக்கு இணைப்புகள் செய்யப் பட்டுள்ளன.

முப்பத்து மைல் நீண்ட குகை, 24 மைல் நீளமான கடலுக்குக் கீழே 150 அடி முதல் 250 அடி ஆழத்தில் செல்கிறது. அவ்விதம் நீண்ட குகையில் புவிநிலை வாயு அழுத்தம் [Atmospheric Pressure] சீராகக் காற்று நுழையும் செங்குத்து ‘விடுவிப்பித் துளைகள் ‘ [Venting Shafts] இரண்டு நிலப் பகுதியில் [பிரிட்டன் கரையில் ஒன்றும், பிரென்ச் கரையில் ஒன்றும்] அமைக்கப் பட்டுள்ளன. ஈரோ குகையின் உள்ளே முப்பது மைல் பாதைகளில் எங்காவது தீ விபத்து நேர்ந்தால், பயணிகளையும் சாதனங்களையும் முதலில் பாதுகாப்பது, ஈரோடன்னல் அதிகாரிகளின் தலையாய பணியாகிறது! மின்சார இரயில் வண்டிகள் 25,000 வோல்ட் அழுத்தமுள்ள மேல்தளத் தொங்கு கம்பிகளில் மின்சக்தியை உறிஞ்சிக் கொண்டு மணிக்கு 100 மைல் உச்ச வேகத்தில் செல்லும் போது, மின்சாரத் தீ விபத்து நேர வாய்ப்புள்ளது! அடுத்து இரசாயனப் பளுக்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகளில் தீப்பற்றி எழவும் வாய்ப்புக்கள் உள்ளன!

ஈரோக்குகை ஆட்சி அரங்கு, பாதுகாப்பு மையங்கள்

இரயில் வண்டிகளின் பயணப் போக்குகள், வேகங்கள், திசைகள், ஓடு மிடங்கள் யாவும், ஈரோடன்னல் ஆட்சி அரங்கில் [Eurotunnel Control Centre] தொடர்ந்து அல்லும் பகலும் கண்காணிக்கப் படுகின்றன. மின்சாரச் சமிக்கை ஏற்பாடுகள் [The Electric Signalling System] அனைத்தும் பிரென்ச் கண்காணிப்பு ஏற்பாடுகளில் [French TVM-430] இயங்கி வருகின்றன. சமிக்கை மின்னோட்டங்கள் இருப்புப் பாதைகளுக்கு அருகே உள்ள சாதனங்கள் மூலம், ஓட்டுநர் காண எஞ்சின் ஆட்சி அரங்குக்கு அனுப்பப் படுகின்றன. வண்டியின் வேகம் உச்ச அளவைத் [மணிக்கு 100 மைல்] தாண்டும் போது, மைய ஆட்சி அரங்கின் சுயக் கட்டுப்பாடு சாதனம் எஞ்சின் சக்கிரங்களுக்குத் தடை உராய்வு அளித்து [Automatic Brake Application] வேகத்தைக் குறைக்கிறது!

ஈரோக் குகையின் இருபுறமும் தீவிபத்தைக் கட்டுப்படுத்த ‘தீ கண்காணிப்பு மையம் ‘ [Fire Management Centre] அமைக்கப் பட்டுள்ளது. அவற்றின் முக்கிய பணிகள்:

சுழலும் கூரிய தோண்டி

1. குகையில் அனைத்துத் தீப்புகை அறிவிப்புச் சாதனங்களையும், தீயணைப்பு பாதுகாப்புக் கருவிகளையும் [Monitor Fire Detection & Suppression Equipment] கண்காணித்து வருதல்.

2. எதிர்பாராது தீவிபத்து நேர்ந்தால், மைய ஆட்சி அரங்கிற்கு எச்சரிப்பது.

3. ஒவ்வொரு கண்காணிப்பு மையத்திலும், தீயணைப்புச் சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டு, போதிய தீயணைப்புப் படையினர் இராப் பகலாகப் 24 மணிநேரப் பணியில் தயாராக இருப்பது.

4. தீயணைப்பு மையங்கள் யாவும் வெளிப்புறம் நிறுவகமான எல்லா அபாய நிகழ்ச்சி மையங்களுடன் சுயமான எச்சரிக்கைத் தொடர்பைக் கொண்டிருப்பது.

செப்பணிடும் சிறிய நடுக்குகை

 Fire Escape

ஈரோக் கணவாயில் ஏற்பட்ட முதல் தீவிபத்து!

1996 நவம்பர் 18 ஆம் தேதி இரவு 8:45 மணி பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் பாரம் ஏற்றிச் சென்ற 29 பெட்டி மீட்சி இரயிலில் [29-Car Vehicle Shuttle (Carrier Wagon)] முதல் ஈரோடன்னல் தீ விபத்து ஏற்பட்டது! பிரான்ஸ் முனைக் கலே [Calais] நிலையத்தைக் கடந்து, குகைக்குள் நுழையும் போது பார வண்டியின் கடைசிப் பெட்டியில் தீ கிளம்பி யிருக்க வேண்டும் என்று தீயணைப்புப் படையினர் கருதுகிறார்கள். தீ எழுச்சி உடனே ஈரோகுகை ஆட்சி அரங்குக்கு அறிவிக்கப் பட்டது! தீயணைப்பு விதிகளின்படி, பார வண்டியின் பயணம் தொடர அனுமதிக்கப் பட்டுப் பிரிட்டன் நிலையத்தில் தீ அணைக்கப் பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது! அம்முடிவு எஞ்சின் ஓட்டுநருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் தீ பெருகி விட்டதாகத் தெரிகிறது!

குகையின் முனையில் தயாராக இருக்கும் பிரென்ச் பகுதியின் ‘முன்னோடிக் காப்புக் குழு ‘ [First Line of Response Team (FLOR)], மையத்தில் உள்ள பணிக்குகையில் தீக்கட்டுப்பாடு சாதனங்களைப் பயன்படுத்த எதிர்பார்த்திருந்தது. மையத்தில் இருந்த பிரிட்டன் பகுதி தீயணைப்புப் படையும் தயாராக இருந்தது. அச்சமயம் எஞ்சின் அறைக் கருவி அரங்கில், ‘வண்டியில் முரண்பாடு நிகழ்ச்சி ‘ இருப்பதாகக் காட்டி, ‘இரயில் தண்டவாளத்திலிருந்து புரண்டு விடும் ‘ என்று ஒரு சிவப்பு சமிக்கை எச்சரிப்பு விடுத்தது! விதிப்படி உடனே வண்டி குகை நடுவே ஓட்டுநரால் நிறுத்தப் பட்டது! அப்போது வண்டி அடைந்த தூரம் கலே யிலிருந்து 12 மைல்!

வண்டியின் மேற்பார்வை அதிபதி [Chef De Train] என்ன நிகழ்கிறது என்று கதவைத் திறக்க, புகை மண்டலம் உண்டி வாகனத்தில் நுழைந்தது! உடனே அதன் உள்ளிருந்த 33 நபர் பாதுகாப்பான மையக் குகைக்குள் அழைத்துச் செல்லப் பட்டனர். அப்போது எதிர்த்திசையில் வந்த இரயில் நிறுத்தப் பட்டு 33 நபர் அந்த வண்டியில் மீண்டும் கலே நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். தீப் பற்றிய பெட்டியும், மற்ற ஏழு பெட்டிகளும் தீயில் எரிந்து முழுவதும் மாய்ந்தன! கொளுந்து விட்டுப் பற்றிய நெருப்பு, குகையின் 1330 அடி [400 மீடர்] நீளக் காங்கிரீட் கவசத்தை 16 அங்குல ஆழத்துக்குச் சிதைத்தது!

தீக் கட்டுப்பாடு காலை 5:00 மணிக்கு செய்ய முடிந்து, 11:15 மணிக்குத் தீ முழுவதும் அணைக்கப் பட்டது! பதினைந்து நாட்கள் தீப் பற்றிய குகையில் பயணம் நிறுத்தமாகி, மறுபுறம் உள்ள குகையில் மட்டும் வாகனப் போக்குகள் தொடர்ந்தன. 1996 டிசம்பர் 10 முதல் மறுபடியும் இரயில் பயணங்கள் இரண்டு திசையிலும் சீராகின. சுற்றுப் பயண இரயில் போக்குகள் 1997 ஜனவரி 6 முதல் மறுபடியும் அனுமதிக்கப் பட்டன!

இங்கிலீஷ் கால்வாய்ப் பயணத்தின் எதிர்கால நிலைப்பாடு

1998 ஆண்டில் மட்டும் 3.45 மில்லியன் சுற்றுப் பயண வாகனங்கள் ஈரோ கணவாய் வழியாகச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. ஈரோடன்னலில் பயண மக்கள் அடர்த்தியும், வாகனப் போக்குகள் எண்ணிக்கையும் மிகையாகி வருவதால், புதிய ஏற்பாடுகளை பிரான்சும், பிரிட்டனும் சிந்தித்துக் கொண்டு வருகின்றன! ஏகக் குறுகிய இருப்புப் பாதையாய்த் தனித்தியங்கி வரும் ஈரோடன்னலுக்குப் போட்டியாக அடுத்தொரு கடற்குகை வெகு சீக்கிரத்தில் இங்கிலீஷ் கால்வாயில் வரப் போவதாக அறியப்படுகிறது! அத்திட்டத்தில் இரண்டு குகைகள் அமைக்கப்பட விருக்கின்றன. முதல் குகை: ஒரு திசையில் போகும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதைகளை ஒரு மட்டத்தில் கொண்டு, அதற்கு மேல் மட்டத்தில் எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களுக்கு இரட்டைப் பாதையும் அமைப்பதாக உள்ளது. இரண்டாம் குகை: முதல் குகைபோல் ஒரு திசையில் செல்லும் இரட்டை இருப்புப் பாதை ஒரு மட்டத்திலும், அடுத்த மட்டத்தில் எதிர்த்திசையில் செல்லும் இரயிலுக்கு இருப்புப் பாதை இரண்டும் கட்டப் போவதாகத் தெரிகிறது.

தகவல்:

1. The Seven Wonders of the World By Life [Dec 15, 2003]

2. National Geographic Sosiety -Underwater Tunnels, Marvels of Engineering [1992]

3. National Geographic France Celebrates Its Bicentennial [July 1989]

4. The E-Learing Zone -Facts & Figures of the Channel Tunnel [www.cornwallis.kent.uk/intranet/elearn/science/eurotunn] [2004]

5. Channel Tunnel (Chunnel) Vital Statics

6. English Channel Tunnel Fire National Fire Protection Association, Quincy, MA, USA. [Nov 16, 1996]

7. Le Shuttle Arriving in France -Jeremy Lennard & Agencies [Apr 7, 2004]

8. The Tunnel Boring Details, About Eurotunnel [Feb 23, 2004]

9. The History of Eurotunnel [www.eurotunnel.co.uk/]

10.  https://en.wikipedia.org/wiki/Eurostar  [March 8, 2016]

11.  https://en.wikipedia.org/wiki/Channel_Tunnel   [March 9, 2016]

*************

jayabararathans@gmail.com [S. Jayabarathan]  March 12, 2016 [R-1]

 

குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

 Rail tunnel -1

[Japan ‘s Seikan Subsea Mountain Tunnel]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++

https://youtu.be/HX-yhXFK7ss

https://youtu.be/7lcwecXiL0I

https://youtu.be/5nYGzo7QcUM

முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு போல் வளைந்த ஜப்பான் தேசம் சுமார் 7000 தீவுகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது! 127 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஜப்பான் தீவுகளின் பரப்பளவை ஒப்பிட்டால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு நிகராகும்! ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளும், அநேக சிறிய தீவுகளும் 2000 மைல் தூரம் நீண்டு வளைந்து பரவியவை! ஆண்டுக்கு 10,000 நிலநடுக்கங்கள் ஜப்பான் தீவுகளுக்கு அண்டையில் நேருகின்றன! அவற்றில் குறைந்தது 40 நிலநடுக்கம் ஜப்பான் நிலப் பகுதியில் மட்டும் ஏற்படுகின்றன! ஆயினும் நான்கு தீவுகளை இணைக்கும் நீளமான பாலங்களையும், ஆழமான கடற் குகைகளையும், மலைக் குகைப் பாதைகளையும், அவற்றின் ஊடே புகும் அதிவேக புள்ளெட் இரயில் வண்டிகளையும், [Bullet Trains] கோடிக் கணக்கான டாலர் செலவழித்து, ஜப்பான் நுணுக்கமாகக் கட்டிக் கண்காணித்து வருவது பேராச்சரியம் அளிக்கிறது!

1954 இல் அடித்தக் கடற் சூறாவளியில் சுகரு நீர்ச்சந்தியில் [Tsugaru Strait] ஜப்பானியரை ஏற்றிச் சென்ற ஐந்து மீட்சிப் படகுகள் [Ferry Boats] கவிழ்ந்து 1314 பேர் மூழ்கிப் போயினர்! பொது மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாய், ஜப்பான் அரசு அந்த நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தது! அம்முயற்சி பத்தாண்டுகளுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டில் வெளிப்பட்டு, உலகிலே நீண்ட செய்கன் கடலடிக் குகை, ஹோன்சூ தீவுக்கும் ஹோக்கைடு தீவுக்கும் இடையே [Between Honshu & Hokkaidu Islands] கட்டப்பட்டு, 1988 முதல் அனுதினமும் இரயில் வண்டிகள் அதன் வழியே போய் வருகின்றன. அடுத்துத் தென்திசையில் ஹோன்சூ தீவை ஷிகோகுத் தீவுடன் [Shikoku] இணைக்க 22.5 மைல் தூரத்தில் இடையிடையே நிலத்துடன் சேர்ந்த உலகிலே நீண்ட ஊஞ்சற் பாலங்களும், முறுக்குநாண் பாலங்களும் [Suspension & Cable-stayed Bridges] அமைக்கப் பட்டன. கடல் இடையே மிதக்கும் எண்ணற்ற தீவுகளையும், மலை இடையே அமைந்த நகரங்களையும் போக்குவரத்து மூலம் சேர்க்க பலவிதக் குகைகள், பாலங்கள், இரயில் பாதைகள் அமைத்த ஜப்பான் உலகில் சிறந்த சிவில் பொறியியல் நிபுணத்துவ நாடாகப் பெயர் பெற்றுள்ளது!

செய்கான் கடலடிக் கணவாயின் சிறப்பு அம்சங்கள்

பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் இடையே கட்டப்பட்ட ஈரோக்குகை [Eurotunnel (1994)], ஜப்பானின் வடதிசைத் தீவை மையத் தீவுடன் இணைக்கும் செய்கன் கடற்குகை [Seikan Tunnel (1988)] ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட செய்கன் குகையே, மொத்த நீளத்தில் 33.4 மைல் [174,240 அடி (53.9 கி.மீ)] தூரம் கொண்டு ஈரோகுகையை விடச் சற்று நீண்டதாக உள்ளது. 800 அடிவரைக் கடலுக்குக் கீழே செல்லும் செய்கான், ஈரோகுகையை விட, ஆழத்திலும் உலகத்திலே முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால் கடற்பரப்பு நீளத்தை ஒப்பிடும் போது, ஈரோகுகையே உலகில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. செய்கன் குகை 14.3 மைல் நீளமானக் கடல் பகுதியைக் கடக்கிறது. இங்கிலீஷ் கால்வாயில் ஈரோகுகையின் கடற்தளக் கடப்பு நீளம்: 24 மைல். ஈரோ குகையின் நீளம்: 31 மைல் [50.45 கி.மீ]. அதன் ஆழம் 150-250 அடிவரைச் செல்கிறது. அடுத்து நிலநடுக்கப் பாதுகாப்பு உளவிகள் பதிக்கப்பட்டு, மேன்மையானப் பொறி நுணுக்க முற்பாடுகளில் அமைந்தது, செய்கன் குகை! பதினேழு ஆண்டுகளாய் 13.8 மில்லியன் பணியாளிகள் வேலை பார்த்த அந்த இமாலயத் திட்டத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 33! அச்சிறிய எண்ணிக்கை ஜப்பானியரின் உன்னதப் பாதுகாப்பு நிர்வாகத்தை எடுத்துக் காட்டுகிறது!

Rail tunnel Drilling

சுண்ணாம்பு அடுக்குத் தளத்தில் துளையிட்ட குடையும் யந்திரங்கள் [Tunnel Boring Machine] ஈரோகுகையில் பயன்பட்டது போல், செய்கன் குகை முழுவதும் துளைக்கப் படவில்லை! காரணம் எரிமலைப் பாறைகள் இங்கும் அங்குமாய் அடுக்கப்பட்டுக் கிடந்தன. திட்டு திட்டான அந்தப் பாறைகளை வெடி மருந்தால் பிளக்க வேண்டிய தாயிற்று! மலைகளைக் குடைந்து, கடலடியே தோண்டி 33 மைல் நீண்ட குகையை முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன.

செய்கான் கடலடிக் குகை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்

ஹோக்கைடு தீவு பல்லாண்டுகளாக ஜப்பானியருக்கு ஒரு புதிய தேடல் பூமியாய்த் தோன்றி வரவேற் பளித்தது! அங்கே புதையல் களஞ்சியமாய்ச் செழித்துக் கிடந்த இயற்கை வளத்தைத் [Natural Resources] தோண்டிப் பிரதம தீவான ஹோன்சூவுக்குக் கொண்டு வருவதற்கு, மெதுவகச் செல்லும் கடல்வழித் துறையே பயன்பட்டு வந்தது. ஆனால் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கு இடையே உள்ள குறுகிய சுகரு நீர்ச்சந்தி [Tsugaru Strait] மிகக் கொந்தளிப்புள்ள கடற்பகுதி! 1954 இல் அவ்மோரி, ஹகோடேட் நகரங்களுக்கு [Aomori,Hakodate] இடையே பயணம் செய்யும் டோயா மாரு என்னும் இரயில் மீள்கப்பல் [Toya-Maru Train Ferry], ஓர் அசுரச் சூறாவளியில் சிக்கிக் கடலில் கவிழ்ந்தது! அப்பயங்கர விபத்தில் 1314 பேர் மூழ்கி, 159 நபர் உயிர் பிழைத்தனர்! ஜப்பானியர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு எழுப்பிய குரலே, செய்கன் குகை இரயில் பாதை அமைக்க விதை யிட்டது!

1971 ஆம் ஆண்டில் தோண்டும் பணிகள் துவக்கப்பட்டன. செய்கன் குகையை டிசைன் செய்து கட்டி முடித்த எஞ்சினியர் யாவரும் ஜப்பான் இரயில்வே கட்டமைப்பு வாரியப் பணியாளர்கள் [Japan Railway Construction Corporation]. திட்ட மிட்டக் குகை 33 மைல் தூரம் நீண்டதால், முக்கியக் குகையைக் குடைவதற்கு முன்பு, முதலில் முன்பணிக் குகையும் [Pilot Tunnel] பராமரிப்புக் குகையும் [Service Tunnel] அருகே இணையாகத் தோண்ட வேண்டிய தாயிற்று. முன்பணிக் குகைத் தளமட்டம், திசைநோக்கு, நிலப்பண்பு ஆகியவற்றை அறியும் சர்வே, புவியியல் கருவிகளைப் [Survey & Geological Instruments] பயன்படுத்தத் தேவைப் பட்டது. பராமரிப்புக் குகை வழியாகப் பணியாளிகள் நுழையவும், வெட்டுப் பாறைக் கற்களை வெளியேற்றவும் இருப்புப் பாதை வண்டிகள் செல்ல வசதிகள் அமைக்கப் பட்டன. பதினேழு ஆண்டுகளாக 800 அடி ஆழத்தில் கடலடியே பணி செய்ததில், 33 பேர் மொத்தம் உயிரிழந்ததாக அறியப்படுகிறது!

1976 ஆம் ஆண்டில் குகைப்பணி தொடர்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு வெள்ள விபத்து ஏற்பட்டு இன்னலை உண்டாக்கியது! பணியாளிகள் மென்மையான பாறை அடுக்கு ஒன்றை உடைத்த போது, பேரிடர் விளைந்தது! பீறிட்டுக் கடல் வெள்ளம் உடைத்துக் கொண்டு பாய்ந்து, குகைக்குள்ளே நிமிடத்துக்கு 80 டன் வீதம் கொட்டிக் குவிந்தது! நல்ல வேளையாக மனிதர் எவருக்கும் ஆபத்து நேரவில்லை! ஆனால் கடல்நீர்க் கசிவு ஓட்டத்தை நிறுத்தி, குகைநீரை உறிஞ்சி வெளியேற்ற 60 நாட்கள் பிடித்தன!

ஜப்பான் மலைகளுக்குள் எரிமலை அடுக்குப் பாறைகள்

மலைகளுக்கு இடையே 24 மைல் அகண்ட மடியில் கொந்தளிக்கும் கடலுக்கு அடியில் 800 அடி ஆழத்தில் குகை அமைப்பது எப்படி ? முதலில் தளப்பண்பு நிபுணர்கள் [Geologists] சோதனைத் துளைகள் இட்டு, நிலமண்களை ஆராய வேண்டும். அதற்காக இரண்டு தீவுகளிலும் தனித்தனியாகச் சிறிய செங்குத்துக் கிணறுகள் [Vertical Shafts] தோண்டப்பட்டன. அவ்விதம் உட்சென்று எடுத்த மாதிரிப் பாறைக் கட்டிகள் உடையும் தன்மையும், துளைகளும் [Breakable & Porous] பெற்றிருந்ததால் அவை யாவும் எரிமலைப் படிமான பாறைகளாக அறியப்பட்டன! குகை தோண்ட ஆரம்பித்த பின்பு, அதிகரித்த நீர்க் கசிவுகளும், அழுத்தமான நீர்ப் பாய்ச்சலும் ஏற்பட்டுத் தொல்லைப் படுத்தின!

தொடர்ந்து பெருகும் நீரை வெளியேற்றுவதும், சேர்ந்து போகும் சகதியை நீக்குவதும் பெரிய பிரச்சனைகள் ஆயின! ஜப்பானிய நிபுணர் படைத்த பொறி நுணுக்க சாதனங்களால், இன்னல்களும் பிரச்சனைகளும் குறைக்கப் பட்டுக் குகைப் பணிகள் தொடர்ந்தன. அதிக அழுத்தமுடன் சோடியம் சிலிகேட் செமென்ட் [High Pressure Injection of Sodium Silicate Cement] நுழைக்கப் பட்டு, நீர்க் கசிவுகள் அடைக்கப்பட்டு அறவே நீக்கப் பட்டன. பாறைக் குடைவுகள் முடிந்ததும், காங்கிரீட் திரவத்தைக் குகைச் சுவர்களில் தெளித்து உடனே பாறைக் குழிகள் மூடப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டன.

சுகரு நீர்ச்சந்திக்குக் [Tsugaru Strait] கீழே இருந்த நிலப்பரப்புப் பகுதி யாவும் எரிமலைப் பாறையாகக் [Volcanic Rock] காணப் பட்டதால், பொதுவாகக் கையாளப்படும் குகைக் குடையும் யந்திரம் [Tunnel Boring Machine (TBM)] அங்கே முழுமையாகப் பயன்படவில்லை! கடலடிக் குகையைத் தோண்ட 2800 டன்

வெடி மருந்தைப் பயன்படுத்தி மலைப் பாறைகளைக் குடைந்து துளைக்க நேரிட்டது! 180,000 டன் தேனிரும்புக் கம்பிகளும், சாதனங்களும் குகைக்குக் காங்கிரீட கவசமிடத் தேவைப் பட்டன! கடல் மட்டத்துக்கு 800 அடி ஆழத்தில் சில பகுதிகளில் அமைப்பான செய்கன் குகைப்பாதை, உலகிலே மிக ஆழ இரயில் பாதையாகக் கருதப்படுகிறது! பிரதமப் பெருங்குகையின் விட்டம் சுமார் 32 அடி. சிறியதானப் பராமரிப்புக் குகையின் அகலம் 16 அடி.

33 மைல் நீள இரட்டை இரயில் பாதைகள் ஒவ்வொன்றும் மூன்று தண்டவாளங்கள் கொண்டிருந்தன. அவ்விதம் அமைப்பதால், குறுகிய அகற்சி, பெருகிய அகற்சி இரயில் வண்டிகள் [Narrow Gauge & Broad Gauge Trains] இரண்டும் போவதற்கு வசதியாக இருக்கும். குகைக்குள் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று: யோஷியோகா-கைத்தி நிலையம் [Yoshioka-Kaitei Station], அடுத்தது: டாப்பி-கைத்தி நிலையம் [Tappi-Kaitei Station]. இரண்டு நிலையங்களும் செய்கன் குகையின் வரலாறு, விளக்கம் அளிக்கும் காட்சி மையங்களாக [Museums] நிறுவகமாகி யுள்ளன.

ஜப்பான் புள்ளெட் வேக ரயில்

நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!

ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்களும், சூறாவளி, சுனாமி [Tsunami] புயல் அடிப்புகளும் ஜப்பானியர்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லை!! இல்லை!!! ஒவ்வோர் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு மக்களைத் தயாராக வைத்திருப்பது, போற்றத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!

1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் [Kobe] பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 5470. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழில் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் தொகை தேவைப்பட்டது! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன.

!

பூகம்ப ஆட்டத்தின் போது இரயில் ஓட்டப் பாதுகாப்பு!

மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் உள்ளன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக மாய்ந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரைக் கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி! ஓராண்டு ஓட்டத்தைக் கணக்கு எடுத்துப் பார்த்ததில், அனைத்து புள்ளெட் இரயில்களின் மொத்தக் கால தாமதம் 12 விநாடி என்று அறிவது வியப்பை அளிக்கிறது!

புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து, ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியை நிறுத்துகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்டநிலை நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது நிறுத்தப் படுகின்றன.

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 இல் 8.3 ரிக்டர் அளவுப் பூகம்பம் மாலை 7:50 மணிக்கு ஹோக்கைடுப் பகுதியை [Hokkaido Region] ஆட்டியது! நல்ல வேளையாக தாக்கிய பூமி கரையிலிருந்து 25 மைல் அப்பால் கடற்பகுதியில் இருந்ததால், நகர மாந்தர் தப்பினர்! வீடுகள், வீதிகள், பாலங்கள், முக்கியமாக செய்கன் கடலடிக் குகை யாவும் பிழைத்துக் கொண்டன! ஆனால் அதே தீவில் செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட 8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 250 பேர் காயமுற்றனர்! யாரும் மரண மடைய வில்லை! 16,000 இல்லங்களில் மின்சக்தி அற்றுப் போனது! தொழிற் சாலைகளில் தீப் பற்றின! காங்கிரீட் வீதிகள் பிளவு பட்டன! நகரில் நீர்ப்பைப்புகள் துண்டிக்கப் பட்டன! கடலில் மீன்படகுகள் கவிழ்ந்தன! விமானத்தள மாளிகையின் கூரைக் குழிந்தது! நிலநடுக்கம் உண்டாக்கிய சுனாமியில் [Tsunami] கடல்நீர் மட்டம் 4.3 அடி உயர்ந்து, குஷிரோ நகரத்தின் [Kushiro City] கடற்கரைத் தாக்கப்பட்டு 41,000 மாந்தர் கடத்தப்படக் கட்டளை பிறந்தது! நல்ல வேளையாக ஹோக்கைடுத் தீவிலுள்ள அணுமின் நிலையத்திலோ அல்லது செய்கன் கடற்குகைப் பாதையிலோ எந்த விபத்தும், உடைப்பும் நேரவில்லை!.

செய்கான் குகை இரயில் பாதைப் போக்கின் எதிர்காலம்

ஜப்பானில் உள்ள சுமார் 3800 மலைக் குகைகளின் ஊடே செய்கன் குகையும் சேர்த்து, இரயில்கள் 1260 மைல் தூரம் [2100 கி.மீ.] அல்லும் பகலும் பயணம் செய்கின்றன. கடலடியில் 800 அடி உச்ச ஆழத்தில் குகை தோண்டப்பட்டு, இரட்டை இருப்புப் பாதைகள் கொண்டு, அதி வேக சின்கன்ஸென் புள்ளெட் இரயில் தொடரோட்டப் போக்குவரத்துக்கு [Sinkansen Network High Speed Bullet Train] ஏற்றதாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது [மீடர்கேஜ்] குற்றகல இரயில் வண்டிகள் மட்டும் செய்கன் குகை வழியாக அனுமதிக்கப் படுகின்றன. காரணம், சின்கன்ஸென் தொடரோட்டப் போக்கில் செய்கன் குகை இரயில் பாதையை இணைப்பது பெரும் நிதி விழுங்கும் திட்டம்! 2020 ஆண்டுக்குப் பிறகுதான் அதை நிறைவேற்றப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது!

நான்கு பெரிய தீவுகளையும் ஒப்பிட்டால், வடதிசையில் குளிர்ந்ததான ஹோக்கைடு தீவில் ஜனத்தொகை மிகவும் குறைவு. அதனால் குற்றகல இரயில் வண்டிகளே அங்கே போய் வருகின்றன. தற்போது ஜப்பானில் ஹோன்சூ, ஹோக்கைடு தீவுகளுக்கிடையே உள்ள விமானப் பயணச் செலவு, ஏறக் குறைய இரயில் பயணச் செலவை ஒட்டியதாக உள்ளதால், நிதி மிகையான புள்ளெட் இரயில் தொடர்பு இணைப்பு இப்போதைக்குள் நிகழப் போவதாய்த் தெரியவில்லை! எண்ணிக்கை முறையில் குறைவாகப் பயணங்களுக்கு பயன்பட்டாலும், ஆழமான செய்கன் கடலடிக் குகை இருபதாம் நூற்றாண்டின் ஓர் உன்னதப் பொறியியல் சாதனையாக உலகிலே கருதப்படுகிறது!

ஜிப்ரால்டர் நீர்ச்சந்தியில் எதிர்காலக் கடலடிக் குகை!

பிரிட்டன் தீவை ஈரோப்புடன் இணைக்கும் கடலடிக் குகை ‘ஈரோடன்னல் ‘ [Eurotunnel] 1994 ஆண்டு திறக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயணிகள் சுற்றுலா இரயில் பயணத்தில் சென்று நிதிவளம் செழித்து வருகிறது! 2004 ஜனவரியில் ஸ்பெயின், மொராக்கோ அரசாங்கம் இரண்டும் ஈரோப்பையும், ஆஃபிரிக்காவையும் கடலடிக் குகை மூலம் இணைத்து, இரயில்பாதை அமைக்கத் தீர்மானித்துள்ளன! 19 ஆம் நூற்றாண்டில் சூயஸ் கால்வாயும், 20 ஆம் நூற்றாண்டில் பனாமா கால்வாயும் தோண்டப் பட்டது போல், 21 ஆம் நூற்றாண்டில் ஜிப்ரால்டர் குகைக் கணவாய்த் தோன்றப் போகிறது என்று பெருமிதமுடன் அறிவித்தன! 27 மில்லியன் ஈரோ நிதி மதிப்புடன் முன்னோடித் தளப்பண்பு உளவுகள் இப்போது திட்டமிடப் பட்டுள்ளன.

ஜிப்ரால்டர் நிலச்சந்திக் குகை 24 மைல் நீளமும், கொந்தளிக்கும் கடலடித் தளம் 17 மைல் அகலமும் இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. கட்டப் போகும் கடற்குகை 300 அடி முதல் 1000 அடி ஆழத்தில் [100-300 மீடர்] அமைக்கப் பட்டு, உலகத்திலே மிக ஆழக்குகை என்று வரலாற்று முதன்மை பெறப் போகிறது! ஸ்பெயின் கம்பெனி இப்போதே 200 நீளச் சோதனைக் குகையைத் தோண்டி, மாதிரி மண்கள் ஆராயப்பட்டுத் தளப்பண்புகள் அறியப்படுகின்றன. அதேபோல் மொராக்கோ கம்பெனி 1000 அடி [300 மீடர்] ஆழக் கிணறு ஒன்றைத் தோண்டி தளப்பண்பு ஆய்வு செய்து வருகிறது. பத்து பில்லியன் ஈரோ நாணயத் திட்டச் செலவில் [2004 மதிப்பு] உருவாகப் போகும் ஜிப்ரால்டர் கடலடிக் குகை 2008 ஆம் ஆண்டில் முழுப் பணிகளைத் துவங்கப் போகிறது! சமீபத்தில் இரயில் வெடிகளை வைத்து ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் 200 பேர் மாண்டதற்கு, சில மொராக்கோ மூர்க்கர் காரணக் கர்த்தாக்கள் என்று அறியப் படுவதால், ஜிப்ரால்டர் குகைத் திட்டம் நிறுத்தப் படுமா அல்லது ஒத்திப் போடப் படுமா என்பது தெரியவில்லை! மேலும் மொராக்கோவிலிருந்து ஏராளமான புலப்பெயர்ச்சி முஸ்லீம் மாந்தர், சட்டத்தை மீறி நுழைந்து கொள்ள குகைப்பாதை தொடர்ந்து வழி வகுக்கும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறது!

தகவல்:

1. National Geographic Picture Atlas of our World [1990]

2. The Seikan Tunnel -A Short History of the Tsugaru Straits Line [www.pref.aomori.jp/]

3. Science & Technology: The World ‘s Longest Tunnels [www.Swishweb.com/]

4. Mountain Tunnels, Tunnels & Bridges -Seikan Undersea Tunnel.

5. A Short History of Japan By: InfoPage Corporation [2003]

6. Bullet Trains Programmed to Stop, if a Quake occurs [And Life Goes On By: G.Bhaskaran, The Hindu Jan, 2002]

7. Powerful Earth Quake Shakes Northern Japan [Sep 26, 2003]

8. World Data Center for Seismology, Denver U.S. Geological Survey [Sep 25, 2003]

9. Spain & Morocco Agree to Rail under Gibraltar Strait By Vicky Short [Jan 5, 2004]

10. http://www.railway-technology.com/projects/seikan-tunnel/

12. http://web-japan.org/atlas/architecture/arc02.html

13.  https://en.wikipedia.org/wiki/Seikan_Tunnel  [March 2, 2016]

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] [March 5, 2016] [R-1]

 

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -2

(கட்டுரை -2)
(பிப்ரவரி 10, 2012)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜயார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகளில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக்கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் கட்டுமான  பங்கு தாருக்கும் உரியது.   இந்நிகழ்ச்சி  அணுமின் நிலையங்களின் கார்பன் மாசற்ற சூழ்நிலை,  இயக்கப் பாதுகாப்பு , மின்சக்தி உறுதி அளிப்பு  ஆகியவற்றை மீண்டும் நிச்சயப் படுத்தும்.

உலக அணுசக்திச் செய்தி (World Nuclear News)  பிப்ரவரி 9, 2012

பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

BBC News (June 23, 2011)

ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

BBC News (May 30, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை:    2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

Hiroshima Now

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (டிசம்பர் 2015)

ஜப்பான் புகுஷிமாவுக்கு அருகில் 9 ரிக்டர் அளவு நேர்ந்த பூகம்பத்தில்  இயங்கிய ஏழு அணுமின் நிலையங்களிலும், பராமரிப்பில் இருந்த மூன்று நிலையங்களிலும்  எந்த ஒரு நிலையக் கட்டமைப்பும் பாதிக்கப் படவில்லை.   இயங்கிய அனைத்து ஏழு அணுமின் நிலையங்களும் சுயமாய்,  பாதுகாப்பாய் நிறுத்தம் அடைந்தன.   நிறுத்தமான 4 அணுமின் உலைகளுக்குச் சுனாமியால் அபாயப் பாதுகாப்பு டீசல் மின் ஜனனிகள் கடல் வெள்ளத்தில் மூழ்கி  மின்சாரம் அனுப்பாது முடங்கிப் போயின.   ஆதலால் தீயந்த எருக்கோல் தண்டுகள் (Spent Fuel Bundles) வெப்பம் தணிக்கும் நீரோட்டப்  பம்புகள் இயங்க முடியாது  வரண்டு போயின.    அதனால் எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகிச் சில கோல்கள் உருகிப் போயின.   வெப்பக் கோல்கள் நீராவியுடன் இணைந்து ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெடித்து மேல்தளத்தைத் தூளாக்கியது.   பிளந்த சாதனங்கள் வழியாகக் கதிரியக்க நீர் கசிந்து கடலிலும், சுற்றுப் புறத்திலும் கதிரியக்கம் பரவியது.  இப்போது [டிசம்பர் 2015]  புகுஷிமா அணு உலைகளின் வெப்ப ஏற்றம் தணிந்து சீர்மை நிலைப்பாடடு ஏற்பட்டுள்ளது.  டிசம்பர் 21, 2015 வரை 36,376 m^3  கதிர்வீச்சு திரவக் கழிவுகள் சோதிக்கப் பட்டு, நாள் ஒன்றுக்கு 360 m^3 வீதம்  கடலில் தள்ளப் பட்டுள்ளது.  அணு உலைக்  கலத்தின் உட்புறக் கதிர்வீச்சை அறிய சுய இயங்கிச் சாதனங்கள் [Robots] பயன்படுத்தப் படுகின்றன.  இப்பணிகள் செய்ய உச்ச அளவு ஊழியர்கள் 7450 பேர் தேவைப்பட்டார்.

புகுஷிமா : யூனிட் 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அக்டோபர் 5, 2015 இல் யூனிட் 1  அணு உலை மேல் மூடித் திறப்புக்குத் தயாரானது.

Fuhushima Radioactivity Release

புகுஷிமா : யூனிட் 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.  கதிர்த்தீண்டிய தீவிரக் கழிவுத் திரவ நீக்கம் ஜுலை 10, 2015 இல் முடிந்துள்ளது.

புகுஷிமா : யூனிட் 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.  கதிர்வீச்சுத் தீவிரம்   குறைக்கப் பட்டு  தீய்ந்த எருக்கோல் தடாகத்திலிருந்து, பெரும் கழிவுக் குப்பைகள் நீக்கப் பட்டன [நவம்பர் 21, 2015].

புகுஷிமா : யூனிட் 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால், தீயும் வெடிப்பும் நேர்ந்தன.  இப்போது [டிசம்பர் 22, 2014] தீய்ந்த எருக்கோல்கள் அனைத்தும் தடாகத்திலிருந்து நீக்கப் பட்டுப் பாதுகாப்பாய் ஒதுக்கப்பட்டுள்ளன.  கதிர்த்தீண்டிய தீவிரக் கழிவுத் திரவ நீக்கம் டிசம்பர் 21, 2015 இல் முடிந்துள்ளது.

புகுஷிமா : யூனிட் 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலை யங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங் களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங் களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :   (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

(முன் வாரத் தொடர்ச்சி)

11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும்
அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவுகளை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக் களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

முடிவுரை: 

இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில்  வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1100 மெகா வாட் அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது.    அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.   இந்த  மகத்தான வெற்றி  ஜியார்ஜியா பவர் கம்பேனிக்கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் கட்டுமான  பங்குதாருக்கும் உரியது.   இந்நிகழ்ச்சி  அணுமின் நிலையங்களின் கார்பன் மாசற்ற சூழ்நிலை,  இயக்கப் பாதுகாப்பு , மின்சக்தி உறுதி அளிப்பு  ஆகியவற்றை மீண்டும் நிச்சயப் படுத்தும்.

பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப் படுகின்றன.

Nagasaki Now

அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  இந்த யந்திர யுகத்தில் மின்சாரத்தைப் பரிமாறுவதோடு பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

1945 இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் அணுகுண்டுகள் தகர்ப்புக்குப் பிறகு, 1979 இல் அமெரிக்க திரிமைல் தீவு அணுமின்னுலை விபத்துக்குப் பின்னும், 1986 இல் செர்நோபில் வெடிப்புக்குப் பிறகும், 2011 ஜப்பானில் மூன்று புகுஷிமா அணுமின் உலைகள் கோர விபத்துக்குப் பின்னும், 21 ஆம் நூற்றாண்டில் 30 உலக நாடுகள் இன்னும் பாதுகாப்பாய் 439 அணுமின் நிலயங்களை இயக்கி மின்சாரம் பரிமாரி வருகின்றன.  இப்போது ஜப்பான் கதிர்வீசும் தளங்களைத் தூயதாக்கிப் புதுப்பித்து ஹிரோஷிமா, நாகசாக்கி முன்னை விடச் சுடரும் சொர்க்க புரிகளாய் மின்னுகின்றன.  அதே முற்போக்கு நோக்கில் ஜப்பான் புகுஷிமாவில் நான்கு அணுமின் நிலையங்களில் இழந்த 2720 MWe  ஆற்றலை மீண்டும் பெற புதிய தளங்களில் புதுமுறைப் பூத அணுமின் நிலையங்களை நிறுவி மின்சாரம் பரிமாறப் போவதை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

http://fukushimaupdate.com/current-state-of-post-accident-operations-at-fukushima-npp-july-to-december-2015/

http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

(தொடரும்)

***************

தகவல்:

1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Operations) (June 14, 2011)

24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

25.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_nuclear_power  (Nuclear Power by Country)  (June 2011)

26. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2001)

27.  http://www.eia.gov/forecasts/ieo/index.cfm  (International Energy Outlook 2011)  (September 19, 2011)

28.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_electricity_production_from_renewable_sources (List of countries by electricity production from renewable sources)

29.  http://world-nuclear.org/info/fukushima_accident_inf129.html  (2011 Fukushima Accident Report World Nuclear News (January 30, 2012)

30.  http://www.world-nuclear-news.org/RS_Approval_for_first_nuclear_new_build_in_America_0902121.html  (Approval to build New Nuclear Power Plant in America, World Nuclear News (February 9, 2012)

31.  http://fukushimaupdate.com/current-state-of-post-accident-operations-at-fukushima-npp-july-to-december-2015/  [December 2015]

************************
S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 7 , 2016  (R-2)
http:jayabarathan.wordpress.com/

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக அணு மின்சார நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றித் தீர்மானங்கள் -1

(March 9, 2016)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++++++++

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

++++++++++++++

உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதி இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங் களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

கட்டுரை ஆசிரியர்

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]



ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத் தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.


தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சி போன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :

1. அர்ஜென்டைனா : தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.

2. பிரேசில் : புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.

3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.

4. கனடா : கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.

5. சைனா : அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.

6  ஃபின்லாந்து : பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.

7. ஃபிரான்ஸ் : ஃபிரென்ச் நாட்டின் 75% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

8. ஜெர்மனி : 2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.


9. இந்தியா : புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங் களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

10 ஜப்பான் : ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.

World nuclear power production

 

முடிவுரை: உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஹிரோஷிமா, நாகசாக்கி, திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா கதிரியக்க விபத்துக்களுக்குப் பிறகு செம்மைப் படுத்தி  2012 இல் 30 உலக நாடுகள் 430 மேற்பட்ட  அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

http://www.bing.com/videos/search?q=nuclear+power+after+fukushima&&view=detail&mid=1BCB5686E01577B68F721BCB5686E01577B68F72&FORM=VRDGAR

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

24.  http://www.eia.gov/forecasts/ieo/index.cfm  (International Energy Outlook 2011)  (September 19, 2011)

25.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_electricity_production_from_renewable_sources (List of countries by electricity production from renewable sources)

26.  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_nuclear_power  (Nuclear Power by Country)  (June 2011)

27. http://www.worldwatch.org/nuclear-power-after-fukushima  [2013]

28.  https://en.wikipedia.org/wiki/Fukushima_Daiichi_nuclear_disaster [March 2, 2016]

29.  http://www.dailymail.co.uk/news/article-3468819/3-ex-execs-utility-charged-Fukushima-disaster.html  [February 29, 2016]

30.  https://www.iaea.org/newscenter/statements/nuclear-power-after-fukushima  [October 21, 2014]

31.  http://www.scientificamerican.com/article/crippled-fukushima-reactors-are-still-a-danger-5-years-after-the-accident1/?WT.mc_id=SA_DD_20160308

************************

S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 9,  2016  (R-3)

http:jayabarathan.wordpress.com/

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான பொறியியல் நுணுக்கச் சாதனைகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அணுசக்தி மின்சார உற்பத்திக்கு முயற்சிகள் இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது.

டாக்டர் ஹோமி பாபா  [அணுசக்திப் பேரவை  முதல் அதிபதி]

‘சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன் படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது’

டாக்டர் அனில் ககோட்கர் [அணுசக்திப் பேரவை அதிபதி]  (செப்டம்பர் 17, 2003)

முன்னுரை: ‘விஞ்ஞானப் பொறியியல் தொழிற் துறைகள் மட்டுமே, உலக நாடுகளில் செல்வம் செழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அவ்விதமே விஞ்ஞானம், பொறிநுணுக்கத் தொழில்களை விருத்தி செய்து, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்! ‘ என்று பறைசாற்றியவர், பாரதத்தின் முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு. 1948 ஆகஸ்டு 10 ஆம் நாள் ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் [Atomic Energy Commission] துவக்கி அதன் முதல் அதிபதியாய் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவை நியமனம் செய்தார். நேருவின் விஞ்ஞான முற்போக்குக் குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற் சாலைகளையும் நிறுவி, இந்தியாவிலும் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில் யுகத்தை நிலைநாட்டினார்!

Nehru & Homi Bhabha

ஆசியாவின் முதல் ‘அப்ஸரா நீச்சல் தடாக அணு உலை ‘ [APSARA Swimming Pool Reactor] பாம்பேயில் 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது. இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயம், அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகத்தில் இரகசியமாக உலக விஞ்ஞான மேதைகள், என்ரிகோ ஃபெர்மியின் கீழ் அணுப்பிளவு தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] 1942 டிசம்பரில் நடத்திக் காட்டி வெற்றி பெற்ற தருணம். பிரிட்டிஷ் இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி அடைய வல்லுநர்களுக்கு முற்போக்கான விஞ்ஞானப் பயிற்சி அளிக்க 1944 மார்ச்சில் டாக்டர் ஹோமி பாபா ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டு ‘டாடா தொழிற்கூடப் பணியகத்தின் ‘ அதிபர் ஸர் தொராப்ஜி டாடாவுக்கு [Tata Trust, Sir Dorabji Tata] ஓர் கடிதம் எழுதினார்.

‘அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலி களைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது ‘ என்று டாக்டர் ஹோமி பாபா டாடாவுக்கு அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். அதைப் பின்பற்றி ‘டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ‘ [The Tata Institute of Fundamental Research (TIFR)] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை [1966] டாக்டர் பாபா அதன் ஆணை யாளராகப் [Director] பணியாற்றி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை TIFR ஆசியாவிலே உன்னத விஞ்ஞான நுணுக்க ஆராய்ச்சிகள் செய்துவரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடமாக இருந்து வருகிறது.

1948 ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் டாக்டர் ஹோமி பாபா கூறியது: ‘இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் தொழில்வள நிதிப் போக்கிலும் [Economy], உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது! முற்போக்கு நாடுகளின் முன்பு தொழிற் துறைகளில் பாரதம் இன்னும் பிற்போக்கா வதை வேண்டாதிருந்தால், அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் மேற்கொண்டு முற்பட வேண்டும் ‘. அவ்வாக்கு மெய்யாகி 1969 ஏப்ரலில் பாரதத்தின் முதல் அணுமின்சக்தி நிலையம் தாராப்பூரில் நிர்மாணிக்கப் பட்டு மின்சாரம் பரிமாறியது.

சுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம்

‘இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளைச் சுதந்திர இந்தியாவின் ‘தொழில்யுகப் பொற்காலம் ‘ [Golden Time of the Industrial Age] என்று பாரத வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கலாம். இந்தியாவின் மெய்யான ‘முழுமைத் தேசீயப் படைப்பு ‘ [Gross Domestic Product (GDP)] கடந்த ஆறு ஆண்டுகளின் வருடக் கூட்டு வளர்ச்சி 6.5% வீதமாகத் [(1993-1999) Compound Annual Growth Rate: 6.5%] தொடர்ந்து விருத்தியாகி உள்ளது என்று சிங்கப்பூர் அரசியல் எழுத்தாளர் பிரசென்ஜித் பாஸு கூறுகிறார். இந்த வியக்கத் தக்க திறனியக்கம் [Performance] நிதிவள வேக வளர்ச்சியில் இந்தியாவை உலகக் குடியரசு நாடுகளிலே உன்னதத் தொழில்வள நாடாக உயர்த்துகிறது, என்றும் பாஸு கூறுகிறார்.

‘அந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 65% வீத வளர்ச்சியில் மிகைப் படுத்தப்பட்டு இந்திய மென்னியக்கிகள் [Software Programs] வெளி நாடுகளுக்கு ஏற்று மதியாகி யுள்ளன. அந்த சமயம் வேளாண்மை விருத்தி 4% அதிகரித்தி ருக்கிறது. பாரதத்தில் உணவு தானிய வகைகளின் விளைச்சல் கடந்த முப்பதாண்டுகளாய் [1969-1999] மும்முறை பெருகி யுள்ளன. முதியவர் கல்விப் புகட்டு 1991 இல் 51% ஆக இருந்தது, 1999 இல் 65% ஆக மிகுதி யடைந்தது! அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டு வாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன!  தொழிற் துறை வளர்ச்சியில் இன்னும் பாரதம் பன்மடங்கு பெருகி முன்னேற ஒளிமிகுந்த எதிர்காலம் கண்ணில் தெரிகிறது ‘ என்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் பாஸு கூறுகிறார்.

RAPS 3 & 4

இரண்டாம் உலகப் போரில் முளைத்த அமெரிக்காவின் ‘அணு ஆயுத ஆராய்ச்சிகள் ‘, ஆக்க வினைகள் புரியும் மின்சக்தி நிலையங்களாகத் தாரணி எங்கும் தோன்றிக் கிளைகள் விட்டன. ஜெர்மெனி போரில் ஏவியக் ‘கட்டளை ஏவுகணைகள் ‘, அண்ட வெளியைத் தேடும் விண்கப்பலுக்கு வாகனமாய் அமைந்தன. அணு ஆயுதங்கள், அணுமின் நிலையங்கள், அண்ட வெளிப் பயணங்கள் ஆகியவை உண்டாக்கியப் பொறி நுணுக்கத் தொழிற்துறைகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சைனா, இந்தியா மற்றைய உலக நாடுகளிலும் உதயமானவை எண்ணிக்கையில் அடங்கா!  குறிப்பாகப் புதிதான நுணுக்கமான இரசாயன அணுத்துறைத் தொழிற்சாலைகள் [யுரேனியம், தோரிய தாதுக்கள் மீட்கும் சுரங்கங்கள், சுத்தீகரிப்பு இரசாயனச் சாலைகள், எரிக்கோல் உருட்டும் கூடங்கள், அவற்றை வைத்து ஆராய்ச்சி செய்யும் அணு ஆய்வு உலைகள்] பல அகில உலகில் தோன்றின. சிறப்பாக அணுவியல் விஞ்ஞானம், அணுமின் சக்தி பொறி நுணுக்கங்கள் பெருமளவில், பெரு வேகத்தில் விருத்தி அடைந்தன. பதினேழாம் நூற்றாண்டில் ஈரோப்பில் உதயமான ‘தொழில்யுகம்’  மேல் நாடுகளில் மீண்டும் விரைவாக்கப் பட்டு செழிப்படைந்தது! பாரத நாட்டிலே முதன்முதல் ‘தொழில்யுகச் சக்கரம் ‘ காலூன்றி, வேரூன்றி வேகமாய்ச் சுற்ற ஆரம்பித்தது!

ஹோமி பாபா தோற்றுவித்த அணுவியல் விஞ்ஞானத் தொழிற்துறைகள்

டாக்டர் ஹோமி பாபாவின் 1948 இல் வெளியிட்ட பொன்வாக்கு மேற்கொள்ளப்பட்டு, பாரதம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1969 இல் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் இயங்க ஆரம்பித்து மின்சாரத்தைப் பரிமாறியது. 2015 ஆண்டுவரை 21 அணுமின் நிலையங்கள் 5780 MWe மின்னாற்றலைப் பாரத மெங்கும் அனுப்பி வருகின்றன. பாம்பேயில் பாரத வல்லுநர் பலர் ஆழ்ந்து பணி புரியும், மாபெரும் ‘பாபா அணுசக்தி ஆய்வு மையம் ‘ [Bhabha Atomic Research Centre] ஆசியாவிலே உன்னத அணுவியல் ஆராய்ச்சிகளை மகத்தான முறையில் செய்து வருகிறது. அதுபோல் சென்னைக் கல்பாக்கத்தின் ‘இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையத்தில் ‘ [Indira Gandhi Centre for Atomic Research] சிக்கலான ‘வேகப்பெருக்கி அணுமின் உலை [Fast Breeder Test Reactor] ஒன்று கட்டப்பட்டு, எதிர்கால மின்சக்தி உற்பத்திக்கு ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.

உலக அரங்கில் அணு ஆயுத நாடாகத் தலை நிமிர்ந்து நிற்கும் இந்தியா, சில அணுகுண்டுகளையும், ஹைடிஜரன் குண்டு களையும் ராஜஸ்தான் பொக்ரானில் 1974, 1998 ஆண்டுகளில் அடித்தள வெடிப்புச் செய்து சோதனைகளைப் புரிந்துள்ளது. அணு ஆயுதங்களுக்கு வேண்டிய புளுடோனியம்-239, செறிவு யுரேனியம்-235, டிரிடியம், டியூடிரியம் [Tritium, Deuterium] ஆகியவை யாவும் பாரத அணுத்துறைச் சாலைகளில் தயாராகின்றன. பதிமூன்று அணுமின் நிலையங்கள், மற்றும் வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய /புளுடோனிய எரிக்கோல்கள் ஹைதிராபாத் எரிக்கோல் தயாரிப்புக் கூடத்தில் [Nuclear Fuel Complex -Fuel Fabrication Plants] உருவாக்கப் படுகின்றன.

பாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். ஆசியாவின் முதல் ‘நீச்சல் தடாக அணு உலை, அப்ஸரா ‘ [APSARA Swimming Pool Reactor (1MWt)] 1956 ஆகஸ்டு 4 ஆம் தேதி பாம்பேயில் ‘பூரணநிலை ‘ [Criticality] அடைந்தது. அடுத்து கனடாவின் உதவியில், கனடாவின் NRX ‘ஸைரஸ் ‘ ஆராய்ச்சி அணு உலைக் [CIRUS Atomic Research Reactor (40 MWt)] கட்டப் பட்டு 1960 ஜூலை 10 ஆம் தேதி பூரணநிலை அடைந்தது.

அமெரிக்காவின் உதவியில் ஜெனரல் எலெக்டிரிக் BWR மாடலில் முதல் இரட்டை கொதி அணுமின் உலைகள் [Boiling Water Reactor (210 MWe)] தாராபூரில் அமைக்க ஏற்பாடுகள் தயாரிக்கப் பட்டன. அதே சமயம் கனடாவின் காண்டு மாடலில் [CANDU Heavy Water Reactors (220 MWe)] இரட்டை அணுமின் நிலையங்கள் ராஜஸ்தான் ராவட்பாடாவில் நிறுவ முயற்சிகள் தொடர்ந்தன. டாக்டர் பாபா துவங்கி வைத்த அணுசக்தி ஆராய்ச்சி, அணுமின் சக்தி உற்பத்தி ஆகியவற்றின் ஆரம்பப் பணிகள் மேலே கூறப்பட்டவையே. முதலிரண்டு அணுமின் நிலையங்கள் முழுமை பெற்று பூரணநிலை அடைவதற்கு முன்பே, 1966 ஜனவரி 24 ஆம் தேதி விமான விபத்தில் அவர் காலமாகி விட்டார்!

Kakrapar & Madras Atomic Power Stations

டாக்டர் ஹோமி பாபாவின் அணுத்துறைப் பணிகள் 1944 முதல் 1966 வரை 22 ஆண்டுகள் நீடித்தன. அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன், டாக்டர் R. சிதம்பரம், டாக்டர் அனில் ககோட்கர் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன.

ஹோமி பாபாவின் முக்கட்ட  அணுமின்சக்தி ஆக்கத் திட்டங்கள்

இந்தியாவில் அணுவியல் எருக்களான யுரேனியம், தோரிய தாதுக்கள் [Nuclear Fuels: Uranium, Thorium Ores] ஏராளமாகக் கிடைகின்றன. சுரங்க யுரேனிய இருப்பு பாரதத்தில் இன்னும் 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு தோரியம்232 பாரத நாட்டிலே ஏராளமாகக் கிடைப்பது நமக்கொரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சுரங்கம் வற்றியவுடன் பாரதம் தோரியத்தை அணு உலைகளில் நியூட்ரான் கணைகளால் தாக்கி, யுரேனியம்-233 அணுப்பிளவு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்தியைத் துவங்க வேண்டும்! அப்போது நம்மிடமுள்ள ஏராளமான தோரியம்-232, பல அணுமின் உலைகளில் கவசமாக வைக்கப்பட்டு யுரேனியம்-233 எருவாக மாற்றப்பட வேண்டும். பிறகு மீள் சுத்திகரிப்புச் சாலைகளில் கழிவிலிருந்து யுரேனியம்-233 பிரித்தெடுக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம்-233 எருக்கள் சேமிக்கப் பட்டு அவையே வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் நிரந்தரமாக உபயோகப்படும். இந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்-232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்-233 ஆக மாற்றி, அடுத்து 100 ஆண்டுகளுக்கு 300,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கிட்டு அனுமானிக்கிறார்கள்!

டாக்டர் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத்திற்குத் தனது ‘மூவரங்கு முற்பாடுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டார். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் பயன்படும் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்-239 அணுப்பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்-238  செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்-239 பிளவு எருவையும், தோரியம்-232 செழிப்பு உலோகத்தையும் வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய பிளவு எரு யுரேனியம்-233 தயாரிக்கப்பட்டு தனித்தெடுக்கப் படும்! மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்-233, தோரியம்-232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்-233 அணு எருவும் உற்பத்தியும் தொடர்ந்து கிடைக்கும்!

முதலிரண்டு காண்டு அணுமின் உலைகள் கனடாவின் உதவியில் கட்டப் பட்டன. 1974 இல் பாரதம் முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்து, அமெரிக்கா, கனடாவின் விரோதத்தையும், மற்ற உலக நாடுகளின் வெறுப்பையும் பெற்றுக் கொண்டது! அதன் விளைவு ? வட அமெரிக்க, ஈரோப்பிய நாடுகள் அணுவியல் துறை உடன்பட்ட சாதனங்களை, நூதனங்களை இந்தியாவுக்கு விற்பதை நிறுத்திக் கொண்டன! பாரதம் அணுத்துறைத் தொழில் முற்பாடுகளில் தனித்து விடப்பட்டுத் தன் காலில் நின்று, இந்தியத் தொழிற் துறைகளை ஊக்குவித்து நூதனச் சாதனங்களை உற்பத்தி செய்ய வேண்டிதாயிற்று! இம்முயற்சியில் மூழ்கி, சிரமத்துடன் நீந்தி, புதிதாக எட்டுக் கனநீர் அணுமின் நிலையங்களைக் கட்டி இந்தியா மகத்தான வெற்றி அடைந்துள்ளது!

DAE

1975 ஆண்டுக்குப் பிறகு நரோரா [உத்தர் பிரதேசம்], கக்கிரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], ராவட்பாடா [ராஜஸ்தான்] ஆகிய இடங்களில் கட்டிய 8 காண்டு அணுமின் நிலையங்கள் [மின்னாற்றல்: 220 MWe] அனைத்தும் இந்தியரால் டிசைன் செய்யப் பட்டு, இந்தியச் சாதனங்களால் [சுமார் 80%] கட்டப்பட்டு, இந்தியரால் இயக்கப்பட்டு பராமறிக்கப் படுபவை. இப்போது புதிதாக 540 MWe மின்னாற்றல் கொண்ட இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்கள் டிசைன் செய்யப்பட்டு, தாராப்பூரில் கட்டப்பட்டு முழு ஆற்றலில் இயங்கி வருகின்றன.

அடுத்து 1100 MWe மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் VVER-1000 மாடலில் இரட்டைப் பூத அணுமின் நிலையங்கள், தமிழகத்தின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் கட்டப் பட்டு, முதல் யூனிட் முழு ஆற்றலில் இயங்கி வருகிறது.  இதற்குத் தேவையான (2%-4%) செறிவு யுரேனிய-235 அணுமின் உலை எரிக்கோல்கள் அடுத்து முதன்முதல் இந்தியாவிலே தயாரிக்கப்படும்.

இப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் (1%-2%) அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது! அவ்வாறு முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை இன்னும் 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம்! இரண்டாம் கட்டத்தில் புளுடோனியத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாக வும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்-238 புளுடோனியம்-239 ஆக மாறி எருவின் அளவு மிகை யாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்-239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்தி லிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கி றார்கள்! அம்முறையில் இன்னும் 400,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்!

2011 ஆண்டுவரை 20 அணுமின் நிலையங்கள் அடுத்தடுத்துப் பாதுகாப்பாய் இயங்கி இப்போது கூடங்குளத்தில் ரஷ்யாவின் பூத  1000 மெகா வாட் அணுமின் நிலையம் பூரணம் அடைந்து முதன்முதல் ஏராளமான மின்சாரம் அனுப்பி புதிதாய் ஓர் இந்திய வரலாற்று  நிகழ்ச்சியை மைக் கல்லாக வைக்கப் போகிறது.

இந்திய அணுசக்தித் துறையின் தொழிற்துறைச் சாதனைகள்

1. அணுவியல் ஆராய்ச்சி உலைகள்: அணுவியல் ஆய்வுக்காக பலவித அணு ஆராய்ச்சி உலைகளைக் கட்டிப் பண்டங்கள் மீது நியூட்ரான்களை மோத விட்டுச் சோதனைகளைச் செய்து அணுக்கருப் பெளதிகத்தை [Nuclear Physics] வளர்க்கிறது. அந்த அடிப்படை விஞ்ஞானம் அணுப்பிளவு விளக்கங்களையும், கழிவுகளைப் பற்றியும், அவற்றிலிருந்து எழும் கதிரியக்கம், கிளைப் பண்டங்கள் [சிறப்பாக புளுடோனியம்-239, மற்ற கதிர்வீசும் அணுக்கருக்கள்] பற்றியும் அறியப்பட்டன.

தோரியத்தைக் கவசமாக அணு உலைகளில் வைத்து, வேகப் பெருக்கி அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம்-233  எருவின் உற்பத்தியை அறிவது. அடுத்து அணு உலைகளில் மற்ற உலோகங்களை இட்டு நியூட்ரான் கணைகளால் தாக்கி, பலவித ‘கதிர் ஏகமூலங்கள் ‘ [Radio isotopes] தயாரிப்பது.

கோபால்ட்-60 கதிர் ஏகமூலங்கள் புற்று நோய் சிகிட்சைக்குப் பயன்படுகிறது. அதுபோல் இந்திய அணுசக்தி துறையகம் அணு உலைகளில் நியூட்ரான் கதிரூட்டி, நூற்றுக்கணக்கான கதிர் ஏகமூலங்களை பாரதம் உலகெங்கும் அனுப்பி வருகிறது. உலகில் பெருமளவு கதிர் ஏகமூலங்களை உற்பத்தி செய்து விற்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் நிற்கிறது. கதிர் ஏகமூலங்கள் மருத்துவம், வேளாண்மை, தொழிற்சாலை ஆகியவற்றுக்குப் பயன்படுகின்றன.

2.  இந்தியாவில் மூன்று வித அணுமின் நிலையங்கள்:

(a) தாராப்பூரில் முதலில் கட்டிய ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் கொதிநீர் அணுமின் உலைகளும் [American General Electric Boiling Water Reactor (BWR)], தற்போது [2003] சென்னைக் கூடங்குளத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் [VVER-1000] PWR அழுத்தநீர் அணு உலையும் [(2%-4%) Uranium-235] செறிவு யுரேனிய எரிக்கோலாய்ப் பயன்படுத்து பவை. இரண்டும் சாதாரண எளிய நீரை மிதவாக்கி யாகவும், வெப்பத் தணிப்பு நீராகவும் [Light Water Moderator & Coolant] உபயோகப் படுத்து பவை. இவற்றுக்கு தேவைப்படும் செறிவு யுரேனியத்திற்காக, யுரேனியச் செறிவுத் தொழிற்கூடம் [Uranium-235 Enrichment Plant] ஒன்று மைசூர் ரத்தேஹல்லியில் [Rattehalli, Mysore] அமைக்கப் பட்டுள்ளது.

(b) கனடாவின் டிசைன் மாடலான காண்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்கள் [Canadian (CANDU) Pressurized Heavy Water Reactors] 220 MWe, 540 MWe மின்னாற்றலில் தற்போது NPCIL [Nuclear Power Corporation of India Ltd] டிசைன் செய்து, நிறுவகம் செய்து இயக்கியும் வருகிறது. அவற்றுக்கு வேண்டிய அணுவியல், யந்திர, மின்சார சாதனங்கள், கருவிகள் பாரதத்தில் 80% மேற்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப் படுகின்றன.

(c) சென்னை கூடங்குளத்தில் முதன்முதல் ரஷ்யாவின் [Russian (VVER-1000) Pressurized Light Water Reactors] உதவியால் இரட்டை அணுமின் நிலையம் நிறுவகமாகி வருகிறது. அந்த இரட்டை அணு உலைகள் செர்நோபிள் போலின்றி முற்றிலும் வேறுபட்ட டிசைனில் ஆக்கப் பட்டவை. மேலும் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு சீராக்கப்பட்டவை!

Indira Gandhi Centre for Atomic Research -3

3. அணு உலைகள், அணுமின் நிலையங்கள் மற்றும் அணுத்துறை சார்ந்த கதிரியல் கருவிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL [Electronic Corporation of India Ltd] மின்யந்திர சாலையில் 1967 முதல் தயாராகி வருகின்றன. அத்துடன் தூரத் தொடர்பு, பாரதப் படைத்துறை, அண்டவெளி நுணுக்கவியல், பெட்ரோல் இரசாயனத் தொழிற்துறைகள், வெப்ப மின்சக்தி நிலையங்கள் [Telecommunication, Defence Depts, Space Technology, Petrochemical Industries, Steel Industries, Thermal Power Plants] ஆகிய வற்றுக்குத் தேவையான மின்னியல் கருவிகள் [Electrical & Electronic Instrumentation], மின் கணனிகள் அனைத்தும், ஹைதிராபாத் ECIL இல் தயாராகின்றன. 1994 இல் மின்னியல் துறையகத்தின் [Dept of Electronics] சிறப்புப்பணிப் பரிசை ECIL பெற்றுள்ளது.

4. இந்திய அணுத்துறைப் புளுடோனியப் பிரித்தெடுப்பு நுணுக்க முறையில் கைதேர்ந்து 1965 ஆண்டு முதல் அணுக் கழிவுகளை மீள்சுத்தீகரிப்பு [Spent Fuel Reprocessing] செய்து வருகிறது. பாரதத்தில் உள்ள மூன்று மீள்சுத்திகரிப்பு சாலைகளிலும் ஆண்டுக்குச் சுமார் 50 டன் கழிவுகள் சுத்தமாகிப் புளுடோனியம்-239 மீட்கப் படுகிறது. புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப் பெருக்கி அணு உலைகளுக்கும், ‘அணுசக்திக் கடலடிக் கப்பலுக்கும் ‘ [Nuclear Submarine] பயன்படுகிறது.

5. இந்தியக் கடற்படைத் துறைக்குக் கடலடியில் உலவும் ‘அணுசக்திக் கடலடிக் கப்பல் ‘ [Nuclear Submarine] ஒன்றைப் பாபா அணுசக்தி ஆய்வு மையம் [BARC], பாரத முற்போக்கு நுணுக்கக் கப்பலாக [Navy ‘s Advanced Technology Vessel (ATV)] அமைத்து வருகிறது. கடலடிக் கப்பல் எஞ்சினை இயக்கத் தேவையான 20% செறிவு யுரேனியம் [20% Enriched Uranium-235] அல்லது புளுடோனியம் [Plutonium-239] BARC இல் தயாராகிறது.

Kudungulam Atomic Power Station

6. பாரத இராணுவம் பாதுகாப்புக்காகக் கையாளும் பிருத்வி, அக்கினி கட்டளை ஏவுகணைகள் [Prithvi, Agni Guided Missiles] ஏந்திச் செல்லும் அணு ஆயுத போர்க் குண்டுகளை [Nuclear Warheads] BARC தயாரிக்கிறது.

7. மைசூர் ரத்தேஹல்லியில் அமைக்கப் பட்டிருக்கும் செறிவு யுரேனியத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 28 கிலோ கிராம் மிகத்தூய யுரேனியம்-235, சுழல்வீச்சு முறையில் [Centrifuge Process] இந்திய அணுத்துறையகம் தயாரித்து வருகிறது.

8. அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், புளுடோனிய-239, யுரேனியம்-233 எரிக்கோல்கள் ஹைதிராபாத்தில் உள்ள NFC இல் [Nuclear Fuel Complex] தயாரிக்கப் படுகின்றன. அவற்றுக்குத் தேவையான நூதன உலோகங்களை [Zircaloy Pressure Tubes], [Fuel Sheaths], [Boron-10] தயாரிக்கும் உலோக உருக்கு, மடிப்புச் சாலைகள் (Metallurgical Plants) ஹைதிராபாத்தில் உள்ளன.

9. இந்தியா 1974 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பொக்ரானில் முதல் அடித்தள அணு ஆயுத வெடிச் சோதனையைச் செய்தது. பிறகு 1998 இல் இருமுறை அணு ஆயுதச் சோதனைகள் செய்து தன்னை அணு ஆயுத நாடென்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டது! பாரதம் சுமார் (240-395) கிலோ கிராம் அணு ஆயுதத் தூய புளுடோனியம்-239 [Weapon-grade] கொண்டுள்ளதாக அனுமானிக்கப் படுகிறது. அந்நிறையப் பயன்படுத்தி இந்தியா, கீழ்த்தரம் முதல் மேல்திற முள்ள 200 கிலோ டன் (40-90) எளிய அணுப்பிளவு அணுகுண்டுகள் [Simple Nuclear Fission Bombs] ஆக்கலாம் என்று கணக்கிடப் படுகிறது. மேலும் இந்தியாவிடம் ஈரடுக்கு வெடிப்பு வெப்ப அணுக்கரு ஆயுதம் [Two-stage Thermonuclear Weapons (Hydrogen Bombs)] உள்ள தாகவும் கருதப்படுகிறது.

10. ராஜஸ்தானிலும், கல்பாக்கத்திலும் அணு உலைகளின் தேய்ந்த, கடும் கதிரியக்க முள்ள 306 அழுத்தக் குழல்கள் [306 Zircoaloy Pressure Tubes] முதன்முதலாக நீக்கப்பட்டு குறைந்த காலத்தில் [18 மாதங்கள்] புதிய ஸிர்கோனியம் நியோபியம் குழல்கள் [Zirconium +2.5% Niobium Tubes] நிரப்பப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன! இதுவரைப் பாரத அணுவியல் துறையகம் புரிந்த பராமரிப்புகளில், அப்பணி ஓர் அசுர சாதனையாகக் கருதப்படுகிறது!

11. ஆசியாவிலே மிகக்பெரும் 500 MWe மின்னாற்றல் கொண்ட வேகப் பெருக்கி [Fast Breeder Power Reactor] டிசைன் செய்யப் பட்டு, கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்து முற்போக்கு அணுவியல் நுணுக்கங்களைப் புகுத்தி, அழுத்தக் குழல்களில் ஓரளவு கொதிப்பைத் தணிப்புக் கனநீரில் அனுமதித்து, [Allowing Partial Boiling of Coolant Heavy Water in the Pressure Tubes] 700 MWe மின்னாற்றலில் அழுத்தக் கனநீர் அணுமின் நிலையம் [Advanced Heavy Water Reactor (AHWR)] டிசைன் செய்யப்பட்டு வருகிறது.

12. 1977 இல் கல்கத்தாவில் ‘சக்திக் கட்டுப்பாடுள்ள சுழல்வீச்சு விரைவாக்கி யந்திரம் ‘ [Variable Energy Cyclotron] இயங்க ஆரம்பித்தது. அதில் பரமாணுக்களின் [Proton, Electron, Positron] வேகத்தை மிகப்படுத்தி உலோகங்களில் மோதவிட்டு புதிய உலோகங்களைப் படைக்க முடியும்!

13. அகமதாபாத்தில் அமைக்கப் பட்டுள்ள ‘பிழம்புக்கனல் ஆய்வுக் கூடத்தில் ‘ [Institute of Plasma Research SST-1] அணுப்பிணைவு ஆராய்ச்சிகள் [Nuclear Fusion Power Research] புரிய டோகாமாக் அணுப்பிணைவு மின்யந்திரம் [(Tokamaks) International Thermonuclear Experimental Reactor (ITER)] ஒன்று கட்டி முடிக்கப்பட்டுத் தற்போது [2003] முன்னோடி இயக்கங்களில் சோதிக்கப் பட்டு வருகிறது!

14. மெளன்ட் அபுவில் நிறுவகமான காமாக் கதிர் வானோக்குச் சாதனம் [Mount Abu Gamma Ray Astronomy Facility] ஒன்று இப்போது இயங்கி வருகிறது. கதிர் மீட்டரலைப் பூதத் தொலைநோக்கி (GMRT) [Giant Metrewave Radio Telecope] அண்டவெளிக் கோள்கள், விண்மீன்கள் போன்றவை வீசும் கதிரலைகளைப் பிடித்து ஆராய்ச்சிகள் செய்ய உதவிகள்புரியும்.  மாபெரும்  ஆற்றல் கொண்ட புதிய அணுமின் நிலையம் இந்திய அணுசக்தித் துறை யகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத் துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள்! அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது!  அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு ஆய்வு வினைகள் அனைத்தும் முடிக்கப் பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானி களும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது.

இதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உலையின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 ஆகஸ்டில் முதல் யூனிட்-4 முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறத் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திய அணுத்துறை நிறுவகத்தின் ஒளிமயமான எதிர்காலம்!

நேருவின் விஞ்ஞான முற்போக்கு குறிநோக்கை மேற்கொண்டு, டாக்டர் பாபா ஆசியாவிலே உயர்ந்த ஓர் அணுவியல் பெளதிக, இரசாயன நுணுக்க ஆய்வுக் கூடத்தையும், அணு மின்சக்தித் துறைக் கூட்டகத் தொழிற்சாலைகளையும் நிறுவி, இந்தியாவில் தொழிற் புரட்சியைச் துவங்கித் தொழில்யுகத்தை நிலைநாட்டினார்! மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் பணி புரிய, அவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கும் மானிடத்திறக் களஞ்சியங்கள் [Untapped Human Potentials] இந்தியா வெங்கும் தூண்டுவாரற்று இன்னும் குவிந்து கிடக்கின்றன! பாரத அரசாங்கம், மாநில அரசுகள் ஆக்கத் துறைகளைப் படைத்து அவர்களை ஊக்குவிக்க முற்பட வேண்டும்!  சிறப்பாக காண்டு [] 200 மெகாவாட், 500 மெகாவாட், 700 மெகாவாட் நிலையங்கள் இப்போது இந்தியா டிசைன் செய்து கட்டமைத்து இயக்கும் திறமை பெற்றுள்ளது பாராட்டுக்கு உரியது, அடுத்து ரஷ்ய டிசைன் செய்து இந்தியர் இயக்கும் 1000 மெகா வாட் நிலையங்கள் கூடங்குளத்தில் மின்சாரம் பரிமாறி வருகின்றன என்பது நாம் பெருமைப்படும்  வரலாற்றுத் தகவலாகும்.

Nuclear Energy Map

கடந்த ஐம்பது ஆண்டுகளில் காலூன்றி, வேரூன்றித் தழைத்து விழுதுகள் பெருக்கும் அணுசக்தித் துறையகம் அடுத்த ஐம்பதாண்டுகள் செழித்தோங்கப் போகும் ‘ஒளிமயமான எதிர்காலம் ‘ பாரதத்தில் பளிச்செனத் தெரிகிறது. பாரத அணுவியல் துறையகம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்களைக் கட்ட முற்பட்டு வருகிறது. இன்னும் குறைந்தது இருபது, இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு இந்தியா இதுவரை விருத்தி செய்த அணு மின்சக்தியின் ஆதரவில்தான் வளர்ச்சியுற முடியும், என்பது இக்கட்டுரை எழுத்தாளரின் உறுதியான கருத்து. உலக நாடுகள் முழு ஆராய்ச்சியில் மூழ்கியுள்ள அணுப்பிணைவு சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] அடுத்துத் தோன்றும் வரை, மாந்தர் அணுப்பிளவு சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power Stations] மூலமாகத்தான் மின்சார ஆற்றலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

****************

Plant Unit Type Capacity (MWe) Date of Commercial Operation
Tarapur Atomic Power Station (TAPS), Maharashtra
1 BWR 160 October 28, 1969
Tarapur Atomic Power Station (TAPS), Maharashtra
2 BWR 160 October 28, 1969
Tarapur Atomic Power Station (TAPS), Maharashtra
3 PHWR 540 August 18, 2006
Tarapur Atomic Power Station (TAPS), Maharashtra
4 PHWR 540 September 12, 2005
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
1 PHWR 100 December 16,1973
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
2 PHWR 200 April 1,1981
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
3 PHWR 220 June 1, 2000
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
4 PHWR 220 December 23, 2000
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
5 PHWR 220 February 4, 2010
Rajasthan Atomic Power Station (RAPS), Rajasthan
6 PHWR 220 March 31, 2010
Madras Atomic Power Station (MAPS), Tamilnadu
1 PHWR 220 January 27,1984
Madras Atomic Power Station (MAPS), Tamilnadu
2 PHWR 220 March 21,1986
Kaiga Generating Station (KGS), Karnataka
1 PHWR 220 November 16, 2000
Kaiga Generating Station (KGS), Karnataka
2 PHWR 220 March 16, 2000
Kaiga Generating Station (KGS), Karnataka
3 PHWR 220 May 6, 2007
Kaiga Generating Station (KGS), Karnataka
4 PHWR 220 January 20, 2011
Kudankulam Atomic Power Project, Tamilnadu
1 VVER -1000 (PWR) 1000 December 31, 2014
Narora Atomic Power Station (NAPS), Uttarpradesh
1 PHWR 220 January 1,1991
Narora Atomic Power Station (NAPS), Uttarpradesh
2 PHWR 220 July 1,1992
Kakrapar Atomic Power Station (KAPS), Gujarat
1 PHWR 220 May 6, 1993
Kakrapar Atomic Power Station (KAPS), Gujarat
2 PHWR 220 September 1,1995
Total Nuclear Power Plant Capacity : 5780 MWe

தகவல்:

1. Five Decades of Dept of Atomic Energy, Nuclear Power Report By Dr. Anil Kakodkar,

Chairman Atomic Energy Commission [Sep-Oct 2003] www.dae.gov.in

2. Atomic Energy in India: Strategy for Nuclear Energy

www.barc.ernet.in/webpages/anu_shakti/ae_2.html

3. IAEA Vienna Presentation By Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission

[September 17, 2003] www.dae.gov.in/gc/gc2003.htm

4. DAE A Perspective 2003 [September 2003] www.dae.gov.in

5. Indian Special Weapon Agencies www.fas.org/nuke/guide/india/agency/dae.htm

6. Dr. R. Chidambaram, Former Chairman, Indian Atomic Energy Commission Report [Sep 20,

2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

7. V. K. Chaturvedi Chairman & Managing Director, Nuclear Power Corporation India Ltd [NPCIL] CMD ‘s Page, International Journal of Nuclear Power www.npcil.org [2002]

8. Social Issues of India By Presenjit Basu, Singapore [Aug 20, 1999]

www.meadev.nic.in/social/iht_20aug.htm

9. NTI Country Overviews: Indian Facilities   www.nti.org/e_research/profiles/india/nuclear/2103_2587.html [Sep 2003] and /india/index.html

10.  http://www.npcil.nic.in/pdf/Atoms_in_Japan.pdf (December 19, 2011)  Nuclear Power Costs Estimated at JPY8.9 per kWh, Matching Wind and  Geothermal.

11.  http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx  [Nuclear Power Generation in India]

12.   http://www.igcar.ernet.in [Indira Gandhi Centre for Atomic Research]

***************

பின் சேர்ப்பு:

Milestones of the Indian Atomic Energy (1944-2004)

www.npcil.org   (Nuclear Power Corporation of India, Ltd)

March. 12, 1944 : Dr. Homi Jehangir Bhabha writes to Sir Dorabji Tata Trust for starting Nuclear Research in India

December 19, 1945 :Tata Institute of Fundamental Research (TIFR) Mumbai is inaugurated.

April 15, 1948 : Atomic Energy Act is initiated by Jawaharlal Nehru & passed in Parliament.

August 10, 1948 : Atomic Energy Commission is constituted with Dr. Homi. J. Bhabha as the First Chairman.

July 29,1949 : Rare Minerals Survey Unit brought under Atomic Energy Commission and named as ‘Raw Materials Division ‘ (RMD), with Headquarters at New Delhi. In 1958, this unit

becomes Atomic Minerals Division (AMD), and later in 1974, shifts to Hyderabad. It is renamed as Atomic Minerals Directorate for Exploration and Research (AMD) on July 29, 1998.

August 18, 1950 : Indian Rare Earths Limited (IRE), owned by the Government of India and Government of Travancore, Cochin, is set up for recovering minerals, processing of Rare Earths compounds and Thorium – Uranium concentrates. In 1963, IRE becomes a full-fledged government undertaking under DAE

April 1951: Uranium Deposit at Jaduguda is discovered by AMD. Drilling operations commence in December 1951.

December 24, 1952 : Rare Earths Plant of IRE at Alwaye, Kerala, is dedicated to the nation and production of Rare Earths & Thorium – Uranium concentrate commences.

August 3, 1954 :Department of Atomic Energy [DAE] is created.

August 1, 1955 : Thorium Plant at Trombay goes into production.

1956 : AMD discovers Uranium mineralisation at Umra, Rajasthan.

August 4, 1956 :APSARA – first research reactor in Asia, attains criticality at Trombay, Mumbai.

January 20, 1957 : Atomic Energy Establishment, Trombay (AEET) is inaugurated. Named as Bhabha Atomic Research Centre (BARC) in 1967 after Dr. H.J. Bhabha ‘s death in 1966.

August 19, 1957 : AEET Training School starts functioning at Trombay.

January 30, 1959 :Uranium Metal Plant at Trombay produces Uranium.

February 19, 1960 : First lot of 10 Fuel Elements for CIRUS reactor, is fabricated at Trombay

July 10, 1960 : CIRUS – the 40 MWt research reactor, attains criticality. In 1961 Pandit Nehru dedicated it to the Nation. After its successful refurbishment, the reactor was re-dedicated to the Nation on October 31, 2002.

January 14, 1961 : Research Reactor ZERLINA attains criticality. (It is decommissioned in 1983).

1965: IRE takes over operation of Mineral Processing Unit at Manavalakurichi in Tamil Nadu and at Chavara in Kerala.

January 22, 1965 : Plutonium Plant is inaugurated at Trombay.

January 24, 1966 Dr. H.J. Bhabha died in a Plane Accident on the Alps Mountains.

January 22, 1967 : AEET is named as Bhabha Atomic Research Centre (BARC).

April 11, 1967 : Electronics Corporation of India Limited (ECIL) is set up at Hyderabad for producing electronic systems, instruments and components for the Atomic Power Plants & Nuclear Operating Facilities.

June 1, 1967 : Power Projects Engineering Division (PPED), Mumbai is formed. The Division is subsequently converted to Nuclear Power Board on August 17, 1984.

October 4, 1967: Uranium Corporation of India Limited (UCIL) is established with head quarters at Jaduguda Mines in Jharkhand (then Bihar).

May 1968: Uranium Mill at Jaduguda, with a capacity of 1,000 TPD, commences commercial production of Magnesium Diuranate (yellow cake). Jaduguda Mine Shaft is commissioned in November 1968.

December 31, 1968 : Nuclear Fuel Complex is set up at Hyderabad, Andhra Pradesh to fabricate the Nuclear Fuel Elements to the Atomic Power Reactors.

March 12, 1969 : Reactor Research Centre (RRC) starts at Kalpakkam, Tamil Nadu. The Centre is fully established in 1971. It is named as Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) on December 18, 1985.

May 1, 1969 : Heavy Water Projects is constituted at Mumbai. This later becomes Heavy Water Board.

October 02, 1969 : Tarapur Atomic Power Station starts commercial operation.

1970 : AMD hands over the Uranium Deposit at Narwapahar to UCIL.

September 06, 1970 : Uranium-233 is separated from irradiated Thorium

February 18, 1971 : Plutonium fuel for Research Reactor PURNIMA-I is fabricated at Trombay.

1972 : Atomic Minerals Division AMD hands over the beach sand heavy mineral deposits of Chhatrapur, Orissa and Neendakara-Kayankulam, Kerala to IRE.

February 3, 1972 : Dept of Atomic Energy Safety Review Committee is formed.

May 18, 1972 : Research Reactor PURNIMA-I attains criticality using Plutonium Fuel.

November 30, 1972 : Unit-1 of Rajasthan Atomic Power Station at Rawatbhatta, near Kota, Rajasthan, begins commercial operation. Unit II goes commercial on November 1, 1980.

1974: By-product Recovery Plant of UCIL at Jaduguda is commissioned.

May 18, 1974 : Peaceful underground Nuclear Experiment is conducted at Pokhran, Rajasthan.

March 1975 : Commercial production of Uranium Mineral Concentrates from Copper plant tailings at Surda, Hindustan Copper Limited commenced.

May 1975 : Commercial production of by-products – Molybdenum and Copper concentrates starts.

September 1975 : Surda Uranium Recovery Plant of UCIL is commissioned.

June 16, 1977 : Variable Energy Cyclotron becomes operational at Kolkata.

1978 : High-sensitivity airborne spectrometric and magnetometric surveys started.

1979 : AMD hands over Bhatin and Turamdih (East) uranium deposits (now in Jharkhand State) to UCIL.

Nov 18, 1979 : Plutonium-Uranium Mixed Oxide (MoX) fuel is fabricated at Trombay.

November 19, 1982 : BARC ‘s Power Reactor Fuel Reprocessing Plant at Tarapur is commissioned.

1983 : At Kalpakkam, The Fast Breeder Test Reactor (FBTR) attains first criticality.

February 1983 : Rakha Uranium Recovery Plant of UCIL is commissioned.

November 15, 1983 : Atomic Energy Regulatory Board (AERB) in Mumbai is constituted.

1984 : Sandstone-type uranium deposit at Domiasiat, Meghalaya is discovered.

January 27, 1984 : Madras Atomic Power Station – Unit I at Kalpakkam starts commercial operation. Unit II goes commercial on March 21, 1986.

February 19, 1984 : Centre for Advanced Technology (CAT) at Indore (Madhya Pradesh) is inaugurated.

March 8, 1984 : Plutonium – Uranium mixed Carbide Fuel for Kalpakkam Fast Breeder Test Reactor (FBTR) is fabricated at Trombay.

May 10, 1984 : Research Reactor PURNIMA-II, a Uranium-233 fuelled homogenous reactor, attains criticality.

1985 : AMD hands over the Bodal uranium deposit to UCIL.

March 5, 1985 : Nuclear Waste Immobilisation Plant (WIP) at Tarapur is commissioned.

August 8, 1985 : Research Reactor DHRUVA (100 MWt) attains criticality. It attains full power on January 17, 1988. The main purpose is Plutonium production.

October 18, 1985 : Kalpakkam Fast Breeder Test Reactor (FBTR) at Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) attains criticality.

1986 : Dredge Mining, Mineral Separation and Synthetic Rutile Plant at OSCOM, Chhatrapur, Orissa is commissioned by IRE. HERO Project at Alwaye, Kerala, is commissioned. Production is started at OSCOM.

October 1986 : Bhatin Mine is commissioned by UCIL and the ore is transported to Jaduguda mill for processing.

December 1986 : Mosaboni Uranium Recovery Plant of UCIL is commissioned.

1987 : AMD hands over Turamdih (West) uranium deposits to UCIL, and beach sand deposits in Tamil Nadu to IRE.

September 17, 1987 : Nuclear Power Corporation of India Limited (NPCIL) is formed by converting the erstwhile Nuclear Power Board.

1988 : AMD hands over the Kuttumangalam and Vettumadia sand deposits, Tamil Nadu to Indian Rare Earths (IRE).

December 30, 1988 : 12 MV Pelletron Accelerator is inaugurated in Mumbai. The accelerator is a joint endeavour of BARC & TIFR.

1989 : Atomic Minerals Division (AMD) Training School is inaugurated. Board of Radiation and Isotope Technology (BRIT) is constituted.

January 3, 1989 : Regional Radiation Medicine Centre (RRMC) is inaugurated at Kolkata.

March 12, 1989 : Narora Atomic Power Station Unit I attains criticality. Its Unit II attains criticality on October 24, 1991.

1990 : Dolostone -hosted uranium mineralisation in the western margin of Cuddapah basin is discovered. Mineral Research Development Centre (MRDC) of IRE is launched at Kollam. HERO Plant is commissioned at Alwaye. Dredge & Wet Concentrator Plant at Chavara, Kerala, is commissioned.

November 9, 1990 : Research Reactor PURNIMA-III, a Uranium-233 fuelled reactor, attains criticality.

1991: AMD discovers uranium mineralisation at Lambapur, Nalgonda district, Andhra Pradesh and produces upgraded xenotime concentrate at ‘Pre-concentrate Upgrading Plant (PUP) at Kunkuri.

May 16, 1991: First ECR heavy ion source of the country becomes operational at the Variable Energy Cyclotron Centre.

1992 : First remotely operated radiography camera is launched. Significant heavy mineral concentration along the East Coast, Andhra Pradesh, is identified.  New Thorium Plant at OSCOM,Chhattrapur, Orissa is commissioned by IRE.

September 3, 1992 : Kakrapar Atomic Power Station – Unit I attains criticality. Its Unit II attains criticality on January 8, 1995

1993 : BARC supplies one millionth radioisotope consignment.

1995 : Research Irradiator Gamma Chamber 5000 is launched by BRIT.

January 1995 : Narwapahar mine is inaugurated.

1996 : Kamini Reactor (30KWt ) attains criticality with Plutonium-239 Fuel. The reactor is taken to full power in September, 1997.

March 27, 1996 : Kalpakkam Reprocessing Plant (KARP) is cold commissioned. KARP is dedicated to the nation on September 15,1998.

October 20, 1996 : Kalpakkam Mini Reactor (KAMINI), with Uranium-233 fuel, attains criticality at IGCAR, Tamilnadu.

1997 : AMD discovers of uranium mineralisation in brecciated limestone at Gogi, Gulbarga district, Karnataka in the Bhima basin. Microzir Plant is commissioned in Chavra, Kerala.

March. 31, 1997 : Rajasthan Atomic Power Station Unit-1 is re-commissioned.

December 1997: Jaduguda Mill is expanded to treat 2,090 tonnes ore per day. PRYNCE (95% Neodymium Oxide) Plant is commissioned at Rare Earths Division.

May 11 & 13, 1998 : Five underground nuclear tests are conducted at Pokhran Range, Rajasthan.

May 27, 1998 : Rajasthan Atomic Power Station Unit-2 is re-commissioned after enmasse replacement of coolant channels.

August 10, 1998 : The 500 keV industrial electron accelerator developed indigenously by the BARC is commissioned for its first phase of operation.   Ammonium diuranate (ADU) production commences at Rare Earths Division of IRE at Alwaye, Kerala.

April 22, 1999 : 450 MeV Synchrotron Radiation Source Indus-1 achieves electron beam current of 113 milli-ampere superceding the design value of 100 milli-ampere.

July 1999 : Solid Storage and Surveillance Facility (S3F) is commissioned at Tarapur.

September 24, 1999 : Unit-2 of Kaiga Atomic Power Station attains criticality. It is synchronised to the grid on December 02, 1999, and becomes commercial on March 16, 2000.

December 24, 1999 : Unit-3 of Rajasthan Atomic Power Station attains criticality. It is synchronised to the grid on March 10, 2000, and becomes commercial on June 2, 2000.

January 1, 2000 : BRIT ‘s Radiation Processing Plant at Vashi, Navi Mumbai is commissioned.

2000 : Boron Enrichment Plant is commissioned at IGCAR, Kalpakkam.

March 8, 2000 : Tarapur Atomic Power Project -3&4 rises up.

March, 2000 & May 2000 : First concrete pour of Unit-3 and Unit-4 of Tarapur Atomic Power Project-3 & 4.

April 21, 2000 : Folded Tandem Ion Accelerator (FOTIA) at Trombay delivers first beam on target.

September 26, 2000 : Unit-1 of Kaiga Atomic Power station attains criticality. It synchronises to the grid on October 12, 2000.

November 3, 2000 : Unit-4 of Rajasthan Atomic Power station attains criticality. It creates history by synchronising with the grid within a period of 14 days on November 17, 2000. The unit becomes commercial on December 23, 2000.

November 16, 2000 : Unit -1 of Kaiga Atomic Power Station becomes commercial.

2001 : Kalpakkam Fast Breeder Test Reactor (FBTR) fuel reaches high burn up rate of 100,000 MWd/Ton.

March 18, 2001: Units 3 & 4 of Rajasthan Atomic Power Stations dedicated to the nation.

February 12, 2002 : India signs the biggest contract with the Russian Federation for the (Two VVER-1000 Reactors) Nuclear Power Station at Kudankulam, Tamil Nadu.

March 30 & May 10, 2002 : First pours of concrete respectively of Unit-3 and Unit-4 of Kaiga Atomic Power Project 3 & 4.

March 31, 2002 : First pour of concrete of Units 1&2 of Kudankulam Atomic Power Project.

September 18, 2002 : First pour of concrete of Unit-5 of Rajasthan Atomic Power Project 5 & 6

October 31, 2002 : Nuclear Waste Immobilisation Plant and Uranium-Thorium Separation Plant at (both at Trombay), and the Radiation Processing Plant Krushak at Lasalgaon, district Nasik, Maharashtra, are dedicated to the Nation.

November 2002 : UCIL ‘s Turamdih Mine, Jharkhand is inaugurated and Technology Demonstration Pilot Plant becomes operational at Jaduguda.

2003 : 1.7 MeV Tandetron Accelerator and the demo facility Lead Mini Cell (LMC), for reprocessing of Fast Breeder Test Reactor (FBTR) carbide fuel on lab scale, are commissioned at IGCAR.

(Compiled by Publication Division, DAE)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 1, 2016  (Revised R-3)

https://jayabarathan.wordpress.com/

உலகப் புகழ் பெற்ற முதல் இந்தியத் தமிழ்ப்பெண் விஞ்ஞானி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கருந்துளை ஒரு சேமிப்புக்
களஞ்சியம் !
விண்மீன் தோன்றலாம் !
ஒளிமந்தைகள் பின்னிக் கொள்ளலாம் !
இருளுக்குள் உறங்கும்
பெருங் கருந்துளையை எழுப்பாது
உருவத்தை மதிப்பிட்டார் !
உச்சப் பெருங் கருந்துளைக்கு
வயிறு பெருத்த விதம்
தெரிந்து போயிற்று !
பிரியாவின் அடிக் கோலால்
பெரிய கருந்துளையின்
உருவத்தைக் கணிக்க முடிந்தது !
விண்மீன்களை விழுங்கியும்
கும்பி நிரம்பாது
பிண்டங்களைத் தின்று
குண்டான உடம்பை
நிறுத்தும் உச்ச வரம்பு !
“பிரியா வரம்பு”
கடவுளின்
கைத்திறம் காண்பது
மெய்த்திறம் ஆய்வது,
வையகத்தார் மகத்துவம் !

+++++++++++

Limit to the Largest Blackhole

“பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப்படுகிறது ! அசுரப் பெரும் கருந்துளைகள் அண்டையில் இருக்கும் பிண்டங்களை விழுங்கி உச்ச நிறைக்கு மீறி வளராமல் நிறுத்தம் அடைகின்றன. சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்தி நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. உச்ச நிறை அடைந்த கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பி நிற்கவில்லை ! பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அவற்றின் நிறை உச்ச வரம்பு நிலை அடைந்து விட்டது,”

“கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera).”

டாக்டர் பிரியா நடராஜன் (Professor, Dept of Astronomy & Physics, Yale University, Connecticut, USA)

“என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள் மணல் பற்றியும் (Granularity of Dark Matter) நான் ஆராய்ச்சி செய்தேன்.”

டாக்டர் பிரியா நடராஜன்

“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன ! காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைத் திறந்து காட்டி விட்டது !”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல ! அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் ! அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

பேருருவக் கருந்துளைக்குப் பிரியாவின் உச்ச நிறை வரம்பு

விண்வெளியில் கருந்துளைகள் கண்களுக்குத் தெரியாமல் போயினும் அவற்றின் வடிவை விஞ்ஞானிகள் மறைமுகமாக மதிப்பீடு செய்ய முடிகிறது ! அணுவைப் போல் சிறிதாகவும் கருந்துளைகள் இருக்கலாம் ! அசுர வடிவத்திலே பல கோடிப் பரிதிகளின் நிறையிலே கருந்துளைகள் குடியிருக்கலாம் ! அப்படி அவற்றின் நிறைகள் குறைவதற்கும், கூடுவதற்கும் தூண்டுகோலானக் காரணங்கள் என்ன ? நிறைகள் கூடி வயிறு பெருத்துக் கருந்துளைகள் பெரிதாகிப் பெரிதாகி வரையறை யின்றி பூத வடிவம் பெறுகின்றனவா ? அல்லது அவை ஓரளவுக்கு மேல் மீறாமால் நிலைத்துவம் அடைந்து உச்ச வரம்புடன் நின்று விடுகிறதா என்று ஆராய்ச்சி செய்த இந்தியப் பெண் விஞ்ஞானி டாக்டர் பிரியம்வதா நடராஜன். பேருருவக் கருந்துளைகளின் நிறைக்கு முதன்முதல் “உச்ச நிறை வரம்பை” (Mass Limit of Black holes) 2008 செப்டம்பரில் உலகுக்கு எடுத்துக் கூறியவர் பிரியா நடராஜன். அவ்விதம் பெரும் பூதக் கருந்துளைக்கு அவர் கூறிய உச்ச வரம்பு நிறை பரிதியைப் போல் 10 பில்லியன் மடங்கு ! அதற்குத் தமிழ் விஞ்ஞானத்தில் நாம் “பிரியாவின் வரம்பு” (Priya’s Limit) என்று பெயர் வைப்போம்.

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளிக்கு ஓர் விண்வெளி ஆராய்ச்சிச் சவாலாகப் பிரபஞ்சத்தின் தீராத பெரும் புதிராகக் கருந்துளைகள் இருந்து வருகின்றன ! பல வல்லுநர்கள் இராப் பகலாக கருந்துளையின் இரகசியத்தை உளவு செய்து வருகிறார். அந்த ஆய்வு முயற்சிகளில் யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிக பெண் விஞ்ஞானி பிரியா நடராஜன் ஓர் அரிய கருத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது வளரும் எந்தக் கருந்துளைக்கும் ஓர் உச்ச வரம்பு நிறை உள்ளது என்பதே ! பிரியாவின் அந்த அரிய அறிவிப்பு ராயல் வானியல் குழுவினரின் (Royal Astronomical Society) மாத இதழிலும் வெளிவந்துள்ளது !

பிரபஞ்சக் கருந்துளை என்பது என்ன ?

1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ! ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றிமுப்பது ஆண்டுகள் கடந்தன !

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டத்தையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு விழுங்கிவிடும்.

எத்துணை அளவு நிறை வரைப் பெருக்கும் கருந்துளைகள் ?

அணு வடிவில் சிறிதாயும் பூத உருவத்தில் பெரிதாகவும் பெருத்து வளர்பவை கருந்துளைகள் ! சிறு நிறைக் கருந்துளை, பெருநிறைக் கருந்துளை என்று பிரிவு பட்டாலும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறையில் உள்ள கருந்துளைகளும் விண்வெளியில் கருவிகள் மூலமாகக் காணப்படலாம் ! பொதுவாகக் கருந்துளைகள் அருகில் அகப்படும் வாயுக்கள், தூசித் துகள்கள், ஒளிவீசும் விண்மீன்கள், ஒளியிழந்த செத்த விண்மீன்கள் போன்றவற்றை அசுர ஈர்ப்பாற்றலில் இழுத்து விழுங்கி வயிறு புடைத்துப் பெருக்கும் ! அப்போது கருந்துளையின் நிறை ஏறிக் கொண்டே போகிறது ! ஆனால் அந்த நிறைப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லை உள்ளது என்று பிரியா நடராஜன் முத்திரை அடிக்கிறார். எந்தப் பீடத்தில் இருந்தாலும் இட அமைப்பு கருந்துளை நிறையின் உச்ச அளவு வரம்பை மீற விடாது என்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரும் பூத வடிவுக் கருந்துளையின் (Ultra-massive Black Hole) நிறை மதிப்பு பரிதியைப் போல் ஒரு பில்லியன் மடங்காக அறியப் படுகிறது !

பிரியா நடராஜனும் அவரது விஞ்ஞானக் கூட்டாளர் டாக்டர் எஸிகுயில் டிரைஸ்டர் (Dr. Ezequiel Treister, A Chandra/Einstein Post-Doctoral Fellow at the Institute for Astronomy Hawaii) அவர்களும் விண்வெளி நோக்ககச் (Space Observatory) சான்றுகளிலிருந்தும், கோட்பாடுத் தர்க்கங்கள் மூலமாகவும் கருந்துளை உச்ச நிறை வரம்பு 10 பில்லியன் பரிதி அளவு என்று மதிப்பீடு செய்திருக்கிறார். “சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்திப் பெருக்காமல் நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் அத்தகைய வயிறு புடைத்த பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் என்று பிரியா கூறுகிறார் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப் படுகிறது ! உச்ச நிறை பெற்ற கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பியவை அல்ல ! பிரபஞ்சத் தோற்றத்தின் காலத்திலே அவற்றின் நிறை உச்ச நிலை அடைந்து விட்டது,” என்று கூறுகிறார் பிரியா.

huge-black-hole

கருந்துளை வளர்ச்சி எப்படி நிறுத்தம் அடைகிறது ?

“அருகில் அகப்படும் அண்ட பிண்டங்களை விழுங்கும் கருந்துளை, தான் புறவெளியில் உறிஞ்சிய கதிர்ச்சக்திக்குச் சமமான அளவுக்குக் கதிர்ச்சக்தியை வெளியேற்றும் போது மேலும் வாயுப் பிண்டத்தை இழுக்க வலுவற்று, வயிறு நிரம்பித் தடைப்பட்டு ஓர் வரையறையைத் தொடுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது ! ஏனெனில் காலாக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளை பிண்டங்களின் ஒரு சேமிப்புக் களஞ்சியமாய் வீற்றிருந்து விண்மீன் பிறப்புக்கும் காலாக்ஸி அமைப்புக்கும் வழிவகுக்கிறது,” என்று சொல்கிறார் பிரியா. “கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera). பல்வேறு துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போது, நான் எதிர்பாராத விதமாய்க் கண்டுபிடித்த இந்த அரிய நிகழ்ச்சி எனக்குப் பூரிப்பளிக்கிறது” என்று சொல்கிறார் பிரியா.

விண்மீன் பிறப்புக்கும், கருந்துளை வளர்ச்சிக்கும் அண்டவெளி வாயுப் பிண்டங்கள் தேவை. கருந்துளைகள் இரண்டு விதம். ஒன்று பசியின்றி உயிருடன் இருக்கும் வயிறு நிரம்பியது ! இரண்டாவது பசியோடு முடங்கிய குறை வயிறுப் பட்டினியானது ! அவை யாவுமே எக்ஸ்-ரே கதிர்கள் வீசுபவை ! கண்ணோக்கு அலைப் பட்டையில் சுடரொளிக் குவஸாராகக் காணப்படுபவை (Optical Wave Band as a Bright Quasar) ! இதில் விந்தையான கோட்பாடு என்ன வென்றால் கருந்துளைகள் யாவும் “சுய வளர்ச்சி பெறும் அண்டங்கள்” (Self Regulating Growth Objects) என்பதே ! அதாவது உச்ச நிறை வரம்பு எய்திடும் ஒரு சில பூதப் பெரும் கருந்துளைகள் உள்ளன என்பதே இப்போது மகத்தானதோர் கண்டுபிடிப்பு,” என்று பெருமைப் படுகிறார் பிரியா நடராஜன் !

பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு

பிரியம்வதா என்னும் பிரியா ஓர் வானியல் பௌதிக விஞ்ஞானி. அவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினியர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். டெல்லியில் பௌதிகத்தில் கீழ்நிலை விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பௌதிகம், கணிதத் துறைகளை மேலாக விரும்பி மேற்படிப்புக்கு M.I.T (Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA) ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார். பிறகு கோட்பாடு வானியல் பௌதிகத்தில் (Ph.D. in Theoretical Astrophysics) டாக்டர் வெகுமதி பெற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், டிரினிடி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை) பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸர் மார்டின் ரீஸ் (Dr. Martin Rees) மேற்பார்வையில் பயின்றார்.

வானியல் பௌதிக விஞ்ஞானியான பிரியாவுக்கு விருப்பப் பிரிவுகள் : பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு, கருந்துளைப் பௌதிகம் (Cosmology, Gravitational Lensing & Black Hole Physics). “என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள்மணல் (Granularity of Dark Matter) பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று பிரியா நடராஜன் கூறுகிறார். Ph.D. ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிடி கல்லூரி ஐஸக் நியூட்டன் ஸ்டூடன்ஷிப் ஆராய்ச்சி -வானியல் பௌதிக ஃபெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண் ·பெல்லோஷிப் ஆய்வாராளாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கு வருவதற்கு முன்பு டொரான்டோ கனடாவில் (Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் டாக்டர் முன்னோடிப் பயிற்சிக்கு விஜயம் (Postdoctoral Fellow Visits) செய்தார். ஓராண்டு யேல் பல்கலைக் கழக விடுமுறை எடுத்து 2008-2009 தவணை ஆண்டுப் பங்கெடுப்பில் ஹார்வேர்டு ராட்கிளி·ப் மேம்பாட்டுக் கல்விக் கூடத்தில் (Radcliffe Institute for Advanced Study at Harvard) ஓர் ஆராய்ச்சி ஃபெல்லோஷிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் பிரியா “கருமை அகிலவியல் மையத்தின்” இணைப்பாளராய் டென்மார்க் நீல்ஸ் போஹ்ர் கருமை அகிலவியல் மையத்தில் (Associate of the Dark Cosmology Centre, Niels Bohr Institute, University of Copenhagen, Denmark) இருந்து வருகிறார்.

பிரியா நடராஜன் தனது வானியல் பௌதிகத் துறை ஆய்வுகளை ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தருங்குகளை ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார். 2008 அக்டோபர் 25 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் (Science News) அசுரப் பெருநிறை கருந்துளைகள் (Ultra-massive Black Holes) பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை அட்டைக் கட்டுரையாய் வரப் போகிறது. அவற்றின் அரிய உட்கருத்துக்கள் மேலும் ஏற்கனவே டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத் தகவல் (Discover Magazine, Nature, India Abroad, Honolulu Times, Dutch Popular Science, Harvard Gezette, Yale Daily News) ஆகியவற்றிலும் வந்துள்ளன.

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது.

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What Happens When Black Holes Collide ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html (Black Hole Article -1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40808282&format=html (Black Hole Article -2)
24. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810091&format=html [Collision of Balck Holes)
25 Discover Magazine – Whole Universe – Invisible Universe By Martin Rees & Priyamvada Natarajan. [Fall 2008]
26. The Evolution of Massive Black Hole Seeds By Marta Volonteri, Giuseppe Lodato and Priyamvada Natarajan, MNRAS, 383, 1079, [2008]
27. Science News – Upcoming Issue -Ultramassive (Black Hole) : As Big As it Gets By : Charles Petit [Oct 25, 2008]
28 Is There an Upper Limit to Black Hole Masses ? By Priyamvada Natarajan & Ezequiel Treister [in Press 2008]
29 India Abroad International Weekly – Priyamvada Natarajan Puts a Cap pn Black Holes : 10 Billion Times the Sun By : Aziz Haniffa [Sep 19, 2008]
30. Science Blog -Size Limit for Black Holes [Sep 11, 2008]
31. Yale Astronomer (Dr. Priyamvada Natarajan) Discovers Upper limit for Black Holes [Sep 4, 2008]
32 Dr. Priyamvada Natarajan Webpage :http://www.astro.yale.edu/priya/index.html – Associate Professor, Departments of Astronomy and Physics, Yale University, 260 Whitney Avenue, New Haven, CT 06511.

33. https://en.wikipedia.org/wiki/Priyamvada_Natarajan  [December 1, 2015]

34.  http://www.astro.yale.edu/priya/

******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com]  February 29, 2016]  [R-1]

பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்

 Long bride -10

 

[World’s Highest Butterfly Bridge in France] 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

https://youtu.be/F6wLEiv491g

பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை நுணுக்கங்களின் மகத்தான வல்லமையை அது எடுத்துக் காட்டுகிறது.  அங்கே கட்டப்பட்டு, பிரென்ச் மக்கள் மெய்யாகப் பெருமைப்படும் அந்த மகத்தான சாதனை பிரான்சின் தீரச்செயலைப் பறைசாற்றுகிறது. நவீன வெற்றிமயமான பிரான்ஸ் தேசம், எதிர்காலத்துக்காகத் தன்னை இணைத்துக் கொள்ளும் ஓர் பங்கெடுப்புத் திட்டம், இது ‘.

பிரென்ச் அதிபதி: ஜாக்ஸ் செராக் (President: Jacques Chirac)

Long bride -9

‘மனிதனின் படைப்பு வினைகள் இயற்கை வனப்புக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். வீதிப் பாலத்தை வானவெளியில் தூக்கி நிற்கும் தூண்கள் பூமியில் ஏறக்குறைய இயற்கையாக வளர்ந்தவை போல எழுந்து, சூழ்வெளி வனாந்திர எழிலில் தோற்றம் அளிக்க வேண்டும். பொலிவுடன் காட்சி தரும் பள்ளத்தாக்குடன், பாலம் ஒட்டுத் தையல் போட்டதுபோல் தெரியக் கூடாது. பசுமையான வனச்சரிவுகள் பரந்த வெளியில் பட்டாம்பூச்சி மென்மையாக எழுவது போல் பாலம் காணப்பட வேண்டும் ‘.

‘நமது நாகரீக யுகத்தில் பின்னணித் துணைத்துறை [Infrastructure] அமைப்பு ஒரு நாட்டுக்கு வேண்டிய அடிப்படை. பொதுவெளித் தளங்கள், நதிகள் மீது கட்டும் பாலங்கள், வீதிகள் ஆகியவைதான் மக்களை ஒருங்கிணைத்துச் சேர்க்கின்றன. மேலும் நமது வாழ்க்கைத் தரத்தை அவை செம்மைப் படுத்துகின்றன. ஆனால் ஒருவர் அளந்தறிய முடியாத மிக்க ஆன்மீக உணர்வும், நமது தேவைகளில் ஒன்றாய் அவற்றுடன் இருக்கின்றது. ‘

Long bride -7

‘பாலம் மீது ஒருவர் வாகனத்தில் கடந்து செல்லும் போது, அவரது உள்ளத்தையும் பாலம் உயரச் செய்ய வேண்டும். கம்பீரமான பாலத்தைப் பார்க்கும் அவரது நெஞ்சில் ஓர் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். மில்லா நகர் வழியே வாகனப் பயணங்களைத் தவிர்த்து அதைப் பாழாக்காமல், வான்வீதிப் பாலம் மாந்தருக்குக் கடந்து செல்ல வேறு பாதை அளிப்பதுடன், அதைத் தாண்டி மனப் பூரிப்பையும் மிகையாய்த் தருகிறது.’

பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலைநிபுணர்: நார்மன் ஃபாஸ்டெர் (British Architect: Norman Foster)

Long bride -5

பொறிநுணுக்கமும் கலைத்துவமும் கலந்த வான்வீதிப் பாலம்

உலகப் பெருவிந்தைப் படைப்புகளில் முன்னணியில் நிற்கும் பாரிஸ் ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower], அமெரிக்காவின் சுதந்திரச் சிலை [Statue of Liberty] ஆகியவற்றை ஆக்கிய பிரான்ஸ் தேசம், மற்றுமொரு மகத்தான பொறியியற் சாதனையாக மிக்க உயரத்தில் ஒரு நீண்ட வான்வீதிப் பாலத்தைத் தனது 21 ஆவது நூற்றாண்டுப் படைப்பாக அமைத்து, உலகிலே ஓர் பரபரப்பை உண்டாக்கி யுள்ளது! தீக்குச்சி களில் நூலைக் கட்டித் தொங்கவிட்ட தொட்டில் போல் எளிதாகத் தோன்றுகிறது, பிரான்சின் பிரம்மாண்டமான இரும்புவடம் தூக்கிய புது யுகப் பாலம் [Cable-Stayed Modern Bridge]! கண்கொள்ளாக் காட்சியாய்க் கவரும், பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லைப் பகுதியில் டார்ன் நதிப் பள்ளத்தாக்கில் (Tarn River Valley), உயர்ந்த மலைச் சரிவுகளில் தெரிந்தும், தெரியாமால், சூழ்வெளிப் பொலிவைச் சிறிதும் குன்றச் செய்யாது அற்புதமாக ஆக்கப் பட்டிருக்கிறது, பிரான்சின் இரும்புவடத் தொங்கு பாலம்!

ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் [2460 மீடர்] நீளமான வான்வீதிப் பாலம், பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிஃப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி [270 மீடர்] உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு, 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில், எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி [343 மீடர்] உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது, ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!

மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் ஃபாஸ்டர். ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணர், நார்மன் ஃபாஸ்டர். பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரை, ஸ்பெயின் நாட்டு எல்லையுடன் இணைக்கும் பாதையில் (A75) இப்புது வீதி, ரோன் நதி தீரத்தில் [Rhone River Valley] கோடை கால மோட்டர் வாகனங்களின் பயண நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டது. ‘மலைச் சரிவுப் பள்ளத்தாக்கில் கண்ணுக்குப் பட்டும், படாமல் மெலிந்த சிற்பக் கோடுகள் போல் தோற்றம் அளிக்கிறது, பிரான்சின் புதுப்பாலம். இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள நடை மொழியைப் பேசுகிறது இந்தப் பாலம். மிகச் சிறிய இடத்தை அடைத்துக் கொண்டு, மலைச் சரிவு தீரத்தில் இயற்கையுடன் பொருந்தி நடமிடும், இந்தப் பாலத்தின் கட்டமைப்புப் பொலிவு எங்களைக் கவர்கிறது! ‘ என்று ஃபாஸ்டர் கூறினார்.

Relative Size

பிரான்சின் மில்லா வான்வீதி, ஜப்பான் கடல்மீது கட்டியுள்ள நீண்ட தொங்கு பாலம் ஆகாஷி கைகோவை விட [Akashi Kaiko, Japan] சற்று நீளமானது. மேலும் மில்லாவின் கூம்பிய தூண்கள் ஆகாஷி ைகைகோ கோபுரங்களை விட மிக்க உயரத்தைக் கொண்டவை. ஆனால் அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸ் நதிமேல் [Arkansas River] 1067 அடி (320 மீடர்) உயரத்தில் இருக்கும் கொலராடோ ராயல் கார்ஜி பாலத்தை விடச் [Colorado Royal Gorge Bridge] உயரத்தில் சிறியது, மில்லா வான்வீதி. ஆனால் இரும்பு உத்தரச் சட்டத்தின் மேல் மரப்பலகைகளால் கட்டப்பட்ட ராயல் கார்ஜி பாலம் மனிதர் மட்டும் செல்லும் நடைபாலமே [Pedestrian Bridge] தவிர, பிரான்ஸ் மில்லா பாலம் போன்று மோட்டர் வாகனங்கள் பயணம் செய்யத் தகுதியும், வலுவும் அற்றது! ஆகவே மோட்டர் வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏற்ப பேருயர்ச்சியில் கட்டப்பட்ட உலகப் பெரும் பாலம், பிரான்சின் மில்லா வான்வீதி என்பதை அழுத்தமாகச் சொல்லலாம். ஈரோப்பின் [2004] நாணய மதிப்பில் E.394 மில்லியன் ஈரோ [523 மில்லியன் US டாலர்] செலவில் கட்டி முடிக்கப்பட்ட வான்வீதிப் பாலத்தை 2004 டிசம்பர் 14 ஆம் தேதி பிரென்ச் அதிபதி ஜாக்ஸ் செராக் கோலாகல மோடு திறந்து வைத்தார்.

Bridge details

வான்வீதிப் பாலத்தின் கட்டுமான விளக்கங்கள்

மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் ‘கடப்புக் கட்டணம் ‘ (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக் குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி!

The Road building

வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீடர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது. ஏழு கூம்பிய தூண்களின் [Piers] இடையில் அமைப்பான ஆறு இடையகற்சித் தட்டுகள் [Span Plates] ஒவ்வொன்றும் 1140 அடி (342 மீடர்). முதல்-இறுதித் தூண்களின் புறத்தே உள்ள தட்டின் நீளம்: 680 அடி (204 மீடர்). ஏழு தூண்கள் 253 அடி முதல் 807 அடி வரை உயரங்கள் (77 மீ-246 மீ) கொண்டு அடித்தளம் 81 அடி (24.5 மீ) அகலமும், பாலத் தட்டு அரங்கில் 36 அடி (11 மீ) அகண்டும், உச்சியில் ஒடுங்கியும் உள்ளன. தூண் ஒன்றின் மேல் 319 அடி (97 மீடர்) கோபுரம் [Pylon] நிற்கிறது. ஒவ்வொரு தூணும் 16 இணைப்புச் சட்டங்களால் சேர்க்கப்பட்டு, 2230 மெட்ரிக் டன் எடை கொண்டது. தூண்கள் ஒவ்வொன்றின் இருபுறத்திலும் 154 முறுக்கப்பட்ட இரும்பு வடங்கள் [Twisted Steel Cables] பூட்டப்பட்டு, மனிதக் கரங்கள் போல் பாலத்தின் இடைத்தட்டு எடையைத் தூக்கி, தட்டின் மட்டநிலை [Horizontal Level] உயரத்தைச் சீராகச் சமநிலையில் நிறுத்துகின்றன. முறுக்கிய இரும்பு நாண்களின் மொத்த எடை: 5000 டன்.

2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர். பாலவீதி அமைத்துள்ள பிரான்சின் மோட்டர் வாகன வீதி: A75 (Autoroute). 1140 அடி நீளம், 14 அடி தடிப்புள்ள காங்கிரீட் தட்டுகள், 60 டன் எடையுள்ள 13 அடிX57 அடி [4 மீடர்X17 மீடர்] துண்டுகளால் தனித்தனியாகச் சேர்க்கப்பட்டுப் பிறகு ஒவ்வொரு தட்டும், பூமியின் துணைக்கோள் மூலம் கண்காணிக்கப் பட்டு ஆயில் அழுத்த துடுப்புகளால் [Satellite-guided Hydraulic Rams], ஒவ்வொரு கனமான தட்டும், தூண்களின் மேல் மெதுவாக [நிமிடத்துக்கு 6 அங்குல] நகர்ச்சி வீதம் சீராகத் தள்ளப்பட்டு நேராக்கப் பட்டது.

வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.

Long bride -4

1989 பூகம்பத்தில் பழுதடைந்த அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ வளைகுடா தொங்கு பாலம் [Bay Bridge] 2004 இல் செப்பனிட அல்லது வேறிடத்தில் புதிதாய்க் கட்டத் தீர்மானமாகி, இப்போது மதிப்பீடைத் தாண்டிப் பல பில்லியன் டாலருக்கும் மேலோடி விட்டது. காலிஃபோர்னியா ஆளுநர் ஆர்நால்டு சுவார்ஸ்நெக்கர் [Arnold Schwarzeneggar], வளைகுடாப் பாலத்தில் டிசைன் மாறுதல் அமைக்கச் செய்து, நிதிச் செலவு குறையுமா வென்று ஆராய நிபுணர்களை ஏற்பாடு செய்தார். ஆனால் புதுப்பாலம் அமைப்புத் திட்டம் தீர்மானமாகத் தாமதமாகிக் கொண்டு வருவதால், தற்போது வளைகுடா பால அமைப்பு நிதி மதிப்பீடு [5200 பில்லியன்], பிரான்சின் வான்வீதிப் பாலச் செலவைப் போல் பத்து மடங்காகி விட்டது! பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது, மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே!

Long bride

******************************

Photo credits: [Thanks for the following Web Sites]

a) http://www.structurae.de/photos/index.cfm ?ID=31858

http://www.structurae.net/structures/data/index.cfm ?id=s0000351

b) http://en.wikipedia.org/wiki/Image:Millau_Viaduct_from_the_End_.jpg

By Photographer: Daniel Lavabre

c) http://www.structurae.net/photos/index.cfm ?JS=26588

And also the Following Websites

தகவல்:

1. World ‘s Tallest Bdige Opens in France [www.iafrica.com/pls/cms/iac.page] Dec 14, 2004

2. From Wikipedia the Free Encyclopedia

3. France Opens World Class Bridge By Dan Walters [Dec 15, 2004]

4. World ‘s Tallest Road Bridge Opens By the Guardian [www.guardian.co.uk/] Dec 14, 2004]

5. France Opens World ‘s Highest Bridge http://www.gulg-news.com

6. Europe ‘s Highest Bridge Links Art & Engineering [http://seattletimes.nwsource/cgi-bin]

7. France Inaugurates World ‘s Highest Bridge [www.reuters.co.uk/] Dec 14, 2004

8. http://www.bing.com/videos/search?q=millau+viaduct+bridge+france&&FORM=VDVVXX

9.  http://www.highestbridges.com/wiki/index.php?title=Millau_Viaduct

10.  https://en.wikipedia.org/wiki/Millau_Viaduct  [February 22, 2016]

*****************************

jayabarathans@gmail.com (S. Jayabarathan)  [February 27, 2016]  [R-1]

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -1

cover-image-radioactivity.jpg

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல”
நுகராது வாழ்தல் அறிவு.

அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது!  அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்!  பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்!  நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன!

விக்டர் கில்லிமின் [Victor Guillemin]

கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா?

உலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா ?  நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்!  கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் !

கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது!  மூக்கால் நுகர முடியாது!  உடம்புத் தோலால் உணரவும் முடியாது!  அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்!  கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் !

இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் !

பலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன!  கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை!  “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை !

கதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன ?

இயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது!  விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன!  நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது!  பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.

பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது!  வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது!  ரேடான் வாயுவைக் காண முடியாது! அதை உணர முடியாது !  நுகரவும் முடியாது!  வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது!  ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் !

இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின!  எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன!  மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன!

கதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன ?

ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார்!  அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார்.  அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர்!  அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்!  1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்!  அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்!  ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்!

இயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன.  அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன.  கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன!  அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை!  அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன.  ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles].  இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations].  மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை.  சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம்!  முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் !  வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்!

கதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்

நேர் மின்கொடையுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது.  ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும்!  ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் !

வேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான்!  அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை!  தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் !  பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் !

ஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது!  எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன!  கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது !

எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே !

நியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள்.  நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு !  அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் !

பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:

முதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்!

அண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].

அணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.

உடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.

வீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.

அணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.

பொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்!

ஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம்! [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].
100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர்.  அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்!
300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர்!  ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர்!  மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்!
1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்!
5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்!

கதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்!

கதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்!  ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect].  உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்!

கதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன.  சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது!  பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும்!  கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம்!  அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்!

அணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள்!  ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள்!  சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள்!  இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு  அதைச் சிதைக்கிறது!  ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது!  சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது! இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்!

ஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன!  ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை!  ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன!  புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே!  கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது!

செர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்

1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது!  நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது!  அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது!  மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது!  20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது!  ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர்!  அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள்! அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்!

கதிர்வீச்சுக் குறைப்பு! கதிர்வீச்சுப் பாதுகாப்பு!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன!  கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை  நிகழ்ச்சி யாகும்!  மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது!  ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதி யாகப் பாதுகாக்கப் பட வேண்டும்!  அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்!

அதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா?  ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன!  அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன! ஆனால் அவை போதா!  கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம்!  கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம்!  சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம்!  “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது!  மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் !

(தொடரும்)

[கட்டுரை -2]

***********************

தகவல்:

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=htmlLetter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504291&format=html (பாரதத்தின் பூத அணு
மின்சக்தி நிலையங்கள்)
13  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)
14 National Geographic Magazine Radiation Effects [April 1989]
15 Facts About Radiation by Ontario Hydro Nuclear Division
16 Ascent Magazine By Atomic Energy of Canada Ltd. [Summer 1989]
17 Understanding Ionizing Radiation [August 1992]
18 Radiation is Part of Life [March 1985]
19. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி ஞாநி)
20. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305046&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி எனது கட்டுரை)
21. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி இரண்டாம் கட்டுரை)

22.  http://www.nrc.gov/about-nrc/radiation.html

23.  http://www.hc-sc.gc.ca/ahc-asc/branch-dirgen/hecs-dgsesc/sep-psm/rpb-br-eng.php

24.  http://www.epa.gov/radiation

25.  https://en.wikipedia.org/wiki/Radiation_protection  [February 10, 2016]

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  February 26, 2016]