ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்

 Ship Enters Panama Canal

 Panama Canal (1870-1914)

[The Greatest Engineering Marvel]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

https://youtu.be/v4_yX_8HXig

https://youtu.be/YzCULxAmkRU

https://youtu.be/i5cFJ4j0qzw

https://youtu.be/VF7cA6I3zGY

https://youtu.be/VOu8aqE5GN0

+++++++++++++++++++++++

Location -1

Location of Canal

மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்;

மலை அடுக்கில் கட்டிய நீரணைக் கணவாய்;

வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையில்

புனைத்தொட்டி நிரப்பி ஏற்றி இறக்கும் கப்பலை. 

மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய்

கப்பல்கள் போய்வரும் ஒப்பிலா நீர் மார்க்கம். 

Parallel Locks

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்கா விலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்கா வின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூ யார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன!

How the Locks work

ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22% பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள் குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார் வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது!

சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும்

சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, புதுக் கண்டங்களான வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! இறுதியில் 1914 ஆம் ஆண்டில் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாய் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. ஆனால் பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்!

Canal Locks -5

சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் ஜார்ஜ் கோதல்ஸ் [George Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார். பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்கள் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்பதைப் பற்றி விளக்கிறது, இந்தக் கட்டுரை.

பனாமா கால்வாய் தோற்றத்தின் வரலாறு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, பொற்களஞ்சியம் தேடிப் புதிய கடல் மார்க்கத்தில் புகுந்து, அமெரிக்காவை நெருங்கிய கிரிஸ்டொபர் கொலம்பஸ் (1451-1506) முதன் முதலில் தரைவழியாக அதைக் கடக்க முயன்று தோல்வியுற்றார்! சுமார் 400 ஆண்டுகளாக பனாமா நாட்டின் குறுகிய தளப்பரப்பின் வழியே கால்வாய் ஒன்றை அமைத்திட ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்துத் தலையிட்டு முயற்சிகள் செய்தன! ஸ்பெயின் ராணுவக் கடல்தீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா [Vasco Nunez de Balboa (1475-1519)] 1513 இல் முதன்முதல் பனாமா நகரை அடைந்து, குன்று ஒன்றில் ஏறி நின்று பரந்து விரிந்த பசிபிக் கடலைப் பிரமிப்போடு கண்டு, உலகுக்கு அறிவித்த ஐரோப்பியர்! 1534 இல் ஸ்பெயின் மன்னர் முதலாம் சார்ல்ஸ், கால்வாய் அமைத்திட முதன்முதல் பனாமாவின் சுருங்கிய பீடத்தில் தளஆய்வு [Land Survey] செய்ய உத்தரவிட்டார். ஆனால் அவரது ஆணைக்குக் கீழ் பணியாற்றிய ஸ்பானிஸ் ஆளுநர் [Spanish Governor] ஓர் அதிருப்தியான தகவலை அனுப்பியதால், கால்வாய்த் திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் பல்லாண்டுகளாக ஸ்பானிஸ் கடல்வணிகர் பனாமா நாட்டின் இரண்டு கடற்கரைகளையும் நீர்வழியாக இணைக்க முயன்று தோல்வி யுற்றனர்!

Canal Locks -2A

பிரென்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் (1808-1873) பிரான்சுக்கு உரிமையான பனாமா தளப் பகுதியில் கால்வாய் ஆக்கிட 1860 இல் முயன்றார். கடல்மட்டக் கால்வாய் ஒன்றைப் பனாமா கட்டி முடிக்க, 1882 இல் பிரென்ச் கம்பெனி ஒன்று தயாரானது. 1855 இல் அமைத்த பனாமா ரயில் பாதையை ஒட்டியே, கால்வாயும் வெட்டத் திட்டமிடப் பட்டது. 1869 இல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து ‘சூயஸ் கால்வாய் தீரர் ‘ [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], சில ஆண்டுகளுக்குப் பிறகு, 74 ஆம் வயதில் பனாமா கால்வாயை அமைக்க நியமனம் ஆனார்! ஃபெர்டினட் லெஸ்ஸெப்ஸ் ஏழு வருடங்கள் பணிசெய்த பின், 1889 இல் பிரென்ச் கம்பெனி நொடித்துப் போனது! காரணம், பனாமா தளத்தையும், பாறைகளையும் தோண்டிய 20,000 கூலியாட்கள் வேனிற்தள நோய்களால் [மலேரியா, மஞ்சள் காய்ச்சல்] செத்து மடிந்தனர்! பிரென்ச் கட்டிட, மருத்துவ நிபுணர்களுக்கு ஒருவிதக் கொசுக்கள் மலேரியா, மஞ்சல் காய்ச்சலை உண்டாக்குவது, அப்போது தெரியாமல் போனது! பெருமழை பெய்து குட்டை, குளங்களில் நீர் நிரம்பி, வேனிற் தளப் பனாமாவின் ஈரடிப்புப் பூமியில் கொசுக்கள் கோடிக் கணக்கில் பெருகிப் பணியாட்கள் பலரது உயிரைக் குடித்தன!

அமெரிக்க அரசாங்கம் பனாமா அல்லது நிகராகுவா நாட்டின் வழியாகக் கால்வாய் ஒன்றை அமைக்க 1887 இல் முடிவு செய்து, 1889 இல் காங்கிரஸ் ‘மாரிடைம் கால்வாய்க் கம்பெனி ‘ என்னும் ஒரு குழுவைத் தயாரித்தது. அப்போது நியமனமாகிய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் [26th American President, Theodore Roosevelt (1858-1919)] பனாமா புதுக் குடியரசுடன் தொடர்பு கொண்டு, பிரான்ஸிடமிருந்து கால்வாய்த் திட்டத்தை வாங்க ஏற்பாடுகள் செய்தார். பிரான்ஸ் பனமா கால்வாய்த் திட்ட வேலைகளை 100 மில்லியன் டாலருக்குக் குறைவாக விற்கப் போவதில்லை என்று அறிவித்தது! அதே சமயம் நிகாராகுவாவில் கால்வாய் கட்டி முடிக்க 40 மில்லியன் டாலரே (1900 நாணய மதிப்பு) தேவைப்பட்டது! இறுதியில் 40 மில்லியன் டாலருக்கே பிரான்ஸ் பனாமா கால்வாயின் திட்டப் பணிகளையும் உரிமையையும் [ஆபீஸ், தளவாடங்கள், கருவிகள், உபகரணம், ரயில் வண்டிகள், தளப்படங்கள், தளவியல் ஆய்வுகள், 50 மில்லியன் குயூபிக் மீடர் தோண்டல் கால்வாய்] அமெரிக்காவுக்கு விற்றது! பனாமா குடியரசுக்குச் சொந்தமான குறுக்குத் தளத்தில் [Isthmus] 43 மைல் நீளமும் 10 மைல் அகண்ட கால்வாய் அரங்கம் [Canal Zone] அமெரிக்க அரசின் பொறுப்பில் 100 வருடத் தொடர் ஒத்திக்கு [100 Year Perpetual Lease] விடப்பட்டது.

Canal Bridge

அமெரிக்க பனாமா பூர்வ ஒப்பந்தம், கால்வாய்த் திட்டம்.

பனாமா நாடு 1900 ஆண்டுகளில் கொலம்பியா அரசின் ஆணைக்குக் கீழிருந்தது. முதல் ஒப்பந்தப்படி [Hay-Herran Treaty], அமெரிக்கா கொலம்பியாவுக்கு முன்பணம் ஒரு மில்லியன் டாலரும், ஆண்டு தோறும் 250,000 டாலரும் அளிக்க வேண்டும். கொலம்பியா நூறாண்டுகளுக்கு கால்வாயை நெருங்கிய ஆறு மைல் அகற்சி நிலப்பகுதியை அமெரிக்காவுக்கு ஒப்பந்த வாடகைக்கு விட வேண்டும். டிசம்பர் 31, 1999 இல் அமெரிக்கா பனாமா கால்வாயை, பனாமா நாட்டுக்கு முடிவில் ஒப்படைத்து விட வேண்டும். கொலம்பியா அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளா விட்டாலும், பனாமா அரசு நில உரிமையை அமெரிக்காவுக்கு விற்க விழைந்தது.

Ship in Panama Canal

அமெரிக்கா முதல் ஆக்கிரமிப்புப் போரில் வெற்றி பெற்று, அடுத்து பனாமா நாட்டில் பரவிய நோய்களின் மீது தொடுத்தது! மழைநீர்க் குளம், குட்டைகளில் பெருகும் கொசுக்களால் ஏற்படும் கடும் வேனிற் தள நோய்களான மலேரியா, மஞ்சள் நோய் மற்றும் காச நோய், காலரா, டிப்திரியா, அம்மை, பிளேக் போன்ற கொடும் நோய்களை ஒழிக்க அமெரிக்க மருத்துவ நிபுணர் வில்லியம் கார்கஸ் பனாமா நாட்டுக்கு அனுப்பப் பட்டார். டாக்டர் கார்கஸின் ஆணை ஆட்கள் எங்கெங்கு குளம், குட்டைகள் உண்டோ அங்கெல்லாம் பூச்சி கொல்லி தூளையும், ஆயிலையும் கலந்து ஊற்றினார்கள். நோயில் தாக்கப்பட்ட பணியாட்கள் கொசுவலைக் குள்ளே தனித்து அடைக்கப் பட்டனர். நாட்டின் இரு முனைகளில் இருந்த கொலான் [Colon], பனாமா நகரங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப் பட்டன. அடுத்து கால்வாய் அமைப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.

Canal Locks -6

பல கால்வாய்த் திட்டங்களில் அனுபவம் பெற்ற அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் (1828-1928) பனாமா திட்டத்திற்குப் பிரதம எஞ்சினியராக நியமனம் ஆனார். நான்கு ஆண்டுகளாய் சிவில் எஞ்சினியர்கள் பனாமா கால்வாய்த் திட்ட முறைகளையும், விவரங் களையும் மாற்றிக் கொண்டே வந்தனர். சூயஸ் கால்வாய் போன்று கடல்மட்டக் கால்வாயை அட்லாண்டிக், பசிபிக் கடல்களுக்கும் நேரடியாக அமைக்க முதலில் திட்டம் உருவானது! அவ்விதம் கால்வாய் படைப்பதற்குப் பல மைல் நீளமுள்ள மலைகளையும், பாறைகளையும் வெடிமருந்தால் பிளக்கத் தேவையான ஏராளமான நிதிச் செலவுக்கும், கால நீடிப்புக்கும் அமெரிக்க அரசு தயாராக வில்லை! இறுதியில் மூவடுக்குத் தடாகப் படிகள் கொண்ட, ‘நீரழுத்த புனைத் தொட்டிகள் ஏற்பாடுத் ‘ [Three Stage Hydraulic Locks System] திட்டம் ஒன்று ஒப்புக் கொள்ளப் பட்டது. ஐயமின்றி அத்திட்டம் நிதிச் செலவையும், கட்டும் நேரத்தையும் பெருமளவில் குறைத்தது.

Expansion

கொலானுக்கும், பனாமா நகருக்கும் இடையே உள்ள மலைப் பிரதேசத்தில், அணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டது. மூன்று அணைகள் கட்டப் பட்டு, மூன்று ஏரிகள் செயற்கையாக அமைக்கப் பட்டன. அவற்றில் காட்டுன் ஏரி [Gatun Lake] என்று பெயர் பெற்றது மனிதன் அமைத்த உலகப் பெரும் ஏரியாகக் கருதப்படுகிறது! அதன் நீளம் 1.5 மைல், அகலம் அரை மைல், ஆழம் 80 அடி! கடல்மட்டத்திற்கு சுமார் 90 அடி [26 மீடர்] மேலுள்ள அந்த செயற்கை ஏரியில் வேனிற் கால மழை எப்போதும் பெய்து, நீரை நிரப்பிக் கொண்டே வருகிறது. பனாமா கால்வாயில் செல்லும் கப்பல் முதல் 7 மைல் தூரம் கடல்மட்டத்தில் கடந்து, ஏரியை நெருங்கும் போது மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் நீரால் தூக்கப்பட்டு 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியில் பயணத்தைத் தொடர்கிறது. பிறகு பனாமா நகரை நெருங்கும் போது மறுபடியும் மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் தணிந்து, முடிவில் 90 அடி இறங்கி மீண்டும் கடல்மட்டக் கால்வாயில் தொடர்கிறது. அத்தகைய அதிசயப் பொறியியல் நூதனப் பனாமா கால்வாய் 1914 ஆகஸ்டு மாதம் கட்டி முடிக்கப் பட்டது.

அத்திட்டத்துக்கு மொத்த நிதி ஒதுக்கம்: 23 மில்லியன் டாலர் [1900 நாணய மதிப்பு]. பனாமா கால்வாயில் பணிசெய்தவர் எண்ணிக்கை: 40,000! 1904 முதல் 1914 வரைச் செலவான தொகை: 400 மில்லியன் டாலர்! கால்வாய்த் தளபதி: அமெரிக்க கர்னல் ஜியார்ஜ் கோதல்ஸ். தொன்னூறு வயதாகப் போகும் [2004] பனாமா கால்வாய், இன்றும் உலகப் பெரும் மனிதச் சாதனைகளில் ஒன்றாக எண்ணப்படுகிறது!

பனாமா கால்வாய் கட்டமைப்பில் பொறியியல் பிரச்சனைகள்

அமெரிக்க எஞ்சினியர்களுக்கு பனாமா மலைகளில் வெட்டித் தோண்டிய ‘குலேபிரா கணவாய் ‘ [Culebra Cut] பெரும் இன்னல்களைக் கொடுத்தது! அடுத்து தாறுமாறாய் ஓடும் ஆறுகளைத் திருப்பி, காட்டுன் அணையைக் கட்டி [Gatun Dam], மலைகளுக்கு இடையே செயற்கை முறையில் காட்டுன் ஏரியை [Gatun Lake] உண்டாக்கியது இமாலயச் சவால் பணியாய் ஆகிவிட்டது! ஏரியின் உயரத்துக்கு ஏற்றி, இறக்கும் சிக்கலான மாபெரும் காங்கிரீட் புனல் தொட்டிகளைக் [Three Stage Hydraulic Locks] கட்டுவதும், அவற்றின் உள்ளே மூடித் திறக்கும் பூதக் கதவுகளைத் தயாரித்து இயக்குவதும் பெரும் பிரச்சனைகளைத் தந்தன! இரட்டைத் தொட்டிகளான அவற்றின் நீளம்: 1000 அடி, அகலம்: [110+110] =220 அடி, ஆழம்: 80 அடி. நீரழுத்தக் கதவுகளின் அகலம்: 55 அடி, உயரம்: 80 அடி.

1000 அடி நீண்ட கப்பல்கள், ஆயிரக் கணக்கான டன் சுமைக் கப்பல்கள், சுற்றுலா மாளிகைக் கப்பல்கள் பல, கம்பீரமாகக் கால்வாயில் மிதந்து, 85  அடி உயரம் தூக்கப்பட்டு காட்டுன் ஏரியில், கண்கொள்ளாக் காட்சிகளின் இடையே ஊர்ந்து, 85 அடி கீழே இறக்கப் பட்டு 50 மைல்களைக் கடந்து இருபுறமும் கடலைத் தொடுகின்றன! பயணத்தின் போது கப்பல் ஒன்று ஆறு புனல் தொட்டிகளின் வழியே கடக்கின்றன. பயங்கரப் பனாமாக் காடுகளை முதலில் செப்பணிட்டு இரயில் பாதை அமைக்கப்பட்ட போது, ஒவ்வோர் தண்டவாள இணைப்புக்கும் ஒரு நபர் உயிர்ப்பலி யானதாக அறியப் படுகிறது!

Ship Passing

பனாமா கால்வாயை இயக்கத் தனிப்பட்ட எந்த வித வெளிப்புறச் சக்தியும் தேவை யில்லை! புனல் தொட்டிகளில் கப்பலை அடைத்து ஏற்றவோ, இறக்கவோ நீர்த் தேவையாகும் போது செயற்கையாக ஆக்கப்பட்ட ஏரிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறது! கடந்து செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 30 மில்லியன் காலன் நீர் தேவைப்படுகிறது. உயர்ந்த மலைகளுக்கு இடையே பரந்த ஏரியின் செலவு நீரை அடிக்கடி பெய்யும் மழை 1914 ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் நிரப்பி வருகிறது. ஏரியில் கட்டப்பட்ட அணைகள், நீரின் மட்டத்தைச் சீராக ஒரே உயரத்தில் நிலை நிறுத்தி வருகின்றன.

Ship in Panama Canal -1

அணைக்கட்டு மின்சக்தி நிலையம் ஏரிநீரைக் கீழனுப்பி மின்சார உற்பத்தியும் தொடர்ந்து நிகழ்கிறது. அந்த மின்சக்தியே, புனல் தொட்டியின் பூதக் கதவுகளைத் திறக்கவும், பூட்டவும் செய்யும் மின்சார மோட்டார்களை ஓட்டுகிறது. கப்பலை முன்னும், பின்னும் வழி இழுக்கும் ‘கழுதை எஞ்சின்களுக்கு ‘ [Mule Engines] வேண்டிய மின்சக்தியும் நீர்நிலை மின்சக்தி நிலையத்திலிருந்து கிடைக்கிறது. கப்பலை முதலில் இழுத்து எல்லைக் கோட்டில் முன்னிறுத்தும் ‘வழிகாட்டிப் படகு ‘ [Rowboat] பெட்ரோலில் இயங்குகிறது.

1000 அடி நீளம், 110 அடி அகலமுள்ள ஒவ்வொரு புனல் தொட்டியும், 70,000 டன் கனக்கும் பளுக் கப்பலை 28 அடி உயரத்துக்குத் தூக்கவோ அல்லது 28 அடிக்குத் தணிக்கவோ திறமை யுடையது. கப்பல் நகர்ச்சியைப் புனல் தொட்டியில் கையாள்பவை, இருபக்கமும் நகரும் கழுதை எஞ்சின்கள். பெரும் கப்பல் புனல் தொட்டியில் சுய ஆற்றலில் நகர்ந்தால், அதன் அசுரப் பளுவேகம் [Momentum (Mass X Velocity)] கதவுகளை உடைத்துப் பழுதாக்க வாய்ப்புகள் நேரிடலாம்! எதிர்பாராத அவ்வித விபத்துகள் நேரா வண்ணம், கப்பல் நகர்ச்சியைக் கழுதை எஞ்சின்கள் முன்புறம் இரண்டும், பின்புறம் இரண்டும் கட்டுப் படுத்துகின்றன.

Two Locks

புனல் தொட்டியில் கீழ் மட்ட நீரளவு 50 அடி உயரம். பூத வடிவான அதன் கதவுகள், கப்பலின் 10 மாடித் தள உயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! இரட்டை வடிவில் கட்டப்பட்ட மூவடுக்குக் காட்டுன் புனல் தொட்டிகள் [Gatun Locks] கடல் கட்டத்துக்கு 85 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இரட்டைப் புனல் தொட்டிகளில் ஒன்று நேர்போக்குப் பயணக் கப்பலை உயர்த்தவும், அடுத்தது எதிர்போக்குக் கப்பலை இறக்கவும் ஒரே சமயத்தில் பயன்படலாம்.

புனல் தொட்டியில் கப்பல் நகர்வதற்கு இரு புறத்திலும் தண்டவாளங்களில் மும்மூன்று இழுப்பு எஞ்சின்கள் நகர்ந்து வரும். கதவுகள் திறந்த பின்பு, காத்திருக்கும் கப்பல் புனல் தொட்டிக்குக் கழுதை எஞ்சினால் இழுத்து வரப்படுகிறது. கப்பல் சுய ஆற்றலில் உள்ளே நுழைந்தால், சரியான சமயத்தில் நிறுத்த முடியாமல், கதவுகளை உடைத்து விடக் கூடும்! அதனால் முன்புறம் கப்பலை இழுக்க ஒன்று அல்லது இரண்டு எஞ்சின்களும், பின்புறம் பளுவேகத்தைக் குறைத்துக் கட்டுப்படுத்த ஒரு எஞ்சினும் புனல் தொட்டில் பயணத்தின் போது பயன்படுகின்றன. மோட்டர் இயக்கத்தில் பழுது ஏற்பட்டுக் கதவுகள் திறக்க முடியாமல் போனால், அபாய அணைநீர் பயன்படத் தயாராகச் சேமிக்கப் பட்டுள்ளது.

கப்பல் ஒன்று பனாமா கால்வாயில் எவ்விதம் கடக்கிறது ?

பூத வடிவான சில பயணக் கப்பல்கள் ஒற்றைவழிக் கட்டணமாக 100,000 டாலர் கொடுக்கின்றன! இதுவரை மிகையான தொகை தந்தது, பிரிட்டனின் மாளிகைக் கப்பல் ‘ராணி எலிஸபெத் II ‘ தொகை 150,000 டாலர்! கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலிலிருந்து, இரண்டு முறை மூவடுக்குப் புனல் தொட்டிகளில் ஏறி இறங்கிக் கால்வாய் வழியாக 50 மைலைக் கடந்து, பசிபிக் கடலை அடைய குறைந்தது 23 மணி, கூடியது 30 மணி நேரமாகிறது! புனல் தொட்டியைக் கப்பல் நெருங்குவதும், தொட்டிக்குள் கப்பல் நகர்வதும், நீர்மட்டம் ஏறி இறங்குவதும், கதவுகளைத் திறந்து மூடிக் கப்பலை விடுவிப்பதும், கால்வாய் அதிபதிகள் கவனிப்பாக மின்சார ரயில்களைக் கையாண்டு, கண்காணிப்பாகச் செய்ய வேண்டி யிருப்பதால், அதிக காலதாமதம் அங்குதான் நேரிடுகிறது. நீர் உயரம் சீராக மட்டமாக ஆகாவிட்டால், கதவுகளைத் திறக்க சுயத்தடுப்பு இயக்கிகள் தடை செய்யும்!

5:0 PM. உதாரணமாக மாலை 5 மணிக்கு அட்லாண்டிக் கடலிலிருந்து புகும் கப்பல் 7 மைல் தூரம் மண்டிக் கால்வாயில் மிதந்து, லிமான் வளைகுடாவைத் [Lemon Bay] துறைமுகத்தை அடைகிறது. வளைகுடாவில் நுழையும் போது கப்பல் காப்டன், துறைமுக அதிபதிக்கு அறிவிப்பு செய்கிறார். அப்போது கப்பலின் பெயர், எண், நீளம், அகலம், சுமக்கும் பொருள், பாரத்தின் எடை போன்ற விபரங்கள் அறிவிக்கப் படவேண்டும். கால்வாய்ப் பயணப் போக்கைக் கையாளும் அதிகாரிகளின் எண்ணிக்கை, வழிகாட்டிப் படகுகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றபடி, அந்தக் கப்பலுக்கு நுழைவு அனுமதி விரைவாகவோ, தாமதமாகவோ அளிக்கப்படலாம்.

7:30 PM. கால்வாய் அதிபதி கப்பலைச் சோதித்து, அறிக்கைத் தாள்களைச் சரிபார்க்கிறார். கப்பலின் நீளம், அகலம், உயரம், வடிவ அமைப்பு சோதனைக் குள்ளாகிறது.

8:30 PM. துறைமுக அதிபதி கடப்புக் கட்டணத் தொகையைக் [Toll Charges] கணக்கிட்டுப் பெற்றுக் கொள்கிறார். கப்பல் ஒன்று சுமார் 80,000 -100,000 டாலர் தொகை கொடுக்க நேரிடலாம்.

5:30 AM. கால்வாய் அதிபதி ஒருவர் கப்பலில் ஏறித் தூரத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்துகிறார்.

6:10 AM. கப்பல் கால்வாய்ப் பயணத்தைத் துவங்குகிறது. கடல் பரப்பில் 11.5 மைல் தொலைவு நகர்ந்து 85 அடி உயரமுள்ள காட்டுன் ஏரியை நெருங்குகிறது. அந்த உயரத்தில் ஏற முதல் காட்டுன் புனல் தொட்டியின் [First Gatun Locks] முன்னால் நிற்கிறது, கப்பல். புனல் தொட்டியின் இருபுறமும் இருப்புப் பாதையில் நகரும் 170 H.P. [170 Horse Power] ரயில்களுடன், கப்பலின் முன் முனை வளையம் வடக் கயிறுகளால் பிணைக்கப் படுகிறது. அந்த ரயில்கள் அங்கு மிங்கும் மெல்ல அசைத்துக் கப்பலைத் தொட்டியின் மையத்துக்குக் கொண்டு வந்து, உட்புறம் இழுக்கின்றன. பிறகு கப்பலின் பின் வளையம் அடுத்த இரண்டு ரயில் வண்டிகளுடன் வடக் கயிற்றால் பிணைக்கப் பட்டு கப்பலின் நகர்ச்சி கதவுகளின் மீது மோதி விடாதபடி தடை செய்யப் படுகிறது.

6:30 AM. கப்பல் முதல் புனல் தொட்டியின் நடுவில் முழு உடம்பும் மிதக்க நிற்க பின்புறக் கதவுகள் மூடுகின்றன. தொட்டியில் ஏரியின் நீர் செலுத்தப்பட்டு நீர்மட்டம் 28 அடி உயர்ந்து, கப்பலும் 28 அடி எழும்புகிறது. இரண்டாம் தொட்டியில் அதே நீர்மட்ட அளவு ஏற்கனவே உள்ளதால், முன்புறக் கதவுகள் திறக்கப் பட்டு, கப்பல் அடுத்த புனல் தொட்டிக்குள் இழுக்கப் படுகிறது.

அடுத்த தொட்டிக் கதவுகள் மூடிய நிலையில் நீர்மட்டம் 28 அடி அதிகமாக்கப்பட்டு, கப்பல் இன்னும் 28 அடி உயர்கிறது. இதே போல் மூன்றாவது புனல் தொட்டியிலும் நிகழ்ந்து கப்பல் அடுத்து 28 அடி உயரத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அவ்விதம் ஒவ்வொரு கப்பலை 85 அடி மேலே கொண்டு வர சுமார் 26 மில்லியன் காலன் ஏரி நீர் தேவைப் படுகிறது.

7:30 AM. கயிறுப் பிணைப்புகள் அகற்றப்பட்டு, கப்பல் விடுபட்டு காட்டுன் ஏரியில் இப்போது பயணம் செய்கிறது. 32 மைல் நீளமான காட்டுன் ஏரி மனிதர் அமைத்த உலகப் பெரும் ஏரி! சாக்ரஸ் ஆறு [Chagres River] காட்டுன் ஏரியில் சங்கமம் அடைகிறது. ஏரியின் முடிவில் உள்ள கம்போவா [Gamboa] முதல் குறுகிய குலிபிரா கணவாய் [Culebra Cut] நீர் வழியாக அடுத்துக் கப்பல் செல்கிறது. கணவாயின் குறுகிய அகலம் 500 அடி!

11:20 AM. கப்பல் இப்போது 8.5 மைல் தூரம் கெய்லார்டு நீர்க் கணவாய் [Gaillard Cut] வழியாகச் செல்கிறது. கப்பலின் கால்வாய் அனுமதி வேகம் 7 mph [6 Knots]. குறுகிய ஆழமற்ற கால்வாய் பகுதி அது! 1:00 PM. நீர்க் கணவாய் முடிவில் அடுத்த முதல் புனல் தொட்டி, ‘பெட்ரோ மிகியூவல் ‘ [Pedro Miguel Locks] வருகிறது.

2:30 PM. கப்பல் முதல் புனல் தொட்டியுள் நிறுத்தப் படுகிறது. அதன் மூலம் கப்பல் 30 அடி உயரம் கீழ் இறங்குகிறது.

3:10 PM. முதல் புனல் தொட்டியைக் கடந்து, கப்பல் இப்போது மிராபுளோரஸ் ஏரியில் [Miraflores Lake] நகர்கிறது.

3:30 PM. இப்போது கடைசி இரண்டு மிராபுளோரஸ் புனல் தொட்டிகளை [Miraflores Locks] நெருங்குகிறது. அவற்றை இரண்டையும் தனித்தனியாகக் கடந்து கப்பல் 55 அடி உயரம் [27 அடி+28 அடி] கீழே இறக்கப்பட்டு கடல்மட்டத்தில் மீண்டும் கப்பல் பயணம் செய்கிறது.

4:10 PM. மூன்றாவது மிராபுளோரஸ் புனல் தொட்டியை விட்டுக் கப்பல் இப்போது பல்போவா துறைமுகத்தை அண்டுகிறது. அப்போது அமெரிக்கன் பாலத்தைக் [Bridge of America] கடந்து 7.5 மைல் பயணம் செய்து பசிபிக் கடலை அடைகிறது. அங்கிருந்து கப்பல் ஸான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ, ஹாங்ஹாங், சிட்னி, சிங்கப்பூர், பாம்பே அல்லது சுற்றுலா நகருக்கு கிளம்புகிறது.

பனாமா கால்வாயில் எதிர்காலப் புதிய செம்மைப்பாடுகள்

1914 ஆண்டில் கட்டி முடித்த பனாமா கால்வாய், உலக வரலாற்றில் எகிப்தின் மகத்தான மாபெரும் பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியான அசுர சாதனையாகக் கருதப் படுகிறது! அதை டிசைன் செய்து, 50 மைல் நீளம் பனாமா மலைக் காடுகளைத் தோண்டிக் கால்வாய் அமைத்த அமெரிக்காவின் பிரதம எஞ்சினியர் ஜார்ஜ் கோதல்ஸ் உன்னத வெற்றித் தீரராக வரலாற்றில் இடம் பெறுகிறார். தற்போது பனாமா கால்வாய் வயதானாலும், ஆண்டுக்கு 12,000 கப்பல்களைத் தன்வழியே இருபுறமும் கடத்திப் பெரு ஊதியம் பெற்று வருகிறது! ஆயினும் ஐம்பது மைலைக் கப்பல் கடக்க ஆகும் சராசரி 30 மணி நேரத்தைக் [காத்திருக்கும் 6 மணி நேரம் உள்பட] குறைக்க புது முறைகள் வழிகள் கையாளப்பட வேண்டும்!

தொன்னூறு ஆண்டுகளாகப் [2004] பணியாற்றும் பனாகா கால்வாயின் நீர்க் கணவாயும், புனல் கதவுகளும் பழமையாகி, முழுவதும் மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது! மழைப் பொழிவுகளால் நேரும் நிலச் சரிவுகளால், கால்வாயில் சகதி மண்டி அடிக்கடி நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது. புதிதாய் ஆக்கப் படும் கப்பல்களின் நீட்சி, அகலம் மிக நீண்டு விட்டதால், கால்வாயின் அகலம், புனல் தொட்டிகளின் நீள, அகலம் அதிகமாக்க வேண்டிய எதிர்காலச் செம்மைப்பாடு தேவையாகி விட்டது! தற்போது 106 அடி அகலமுள்ள கப்பல்கள்தான் பனமா கால்வாயில் பயணம் செய்ய முடியும்! கப்பலின் சுமைதாங்கிப் பாரத் திறம் 65,000 டன்னிலிருந்து, 300,000 டன்னாக இப்போது பெருகி விட்டது! கெய்லார்டு குறுகிய நீர்க் கணவாய் 500 அடி அகலத்திலிருந்து 730 அடி அகலத்துத் தோண்டப்பட்டு, இரட்டைப் போக்குவரத்து [Two-Way Passage] அமைக்கப் பட வேண்டும்! பனாமா கால்வாயை எதிர்காலத்தில் திருத்தங்கள் செய்யத் தேவைப் படுவது ஒரு பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது!

பனமா நகரம்

அட்லாண்டிக் பசிபிக் கடல்களை வேறு வழிகளில் இணைக்க, அமெரிக்கா தயாரித்த மூன்று விதப் புதுத் திட்டங்கள் பனாமா குடியரசுக் கைவசம் உள்ளன. 1. கொலம்பியா 2. மெக்ஸிகோ 3. நிகராகுவா ஆகிய மூன்று கடற் பாதைத் திட்டங்கள். மெக்ஸிகோ, கொலம்பியா வழியாகச் செல்லும் கால்வாய், கடல் மட்டக் கால்வாய்கள். நிகராகுவா தேர்ந்தெடுக்கப் பட்டால், புனல் தொட்டி ஏற்பாடுகள் தேவைப்படும். இம்மூன்றில் ஒரு புதிய கால்வாய் எதிர்காலத்தில் அமைக்கப் பட்டால், பனாமா குடியரசில் தற்போது பணிபுரியும் 14,000 நபர்களின் பிழைப்பில் பெரும் பாதகம் விளையும்! அவர்களில் பணிபுரியும் 4000 பேர்கள் பனாமா குடிமக்கள்!

தகவல்:

1. The New American Desk Encyclopedia [1989]

2. National Geographic Picture Atlas of Our World [1990]

3. National Geographic Society -The Builders, Marvels of Engineering [1992]

4. The Panama Canal, G.W. Goethuls By: The Columbia Electronic Encyclopedia [2003]

5. History of Canal Construction, Panama Canal Lakes & Locks By: Broadcast Partners [2003]

6. Panama Canal Completed, Two Oceans Joined By: Patricia Maloney Markun.

7. Infrastructure: Panama ‘s Canal Holds Vision of New Growth By: Aileen Cho in Panama [2001]

8. The Panama Canal [1994 Report]

9.  http://www.industrytap.com/panama-canal-expansion-impacts-worldwide-shipping/450  [January 2, 2013]

10.  http://www.theatlantic.com/photo/2015/06/expanding-the-panama-canal/396716/  [Photos]

11. https://en.wikipedia.org/wiki/Panama_Canal [January 25, 2016]

12. https://en.wikipedia.org/wiki/Panama_Canal_expansion_project   [January 25, 2016]

****

S. Jayabarathan [jayabarathans@gmail.com] January 27, 2016 (R-1)

பிரெஞ்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

EiffelTower -1

பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய

பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்

[Eiffel Tower in Paris (1887-1889)]

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

 

ஓங்கி உயர்ந்த உலோகக் கோபுரம்,

பிரென்ச் புரட்சி வெற்றி  நினை வூட்டும்!

தொழிற்புரட்சி காலத்தின் நூதனக் கோபுரம்,

பொறியியல் சாதனை நுணுக்கம் காட்டும்!

 

முன்னுரை: நவீன உலகத்தின் பொறிநுணுக்க அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, பிரான்சின் ஐஃபெல் கோபுரம்! முடிசூடிய மன்னர் ஆட்சியைக் கவிழ்த்தி, 1789 ஆம் ஆண்டு குடியரசை முதன்முதல் நிலைநாட்டிய பிரென்ச் புரட்சி வெற்றியைக் கொண்டாடும் நூறாண்டு விழாவைச் சிறப்பிக்கச் சமர்ப்பணமான 700 நினைவுச் சின்னங்களில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, ஐஃபெல் கோபுரம்! ஓங்கி உயர்ந்த உன்னத கோபுரத்தைச் டிசைன் செய்து கட்டி முடித்த பொறியியல் மேதை, அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)]. பிரான்ஸில் பல பாலங்களைக் கட்டி எஞ்சினியரிங் திறமை மிக்க கஸ்டாவ், ஐஃபெல் கோபுரம் மட்டும் அல்லாது, அமெரிக்க நாட்டுக்குச் ‘சுதந்திரச் சிலை ‘ [Statue of Liberty in New York Harbour] அடுத்து சூயஸ், பனாமா கால்வாய்கள் [Suez & Panama Canals] ஆகியவற்றின் கட்டமைப்புக்கு அடிப்படை டிசைன் பணிகள் ஆற்றிய நிபுணர். கடற் தீவில் ஒய்யாரமாக நிற்கும் மாபெரும் சுதந்திரச் சிலையின் இரும்பலான எலும்புச் சட்டங்களை அமைத்தவர், கஸ்டாவ் ஐஃபெல். சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் கட்டுவதற்குப் பிரான்ஸில் புகழ்பெற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] கால்வாய் அமைப்பு அதிபருடன் உழைத்தவர், கஸ்டாவ்.

 

 

ஆயிரம் அடி உயரத்தில் [300 மீடர்] அமைக்கப்பட்ட ஐஃபெல் கோபுரம், 1930 ஆண்டுவரை உலகத்திலே மிக உயரமான சின்னமாகக் கருதப்பட்டது. அதன் உச்சியில் நீண்ட ரேடியோ, டெலிவிஷன் கம்பத்தின் அளவையும் சேர்த்தால், சுமார் 1070 அடி [320.75 மீடர்] உயரம் ஆகிறது! ஐஃபெல் கோபுரத்தில் மேலும் காலநிலை உளவி நிலையம் [Meteorological Station], இராணுவ தந்திக் கூடம் [Military Telegraph], காற்றுப் போக்கியல் ஆய்வகம் [Aerodynamics Laboratory] ஆகிய மூன்றையும் கஸ்டாவ் பின்னால் அமைத்தார். தலைநகர் பாரிஸில் கட்டப்பட்ட ஐஃபெல் கோபுரம் புரட்சியின் நினைவாகவும், பிரான்ஸின் சின்னமாகவும் நிமிர்ந்தோங்கி நிற்கிறது! ‘அதைக் கட்டுவதால் பயனில்லை! அந்த பூதக் கம்பத்தைக் கட்டிப் பாரிஸின் எழிலைச் சிதைக்க வேண்டாம்! ‘ என்று புகழ் பெற்ற எழுத்தாள மேதைகள், மாப்போஸாங் [Maupassant], எமிலி ஸோலா [Emily Zola], சார்லஸ் கார்னியர் [Charles Garnier], இளைய டூமாஸ் [Dumas Junior] ஆகியோர் உள்பட் 300 பிரென்ச் அதிபர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்!

 

 

ஐஃபெல் கோபுரத்தின் பொறிநுணுக்க அம்சங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்புரட்சி பொறியியல் சாதனையான ஐஃபெல் கோபுரம் 1070 அடி உயரத்தில் வானளாவி, இரும்புச் சட்டங்களால் பின்னப்பட்டு 9000 டன் எடை கொண்டது! கோபுரம் புலப்படும் மூன்று பாகங்களைப் பெற்றது. முதலாவது நான்கு திறந்த வாயில்கள் கொண்ட சாய்வு சட்டத் தூண்களில் [Pylons] நிற்கும் பரந்த ஓர் அடித்தளச் சதுர அரங்கம். அதன் மீது அதைவிடச் சிறிய இரண்டாவது அல்லது நடுநிலை அரங்கம் எனப்படும் இடைச்சட்டம். மூன்றாவது ஜிராஃப் விலங்கின் நீண்ட கழுத்துபோல் தோன்றும் செங்குத்தான மெலிந்த சட்டம். முதல் இரண்டு சட்ட இணைப்புகளின் நாற்புற மூலை நெளிவுகள் பொருந்திச் சீர்வளைவாக உச்சிப் புறத்தில் எழுகின்றன. 1887 ஆம் ஆண்டு பிரென்ச் நாணய மதிப்பின்படி 7.8 மில்லியன் பிராங்க் [1.5 மில்லியன் டாலர்] செலவில் ஐஃபெல் கோபுரம் கட்டி முடிக்கப் பட்டது! 1889 ஆண்டு ஆரம்ப விழாவின் போதே 1.14 மில்லியன் டாலர் வருமானம் வந்ததாக அறியப்படுகிறது.

 

 

முதற்கட்டக் கோபுரக் கீழரங்கு [Tower Base] 190 அடி உயரமுள்ளது. கோபுரச் சிகரத்தின் நகர்ச்சியை அளக்கும் நோக்ககம் [Observatory] அங்குதான் இருக்கிறது. கியாஸ்க் [Kiosk] படைத்த ஐஃபெல் ஓவியம் ஒன்று அங்கு தொங்குகிறது. அஞ்சல் துறையகம் ஒன்றும், சின்னங்கள் விற்கும் அங்காடி ஒன்றும் உள்ளன. பாரிஸ் நாகரீகச் சின்னங்களின் படங்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. புகழ் பெற்ற 72 பிரென்ச் விஞ்ஞானிகள், மற்ற பிரென்ச் மேதைகள் ஆகியோரின் பெயர்கள் முதலரங்கில் எழுதப்பட்டுள்ளன!

இரண்டாம் கட்ட இடையரங்கு 380 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. சின்னக் கடைகள், பாரிஸின் எழிலைக் காணும் தொலைநோக்கிகள் உள்ளன அங்கே. விலைமிக்க உணவு, தின்பண்டங்களை விற்கும் ஜூல்ஸ் வெர்ன் சிற்றுண்டி உணவகம் [Extremely Expensive Jules Verne Restaurant] அங்குதான் இருக்கிறது. மூன்றாவது கட்ட மேலரங்கு 905 அடி உயரத்தில் உள்ளது. பாரிஸின் கண்கொள்ளாக் காட்சியைக் காணும் தளமிது!

 

 

அங்கே கஸ்டாவ் ஐஃபெல் அமெரிக்காவின் படைப்பு மேதையான தாமஸ் ஆல்வா எடிஸனை வரவேற்கும் ஓர் அறை புதுப்பிக்கப் பட்டுள்ளது! ஐஃபெல் கோபுர உச்சியிலிருந்து பாரிஸ் நகரின் இரவு ஒளியழகை நாற்புறமும் காண்பது ஒரு தனி மகிழ்ச்சி! தங்க விளக்குகளைத் தாங்கி மயக்கும் கோபுரச் சட்டங்கள், அடிமுதல் நுனிவரைப் பொன்முலாம் பூசியுள்ள தூண்கள் போன்று காட்சி அளிக்கும்!

ஐஃபெல் கோபுரத்தின் கட்டமைப்பு வரலாறு

பாரிஸில் 1889 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐஃபெல் கோபுரம் இரும்புச் சட்டங்களால் தொடுக்கப்பட்ட பூதகரமான ஓர் உன்னதச் சின்னம்! பிரான்ஸ் தேசத்தில் எழுந்த 1789 கொந்தளிப்புப் புரட்சியில் குடியாட்சி வெற்றி பெற்றதை நினைவூட்டக் கட்டப்பட்டது, ஐஃபெல் கோபுரம்! பாரிஸ் நிபுணரும், கலைஞரும் சமர்ப்பித்த 700 படைப்புகளில், அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் வரைந்த கோபுரம் ஒன்றுதான் ஏகோபித்த முடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது! வேல்ஸ் இளவரசர், பின்னால் பிரிட்டிஷ் மன்னரான ஏழாம் எட்வெர்டு [King Edward VII (1841-1910)] வருகை தந்து ஐஃபெல் கோபுரத் திறப்பு விழாவைச் சிறப்பித்தார்.

 

 

‘ஓவியர், சிற்பிகள், கட்டக் கலைஞர், எழுத்தாளராகிய நாங்கள் பாரிஸ் நகரத்தின் எழிலைச் சிதைக்கும் ஐஃபெல் கோபுர அமைப்பை, ஆவேசமுடன் முழு உறுதியாக எதிர்க்கிறோம்! இரும்புச் சட்டத்தில் ஒரு பயனுமற்ற இராட்சத உருவான ஐஃபெல் கோபுரம், பிரான்ஸின் கலைத்துவ, வரலாற்று மகத்துவத்துக்குப் பங்கம் விளைவிக்கும் ‘ என்று பலரது வெறுப்பு விண்ணப்பங்கள் ஆரம்ப காலத்தில் வெளியிடப் பட்டன! 300 பிரென்ச் அறிஞர்கள் கையொப்பமிட்ட அந்த எதிர்ப்புக் குழுவில் மாப்போசாங், எமிலி ஸோலா, சார்லஸ் கார்னியர் போன்ற மேதைகள் இருந்தனர்! இயற்கைப் பொழிவைச் சுவைக்கும் நபர்கள் பாரிஸில் பறவை இனங்கள் பறந்து செல்வதைக் கோபுரம் தடை செய்யும் எனக் கவலைப் பட்டார்கள்! ஆயினும் ஹென்றி ரூஸ்ஸோ [Henri Rousseau (1844-1910)], உட்டிரில்லோ [Utrillo], சாகல் [Chagall], திலனே [Delaunay] ஆகியோர், பாரிஸில் ஐஃபெல் கோபுரம் அமைக்கப் போவதை முற்றிலும் ஆதரித்தனர்!

 

 

1909 இல் ஐஃபெல் கோபுரம் 20 ஆண்டு ஒத்தி உடன்பாடு முடிந்த போது, முழுவதும் பிரிக்கப்படத் திட்டமிடப் பட்டது! நல்ல வேளையாக அக்காலத்தில் அதன் உயரம் தந்திக் கம்பமாகப் [Telegraphy] பயன்பட்டதால் கோபுரம் பிழைத்துக் கொண்டது! ஐஃபெல் கோபுரம் 1910 முதல் அகில நாட்டுக் காலப்பணி [International Time Service] அறிவிக்கும் நிலையமாகவும், 1918 முதல் பிரென்ச் ரேடியோ அலைவீச்சு நிலையமாகவும், 1957 முதல் டெலிவிஷன் வெளியீட்டு நிலையமாகவும் கருதப்பட்டது. சின்னங்களை ஆராயும் ரோலண்டு பார்தேஸ் [Semiologist Roland Barthes] போன்றவரால், ஐஃபெல் கோபுரச் சின்னமே 1960 ஆண்டுகளில் ஓர் ஆய்வுக் கட்டட மாதிரியாகக் கற்கப் பட்டு வந்தது!

ஐஃபெல் கோபுரச் சட்டத்தின் பரிமாணம்

1070 அடி உயரத்தைத் தொடும் ஐஃபெல் கோபுரம், சுமார் 108 மாடிகளைக் கொண்ட ஒரு மாளிகையின் உயரத்துக்கு ஒப்பானது! 300 இரும்புப் பணியாளர் [Iron Workers] இரண்டு ஆண்டுகளாக 15,000 இரும்புச் சாதனங்களைக் கொண்டு கட்டிய நூதனச் சின்னம் அது! பின்னால் கட்டப் பட்ட நியூ யார்க் எம்பெயர் ஸ்டேட் மாளிகையும், கனடாவின் டொரான்டோ சி.என் கோபுரமும் ஐஃபெல் கோபுரத்தை விட உயர்ந்தவை! அதன் அடித்தளப் பரப்பு 100 மீடர் பக்க அளவு கொண்டு [333 அடிச் சதுரம்], கால் பந்தாட்டத் திடல் ஒன்றைப் போல் பரந்த காட்சியைத் தருகிறது! பூத வடிவம் போல் தோன்றினாலும், 7300 மெட்ரிக் டன் எடையுள்ள குன்றிய பளுவைக் கொண்ட இரும்பாலான கோபுரம் அது! வேனிற் காலத்தில் உஷ்ண நீட்சியால், கோபுரத்தின் உயரம் 6 அங்குலம் [15 செ.மீ] மிகையாகிறது. தூக்கி ஏற்பாட்டின் [Elevator System] எடை: 1042 டன். மொத்த இரும்புப் பாகங்களின் பளு: 9441 டன்.

 

EiffelTower -2

 

உறுதியான நபர் ஐஃபெல் கோபுரத்தின் சிகரத்தை 1710 படிகளில் ஏறிப்போய் அடையலாம்! அல்லது மின்சாரத்தில் இயங்கும் தூக்கிகள் [Elevators] மூலம்தான் செல்ல வேண்டும். மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று தாக்கும் போது, கோபுரத்தின் அதிகப்பட்ச சாய்வு 4.75 அங்குலம். இரும்பு உத்திரங்கள் வெப்பநீட்சியால் அகலும் போது, உச்ச சாய்வு 7 அங்குல மாகலாம்! 350 எண்ணிக்கை யுள்ள சோடியம் ஆவி மின்சார விளக்குகள் [Sodium Vapour Lamps] அமைக்கப் பட்ட கோபுரம், இரவில் பொன் முலாம் பூசப்பட்டது போல் காட்சி தருகிறது.

முன்னூறு பணியாளிகள் இரண்டாண்டுகள் தொடர்ந்து வேலை செய்ததில் ஒரே ஒரு நபர்தான் உயிரிழந்தார் என்று தெரிவது குறிப்பிடத் தக்கது! ஆனால் கோபுரம் கட்டி முடித்த பின்பு, தற்கொலை முயற்சியில் சிகரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டவர் எண்ணிக்கை சுமார் 400 பேர்கள் என்று அறிவது மிகவும் வருந்தத் தக்கது!

 

 

உச்சியிலிருந்து குதிக்கும் உடம்புகள் யாவும் தரையைத் தொடுவதற்கு முன்பே, அடி பரந்த இரும்புச் சட்டங்களில் மாட்டிச் சிக்கிக் கொள்வதால், தீயணைப்புப் படையினர் ஏறி அவற்றை நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது! கவனமாகப் பாதுக்காப்புத் தடைகள் அமைக்கப் பட்டிருந்தாலும், உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்த நபர்கள் எப்படியாவது உயிரை மாய்த்திடக் கோபுரத்தில் வழி செய்து கொள்கிறார்!

ஐஃபெல் கோபுரத்தின் வடிவ அமைப்பு நுணுக்கம்

ஈரோப்பில் ‘காற்றுப் போக்குத்துறை ‘ [Aerodynamics] பொறியியல் விஞ்ஞானத்தை விருத்தி செய்து கஸ்டாவ் ஐஃபெல் புகழடைந்தவர். 1913 இல் ‘காற்றுப் போக்கின் தடை ‘ [The Resistance of the Air] என்னும் நூலொன்று எழுதினார். கோபுர டிசைன் அமைப்பு சமயத்தில், கஸ்டாவ் அடியரங்கு தூண் சட்டங்களின் நெளிவைத் துல்லியமாகக் கணித்தார். அதன்மூலம் கோபுர உச்சியைக் காற்றின் வேகம் தாக்கும் போது உண்டாகும் பளு உந்து இழுப்பும், அறுப்பு விசையும் [Bending & Shearing Forces of the Wind] இரும்புச் சட்ட உத்திரங்களில் தொடர்ந்து அழுத்த விசையாக மாறும்படிச் [Progressively Transformed into Forces of Compression] சாமர்த்தியாகச் செய்தார்! அதனால் உத்திரத்தில் செய்யப்பட்ட ‘உள் நெளிவுகள் ‘ மிகையான ஆற்றலைக் கோபுரத்துக்கு அளித்தன! மிக வேகமாகத் தாக்கும் காற்று, கஸ்டாவின் நுணுக்கமான நூதன டிசைனால், நூறடி உயர்ந்த கோபுரத்தை 4.5 அங்குலமே அங்குமிங்கும் ஆட வைத்தது!

 

 

அமெரிக்காவில் 1960 ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட ‘உலக வணிக மாளிகை ‘ [World Trade Center (Destroyed in September 2001)] போன்றவை, கஸ்டாவ் ஐஃபெல் கோபுர நியதிகளைக் கையாண்டது குறிப்பிடத் தக்கது! பலரது எதிர்ப்புகளுக்கு இடையே முதலில் தோன்றினாலும், பின்னால் ஐஃபெல் கோபுரம் பிரென்ச் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுத், தற்போது பிரான்ஸின் ஒப்பற்ற உன்னதச் சின்னமாகப் போற்றப்படுகிறது!

கஸ்டாவ் ஐஃபெல் கட்டிய கோபுரத்தின் மர்மப் பொறியியல் நுணுக்கம் என்ன ? வானளாவிய இரும்பு கோபுரத்தில் எழும் விசைகளை உண்டாக்கும் முதல் காரணி, அதன் கனத்த எடை [சுமார் 9000 டன்]; இரண்டாவது காரணி வெளிப்புறக் காற்றடிப்பு வேகம்! கம்பத்தின் உயரத்தில் எந்த இடத்தையும் தாக்கி, காற்றின் உந்து விசைக் கோபுரத்தைக் குப்புறத் தள்ளாதபடி, அதன் பளு உந்து விசை எதிர்ப்பு ஆற்றல் அளிக்கிறது [Maximum Torque generated by the Wind is balanced by the Torque provided by the weight of the Tower at any point]! அந்த நூதனப் பொறியியல் நியதியைக் கடைப்பிடித்து, ஏற்றதொரு உத்திரத் தூண் நெளிவைக் [Curvature of the Leg Beam] கணித்தார், கஸ்டாவ் ஐஃபெல்!

 

 

சம மட்டத்தில் உள்ள தூண் நெளிவுப் புள்ளிகளில் வரையப்படும் தொடுகேடுகள் யாவும் ஒரு புள்ளியில் சந்திக்கும்படி, உத்திரங்கள் நெளிக்கப் பட்டன. அப்புள்ளியின் ஊடேதான் முடிவான காற்றடிப்பு அழுத்த விசை புகுந்து செல்கிறது! [The Tangents drawn on the Curve from points of the same height will always meet at the point, through which passes the resultant of the Wind stresses].

காற்றுப் போக்குப் பொறியியலைத் துவக்கிய கஸ்டாவ் ஐஃபெல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடர்ந்த ஐரோப்பியத் தொழிற் புரட்சியின் காலத்தில் பிறந்த பிரென்ச் எஞ்சினியர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் சரித்திரப் புகழ் பெற்ற பாலங்களையும், கடற் கால்வாய்களையும் கட்டிப் பொறியியல் வரலாற்றில் உன்னத இடத்தைப் பிடித்தவர். உலகிலே நீளமான சூயஸ் கால்வாய் (1854-1869), அமெரிக்காவின் விடுதலை நூறாண்டு விழாவுக்காக 1876 இல் ‘சுதந்திரச் சிலை ‘ [Statue of Liberty], பிரென்ச் புரட்சி வெற்றி நூறாண்டு விழாவுக்கு ஐஃபெல் கோபுரம் [1887-1889], அடுத்து உலகத்திலே நூதனமான பனாமா கால்வாய் (1870-1914) ஆகிய நான்கு பொறியியல் படைப்புகளின் டிசைன் துறையில் அவரது பங்கெடுப்பு மிகையானது.

Tower Elevator

 

ஐஃபெல் கோபுரம், அடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கில் தோன்றிய எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் வருவரை உலகிலே உயர்ந்ததாகக் கருதப்பட்டது! கோபுரம் அமைப்பதற்கு முன்பு கஸ்டாவ் ஐஃபெல் போர்ச்சுகல் நாட்டின் டெளரோ நதியின் மீது [Douro River] புகழ் பெற்ற இரயில் வளை பாலத்தையும் [Railway Viaducts], அமெரிக்காவுக்கு 1876 இல் நூற்றாண்டு விடுதலை விழாவுக்கு ஒரு வட்ட வடிவு இரும்புச் சட்டக் கோபுரத்தையும் டிசைன் செய்ததாக அறியப்படுகிறது!

152 அடி உயரச் சுதந்திரச் சிலையின் வெளிப்புறத் தோற்றத்தைப் படைத்தவர் ஃபெரடிரிக் பார்த்தோல்டி [Frederic Bartholdi]. ஆனால் கையில் தீபந்தத்தை ஏந்திக் கடற்காற்றைத் தாங்கி நிற்கும் அந்த பூதகரமான விடுதலை மாதின் எலும்புக் கூடான இரும்புச் சட்டத்தைச் டிசைன் செய்தவர், அலெக்ஸாண்டர் ஐஃபெல்! அடுத்து சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் இரண்டுக்கும் முக்கிய டிசைன் எஞ்சினியரிங் பணி செய்தவர் ஐஃபெல். ஆனால் கால்வாய் அமைப்பு வேலைகளை மேற்பார்வை செய்தவர், ஃபெர்டினண்டு தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps (1805-1894)]. பிறகு லெஸ்ஸெப்ஸ் பனாமா கால்வாய்த் திட்டத்திலிருந்து நீங்கிய பின், 1881 ஆண்டு முதல் அலெக்ஸாண்டர் ஐஃபெல் பிரென்ச் கம்பெனியின் அதிபதியாகப் பணி ஆற்றினார்.

 

 

1889 இல் ஐஃபெல் கோபுரத்தை நிலைநாட்டிய கஸ்டாவ், அதன்மூலம் பொறியியல் விஞ்ஞானத்தை வளர்க்க முற்பட்டார். வேட்கை மிகையாகி அவந்-கார்டே விஞ்ஞானம் [Avant-Garde Science] எனப்படும் காலநிலையியல் [Meteorology], ரேடியோ தந்தி [Radio Telegraphy], காற்றுப் போக்கியல் [Aerodynamics] ஆகிய மூன்று துறை விஞ்ஞான விருத்திக்கும் கோபுரத்தின் உயரத்தைப் பயன்படுத்தினார். கோபுரத்தின் உச்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் ஒரு நோக்கு நிலையத்தை [Observation Station] அமைத்தார். அங்கே பூத ஊசலி, பாதரச அழுத்தமானி ஆகியவற்றை வைத்துச் சில சோதனைகளைச் செய்தார். கோபுரத்திலிருந்து முதன்முதல் ரேடியோக் கதிரனுப்பைச் [Radio Transmission] செலுத்திக் காட்டினார்.

 

 

1898 இல் கஸ்டாவ் ஐஃபெல் அனுப்பிய ரேடியோ அலைகளை, பாதியானில் இருந்த யூஜீன் டியூகிரிடே [Eugene Ducretet at Patheon] கருவி மூலம் பிடித்துக் காட்டினார். யூஜீன் அடுத்து ஐஃபெல் சேமித்த காலநிலை அளவுகளைக் [காற்றின் வேகம், திசை, அழுத்தம்] கொண்டு காற்றின் போக்கால் ஏற்படும் காற்றுத் தடுப்பு [Air Resistance due to Wind Flows] விபரங்கள் அறியப்பட்டன. அந்தப் பொறியியல் விஞ்ஞானமே பின்னால் ‘காற்றுப் போக்கியல் ‘ [Aerodynamics] எனப் பெயர் பெற்றது. விமானப் பறப்பியல் விஞ்ஞானத்தில் இறக்கைச் சோதனைகளுக்குக் காற்றுக் குகைகள் அமைக்கப்பட்டுக் காற்றுப் போக்கியல் ஆய்வு [Aerodynamics Study in Wind Tunnels] விருத்தி அடைய அவரே ஆரம்ப கர்த்தாவானார்.

 

 

கஸ்டாவ் ஐஃபெல் அடுத்து காற்றுக் குகை ஒன்றை சாம்ப் தி மார்ஸில் [Champ de Mars] அமைத்தது, 1909-1911 ஆண்டுகளில் பயன்பட்டது. அவர் மேம்படுத்தி அமைத்த (1912-1914) காற்றுக் குகையில் 5000 சோதனைகள் நடத்தி 1917 ஆம் ஆண்டில் ஐஃபெல் ஆய்வுக்கூடம், ஒற்றைச் சுழலி விமானத்தை விரட்டும், மேன்மையான போர் விமானம் [Monoplane Chaser] ஒன்றைத் தயாரித்தது.

இரண்டாம் நூற்றாண்டைக் கொண்டாடிய பிரான்ஸ் தேசம்!

நூற்றாண்டைத் தாண்டி இன்னும் இளமையில் கவரும் ஐஃபெல் கோபுரத்தில் வியப்பான திருவிளையாடல்களைச் சிலர் தீவிரமாகச் செய்துள்ளார்கள்! 1923 ஆம் ஆண்டில் தகவல் தயாரிப்பாளி, பியர் லாபிரிக் [Pierre Labric] என்பவர் முதற்கட்ட அரங்கின் படிகளில் சைக்கிள் ஓட்டி இறங்கினார் என்று அறியப்படுகிறது! ஒருசிலர் பியர் லாபிரிக் வெளிப்புற நெளிவுச் சட்டத்தில் சைக்கிள் ஓட்டி இறங்கியதாகச் சொல்கிறார்கள்!

 

 

1954 இல் மலைஏறி நிபுணர் ஒருவர், கோபுரத்தின் ஆயிர அடி உயரத்தையும் கால்களால் மிதித்து வெற்றிகரமாக ஏறி இறங்கினார்! இரண்டு பிரிட்டிஷ் வீரர்கள் கோபுரச் சிகரத்திலிருந்து பாராசூட் குடை விரித்துப் பாதுகாப்பாக 1984 இல் குதித்துக் காட்டினார்கள்! 2002 ஆம் ஆண்டில் மட்டும் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் ஐஃபெல் கோபுரத்தைக் கண்டு களித்ததாக அறியப்படுகிறது!

ஐஃபெல் கோபுரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட போது வெளியான அமெரிக்க விஞ்ஞான இதழ் [Scientic American (June 15, 1889)] ‘பழுது எதுவு மின்றி, விபத்து எதுவு மின்றி, தாமத மில்லாமல் கோபுரம் படைக்கப் பட்டது ‘ என்று பாராட்டியது! ஐஃபெல் ஆக்கிய கோபுரமும், சுதந்திரச் சிலையும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தேசத்தில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரம்மாண்டச் சின்னங்களான பிரமிடுகளின் வரிசையில் வருபவை!

 

 

நியூ யார்க்கில் ‘சுதந்திரச் சிலை ‘, பாரிஸில் ஐஃபெல் கோபுரம் போன்ற ஒப்பற்ற பொறியியல் சின்னங்களைப் படைத்த, கஸ்டாவ் ஐஃபெல், தனது 91 ஆவது வயதில் [1923] காலமானார். ஒவ்வொரு ஆண்டிலும் மில்லியன் கணக்கான மாந்தர் அவரது மகத்தானப் படைப்புகளைக் கண்டு களிப்படைகிறார்கள். 1989 ஆம் ஆண்டில் பிரான்ஸ் புரட்சி வெற்றியின் இரண்டாம் நூறாண்டுப் பூர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது! முதல் நூற்றாண்டைத் தாண்டிய அவ்விரண்டு அரிய சின்னங்கள், இன்னும் பல நூற்றாண்டு காலம் நீடித்து அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் பெயரை உலக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!

 

 

தகவல்:

1. National Geographic: France Celebrates Its Bicentennial [July 1989]

2. National Geographic Society, The Builders, Marvels of Engineering [1992]

3. Encyclopaedia Britannica Vol:7 [1978]

4. History of Eiffel Tower, Facts & Figures [Mar 24 2004]

5. Eiffel & Aviation By: Prof Larraine Lavorata [1994]

6. Alexandre Gustav Eiffel -His Engineering Career.

7. The Shape of the Physics of Eiffel Tower By: Joseph Gallant

8.  http://www.toureiffel.paris/en.html

9.  http://www.history.com/topics/eiffel-tower

10.  http://www.newworldencyclopedia.org/entry/Eiffel_Tower  [September 15, 2013]

11. http://www.history.com/topics/eiffel-tower/videos/seven-wonders-the-eiffel-tower

12. https://en.wikipedia.org/wiki/Eiffel_Tower  [January 13, 2016]

**********************

[S. Jayabarathan]  jayabarathans@gmail.com  [January 25, 2016] R-1

https://jayabarathan.wordpress.com/

புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு

Batygin Shows Planet 9

புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

https://youtu.be/6poHQ2h00ZA

https://youtu.be/fAIV_6lcbIQ

https://youtu.be/TBnItMgSjsE

http://video.pbs.org/video/1790621534/

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

*********************

Earth's Planet -9

சூரிய குடும்பப் புறக்கோளாய்ச்
சுற்றும் புதிய கோள் ஒன்று
ஒளிந்திருப் பதற்கு ஆதாரம்
தெளிந்துள்ளது !
பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை
பரிதியைச் சுற்றி வரும்
நீண்ட நீள்வட்ட பாதை.
குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும்.
நெப்டியூன் நிறை.
பூமியைப் போல் அதற்கு
பத்து மடங்கு பளு.
புறக்கோள்கள் போல் வாயுக்கோள்.
புளுடோவைப் போல்
ஐயாயிரம் மடங்கு நிறை.
அதன் உருவத்தை இதுவரை
எவரும் கண்டிலர்.
சூரிய மண்டலத்தின் புறக்கோள்கள்
வாயுக் கோளாக,
உட்புறக் கோள்கள் பாறையாக,
இட்ட விதி யென்ன ?

++++++++++++++

New Planet 9 orbit

புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது.  அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம்.   அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.

கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] 

New Planet System 2016

New Planet System

சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்

சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது.  ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது.  அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம்.  அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல் [Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்:  காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

Batygin & Brown

சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது.  நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.  புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில்  [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

New planet Nine

இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை.  2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது.  அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

Hypergiant Star with disks of dust.

மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார்.  அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார்.  அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது.  இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார்.  அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார்.  2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர்.  இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.

Oigins of Solar System

எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

Meteorite impacts on Planets

பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

Violant beginning

 

முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

முடிவுகள் இவைதான் :

1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

++++++++++++++++++++++

[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

21.  http://mashable.com/2016/01/20/new-solar-system-planet-nine/#PKq33NOdLPqT [January 20, 2016]

22. http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22/pdf

23.  http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22;jsessionid=9DAB98EED9CB30448604A2F4CA0F8752.c5.iopscience.cld.iop.org#aj522495s6

24.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/caltech-evidence-found-for-a-ninth-planet-in-the-outer-solar-system.html?  [January 20, 2016]

25. http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/todays-galaxy-insight-beyond-pluto-discovery-of-an-unseen-9th-planet-in-our-solar-system-video.html?  [January 23, 2016]

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] January 24, 2016

உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்

Life Evolution

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

3.8 பில்லியன் ஆண்டுகட்கு முன் உயிரின மூலவிகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளதை இப்போது காண்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  ஏறக் குறைய பூமி தோன்றிய உடனே உயிரன மூலங்கள் உருவாகி விட்டன. பிறகு ஏதுவான ஆக்கக் கூறுகள் இணைந்த பின், உயிரினங்கள் உடனே உண்டாயின. பிரபஞ்சத்தில் உயிரினப் பெருக்கம் மிகுதியாக இருக்கலாம்.  எளிய உயிர் மூலவிகள் உடனே தோன்றி, அவை தானாய் இயங்கி, சூரிய  ஒளிச்சேர்க்கைத் [Photosynthesis] தகுதி பெற பல மில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

மார்க் ஹாரிஸன் [பேராசிரியர், பூதள இரசாயனம், காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சலஸ்]

Zircon crystals

https://youtu.be/8SgnnV8nV9g

https://youtu.be/MsHEAnPX59Y 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qoERVSWKmGk

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=W4mYwsr9gGE

+++++++++++++++++++++

பூமி தோன்றிய உடனே உயிர் மூலவிகள் உருவானதற்குச் சான்றுகள்

காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4.1 மில்லியன் ஆண்டுகட்கு முன்பே பூமியில் உயிரின மூலவிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று அறிவித்துள்ளார்கள்.   அந்த ஆராய்ச்சி முடிவு 2015 அக்டோபர் 21 இல் தேசீய விஞ்ஞானப் பேரவை  [National Academy of Sciences] இதழில் வெளியானது.  ஆராய்ச்சி செய்தவர் மேற்கு ஆஸ்திரேலியாவில், உருகி உறைந்த பாறைகளில் எடுத்த 10,000 மேற்பட்ட ஸிர்கான் படிமத்தை [Zircon Crystals] எடுத்துக் கொண்டார்.  ஸிர்கான் படிமங்கள் பல பில்லியன் ஆண்டுகள் மாறாமல் பூர்வப் படிவ [Fossils] பூமி மாதிரிகளாய்க் காலச்சுவடு சிமிழ்கள்  [Time Capsules] என்று  கருதப்படுபவை.  அவை அண்டைச் சூழ்நிலைப்பைப் பற்றி பாதுகாப்பவை.  அவற்றில் உள்ள கார்பன் [Carbon] தனித்துவ முத்திரை உடையது.  குறிப்பிட்ட கார்பன்-12/ கார்பன்-13 பின்னம் [Specific Ratio of Carbon-12 to Carbon-13] ஒளிச்சேர்க்கை மூலவி வசிப்பைக் [Presence of Photosynthetic Life] காட்டும்.  அவற்றில் விஞ்ஞானிகள் 656 ஸிர்கான் படிமங்கள் கரும்  புள்ளிகள் [Dark Specks] இருக்கக் கண்டார்.  அவற்றில் குறிப்பாக 79 படிமங்களில் இராமன் ஒளிப்பட்டை [Raman Spectroscopy] முறையில் கண்டது : முப்புற வடிவில் பூர்வீக ஜீவிகளின் தடம் [Molecular & Chemical Structure of Ancient Micro-organisms in three Dimensions] காணப்பட்டன. அந்த மாதிரிகளில் இருந்த பூர்வீகக் கார்பன் உயிரின மூலவிகள் உறுப்புக்குக் காரணமானது.  4.1 பில்லியன் காலத்து கரித்திரட்சி [Graphite] முதன்முதல் ஆராயப்பட்டு உயிர் மூலவி இருப்பு காணப் பட்டது.

Solid Evidence of DNA Existance

 

சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
சுட்டுத் தின்ன
அண்டக்கோள் ஒன்றை முதலில்
உண்டாக்க வேண்டும் !
அண்டக்கோள் தோன்றப்
பிரபஞ்சத்தில் ஒரு
பெருவெடிப்பு நேர வேண்டும்.
உயிரினம் உருவாக
உபரிகள் சேர சக்தி தேவை.
கோடான கோடி யுகங்களில்
உருவான பூமியும் ஓர்
நுணுக்க அமைப்பு !
தனித்துவப் படைப்பு !
அகிலாண் டத்தில்
நிகரில்லை அதன் படைப்பிற்கு !
நாமறிந்த பிரபஞ்சத்தில்
பூமியைப் போல்
நீர்க் கோள் ஒன்றை
வேறெங்கும் கண்டிலோம் !
நீர் ஆவியாய் நீங்காமல்
வைத்திருப்பது
வாயுக் குடை ! அக்குடை மின்றேல்
மாயும் உயிரினங்கள் !
மகத்துவமாய்
அகிலப் பிரமாண்டத்தை
நுணுகி நோக்க
மனிதரினம் தோன்றிய
புனித கோளம்,
இனிய பூமி ஒன்றே !

****************************

 

Origins of life 1

இந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன்  [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன.  குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும்.  அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA]. 

ரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்  

இதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது.  நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை.  இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கிறது.  அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம்.  அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.

 

முகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி 

PROTEIN

உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ 
பல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது.  அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases] எப்படித்
தோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.
முதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

fig-1b-genome-of-the-species

“உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

Earth Spectrum

உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

Comets Gifts for Earth

[384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

Growth of Organisms

லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].

the-origins-of-life

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

Miller Urey Experiment

அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

fig-1a-the-earths-biosphere1

கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

fig-1-the-beginning-of-life

பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

Fig 3 Comet Falls on Earth

பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

fig-1f-amphiphilic-molecules

சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

Establishment of life on Earth

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

fig-2-signs-of-extra-terrestrial-life1

உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

Origins of life

3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

Fossil Records of life

கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Building Blocks of life

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html [May 14, 2009]

37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis [June 6, 2014]

38.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/secrets-of-extreme-continent-building-discovered-a-key-to-life-on-earth-and-beyond.html [March 31, 2015]

39. http://www.dailygalaxy.com/my_weblog/2015/05/cosmic-hotspots-near-stars-yield-buiding-blocks-of-dna.html  [May 6, 2015]

40  http://www.sciencedaily.com/releases/2015/05/150506095248.htm  [May 6, 2015]

41.  https://en.wikipedia.org/wiki/Zircon  [Octber 31, 2015]

42.  https://en.wikipedia.org/wiki/Zircon  [January 15, 2016]

43. http://www.amnh.org/education/resources/rfl/web/essaybooks/earth/cs_zircon_chronolgy.html

44.  https://en.wikipedia.org/wiki/Timeline_of_the_evolutionary_history_of_life [January 10, 2016]

45.  https://en.wikipedia.org/wiki/Evolutionary_history_of_life  [January 10, 2016]

(தொடரும்)

******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) [January 21, 2016]

சீதாயணம் (முழு நாடகம்)

https://jayabarathan.wordpress.com/seethayanam/

சீதாயணம் (முழு நாடகம்)

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

தீண்டப்படாத சீதா

~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

++++++++++++

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

+++++++++++

முதலாம் காட்சி:

சீதா நாடு கடத்தப்படல்

****

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவுமில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனிதத்தை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

****

(இரண்டாம் காட்சி தொடரும்)

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]

10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]

11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]

12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]

13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014)  [R-3]

https://jayabarathan.wordpress.com/

 

 

காட்சி இரண்டு

வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.

நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]

[அரங்க அமைப்பு:

இரதத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]

இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!

சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?

இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?

சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!

இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!

சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?

இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.

சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?

இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!

சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?

இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.

சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?

இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!

சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!

இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!

சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).

இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.

[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]

மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.

சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.

இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.

[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]

++++++++++

Scene -3 Seetha with Twins

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.

பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனார் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்!

வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது!

சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

Lava Kusha with Valmeeki

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள் பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

***********

Scene -4 Ashvametha Yaga

காட்சி நான்கு

அயோத்திய புரியில் ஆரம்பித்த

அசுவமேத யாகம்

இடம்: அயோத்திய புரி அரண்மணைநேரம்: மாலைபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.

[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.

அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. ‘பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு வேந்தன்  இராமனுக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தைக் காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும்’. போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.]

சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.

Scene -4 Twins catch the Horse

லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை  இழந்து போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!

[இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு!

[எச்சரிக்கை அம்பைக் கவணாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்கு கிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இலங்கா புரியில் இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

************

Inline image 1

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

 

இடம்: காட்டுப் போர்க்களம்.

நேரம்: மாலை.

பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.

அரங்க  அமைப்பு:  பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப் போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்து விட்டன! இராமப் பிரபுவின் சின்னஞ் சிறு கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?

லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.

இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மாமன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியவன் நான்தான்!

Inline image 2

லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதிலை நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்!  ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!

லவா: என் பெயர் லவா!  இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டைச் சகோதரர்! அன்னை வால்மீகி ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் மன்னரே ?  [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்!

இராமன்: [சிரித்துக் கொண்டு] பாலர்களே !  உங்கள் யுத்த தர்மத்தை நான் மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடனும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், நீங்கள் ஏன் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார்.  நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? ஏன் வில்லைக் கீழே போட்டீர் ?  சிறுவருடன் போரிடக் கூடாது  என்று எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது சரியன்று. முறையன்று.

லவா, குசா:  அது சரி மாமன்னரே!   அப்படியானால் எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்!  உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்யப் பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும்  இந்த அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையை  ஈடுபடுத்த வேண்டாம் மாமன்னரே ! … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள். பார்க்கலாம் !

இராமன்: பாலர்களே !   அதில் ஒரு சிக்கல் உள்ளது!  நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை.  அது அவசியம் எனக்குத் தேவை.  அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: மாமன்னா !  தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை!  அவருக்கு நேரமுமில்லை!  அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம்.  அவர் பெரிய பராக்கிரமசாலியாம்!  கனமான வில்லை ஒடித்து, என் தாயை மணந்தவராம் !  அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … [கோபமுடன்] ஆனால் ஒரு கொடுமை ! தாங்க முடியாத கொடுமை.   அவர்தான் எங்கள் அருமைத் தாயை, விலக்கிக் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்!  கடும் கல்நெஞ்சக்கார மனிதர்!   கர்ப்பமான எங்கள் தாயை அவர் காட்டுக்குத் தனியே அனுப்பியது அநியாயம்,  அதர்மம், அநீதி !

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அந்த மன்னனை நேரே காண நேரிட்டால் என்ன செய்வீர் ? என்ன  தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து ஆவேசமாய்] இந்த கூரிய அம்புகளால் அவரது நெஞ்சைத் துளைப்போம், பிளப்போம், துண்டு துண்டாக்குவோம் ! ….

[அப்போது சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று சீதை அவதியுடன் ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சில சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] ….

லவா:  அதோ எங்கள் அன்னை!  எங்களை நோக்கி வருகிறார். ….

[சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப் பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா இருவரும் தாயைத் தொடர்கிறார்கள்]

Inline image 4

சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ?  இந்த உத்தமனை மரத்திலே இப்படிக் கட்டலாமா ?  உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்!

[லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து கண்ணீர் பொங்கச் சீதாவைக் கும்பிடுகிறான். அவளது காலில் விழுந்து கண்ணீரால் கழுவுகிறான். ]

அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.

லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!

+++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

Scene -6 Valmiki with Rama & Twins

இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.

நேரம்:  மாலை வேளை

பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது.

(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)

லவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.

இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது  உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும்  அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை  ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற  எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ?  போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது!  எடுங்கள் உங்கள் வில்லை!

இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம்  அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம்  கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ?  எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை  குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!

Scene -6 Valmiki with Seetha & Twins

லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே  போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.)  வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள்  அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள்  கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள்  அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால்,  தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும்  தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத்  தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ?  எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான்  யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள்  பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத்  தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை  நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன்  எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக்  காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள்  தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள்  தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்!  [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத்  தயக்கமா ?  வெட்கமா ?  உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது  வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர்  உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து]  பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என்  புதல்வர்களா ?

வால்மீகி:  ஆமாம்,  அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு]  சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும்  தந்தைக்குக் குறைய வில்லையே!

Scene -6 Seetha left by Rama with Twins

வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன்,  விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே!  அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என்  ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள்.  லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக்  கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ  அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும்  இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன்  முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று  வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல்,  சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின்  எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன்  எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில்  பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச்  சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார்  ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும்  எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க  எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக்  கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள்  அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ  சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன்,  அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன்  பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை  போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை  இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின்  இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி  இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா  விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன்  அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன்  அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து  விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை  அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து  இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக்  கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ?   எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று  பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!

லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின்  கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன்,  இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)

வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம்  முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி  இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல  வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல  வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.

சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட  ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ  விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள்  ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள  வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!  இதுவரை அவரது விழிகள் என்னை நோக்க வில்லையே !

வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு  அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள்  உன் மடிமீது விளையாட வேண்டியவர், இந்தக் காட்டுப் புழுதி மண்ணில் விளையாடிக்  கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு  அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!  நீங்கள் சேர்ந்து கொள்ள இறைவன் அடுத்தோர் வாய்ப்பை அளித்துள்ளான்.   அழைத்துச் செல் மூவரையும் மாமன்னரே !

இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய்  உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை  கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும்  எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ?  இதுவரை கொடுத்த தண்டனை போதும்.  எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.

சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி  யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.

பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை  கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.

இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி!  இம்முறை லவா, குசா இருவரையும் நிச்சயம்  கூட்டிச் செல்ல முடிவு செய்கிறேன்.

இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவுள்ளம், கண்ணியம்,  கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது  உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்த போது ஜனக  மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும்  அறத்துடன் நடப்போம்.

லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால்  அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப்  போவதில்லை. இதுவரை நாங்கள் தந்தையைக்  காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக்  காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ?  தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல்  என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை  வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி  வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து  எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!

Scene -6 Rama leaves Seetha with Twins

இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல  நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள்  வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!

லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர்  எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள்  கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.

வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை  சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி  இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.

இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை!  ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது  ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை  எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான்  மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி  என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும்  அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை  பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக்  கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?   என்னை மீண்டும் அவமானம் செய்ய வேண்டுமா ?

சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ  தீண்டப் படாதவள் ஆகிவிட்டேன்!  அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை  விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா  நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய  மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று  அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று  நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல  எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத  சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள்  பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்!  (கோவென்று அழுகிறாள்)

லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை  விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்!  சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள்  பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி  விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு  குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால்  உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண்  தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும்  தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?

சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல்  மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர்  கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை!  நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல்,  அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில்  இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும்,  என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள்  சொல் படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே  காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி  மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது!  ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது.  ஊர் மக்களுக்கு ஏக  பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச்  சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும்  போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது  தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட  அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக  அரண்மனையில் காட்சி தரக் கூடாது!

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை  அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ  விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர்  விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத  பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர்  என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை  ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை!  அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப்  போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த  பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான்  முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு  மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு  அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம்  அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில்  போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான்  கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப்  பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி  என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு  மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை  யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி!  கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும்  இடம்பெற முடியவில்லை இதுவரை!  ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சியே !

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு  என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி!  மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப்  போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற  மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத்  துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த  வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள்  வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன்.  மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! ..  ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப்  பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில்  இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை  ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ?  நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு  தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று நான் கனவு கூடக்  காண வில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு  விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட  அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப்  பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவுக்குக் கொடுத்த தண்டனை,  பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில்  அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி!  பெயரை மாற்ற வேண்டாம். என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன  மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில்  என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே  வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே  இருக்கட்டும்.

பரதன்: [கோபத்தில்] அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டீர்கள்!  அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி  வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே  பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்!  அன்னையிடமிருந்து பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்!  உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக்  கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும்  புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க  வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம்  இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே  விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால்  தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத்  திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால்  உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும்  வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் நங்கள் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க  அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப்  போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன  இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள்  புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று சொல்லி சீதாவை அழைத்துச்  செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம்  என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்!  அப்போது எல்லாரது பிரச்சனை களும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை  எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) ….  அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு  வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை  வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து  விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு  காணும்…. நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!..  நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே  நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப்  பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான்  தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … மீளாத உலகுக்கு !

[வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக்  குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க  ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாதாளப் பாறையில் அடிபட்டு  அவளது ஆத்மா பிரிகிறது].

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக  வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

[அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இராமன் கண்களில் நீர் பொங்கிச் சொட்டுகிறது]

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான்  நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது  ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம  கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை  சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான்.  இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி  அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப்  பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர்  துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய  உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்!  வாழப் பிறந்தவர் நீங்கள் சாக வேண்டுமா ?

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும்  உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள்  நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை  வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தம பதி  என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு  மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு  பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர்  துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?

Scene -6 Seetha kills herself

[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன்,  அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி  சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின்  துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா,  குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

(நாடகம் முற்றிற்று)

********

சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை

பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல  மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச்  சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும்  பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல்  கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப்  பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத்  தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும்  புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான  அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில்  எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல்  மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன்  அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த  தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப்  போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன்  வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து  மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர்  புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும்  இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது  வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப்  பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த  தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட  அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம்  பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை.  கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத  நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப்  பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத  வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில்  அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச  பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும்  தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப்  பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும்  பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்  மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள்  காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல்  இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து  கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித்  தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற  காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல்  நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை  இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.தெய்வத்தைத்  தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று  சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க  வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய்  கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி,  கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத்  தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும்  பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை  எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின்  அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே,  வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி  யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை  மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க  வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச  பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து  இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை  நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில்  நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான்.  பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான்.  இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக்  கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன்  எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம்  செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும்  பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும்,  சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ  அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக்  குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர்,  விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம  கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில்  யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை.  அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன்,  இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி  முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை  திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின்  புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி  அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது  வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை  ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத  ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும்  தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய  பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று  கருதவும் இடமிருக்கிறது.

இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும்  பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று  மாற்றி யுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதார மாகச்  சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருத வில்லை  என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின்  அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு  இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட  வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில்  இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக்  காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின்  முரணாக இருக்கிறது!  முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக  வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில்  இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள்.  முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும்,  சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக்  கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண  கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர்  பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி  வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக  மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும்  இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்  படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை!  தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும்  கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண  நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த  அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில்  தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு  ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக் கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய  இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது  என் அழுத்தமான கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில்  வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து.  பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக்  கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி  பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு  உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி  மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க்  கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி  முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி  வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர  வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக்  கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று  எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும்,  வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக  இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும்,  தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச்  சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை  அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக்  காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை  தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன்  மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார்  படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான்  அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.

கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை  மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை  இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்!  காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக்  குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்;  அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர்  புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர்  கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த  இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது,  பிரச்சனை யான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம  பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான  கேள்வி!

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]

10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]

11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]

12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]

13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan <dsmahadevan@gmail.com>]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014)  [R-3]

https://jayabarathan.wordpress.com/

76 thoughts on “சீதாயணம் (முழு நாடகம்)”

  1. சீதாயணம் அற்புதமான கதை பாராட்டுகள் இதுபோல் பல உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  2. பாராட்டுக்கு நன்றி நண்பர் சீனிவாசன்.

    நமது இந்திய புராணக் கதைகள் உள்ளே உன்னத கலைக் களஞ்சியம் ஒளிந்திருக்கிறது. அவற்றின் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தால் அவை புத்துயிர் பெற்று மீண்டும் எழுகின்றன.

    சி. ஜெயபாரதன்

  3. //அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. //

    அந்தக் குறளிலிருந்து எப்படி இந்த விவாதத்தை வைக்கிறீர்கள் என்பது புரியவில்லையே…

  4. அன்புள்ள திரு ஜெயபாரதன்,

    மதுரை வலைப்பதிவர் தருமியின் கடவுள் என்றொரு மாயை தொடர் பதிவின் ஏழு பகுதிகளையும் அதில் உங்களுடைய பின்னூட்டங்களையும் சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. இந்தத் தொடர்பதிவின் முதல் பகுதியில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள், எப்படித் திசை மாறிப் போயின என்பதையும் பார்க்க முடிந்தது. தருமியுடன் பேசிக் கொண்டிருந்த போது உங்களுடைய சீதாயணம் பதிவு நன்றாக இருக்கும் என்று சொன்னார்; இங்கே வந்து படித்த பிறகு தான், எதன் அடிப்படையில் அவர் அது பிடித்திருக்கிறது என்று சொன்னார் என்பதும் புரிந்தது.

    அதில் கண்ட அனுபவங்களைக் கொண்டு, இப்போது அதன் ஏழாவது பகுதியின் மீது கருத்துப் பரிமாற்றங்களை, தொடங்கியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு விருப்பமிருந்தால்,உங்களுடைய கருத்து என்ன என்பதையும் பதிவு செய்யுங்கள்.

    தருமியுடைய வலைப்பதிவில் பின்னூட்டங்களோடு, இந்த விவாதத்தைப் பற்றிய எனது கண்ணோட்டங்களையும், கேள்விகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கலாம்,

    இங்கே மற்றும் இங்கே

  5. அன்புள்ள நண்பர் திரு. கிருஷ்ண மூர்த்தி,

    வணக்கம்.

    உங்கள் கடிதம் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். ஆன்மீகச் சிந்தனை சிறிதும் இல்லாத வெறும் விஞ்ஞானம் பெரும் பாலை வனமே. அதில் தாகம் தீர்க்கும் பசுஞ்சோலைதான் ஆன்மீக மலர்ச்சி.

    தருமியும் அவரது முகமூடி மூர்க்கரும் பாதிக் கிணறு தாண்டிய பகுத்தறிவுவாதிகள் என்பது என் கருத்து.

    “உயிர்” என்றால் இரசாயனக் கலவை என்று ஆரம்பப் பள்ளி மாணவராய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    “உயிர், ஆத்மா, கடவுள்” என்றால் என்ன வென்று அவரது சிறு மூளைக்குப் புரிவ தில்லை. அவரது மூளையில் ஓர் ஊற்று அடைத்துப் போய் உள்ளது.

    ஆன்மீகம், விஞ்ஞானம் ஆகிய இரண்டும் சேர்ந்துதான் பிரபஞ்ச நியதிகளை விளக்க முடியும் என்று விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறுகிறார்.

    வெறும் விஞ்ஞானம் மட்டும் போதாது.

    இன்றைய விஞ்ஞான அறிவு பூரணமற்றது, குறைபாடுகள் கொண்டது, தர்க்கத்துக்கு உரியது. தொடர்ந்து மாறி விருத்தியடைவது.

    உங்கள் ஆன்மீக வலைத்தளம் ஒரு பசுஞ்சோலை. பாராட்டுகள். என் குநாதர் விவேகானந்தர்.

    உங்கள் பதில்களைப் படித்து என் கருத்தைக் கூறுகிறேன். என் படைப்புகள் திண்ணையில் ( http://www.thinnai.com ) தொடர்ந்து வருகின்றன.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  6. அன்பு நண்பருக்கு,

    மாலை வணக்கங்கள்.

    “சீதாயணம்” மிகச் சிறந்த படைப்பு. பாரதி “தெய்வம்” என்று உடைத்துச் சொன்ன உண்மை, அதில் இருக்கிறது.

    சீதையின் வாதங்கள் மிகக் கூர்மை. சிந்தனையைத் தூண்டுவதாகவே, முழுப் படைப்பும் உள்ளதுடன், ராமன் குறித்த எனது மதிப்பீட்டினை உறுதி செய்கிறது.

    கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மட்டுமின்றி, முன்னுரை மற்றும் முடிவுரை இவற்றில், தங்கள் கருத்து வெளிப்பாடுகளில், மத ஒற்றுமை குறித்த தங்களின் ஆதங்கமும், “விட்டுக் கொடுத்தலே வாழ்தலின் சாரம்” என்ற நிலையும் தெரிய வருவதில், நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.

    பெண் விடுதலையைத் தன் விடுதலையாகக் கருதி போராடிய பெருமக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் வரிசைப் பட்டியலில், நம்முடைய “சீதாயணம்” உறுதியாக இடம் பெறும்.

    நேரம் கிடைக்கும்போது, மற்ற படைப்புக்க‌ளையும் படித்து, எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

    வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    சிவா.

  7. நீண்ட கால இதிகாசத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுக் கருத்துக்களுடனும் வித்தியாசமன கோணத்தில் புனையப்பட்ட நாடகம் சீதாயணம். நன்றாக உள்ளது. பேசாமல் சீதாயணத்தை ஒரு குறும்படமாக எடுத்து விடுங்கள். அயோத்தியில் கோவில் கட்ட வேண்டுமா, இல்லையா, எந்த இடத்தில் கட்ட வேண்டும் என்பது இரு மதங்களையும் சார்ந்த ஒரு உணர்வுபூர்வமான விஷயம். எது எப்படியோ கடவுளின் பெயரால் இருப்பவர்கள் யாரும் தண்டிக்கப்பட கூடாது. பேசாமல் கோவில், மசூதி இரண்டையும் விடுத்து அந்த இடத்தை வசதியே இல்லாத மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் கல்வி கற்பிக்கும் இடமாகவோ அல்லது உண்மையான சிறந்த சமுக நல திட்டங்களுக்கோ பயன்படுத்த இரு மதத்தினரும் சேர்ந்தே முயற்சிக்கலாம். இனிமேலும் இதற்கான பூசல்களும் உயிரிழப்பும் நடக்காமல் தடுக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

  8. அன்புள்ள வேணி,

    சீதாயணத்தை எப்படிக் குறும்படமாக எடுப்பது ? கனடாவில் இருந்து கொண்டு செய்ய இயலாது.

    நீதிபதிதான் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் ஆலயம் எழுப்பக் கூடாதென்று தடை விதித்துள்ளார்.

    மதம் பிடித்தோடும் அடிப்படை இந்து, முஸ்லீம் மூர்க்க வர்க்கத்தினர் மிருகக் குணம் படைத்தவர். அவர் பிறர் கூறும் ஆக்கமுறை வழிகளை ஏற்றுக் கொள்ள மாடார்.

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    +++++++++++++++++++

  9. rajamranjini@gmail.com

    வணக்கம் சார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.

    பாராட்டுகள் சார்.

    அன்புடன்,

    க.ராஜம்ரஞ்சனி

    • I’ve been surfing online more than three hours these days, yet I never found any attention-grabbing article like yours. It is beautiful worth enough for me. In my view, if all web owners and bloggers made excellent content as you probably did, the internet will be a lot more helpful than ever before.

  10. This weblog appears to get a great deal of visitors. How do you get traffic to it? It gives a nice unique twist on things. I guess having something useful or substantial to give info on is the most important factor.

  11. This weblog appears to recieve a good ammount of visitors. How do you get traffic to it? It gives a nice individual spin on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.

  12. This post appears to get a great deal of visitors. How do you promote it? It gives a nice unique twist on things. I guess having something real or substantial to post about is the most important factor.

  13. This page appears to recieve a great deal of visitors. How do you advertise it? It offers a nice individual spin on things. I guess having something authentic or substantial to say is the most important thing.

  14. really like the article you wrote . it really isn’t that simple to find good posts to read (you know.. READ! and not just going through it like some uniterested and flesh eating zombie before going to yet another post to just ignore), so cheers man for not wasting my time! :p

  15. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

  16. Amazing! Your post has a ton readers. How did you get so many readers to see your site I’m envious! I’m still studying all about posting articles on the web. I’m going to look around on your blog to get a better understanding how to get more visable. Thanks!

  17. அன்பின் திரு.செயபாரதன் ஐயா,

    தங்களின் இந்த நாடகம் என் நெஞ்சைப் பிழிந்த ஒன்று.
    அமைதியான ஆனால் அழுத்தமான தமிழில் உருக்கியிருக்கிறீர்கள்.
    நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தங்களின் படைப்புகள் பல்லாயிரமாய்ப் பரவவேண்டும். என்னைக் கவர்ந்த எழுத்துக்கள் பல உள்ளன உங்கள் நாடகத்தில்.

    //அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! //

    இந்த இடம் என்னைத் தாக்குறச் செய்த இடம். நாடகத்தின் அடிநாதமாக இதனைச் சொல்வேன். ஆணாதிக்க உலகில் நல்ல பெண்களின் வேதனையின் உச்சம் என்றால் மிகையல்ல.

    //வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்!
    //

    இதேபோலத்தான் கோவலன் மாதவியைக் குறித்து “நான் வா என்றால்
    வருவாள் போ என்றாள் போவாள்” என்று ஆணவமாகப் பேசுவான். மாதவியின் உயர்ந்த மனதைப் பழித்துப் பேசுவான்.னிட

    இதில் பெரிய கொடுமையாக நான் கருதுவது வால்மீகி முனிவர் சீதையிடம் கீழ்க்கண்டவாறு சொன்னதுதான்:
    //
    பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல்.
    //

    சிறிதும் அவளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எண்ணாமல்
    இராமனின் காதையை எழுத ஆரம்பித்ததில், அவரும் அவரின் இலக்கியத்திற்குச் சீதையைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்றே
    கருத முடிகிறது.

    //சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.//

    இந்த இடம் சற்று நெருடுகிறது. சீதை இராமனைப் பிரிந்து 12 ஆண்டுகள் ஓடியபின்னர் செய்த அசுவமேதயாகத்திற்கு வரும் சனகன், அப்போதுதான் சீதை இராமனைப் பிரிந்து வாழ்கிறாள் என்று அறிவதாக இருப்பது நம்பும்படி இல்லை.

    மேலும் பிடித்த வரிகள்:
    //
    வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார்

    அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து.

    மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை!

    மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன்.

    கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!
    //

    கண்ணகியின் முடிவையும் சீதையின் முடிவையும் ஒப்பிட்டிருக்கும் பாங்குக்கு எனது வணக்கங்கள்.

    அருமையானதொரு நாடகம். அழகான படைப்பு.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  18. மதிப்புக்குரிய நண்பர் நாக. இளங்கோ,

    சிலம்புச் செல்வர் மா.போ.சியின் வாரிசான சிலம்புச் சிற்பி ஒருவர் எழுதிய நுணுக்கமான, விளக்கமான நாடக அணிந்துரையாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

    ஒரு சிறு நாடகத்தை இத்தனை ஆழமாக, ஊன்றி ஆராய்ந்து இதுவரை யாரும் இப்படி விமரிசனம் செய்ததில்லை.

    பதிவுகளில் முன்பு வெளிவந்த உங்கள் சிலப்பதிகார விளக்கப் பகுதிகள் ஒரு நூலாக வெளியிடப் பட்டுள்ளதா ?

    அவற்றை மீண்டும் தமிழ்மன்றத்தில் தொடர்ந்து இடுவீர்களா ?

    உங்கள் பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றி

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++++++

  19. jayashree shankar ✆ to anbudan, tamizhsiragugal, thamizhthendral, tamilnanban, amudhae_thamiz., me
    show details 10:

    சீதாயணம்..பின்னூட்டம்..

    பெருங்காவியத்தின் கதாநாயகனை ஓரங்கட்டி நாயகிக்கு ஓட்டுப் போட்டு அவள் நிற்கும் இரண்டாம் இடத்தைக் காலி செய்து முதல் இடம் தந்திருப்பதில் பெண்களுக்கே பெருமை சேர்த்திருப்பது போல் இருக்கிறது. சீதைக்கு அயனம் எழுதும் முன்பே விளக்கமாக முகவரை சொல்லி எல்லோரிடமும் அட்ச்சதை வாங்கிக் கொண்டீர்கள்.(அனைத்து இறைவனிடமும் ஆசீர்வாதம்) மிக அழகான, அடக்கமான, படிக்கப் படிக்க ..ஆம்…ஆம்….சரிதான்…சரிதான்….என்று சொல்லிக்கொண்டே மனம் மேற்கொண்டு படிக்கத் தூண்டும் எழுத்து நடை…இதெல்லாம் சீதாயனத்திர்க்கு ஒரு பச்சைக்கொடி.

    பல யுகங்கள் கடந்தும் நடந்ததாக சொல்லும் மஹா சரித்திரம். சாதாரணமாக, ஒரு நன்றாக சீறும் சிறப்புமாக வாழ்ந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு ஐந்து தலைமுறைக்கு முன்னே யார் இருந்தார்கள் என்றால் கூட சொல்லத் திணறிப் போகவேண்டும். அப்படி இருக்கையில் யுகம் பல கடந்தும் “ராமன்” என்ற பெயர் இனி வரும் நூற்றாண்டுகளிலும் அழியாமல் இருக்கும் ஆச்சரியம். அதற்கு பெறும் பங்கு “ராமாயணம்” மாகத் தான் இருக்க வேண்டும். ராவணனின் கடத்தலுக்குப் பிறகு தான் சீதைக்கே ஒரு முக்கிய இடம் கிடைத்தது. அதன் பின்பு நடந்து தான் அனைவரும் படித்து, பார்த்து அறிந்தது..ஆனால் இங்கு நீங்கள் அதன் பின்பு நடந்த சீதையின் மனப்போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவளுக்கென்று ஒரு பகுதி ஒரு உணர்ச்சி காவியமாய் நடையோடு …எழுதி இருக்கிறீர்கள். யோசிக்க வேண்டிய விஷயம். இதுவரை..யாரும் கையில் எடுத்துக் கொள்ளாத வில் இது.வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். நான் கூட யோசித்ததுண்டு, சீதை ராவணனிடம் பட்ட வேதனையை விட ராமனோட சேர்ந்ததும் ராமன் பட்ட சந்தேகத்தில் தான் அதிகம் துவண்டிருப்பாள் . அதனால்தானோ என்னவோ பூமாதேவியே…தன் மகளை வாரி அணைத்து தழுவிக் கொண்டாள்.(தாய்ப் பாசம் மண்ணானாலும் இருக்கும் போலிருக்கு)..

    மஹாகவி பாரதியாரின் மனைவி கண்ணம்மாவிற்கு நேர்ந்த நிலை, பகவான் ராமகிரிஷ்ணரின் மனைவி அன்னை சரதாம்பாளுக்கு நேர்ந்த நிலை, ராயர் ராகவேந்தரரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, கணிதமேதை திரு ராமானுஜரின் மனைவிக்கு நேர்ந்த நிலைமை, காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் அன்னைக்கு இது போல் பல பெறும் மேதைகளின் மனைவிகளின் நிலைமை ஏனோ மனதளவில் சந்தோஷப் படும் நிலையில் இல்லை. இது அவர்கள் வாங்கி வந்த வரம் போலவும். (அவர்களுக்கே அப்படி என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்..). இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

    தங்களின் “சீதாயணம்” என்ற இந்த நாடகத்தை வரவேற்று எனக்குத் தெரிந்ததை என் பாணியில் எழுதி விட்டேன். விடாது படித்து நிறை சொல்வேன். தாங்கள் அனைத்து துறையையும் கரை கண்டவர் அதனால் குறை இருக்க வாய்ப்பில்லை.முதல் காட்சி மிகுந்த விறுவிறுப்போடு சென்றது..சீக்கிரம் திரை விழுந்து விட்டது. காத்திருப்போம்.அதுவரை பொறுமையோடு.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  20. Elangovan N ✆ to tamilmanram
    show details 12:32 PM

    அன்பின் ஐயா,
    கனிவு கண்டு மகிழ்ந்தேன்.

    சீதையின் குணநலன் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசகுலத்தில் இருக்கக்கூடிய உயர்ந்த பெண்களின்
    ஆன்மாவின் அலறலுக்கு வேகம் அதிகம் என்றே கருதுவதுண்டு. அரசன் வெற்றிபெற்றால் மேலும்
    இரண்டு பெண்களை மணந்து கொள்வான். தோற்றுப் போனால் இருக்கும் மனைவியரை இழந்துவிடுகிறான்.
    இராமன் தன் மனைவியை மீண்டும் கண்டும் கூட அரச வாரிசுகளில் மட்டும் அக்கறை காட்டி
    சீதையைக் கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் வலிக்க வைக்கிறது. நாடு, செல்வம் போன்றே “நல்ல பெண்களும்” ஒரு பொருளாக ஆகிவிடுகிறார்கள். சீதைக்கு மணமானதில் இருந்து
    அவள் மகிழ்ச்சியாக இருந்தது சில கவிதை வரிகளில் மட்டும்தான் போல. பந்தயப்பரிசு என்று நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற ஒரு
    வரியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மேடைகள் நிறைய பேசிவிட்டன :-) (எனக்கும் அந்த ஒரு வரிதான் தெரியும்). இந்த வரிக்குள் தமிழ்ப்பண்பாட்டைத் தேடுபவர்களும் ஏராளம். அதற்குள் இருக்கும் வலி மிக அதிகம் என்றே தோன்றுகிறது.

    சிலம்பு மடல்கள் என்று ஒரு 10/12 வருடத்திற்கு முன்னர் எழுதினேன். அதனை 2001ல் நூலாகக் கூட வெளியிட்டேன். இளங்கன்று பயமறியாது என்பது போல முதல்தடவை சிலம்பைப் படித்த வேகத்தில்
    ஏதோ எழுதியது அது. பின்னர் மீண்டும் ஒருகாலத்தில் சிலம்பைப் படித்தபோது “என்னத்தைப் பெரிதாய் எழுதிவிட்டோம்” என்றே எண்ணினேன். பின்னர் வேறொரு கோணத்தில் எழுதத் துவங்கிய போது
    நிறைய படிக்க வேண்டும் என்ற தேவையே இருந்தது தெரிந்தது. இன்னும் சில காலம் சில முக்கிய நூல்கள்
    படிக்க வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் புதிய படைப்பாக ஏதேனும் எழுதவேண்டும் என்ற எண்ணமே
    மனதில் எழுகிறது. இலக்கியங்களில் சிலம்பு ஒரு சுவை மிக்க இலக்கியம். வாய்ப்பு கிடைக்கும்போது மேலும்
    எழுதுகிறேன்.

    மிக்க நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  21. jayashree shankar ✆ to me
    show details

    23 ஆகஸ்ட், 2011 11:50 pm அன்று, jayashree shankar எழுதியது:

    நாடகம் என்று ஒற்றை சொல்லாய் சொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. உங்களுள் ஒளிந்திருக்கும் பெண் மனம் , சீதையின் வாழ்வில் ஒரு அர்த்தம் வேண்டுமென அவளுக்காக ஒரு காவியம் படைத்ததாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். எழுத்தில் ஒரு வீரியம், போர் வாள் போன்ற ஒரு தீர்க்கம் , சொல்ல வந்ததில் நேர்மை,நியாயம்..!!, சீதையின் நிலைமை இது தான் என அறிந்ததும் ராமன் மீது இருக்கும் பக்தி மெல்ல தரை இறங்கி வெளி நடந்துவிடும் கண்ணியமாக..உங்கள் நினைவு போல் ராமன் யாருக்கும் ஒன்றும் செய்யவில்லை. மகா கோழையாக இருந்திருக்கிறார். பதவி மோகம் கண்ணை மறைத்து விட்டது போலும். படிக்கப் படிக்க புதுமையாகவும், புரட்சியாகவும், மேலும் பிரமிப்பாகவும் இருந்தது. சரித்திரத்தையே திருப்பி போட்ட உமது சிந்தனை மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. வாழ்நாள் பூரா தனியாகவே வாழ்ந்த சீதாவுக்கு ஏன் ஒரு தனியான கோவில் இருக்கக் கூடாது.? ஒருவேளை சீதாயணம் படித்த பின் தோன்றும்….நல்ல விதை விதைத்திருகிறீர்கள். தங்களின் சீரிய எழுத்துப் பணி போற்று தலுக்குரியது.

    சீதாயணம் ஒரு எழுத்தோவியம்.! படங்களும் மிக மிக அருமை.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    • சீதாயணத்துக்கு ஒரு சிறந்த கருத்தோவியம் பின்னோட்டமாய் இட்டமைக்கு என் உளங்கனிந்த நன்றி ஜெயஶ்ரீ.

      சி. ஜெயபாரதன்.

  22. Amazed to read SEETHAYANAM! Such a bold attempt to reverse the original Ramayanam ! A masterpiece in Tamil drama and an eye opener for the future generation. This should be given wide publicity in the Tamil community! The words used are poetic and weighty. ” Muthal vanavaasathukku kaaranam en vithi! Aanal irandam vanavaasathukku karanam en pathi! ” The sufferings of Seethai which are hidden in Ramayanam are aptly highlighted in SEETHAYANAM! Congratulations!

    • நண்பர் தரணிமைந்தன்,

      உங்கள் பாராட்டுக்கு என் பணிவான நன்றி. நீங்கள் எங்கு வசித்து வருகு என்ன உத்தியோகம் பார்க்கிறீர்கள் ? உங்களைப் பற்றி விபரம் அறிய பேரவா.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்.

  23. From: K.Ranjini
    Date: 2010/3/15
    Subject: சீதாயணம்
    To: jayabarat@tnt21.com

    வணக்கம் ஸார். தங்களின் ‘சீதாயணம்’ படித்தேன். சீதாவின் இறுதி கால துன்பியல் வாழ்க்கை துயரமானது. நாடகத்தில் சீதாவின் மனம் படும் கவலையையும் துயரத்தையும் உணர முடிகின்றது. ராமர் மனித அவதாரத்தில் மனிதராகவே வந்து போகின்றார். அருமையான நாடகம்.

    பாராட்டுகள் ஸார்.
    அன்புடன்,

    க.ராஜம்ரஞ்சனி

    • அன்புமிக்க திருமதி ராஜம்ரஞ்சினி,

      வணக்கம். உங்கள் உயர்ந்த பாராட்டுரைக்கு என் உளங்கனிந்த நன்றி.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்

  24. From: Seethaalakshmi Subramanian
    Date: 2012/10/28
    Subject: Got your book Seethayanam
    To: Jay Jayabarathan

    மதிப்பிற்குரிய அய்யா

    வணக்கம்

    தங்கள் புத்தகம் வந்து சேர்ந்தது. முதலில் அட்டைப்படம் கண்ணைக் கவர்ந்தது. ஓவியம் அழகாக உள்ளது.

    உள்ளேயும் படங்கள். சீதாயணம் ஓர் பெண்ணியம் பேசும் சித்திரம். புத்தகம் மிக அழகாக வந்துள்ளது.

    வைய்யவனுக்கு முதல் பாராட்டு. தங்கள் அரிய எழுத்தைச் சுமக்கும் பாத்திரம் அழகாக வடிவமைத்துள்ளார். அவரிடம் என் பாராட்டுதல் களைக் கூறவும். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓர் விஞ்ஞானியின் தமிழ்ப் படைப்பு. அதுவும் ஓர் காவியத்திற்கு இன்னொரு வடிவம். வால்மீகியும் உங்களைப் பாராட்டிக் கொண்டிருக் கின்றார். சீதையின் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீர். இந்த மண்ணின் பெண்களுக்கும் மன நிறைவு. இன்னொரு சக்தியைக் கிளப்பி விட்டிருக்கின்றது ஆமாம் . எனக்குள் ஒரு பொறி. ஓர் லக்கியக் கட்டுரைக்கு ஓர் வித்து. பாரதமும் இராமாயணமுமின்னும் சில காப்பியங்களும் என்னிடம் வந்து பேசிவிட்டுச் சென்று விட்டார்கள். உங்கள் எழுத்தின் வலிமை. அவசரப்படாமல் சான்றுகளுடன் படைப்பேன்

    பாராட்டுதல்கள். வாழ்த்துக்கள்

    சீதாம்மா

    சீதாம்மா

  25. அன்பு ஜெயபாரதன் ஐயா,

    உங்கள் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை உங்களுக்கு வழங்கி இருக்கிறது. அது இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

    வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அராசனின் வாழ்வை உதாரணமாகக் காட்டியிருக்க உத்தேசித்திருக்கலாம். ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் இராமாயணம் ….சிலப்பதிகாரம் போல.

    கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டைரௌடிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நீங்கள் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி உங்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இது மகிழ்ச்சியைத் தருகிறது.

    படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நீங்கள் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அதிலும் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் தன் தாய்வீடு செல்வதை தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்தியது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. மனைவிக்காக முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஒரே மனைவியுடன் வாழ்த்தும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிந்தாலும், இக்காலத்திலும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே உண்மை.

    நீங்கள் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்தி குளிர்காயும் சுயநல மதவாதிகளை அடையாளம் காட்டுகிறீர்கள். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறீர்கள். உங்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

    சீதாயணத்தை women study பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளுக்கு இந்த நாடகத்தை நடத்த வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

    “ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

    இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நீங்கள் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?

    பெண்களின் சார்பில் உங்கள் சீதாயணம் படைப்பிற்கும், விழிப்புணர்வு கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கும் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    தேமொழி

    • அன்புமிக்க தேமொழி,

      சீதாயண நாடகப் புத்தகம், தவறி விடாது உங்களுக்கு வந்து சேர்ந்தது பற்றி மகிழ்ச்சி.

      உங்கள் நாடகத் திறனாய்வு உன்னத முறையில் எழுதப் பட்டுள்ளது. அடுத்த சீதாயணம் பதிப்பில் உங்கள் தனிப்பட்ட அணிந்துரையும் நான் இணைக்கலாமா ?

      அணிந்துரை நீளமாய் இருப்பினும் ஆழ்ந்த கருத்துடன் ஆவேசமாய் எழுதப்பட்டதால் படிக்கும் நேரம் ஓடுவது தெரியவில்லை. இந்திய இதிகாசப் புராணக் கதைகளில் சில மனித ரூபத்தில் / செயலில் எழுதப் பட்டால் பஞ்ச தந்திரக் கதைகள் போல் படிக்க இனிதாய் இருக்கும்.

      பாஞ்சாலியைப் பற்றி பாரதி பாக்களாய் எழுதி யிருக்கிறார். அபலை சீதாவின் கதை நாடகமானதுபோல் போல், சூதர்கள் சபைதனிலே அவமானப் பட்ட மாதின் கதையை நாடகமாய் அமைக்க இயலுமா என்று சிந்திக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.

      இனிய அணிந்துரை எழுதியதற்கு உளங்கனிந்த நன்றி.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்

  26. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    என்ற குறட்பா தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. தொழுகை என்றால் பிரார்த்தனை என்றே பொருள் கொள்ளவேண்டியதில்லை. எதொனொன்றின் மீதாவது கவனம் செலுத்துவதும் தொழுகைதான். காலையில் விழிப்பு வந்தவுடன் தன் கொழுநன் மீது தன் கவனத்தைச் செலுத்தி அவன் நினைவில் மூழ்குவதன் மூலம் தன்னுடைய அன்பினைப்புதிப்பித்துக்கொண்டு அதன் மூலம் தன்னை மிக சக்தியுள்ளவளாக உணர்ந்து நாளைத்துவக்குபவள் என்று பொருள். கூட ஒருவர் துனையாக நின்றால் நாம் பலம் உள்ளவராக உணர்வது இயல்புதானே. அதிலும் அவர் கணவர் போன்று நமக்குக் கடமைப் பட்டவர் என்றால் சொல்லவா வேண்டும். மழை கூட தன்னுடைய ஆணைக்குக்கட்டுப்படுமென்று அவள் நினைப்பதில் தவறென்ன இருக்க முடியும்?

    • நண்பர் வெங்கடாசலம்,

      பெண்ணுக்கு ஆண் துணை அவசியம் என்பது போல் ஆணுக்குப் பெண் துணை முக்கியம் அல்லவா ? உங்கள் பொருளில் ஆணுக்குப் பெண் அடிமை என்னும் பொருள் தெரிகிறது. ஆணுக்குப் பெண் அடிமைபோல் வாழ்ந்தால் பெருத்த வெகுமதி கிடைக்கும் என்பது கழுதைக்கு கண்முன் காரட் காட்டும் கதையாக வருகிறது. ஆணாதிக்கவாதிகளுக்கு எழுதப் பட்டது.

      உங்கள் கருத்துப்படி பெண்டிர் இரண்டாம் வகுப்பு சேவகியர் என்னும் பொருள் படுகிறது. பெண்ணுக்கு முதல் குறிப்பணி குடும்பம், தன்னைப், பிள்ளைகளைப் பேணுவது. கணவனுக்கு முதன்மை தந்து கும்பிட்டு வலம்வந்து முத்தம் கொடுப்பதல்ல.

      காலையில் முதலாகத் தெய்வம் தொழுவது பெண்ணுக்கு எல்லா நெறியும் புகட்டுகிறது. பைபிள், குர்ரான், பகவத் கீதை எல்லாம் இறை வணக்கத்தையே முதன்மையாக்குகிறது, அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.

      இறைவனே எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவன். பெரும்பான்மையான கணவர் கண்ணிய மின்றிப் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் ஆணாதிக்கவாதியாக உலகில் எங்கும் உலவி வருகிறார். எல்லாக் கணவனும் வணங்கத் தக்கவனா ?

      சி. ஜெயபாரதன்

  27. தொழுகை என்ற சொல் தொழுத கையுள்ளும் என்றும் தொழுதுண்டு என்றும் பிற இடங்களில் திருக்குறளில் வருகிறது. தொழுத கையென்று சொல்லும்போது ஒருவர் கைகூப்பி வணங்கினால் மற்றவரும் அதையே செய்வார் என்பது தொக்கி நிற்கிறது. தொழுது உண்டு என்ற இடத்திலும் உணவு தரும் உழவனை நன்றியுடன் நினைந்து பார்த்து அவனுக்கு மானசீகமாக நன்றி சொல்லிய பிறகு உண்ணுதல் என்றே பொருள். உழவனை நோக்கிப்பிரார்த்தனை செய்வது என்று கூற இயலுமா?
    ஆகவே தொழுது என்றால் இறைவன் முன் நின்று தொழுதல் என்பதைப்போன்ற பொருளில் திருக்குறளில் வரவில்லை என்பதே என்னுடைய கருத்து.

    மேலும்
    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலள் பெண்

    என்ற குறள் இல்லக்கிழத்தியை இல்லம் என்ற நிறுவனத்தின் இணை த் தலைமை அதிகாரியாகத்தன்(Joint CEO) காட்டுகிறதென்பேன். எவ்விதம்?

    தன்னைக்காத்து அதாவது தன் உடல் வளத்தையும் மன நலத்தையும் காக்க ஆவன செய்து கொண்டு கனவன் அவற்றை இழக்கும் தறுவாயில் ஒரு செவிலி நோயாளிக்குச் செய்வது போல (பேணுதல்) செயல்பட்டு இது நல்ல குடும்பம் என்ற தகுதியை, சொல்லை பாதுகாத்து (நற்பெயர் முகவர்=brand amassidor) இவற்றில் தொய்வு (சோர்வு) இல்லாமல் செயல்படுபவள் மனைவி.

    அப்படிச் செயல்பட்டு நற்பயர்பெற்றால் அவளுக்கு என்ன கிட்டும். புத்தேளிர் உலக குடியேற்றம் கிட்டும் என்று கூறும் குறள் கீழே:

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டீர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு 58

    .

  28. இன்னொரு செய்தி இறைவனைத் தொழச்சொல்லி திருக்குறள் கூறவே இல்லை. இறைவனிடம் சரண் அடைய மட்டுமே கூறுகிறார். இவ்வுலக வாழ்வு ஒரு ஆன்ம பயிற்சிக்களம் அதன் பொருள்கள் பயிற்சிக்கான பொருள்கள். ஆகவே அவற்றின்மீது பற்று வைக்காமலேயே ஆனால் அறவழியில் துய்த்து வாழ்வதே ஆன்ம மேம்பாட்டினை நல்கும். முற்றிலும் மேம்பாடுற்ற ஆன்மா கடவுளர் உலகு புகும். மனித வாழ்வின் நோக்கம் கடவுளர் உலகு புகுவதற்குத் தன்னைத் தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்வதே. இதை எப்படிச்செய்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் நூல் திருக்குறள் .

    • நண்பர் வெங்கடாசலம்,

      தெய்வம் தொழாத, தெய்வ நம்பிக்கையற்ற நாத்திவாதிப் பெண்ணொருத்தி காலையில் எழுந்து கணவனைத் தினம் தொழுது வந்தால் பெய்யென்றதும் மழை பெய்யுமா ?

      முதலதிகாரம் கடவுள் வாழ்த்தின் அர்த்தம் என்ன ?

      சி. ஜெயபாரதன்.

      ++++++++++++++++++++++++++++++

      • மழைபொழியும் என்பதை அப்படியே லிட்ரலாக எடுத்துக்கொள்ள இயலாது. ஒரு கருத்தை ஆழுத்தம் திருத்தமாகக் கூற விழையும் திருவள்ளுவர் அதை மிகவும் ஒங்கிக்கூறுவது குறளெங்கும் காணக்கிடக்கும் ஒன்று. ஞாலம் கருதினும் கைகூடும் என்று அவருடைய கூற்று அத்தகைய ஒன்றே. மிக அதிகமான ஆற்றலுடன் அவளுடைய செயல்பாடுகள் இருக்குமென்பதே கருத்து.

        கடவுள் நம்பிக்கைஅற்ற ஆனால் திருக்குறள் காட்டும் மன நலம் கொண்டு வாழுமொருவன் வீடுபேறு அடைய இயலும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

  29. கடவுள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் நான் மன நலம் கொண்டவனாக வாழ விரும்புகிறேன் எனக்கூறுபவர்களுக்கும் உதவும் நூல் திருக்குறள். இப்படி ஒரு அற்புதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழில்; ; ; ஆனால் தமிழர்கள் இந்நூலைக் கண்டுகொள்ளவேயில்லை.அல்லது இதனையும் பஜனை மடத்தில் சேர்த்து விட்டார்கள்.

  30. தங்களுடைய சீதாயணம் ஈ புத்தகமாகப் படித்து முடித்து உள்ளேன். ஆனால் அதனைப்பற்றி உடனடியாகக் கருத்துக் கூறமாட்டேன். எவ்வளவு உழைப்பு தந்திருக்கிறீர்கள்! அதே போன்ற உழைப்பினை நானும் தந்து அதனை நன்றாக நுட்பமாகப் படித்த பிறகு உரைக்கிறேன். அதற்குள் தாங்கள் அனுப்பி உள்ள(?) பிரிண்ட் புத்தகம் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.

  31. 2013/6/11 veeramani k

    திரு. ஜெயபாரதன் அவர்கள்,

    வணக்கம். தங்களது மின்அஞ்சல் கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி!

    துணிச்சலான தங்களது ‘சீதாயணம்’ ஒரு புதிய சிந்தனை. இராமாயணம் நடந்த கதை என்பதை எங்களைப் போன்றவர்களால் ஏற்க முடியாது என்றபோதிலும், தங்களது கருத்து வடிவம், எழுத்து நடை எல்லாம் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்துள்ள நிலையில் இவ்வளவு சிறப்புடன் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

    அந்நூல்பற்றி நான் விரைவில் சென்னை பெரியார் திடலில் வாரந்தோறும் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் விளக்கி உரையாற்றவிருக்கிறேன்.

    நிறைய இதுபோல் சுதந்திர சிந்தனையுடன் எழுதுங்கள்.

    இங்கு வரும்போது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கும் வந்து பாருங்கள்.

    தங்களன்புள்ள,
    கி.வீரமணி

  32. From: veeramani k
    Date: 11 June 2013 16:40
    Subject:
    To: “vannan.1935@gmail.com”

    Dear Thiru K.V. Vannan,

    Vanakkam. Happy to receive your mail along with Mr.S.JayaBarathan.
    It is really very enjoyable to hear from a old friend and that too as an alumni of Annamalai University.

    Please furnish more details about your present position, residence etc.

    We enjoyed JayaBarathan’s ‘Seethayanam’ – a very original, bold thinking. We appreciate it inspite of some of the disagreeable aspects in it.
    Really it is a new approach to the literary world.

    We are to give prominent coverage for the book in ‘Periyar Library reader’s circle’ which is a popular association – an organisation conducting weekly meetings regularly.

    With kind regards,
    Yours fraternally,
    K. Veeramani

    • From: jawahar premalatha
      Date: 2014-04-11 14:20 GMT-04:00
      Subject: Re: Seethayanam Drama Books Sent to you today by Airmail

      To: “சி. ஜெயபாரதன்”

      ​ஸார்​, ​ தங்களின் சீதாயணம் கிடைத்தது.ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். அப்படி ஒரு வேகமான விறுவிறுப்பான நடை. கரை புரண்டோடும் வெள்ளப்பெருக்கினைப்போல் நாடகம் முழுவதும் ஒரே உணர்ச்சிவெள்ளம். அது உண்மையின் வேகம். நியாயத்தைத் தேடிக்​ ​கண்டு​ ​பிடித்துத் தூய்மையைக் கண்டறிந்தவுடன் அதை உலகிற்கு வெளிப்படுத்தி விடத் துடிக்கும் ஆத்மாவின் வேகம்.

      சரியான ஆதாரங்களினடிப்படையில் எங்கும் சறுக்கிவிடாமல் மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு கூடியமிகவும் நேர்மையான பதிவுகள். .

      தாங்கள் சீதாதேவியின் பாத்திரமாகவே மாறி விட்டிருந்தீர்கள். மிகவும் துணிவோடு துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை எல்லாம் நீக்கி விட்டு உண்மைத்தரவுகளை நம்பகத் ​ ​தன்மையோடு வெளியிட்டுள்ளீர்கள்.

      இலக்கிய ஆய்விலும் அறிவியல் அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்துவோம். தாங்கள் அடிப்படையில் விஞ்ஞானியாக அமைந்து விட்டதும், அதுவும் இந்திய பெண்மணிகளில் தலைசிறந்தவளாகக் கருதப்படுகிற பெண்மணியான சீதாதேவியின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் ஆய்வினைப்போல் நடுநிலையோடு நின்று உண்மையை வெளியிட்டுள்ளதும், ஆணாதிக்கப்போக்கினால் சீதாதேவியின் கதை இராமனின் கதையாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதும் பெண்ணிய ஆய்வுகளுக்கு வலிமையைக் கூட்டியுள்ளது. பெண்ணிய ஆய்வில் இந்த நாடகம் ஒரு மைல்கல். பெண்ணியலாளர்கள், புராண இதிகாச மாந்தர்களை இதுபோல் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை இந்த நாடகம் சிறப்பாக உணர்த்தியுள்ளது. பெண் என்பவள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறாள் என்ற கூற்று எவ்வளவு உண்மை. எல்லா வல்லமையும் உடைய பெண், திருமணம் என்ற பெயரால் வலிமையற்று அன்பிற்காக ஏங்கி இறுதிவரை அந்த அன்பு கிடைக்காத சூழலில் மரணத்தைத் தஞ்சமடையும் இழிநிலை இன்னும் தொடர்வதுதான் வேதனையிலும் வேதனை.

      அனுமனை மனிதன்தான் என்று தாங்கள் ஆணித்தரமாகக் கூறி யுள்ள கருத்தும், ​ ​இராமனின் வெற்றுச் சமாதானங்களை ஏற்றுக் ​ ​கொள்ள​ ​முடியாது என்பது போன்ற தெளிவும்,​ ​மனைவியைக் கைவிட்ட இராமனோடு சீதாவையும் இணைத்து ஆதர்ச தம்பதி களாக வணங்கிவரும் பக்களின் பேதமையைத் துகிலுரித்துக் காட்டியிருக்கிற பாங்கும் ​, ​இந்த இராமனுக்கு கோயில் எழுப்புவதற்​ ​காகப் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி, ​ ​அதற்குத் தீர்வும் கூறிச் சென்றுள்ள சமூக அக்கறையும் மிகமிக சிறப்பாக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      ‘அன்பில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே‘ என்ற மாணிக்கவாசகரின் வரிகளில் ஒலிக்கும் அச்சம் சீதாவின் அவலக்குரலிலும் நாடகம் முழுவதும் ஒலித்து கொண்டே யிருக்கிறது.. இந்த உலகில் உள்ள மனிதர்களெல்லாம், வளங்களெல்லாம் பெண்ணின் கொடைகளே. ஆனால் பெண்ணிற்கு எதுவும் சொந்தமில்லை.அவள் வாழ்க்கை கூட அவளுக்குச் சொந்தமில்லை.அவளை மனிதப் ​ ​பிறவியாகக் கூட கருதாத நிலைதான் உள்ளது என்பதை சீதாதேவியின் வாழ்க்கை மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நானும் சீதை தற்கொலைதான் செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணம் கொண்டிருந்தேன். அதை தங்கள் படைப்பில் படித்தபோது வியந்துபோனேன்.

      அன்னை சீதைக்கே அந்நிலையென்றால்…இன்று பெண்ணைக் கருவிலேயே கொன்றுவிடும் மாக்கள் நிறைந்த இந்த உலகில் பெண்களின் நிலை ?

      வால்மீகி, சீதாயணம் என்று தான் பெயர் வைத்து இருப்பார் என்றும், இராமனை சாதாரண ​ ​னாகத்தான் அவர் படைத்திருக்கிறார்,​ ​பின்னால் வந்தவர்கள்தான் இராமனுக்குக் கடவுள் சாயம் பூசி விட்டார்கள் என்ற கசப்பான உண்மையையும் உண்மையான மனிதராக ​ ​(மதம்கடந்து) இருந்து வெளியிட்டுள்ளத் தங்களை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.அட்டைப்​ ​படமும் உள் படங்களும் மிக அருமை. தங்கள் நாடகத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.நல்ல கட்டமைப்பு. கைக்கு அடக்கமான வடிவத்தினால் எளிதில் படிக்க முடிந்தது.வடிவத்தில் சிறியது என்பதினால் குறளை குறைத்து எடைபோட்டுவிட முடியுமா? அதுபோல்தான் .சீதாயணமும்.

      தாங்கள் தொலைதூரத்திலிருந்து பிரதிகளை சிரமம் பாராமல் அனுப்பி வைத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை். 2 பிரதிகளை நாளை துறை நூலகத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்.

      என்றும் அன்புடன்
      ஜ.பிரேமலதா

      Dr.J.Premalatha,
      Tamil Professor,
      Govt.Arts College,
      Salem-7.
      9488417411

    • http://www.vallamai.com/?p=29618.

      நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)
      Wednesday, December 12, 2012, 4:51Featured, இலக்கியம்2 comments
      முனைவர். தேமொழி

      முனைவர். தேமொழி
      எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
      கலிஃபோர்னியா, அமெரிக்கா

      திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

      “சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

      நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகி விட்டது.

      நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

      கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

      இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை.

      அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

      நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

      சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

      “ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

      நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
      பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

      https://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

      சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
      கிடைக்குமிடம்:

      Mr. S. P. Murugesan (Vaiyavan)
      vaiyavan.mspm@google.com
      Editor Innaiyaveli
      Dharini Pathippagam
      1. First Street, Chandra Bagh Avenue,
      Mylapore, Chennai : 600004
      Phone: 99401-20341

      • ஜெயஸ்ரீ ஷங்கர். wrote on 12 December, 2012, 18:59

        அன்பின் முனைவர்.தேமொழி அவர்களுக்கு,

        “சீதாயணம்” என்னும் திரு ஜெயபாரதன் அவர்கள் எழுதிய நாடகத்தை படித்து தங்களின் கருத்துக்களை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்தியதற்கு மகிழ்வடைகிறேன்.

        ஒரு புத்தகம் வெளிவந்து அது படிக்கபெற்றதும் அதை படித்தவர் ரசித்து எழுதிய ”நூலுக்கான மதிப்புரை” தான் அந்த நூலை எழுதிய எழுத்தாளருக்குக் கிடைக்கும் கேடயம். தங்களின் அழகான பதிப்புரை அதற்குச் சான்றாக உள்ளது.

        பெண்களின் சார்பாக “சீதாயணத்தின்” சாரத்தை மதிப்புரையைப் படித்ததும்..தாங்கள் அதைப் படைத்த விதம் கண்டு பாராட்டுகிறேன்.

        அழகான ஒரு சீதாயணக் காவியத்தைப் ஒரு பெண்ணின் மனநிலையைக் கொண்டு படைத்து காலங்காலமாகப் பெண்ணின் நிலையை உணர்த்தி இனிமேலாவது இது போன்ற நிலைமை மாற வேண்டும் என்னும் எதிர்பார்போடு பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் எழுதப்
        பட்ட நாடகம் எனலாம்.

        திரு.ஜெயபாரதன் அவர்களின் அறிவியல் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்களுக்கு நடுவில் ரத்தினம் போன்ற படைப்பாக “சீதாயணம்” திகழ்கிறது.

        ”சீதாயணம்” புத்தகம் என்னிடமும் இருப்பதால் படிக்க விருப்பம் இருப்பவர்கள் புத்தகம் வேண்டுமென்றால் என்னிடமும் தெரிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைக்க சித்தமாக இருக்கிறேன்.

        சீதாயண புத்தகத்தைப் பற்றிய விளக்கங்களோடு தங்களின் கருத்துக்களை ஆசிரியரைப் பாராட்டி வல்லமையில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

        அன்புடன்
        ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.

  33. Pingback: சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13 | திண்ணைEdit
  34. Pingback: சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14 | திண்ணைEdit
  35. Pingback:  | திண்ணைEdit
  36. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​6​ | திண்ணைEdit
  37. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 17 | திண்ணைEdit
  38. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 18 | திண்ணைEdit
  39. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​ | திண்ணைEdit
  40. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – ​20​ | திண்ணைEdit
  41. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 22 | திண்ணைEdit
  42. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​ | திண்ணைEdit
  43. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை –  | திண்ணைEdit
  44. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​ | திண்ணைEdit
  45. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6 | திண்ணைEdit
  46. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 27  | திண்ணைEdit
  47. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 28​ | திண்ணைEdit
  48. Pingback: சீதாயணம் நாடகப் படக்கதை – 29​ | திண்ணைEdit
  49. Pingback: சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு | திண்ணைEdit
    • சீதாயணம் முழுநாடகத்தை புத்தகமாகவே வாங்கி படித்து இப்போது மறந்தும் விட்டது. ஆனால் ராமன் சீதையின் கணவன் என்பதை விட நாட்டின் அரசன் அந்த நோக்கில் கோடானுகோடி மக்களின் நலனுக்குப் பொருப்பானவன். ஆகியால் நாடா சீதையா என்று பார்த்தால் நாடுதான் என்று அவன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் அவன் சீதைக்கு அநீதி இழைக்க நேரிடுகிறது என்பது தங்களுடைய நூலைப்படித்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்.

      தங்கள் உண்மையுள்ள

      அர.வெங்கடாசலம்

  50. 2015-01-12 10:44 GMT-05:00 shylaja :

    சீதையை நாடு கடத்தலில் ஆரம்பித்து அழகான நாடகமாகக் கொண்டுபோய் வால்மிகி சீதா பேசுவதை நல்ல உரையாடல்களில் கொண்டுவந்த விதமும் சீதையின் பிடிவாதமும் அருமையாக செதுக்கபட்ட வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். சீதையின் வார்த்தைகளின் அழுத்தமும் ஆழமும் நெகிழ்வாக உள்ளன. பல கதா பாத்திரங்கள் வாயிலாக வசனங்கள் செறிவு.

    புரட்சிகரமான முடிவுதான் ..சீதாயணம் எனக்குப்​ ​பிடித்திருக்கிறது..
    பா​ராட்டுக்கள் ஜேபி சார்.

நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

கார்ல் சேகன்

(1934-1996)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

“பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்”

“ஒன்று இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை என்றால், அது இல்லை என்பதற்குச் சான்றாகாது.”

“நீ மூலப் பண்டங்களிலிருந்து ஓர் ஆப்பத்தைத் தயாரிக்க விரும்பினால், முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் படவேண்டும்.”

கார்ல் சேகன்

http://www.bing.com/videos/search?q=carl+sagan&FORM=HDRSC3

++++++++++++++++

Carl Sagan -10

 

விண்வெளி ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி

1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics] மாணவர், அமெரிக்கா 1970 ஆம் ஆண்டுக்குள் சந்திர மண்டலத்தில் இறங்கி விடும் என்று சித்தாந்த ஞானிபோல் முன்னறிவித்தார்! அவ்வாக்கு மொழி மெய்யாக நிகழ்ந்தது! அதைக் கூறிய தீர்க்க தரிசி வேறு யாரு மில்லை! அவர்தான் வானியல் மேதை டாக்டர் கார்ல் சேகன்!

அமெரிக்காவின் ஐநூறு ஆண்டு வரலாற்றில், விஞ்ஞானத்தைக் கற்றுப் பட்டமேதை ஆகி, அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்து, கோடான கோடி மைல்களுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி நகர்ந்து செல்லும் பிற அண்டங்களில் பூமியைப் போல், வேறு உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி செய்யப் புகுந்தவர்களில் முதல் விஞ்ஞானி கார்ல் சேகர்! பொது நபர்கள் எளிதில் புரியும்படி, விஞ்ஞானக் கருத்துக்களைப் புத்தகங்கள் மூலம், கட்டுரைகள் வாயிலாய், சொற்பொழிவுகள் நிகழ்த்தி அமெரிக்காவில் புகழ் பெற்றவர், கார்ல் சேகன்! கசப்பான விஞ்ஞானப் படைப்புகளை, இனிப்பான நிகழ்ச்சிகளாய் இதிகாசக் கதைகள் மூலம் எளிதாக விளக்கிக் கேட்போரைக் கவர்ந்தவர், கார்ல் சேகன்!

Mars Exploration

கார்ல் சேகன் வானியல் [Astronomy] விஞ்ஞானத்தின் பல கிளைகளில் பயிற்சி பெற்ற அறிவாளி. பிரபஞ்சவியல் [Cosmology] விஞ்ஞானத்தில் பாண்டித்தியம் உடையவர். சித்தாந்த விஞ்ஞானக் கோட்பாடுகளில் [Philosophy of Science] வேட்கை மிகுந்தவர். எல்லாவற்றையும் விட கார்ல் சேகனுக்குப் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலத்தைப் [Origin of Life on Earth] பற்றி ஆழ்ந்து அறியவும், அதேபோல் பிரபஞ்சத்தின் வேறு அண்டங்களிலும் உயிரினங்கள் [Exobiology] இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உறுதியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினார்! அந்த வேட்கையை நிறைவேற்ற நாசாவின் [NASA, National Aeronautics & Space Administration] அண்டவெளிப் படையெடுப்புத் திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுகளில் நேரடியாக ஈடுபட்டார்! 1960-1990 ஆண்டுகளில் அமெரிக்காவின் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking 1, 2], பயனீயர் [Pioneer], வாயேஜர் [Voyager], காலிலியோ [Galileo] ஆகிய மனிதரற்ற விண்வெளிக் கப்பல்களின் [Unmanned Spaceships] பயணங்களில் பங்கெடுத்து வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய அண்ட கோளங்களில் நுண்ணுயிர் ஜந்துக்கள் [Micro-Organisms] உள்ளனவா என்ற சோதனைகளில் கலந்திருக்கிறார்.

வானியல் வல்லுநர் கார்ல் சேகனின் வாழ்க்கை வரலாறு

‘பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடிப்பதின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும் ‘, என்று ஒரு சொற்பொழிவில் கார்ல் சேகன் கூறி யிருக்கிறார்!

1934 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள், கார்ல் சேகன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புலம் பெயர்ந்த ஓர் யூத குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் சாமுவெல் சேகன் [Samuel Sagan] மெலிந்த உருவம், சிறப்பு அம்சம் எதுவும் அற்ற உருவம், செந்நிறத் தலைமயிர் மட்டும் பளிச்செனத் தெரியும் தோற்றம்! தாயார் ரேச்சல் குரூபர் சேகன் [Rachel Gruber Sagan] எடுப்பான தோற்றம், மிடுக்கான சொல்லாட்சி கொண்டவள். பூர்வீகத் தாய்வழிப் பாட்டனார், லைப் குரூபர் [Leib Gruber] ஐரோப்பாவில் ஆஸ்டிரிய ஹங்கேரி இனத்தவர்! அவர் பிறந்த இடம் யுக்ரேயினில் உள்ள கலிஸியா [Galicia in Ukraine]. ஹீஃப்ரூ மொழியில் ‘சேகன் ‘ என்றால் ‘தளபதி ‘ என்று அர்த்தம்!

தந்தையார் சாமுவெல் சேகன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயின்று மருந்தியல் பட்டம் [Pharmacy Degree] பெற்றவர். மகனைச் சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் பெற்றோர்கள் வளர்த்தார்கள். மன்ஹாட்டனில் இயற்கை வரலாறு பொருட் காட்சி மாளிகை [Museum of Natural History], ஹேடன் விண்வெளிக் கோள மாளிகை [Hayden Planetarium] ஆகியவற்றுக்கு மகனை அழைத்துச் செல்வார்கள். காரிருள் வானில் கண்சிமிட்டும் விண்மீன்கள் கார்ல் சேகனுக்குப் புதிராகக் காட்சி அளித்தன! ‘செவ்வாயின் பணிமாது ‘ [Maid of Mars], ‘செவ்வாய்ச் சதுரங்கன் ‘ [Chessman of Mars], ‘செவ்வாய் யுத்தப் பிரபுக்கள் ‘ [The Warlords of Mars], போன்ற விஞ்ஞானப் புதினங்களைச் சிறுவன் சேகன் படித்தான்! 1940 இல் ஆறு வயதுச் சிறுவன் வால்ட் டிஸ்னியின் ஃபென்டாஸியா [Fantasia] திரைப் படத்தில் பூர்வீக விலங்கினங்களைக் [Prehistoric Animals] கண்டு பூரித்துப் போனான்! தனியார் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக கிரேக்க ரோமானிய இதிகாசங்களை எடுத்துப் படித்தான்! பனிரெண்டு வயதில் பறக்கும் தட்டுகளைப் [Flying Saucers] பற்றிக் கேள்விப் பட்டு, அவை பிற அண்டங்களி லிருந்து பூமிக்கு வருகின்றன என்று உறுதியாக நம்பினான்!

Fig 4 Earth &amp; Mars

புகழ் பெற்ற எழுத்தாளர், ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] எழுதிய ‘விண்வெளி அண்டங்களுக் கிடையே பயணம் ‘ [Interplanetary Flight] என்னும் நூலைப் படித்த பிறகு கார்ல் சேகனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது! அதைத் தொடர்ந்து அண்டவெளி விஞ்ஞான மேதைகளான ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamov], பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆர்தர் எட்டிங்டன் [Arthur Eddington], உயிரியல் விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி [Julian Huxley] ஆகியோரின் நூல்களில் ஈடுபாடு கொண்டார்!

அமெரிக்க வானியல் விஞ்ஞானி சைமன் நியூகோம் [Simon Newcomb] எழுதிய ‘எல்லோருக்கும் வானியல் விஞ்ஞானம் ‘ [Astronomy for Everybody] என்னும் புத்தகத்தில், ‘செவ்வாய் மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதுபோல் தோன்றுகிறது! அச்செய்தி ஒரு காலத்தில் மெய்யானதா என்று கேட்கப் பட்டது! இப்போது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டச் செய்தி, அது! ‘ என்று எழுதி யிருந்தது! அவ்வாசகம் கார்ல் சேகன் அண்ட கோளங்களில் உயிரினங்கள் வாழலாம் என்ற கருத்தை மேலும் வலியுறுத்தியது!

Fig 5 Chandrasekar &amp; Kuiper

உயர்நிலைப் படிப்பை முடித்த கார்ல் சேகன், மேற்படிப்புக்குச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு பெளதிகப் பேராசிரியராக இருந்த விஞ்ஞான மேதைகள், நோபெல் பரிசு பெற்ற என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], சுப்ரமணியன் சந்திரசேகர் [S. Chandrasekhar], மற்றும் எட்வெர்டு டெல்லர் [E. Teller], ஜெரால்டு குயிபர் [Gerald Kuiper]! கார்ல் சேகனின் முதல் பெளதிகக் குரு வானியல் வல்லுநர், சந்திரசேகர்! கணிதத்தில் வலுவற்ற கார்ல் சேகன், கணிதப் புலியான சந்திரசேகரை எதிரே சந்திக்க விரும்பாது, சுற்றி போய்விடுவார் என்று அறியப் படுகிறது! 1955 இல் கார்ல் சேகன் பெளதிகத்தில் B.A. பட்டம் பெற்றார். பிறகு வானியல், விண்வெளிப் பெளதிகம் [Astronomy, Astrophysics] இரண்டையும் பயின்று, ‘அண்ட கோளங்களின் பெளதிக ஆய்வுகள் ‘ [Physical Studies of Planets] என்னும் கோட்பாடை எழுதி 1960 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். அந்தக் கோட்பாட்டில் முதன் முதலாகக் கார்ல் சேகன் ‘சுக்கிரனில் கண்ணாடி அறை விளைவு ‘ [Greenhouse Effect on Venus] என்னும் தலைப்பில் அங்கே உள்ள அடர்த்தியான வாயுக்கோளச் சூழ்மண்டலத்தில் சுற்றிச் சுற்றி நிகழும் கொதிப்பு வெப்பத்தைப் பற்றி எழுதிள்ளார்!

Fig 6 Three Professors

1960-1962 ஆண்டுகளில் கார்ல் சேகன் பெர்கெலி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் [University of California, Berkeley] ஆராய்ச்சி நபராகப் [Research Fellow] புகுந்தார். அடுத்து ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் 1962-1968 ஆண்டுகளில் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, சுமித்ஸோனியன் வானியல் பெளதிக ஆய்வுக் கூடத்தில் [Smithsonian Astrophysical Laboratory] ஆராய்ச்சிகளும் செய்தார். 1968 இல் கார்ல் சேகன் நியூ யார்க் சென்று இதாகாவில் கார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University, Ithaca], விண்வெளிக் கோள ஆய்வுக் கூடத்தின் ஆணையாளராகப் [Director, Laboratory for Planetary Studies] பதவி ஏற்றார். 1970 இல் விண்வெளி விஞ்ஞானம், வானியல் துறைகளுக்குக் கார்நெல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆகிக் காலமாகும் வரை [1996] அப்பதவியில் அங்கே இருந்தார்.

Clipboard02

கல்லூரியில் அவர் படித்த காலத்தில் கார்ல் சேகனைக் கவர்ந்த விஞ்ஞான மேதைகள், அணுவைப் பற்றி விளக்கிய கிரேக்க ஞானி டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C)], சூரிய குடும்பக் கோளங்களின் நகர்ச்சி நியதிகளை ஆக்கிய ஜெர்மன் விஞ்ஞானி, ஜொஹானஸ் கெப்பளர் [Johannes Kepler (1571-1630)], அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்களைக் கண்டு பிடித்த ஆங்கில விஞ்ஞானி, ஐஸக் நியூட்டன் [Isaac Newton (1642-1727)], பூமியில் உயிரினங்களின் தோற்ற மூல வளர்ச்சியைத் தொகுத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் [Charles Darwin (1809-1882)], ஒப்பியல் நியதியைப் படைத்த ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein (1879-1955)] ஆகியோர்.

Fig 7 Jet Propulsion Laboratory

அண்டங்களில் உயிரினங்கள் தோன்றலாம் என்பதற்கு ஆதரங்கள்

வானியல் [Astronomy] இதுவரைத் தூய விஞ்ஞானமாகப் பெளதிகம், ரசாயனம் என்னும் இரு பிரிவுகளாய் மட்டுமே வளர்ந்து வந்தது. இத் தூய விஞ்ஞானத்தில் வெறும் யூகிப்புக் கோட்பாடுகளை விளக்கும் மனிதவியல் துறையை [Anthropology] முதன் முதலில் இணைத்தவர், கார்ல் சேகன்! மனிதவியல் துறை பூமியின் மூலத்தோற்றம், உயிரினங்களின் எழுச்சி, அவற்றின் வளர்ச்சிக்காக அமைந்த சூழ்மண்டலம் ஆகியவற்றை ஆராய்கிறது! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் [Astronomy], உயிரினங்களின் மூல வளர்ச்சியான பரிணாமம் [Evolution], உயிரியல் [Biology], சூழ்நிலை [Environment] ஆகிய முப்பெரும் துறைகளை ஒருங்கிணைத்து, அண்டவெளி ஆய்வுக் கப்பல்களின் பயணத்தில் பங்கேற்றுச் சோதனை செய்தவர் கார்ல் சேகன்!

Our Earth

அவர் கல்லூரியில் பயிலும் போது, அவரது உயிரியல் மூலச் சிந்தனைக் கிளரி விட்ட விஞ்ஞான மேதைகள், ஹெர்மன் முல்லர் [Hermann Muller], ஹெரால்டு யுரே [Herold Urey], ஜோஸுவா லெடெர்பர்க் [Joshua Lederberg] ஆகியோடுடன் ஆராய்ச்சி செய்து பயிற்சி பெற்றார். மூவரும் நோபெல் பரிசு பெற்றவர்கள்! மூவரும் விண்வெளி அண்டங்களில் உயிரின வாழ்வில் [Extra Terrestrial Life] நம்பிக்கை உள்ளவர்கள். கார்ல் சேகனின் குருவான ஹெர்மன் முல்லர் 1926 இல், ‘கதிர்வீச்சுகள் [Radiations] உயிரின மூலவிகளைத் துண்டித்து [Gene Mutation], உயிரினத் தோற்ற பரிணாமத்திற்கு [Evolution] அடிப்படைக் காரணமாகின்றன ‘ என்று முதலில் அறிவித்தார்! அடுத்து பிரிட்டிஷ் உயிர் மூலவி விஞ்ஞானி ஜான் ஹால்டேன் [Genetist, John Haldane], ரஷ்ய உயிரியல் ரசாயன விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஓபரின் [Alexander Oparin] இருவரும், ‘புறவூதா ஒளி [Ultraviolet Light], மின்னல், பூமியின் ஏனைய சக்தி மூலங்கள் [Sources of Energy] எளிய ரசாயன மூலக்கூட்டுகளை [Simple Compounds] சிக்கலான ஆர்கானிக் மூலக்கூட்டுகளாக [Complex Organic Compounds] மாற்றுகின்றன ‘, என்று கண்டு பிடித்தார்கள்!

Fig 8 Mariner Space Probe

நாசா அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்த கார்ல் சேகன்.

1960 ஆம் ஆண்டில் டாக்டர் கார்ல் சேகன் சந்திரனில் இறங்கும் அபொல்லோ [Lunar Landing, Apollo] திட்டத்திற்கும், சுடர் ஒளி வீசும் சுக்கிர கோளை ஆய்வு செய்யும் மாரினர் [Venus Probe, Mariner] திட்டத்திற்கும் பணி செய்ய அழைக்கப் பட்டார். கார்ல் சேகன் கலிஃபோர்னியா பொறியியல் கூடத்தின் [California Institute of Technology] ஜெட் உந்தப்படும் ஆய்வுச்சாலைக்கு [Jet Propulsion Laboratory] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானி. 1961 இல் கார்ல் சேகனும், வில்லியம் கெல்லாக் [William Kellogg] இருவரும் ‘செவ்வாய், வெள்ளி அண்டங்களின் சூழ்வெளி ‘ [The Atmosphere of Mars & Venus] என்னும் வெளியீட்டின் தொகுப்பாளர் ஆகப் பணி செய்கையில், அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டது: ‘இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு முழுமையாகப் பார்த்தால் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதாக யூகிக்கலாம்! அதற்கு முதற் தேவை ஈரம், நீர் ஆவி [Moisture, Water Vapour] போன்றவை. ஒரு காலத்தில் செவ்வாய்த் தளம்மீது நீர் இருந்திருக்கலாம். நமக்குத் தெரிந்த குன்றிய அளவு சான்றில் நாம் அறிவது, நுண்ணிய ஜந்துகள் [Micro-Organisms] அங்கே இருக்கலாம் என்பதே! பெரும் ஜந்துக்கள், மாபெரும் விலங்கினங்கள் அங்கே உள்ளன என்பதற்கு ஆதரமோ அன்றி எதிர்ப்போ எதுவும் இல்லை! செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற பண்டை காலத்திய கேள்விக்குப் பதில் கிடைப்பது, அடுத்த பத்தாண்டுகளில்தான்! ‘

Fig 9 Viking Mission to Mars

அமெரிக்கா மனிதரற்ற அண்டவெளிக் கப்பல்களை சூரிய மண்டலத்தின் உட்கோள்களான வெள்ளி, செவ்வாய், புதன் ஆகியவற்றை முதலில் ஆராய மாரினர் [Mariner], வைக்கிங் [Viking], பயனீயர் [Pioneer] போன்ற விண்வெளி ஆய்வுச் சிமிழ்களை 1970-1980 ஆண்டுகளில் தொடர்ந்து ஏவியது. கார்ல் சேகன் தனது Ph.D. கோட்பாடிலே, வெள்ளி அண்டமானது ஓர் கண்ணாடி இல்லம்போல் [Greenhouse Effect] பரிதியின் வெப்பத்தை உள்ளே சுற்றிச் சுற்றிக் கொப்பரை போல் [Boiler] கொதிக்கும் நரக கோளமாக [Hellish Planet] மாறி, எந்த வித உயிரினமும் தோன்றாதவாறு ஆகிவிட்டது என்று 1960 ஆம் ஆண்டிலே முடிவு செய்தவர்! ஆனால் செவ்வாய்க் கோளம் கொதிகலமாக இல்லாது, குளிர்ந்து அதன் மத்திய ரேகைப் பகுதிகளில் பகலில் [20 C/70 F] வெப்பமும், இரவில் [-100 C/-150 F] குளிர்ச்சியும் உள்ளதால், உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது, என்று அவரது அந்தராத்மா பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தது!

Carl Sagan with Voyager -2

1960-1970 ஆண்டுகளின் இறுதிக் காலங்களில் கார்ல் சேகன், செவ்வாய்க் கோளின் பச்சைப் பழுப்புக் கால நிற மாறுதல்கள், உயிரினங்கள் உள்ளதையோ அல்லது தாவர வளர்ச்சி இருப்பதையோ காட்டவில்லை என்றார்! செவ்வாய்க் கோளில் தெரியும் பழுப்புக் கறுப்பு நிறங்கள் அதன் மலைப் பிரதேசங்களைக் காட்டுகின்றன. கடும் புயல் காற்றுகள் அடிப்பதால், செவ்வாய்த் தளத்தின் தூசிகள் இங்கும் அங்கும் பரவிப் பள்ளங்களை நிரப்பி, நிறம் மாறுவது போல் தெரிகிறது என்று விளக்கினார்! மாரினர்-9 செவ்வாய்க் கோளை 1971 இல் சுற்றிய போது, கார்ல் சேகனின் கூற்று மெய்யாக நிரூபிக்கப் பட்டது. 1965 இல் முதலில் சுற்றிய மாரினர்-4, பின்னால் சென்ற மாரினர்-6,7 ஆகியவைச் செவ்வாய்க் கோளின் தள விபரங்களை விளக்கமாகக் காண முடியவில்லை!

Fig 10 Sagan with Viking Lander Model

சந்திரனில் தோன்றுவது போல் மாபெரும் தடக் குழிகளைப் [Impact Craters] படம் எடுத்தனுப்பின! செவ்வாய் சூழ்மண்டலத்தில் வெறும் கரிவாயு [Carbon Dioxide] நலிந்த அளவில் நூறில் ஒரு பங்கு பூவாயு அழுத்தத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தன! 1971 இல் செவ்வாய்க் கோளை ஏறக்குறைய ஓராண்டு காலம் சுற்றிய மாரினர்-9 நிறைய விபரங்களை அனுப்பியது. 400 மைல் அகண்ட, 15 மைல் உயர்ந்த, சூரிய குடும்பத்திலே பெரிய ஓர் எரிமலையைக் கண்டது! அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிந்து, ஆறுகளாய் கக்கிய எரிமலைக் குழம்பு [Lava] நிரம்பிய 950 மைல் அகண்ட தடக் குழியைக் கண்டது! 2800 மைல் நீண்ட பள்ளத்தாக்கைக் [Valley] கண்டது!

முக்கியமான காட்சி, கண்டு பிடிப்பு இதுதான், செவ்வாயில் வற்றிக் காய்ந்து போன நதிகள் நெளிந்து நாட்டியம் ஆடிய பாதங்களின் தடங்கள்! செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் ஆறுகள் ஓடிக் காலநிலை வேறுபட்டால் காய்ந்து கருகிப் போனக் கதையைச் சொல்லும் காலச் சுவடுகள்! ஒரு காலத்தில் எரிமலைப் பொழிவுகளில் பலவித வாயுக்களும், நீராவியும் எழுந்து, செவ்வாய் மண்டலச் சூழ்நிலை அடர்த்தியாகி, தட்ப வெப்ப நிலைகள், காற்றழுத்தம் சீராக அமைந்து, அளவற்ற நீராறுகள் ஓடிக் கடலாகியதை, யூகித்துக் கொள்ள உதவியது அக் கண்டு பிடிப்பு! ஆனால் அக்கடல் நீரைச் செவ்வாய்ப் பாலை நிலம் உரிஞ்சிக் குடித்திருக்கலாம்! அல்லது செவ்வாயில் அடர்ந்த வாயுச் சூழகம் மெலிந்து, அதன் நலிந்த ஈர்ப்பியல் சக்தியால் கவர்ந்து வைத்துக் கொள்ள இயலாது, பரிதியின் வெப்பாத்தால் ஆவியான நீர், பறந்து அண்ட வெளியில் மறைந்து போயிருக்கலாம்! அதன் பின் கால ஓட்டத்தில், துருவங்களில் சிக்கிய நீரும், கரிவாயும் [CO2] குளிர்ந்து தணிக்கட்டியாக [Dry Ice] [பனிக்கட்டி], உறைந்து பாறையாகி இறுகி விட்டது! ஆனால் உயிரினங்கள் தோன்றி யதற்குச் சான்று எதுவும் கிடைக்க வில்லை! நீர்த் திரவம் ஓடியதற்கு உள்ள சான்றுகளை வைத்து, உயிர் ஜந்துக்கள் செவ்வாயில் இருந்திருக்கலாம் என்று நம்பிக்கை கொண்டாலும், விந்தையான செவ்வாய் மனிதர்களோ, அல்லது செவ்வாய் விலங்குகளோ அங்கே காணப்பட வில்லை! அவற்றைக் கண்டு பிடிக்க செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஆய்வுகள் செய்ய வைக்கிங்-1, வைக்கிங்-2 இரண்டு ஆய்வுச் சிமிழ்கள் 1975 இல் பின்னால் அனுப்பப் பட்டன!

Fig 11 Viking Space Probe Details

இரட்டை வைக்கிங் திட்டம் அரை டிரில்லியன் [Half Trillion] டாலர் செலவில் செவ்வாய்க் கோளில் போய் இறங்க உருவானது. நூற்றுக் கணக்கான விஞ்ஞானப், பொறியியல் துறைஞர்களில் கார்ல் சேகன் ஒருவர்! அவரது விஞ்ஞானக் குரு நோபெல் பரிசு பெற்ற ஹெரால்டு யுரே, ஜோஸுவா லெடெர்பெர்க் இருவரும் அதில் பணி செய்தனர். கார்ல் சேகன் வைக்கிங்-1, வைக்கிங்-2 விண்ணாய்வுச் சிமிழ்கள் [Viking-1, Viking-2 Space Probes], செவ்வாய்த் தளத்தில் போய் இறங்கும் இடங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்தார். அவை இரண்டும் செவ்வாயில் 1976 இல் இறங்கிக் கண்டவை என்ன ? செவ்வாய்க் கோள் பெரும் குழிகளும், ஆறிப் போன எரிமலைகளும் இடைப்பட்டு பாறைகள் நிறைந்த ஒரு பாலைப் புழுதி நிலம்! அவற்றின் மேல் பழுப்பு நிறத்தில் தூசிகள் மண்டிய வானம்! இரும்பு வாயுவில் உள்ள ஆக்ஸிஜனோடு கலந்து செந்நிற ஆக்ஸைடாகி, அங்கெங்கு எனாதபடி எங்கும் சிவப்பு நிறம்! வைக்கிங் கொண்டு சென்ற உயிரியல் ஆய்வுக்கூடம் [Biology Laboratory], செவ்வாய் மண்ணைத் தோண்டி, அதில் எந்த வித நுண்ணுயிர் ஜந்தும் [Micro organism] தோன்றுமா என்று மூன்று வித முறைகளில் ஆய்ந்தது! விளைவு தோல்வியே! அடுத்த சோதனை, செவ்வாயில் செத்துப் போன ஜந்துக்கள் அல்லது உயிரோடுள்ள ஜந்துக்கள் ஆகியவற்றின் ரசாயனச் சான்றாக, அவ்வுடம்புகளின் மூலக்கூறுகளை [Molecules of Organisms, Alive or Dead] மண்ணில் ஆய்வு செய்தது! அதன் விளைவும் எதிர்மறையே! அந்த ஆராய்ச்சிகளைத் திட்ட மிட்டவர் கார் சேகன்! அம்முயற்சிகளில் தோல்வி யுற்றாலும் முயற்சி செய்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தார், கார்ல் சேகன்!

Lecture

செவ்வாய் மண்டலத்தில் வாயு மண்டல அழுத்தம் மிக மெலிந்தது! ஊடுறுவும் பரிதியின் கடும் புறவூதாக் கதிர்வீச்சு [Ultraviolet Radiation] மரணம் விளைவிக்கக் கூடிய அளவு வீரிய முள்ளது! பல விதத் தோற்றத்தில் சந்திரனை ஒத்த செவ்வாய்க் கோளில் கால்வைக்கும் எதிர்கால மனிதர், அடித்தளத்திற்குக் கீழேதான் வாழ வேண்டிய திருக்கும்! கதிர்வீச்சுத் தாக்குதல், விண்கற்களின் வீழ்ச்சி, 200 மைல் வேகத்தில் அடிக்கும் தூசிப் புயல் ஆகியவற்ற லிருந்து மனிதன் தப்பிப் பிழைக்க வேண்டு மென்றால் அதைத் தவிர வேறு வழி யில்லை!

அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகைமூட்டக்குளிர்ச்சி!

கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்ப்பவர்! 1980 ஆண்டுகளில் ‘அணுக்கருக் குளிர்காலம் ‘ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் பொழிவு ‘ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், கார்ல் சேகன்!

அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்நிலையைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப் படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று ஆரவாரம் செய்தார்!

அணு ஆயுதக் குளிர்காலம் வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார்! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்கால கொள்கையை ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்!

Carl Sagan -7

விஞ்ஞான உலகில் கார்ல் சேகன் பெற்ற வெகுமதிகள்

கார்ல் சேகன் உயிரியல், மனிதவியல், பரிணாமம் ஆகிய விஞ்ஞானத் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகள் செய்தவர். விண்வெளி வரலாற்றை ஆழ்ந்து பயின்று, பூமியின் மூலத் தோற்றம், மனித இனத்தின் ஆரம்ப வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி 600 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளை பிரசுரம் செய்துள்ளார். விஞ்ஞான நூல்கள் இருபதுக்கும் மேற்பட்டுத் தனியாகவோ, அல்லது கூட்டாளியாகவோ அவற்றை இயற்றி யுள்ளார்! அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் உலகின் விண்வெளி வேட்கையாளர் 100,000 நபர்கள் உறுப்பினராய் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக இருந்தார்.

Carl Sagan -3

கார்ல் சேகன், நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியவர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர் 1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தா. அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளிப் பணிப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.

பிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட உலக மக்கள் கண்டு களித்தனர். அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். அவரது நூலான ‘டிராகன்ஸ் ஆஃப் ஈடன் ‘ [Dragons of Eden] 200,000 பிரதிகள் விற்பனையாகி அவரது எழுத்துத் திறமை பாராட்டப் பட்டது! மேலும் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் எழுதிய ‘தொடர்பு ‘ [Contact] என்னும் விஞ்ஞானப் புதினம் திரைப்படமாக 1997 இல் எடுக்கப் பட்டது! 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet], கார்ல் சேகன் தனியாக எழுதிய ‘பிரபஞ்சம் ‘ [Cosmos] இரண்டும் மிகச் சிறந்த விஞ்ஞானப் படைப்புக்கள்.

கடும் நோயில் விஞ்ஞான மேதை கார்ல் சேகன் மரணம்.

விண்வெளி மேதை கார்ல் சேகன் தனது 62 ஆவது வயதில், 1996 டிசம்பர் 20 ஆம் தேதி ஸியாட்டல், வாஷிங்டனில் [Seattle, Washington State] ஹட்சின்ஸன் புற்று நோய் ஆய்வு மருத்துவக் கூடத்தில்[Hutchinson Cancer Research Center] கடும் இரத்த நோயில் இரண்டு ஆண்டுகள் போராடிக் காப்பாற்ற முடியாமல் காலமானார். அங்கே அவருக்கு அவரது அருமைத் தங்கை கேரியின் [Cari Sagan Greene] போன் மாரோ 1995 இல் உடல் மாற்றம் [Bone Morrow Transplant] செய்யப் பட்டது! அவரைத் தாக்கிய நோய் பயங்கர மானது! [A form of Anemia, called Pre-leukemia or Myelodysplasia Syndrome, MDS]. அந் நோயை 1994 இல் கண்டு பிடித்தவுடன், கார்ல் சேகன் ஆறு மாதத்திற்குள் காலமாகி விடுவார் என்று டாக்டர்கள் யாவருக்கும் கவலையை உண்டாக்கினர்!

கார்ல் சேகன் நண்பர்களுக்கு உயிர் நண்பர். அவருடன் வைக்கிங் விண்வெளிப் பணியில் கூட்டுழைத்த பூவியல் நிபுணர் உல்ஃப் விஷ்னியாக் [Geologist, Wolf Vishniac] திட்டப் பணிக்காக தென் துருவ அண்டார்டிக்காவுக்குச் சென்று ஆராய்ச்சியின் போது 500 அடிப் பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தார்! துக்கம் தாங்காமல், அவரது நினைவாக வைக்கிங் திட்டத்தின் போது, ‘விஷ்னியாக் ‘ பெயரை செவ்வாய்த் தளத்தின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக வைத்தார்!

கார்ல் சேகன் மரணத்தைப் பற்றி கார்நெல் பல்கலைக் கழக வானியல் துறையின் அதிபதி ஏர்வந்த் டெர்ஸியன் [Yervant Terzian] கூறியது:- ‘இருளில் ஏற்றி வைத்த ஓர் எரியும் மெழுகு வர்த்தி, கார்ல் சேகன்! பலரது மனதைத் தொட்டுத் ‘தான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம் ‘ என்று விஞ்ஞான உலகில் பலருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்! பல்துறை வல்லுநரான கார்ல் சேகன், பாரில் பல இனத்தவரைக் கவர்ந்து பலருக்கு நண்பர் ஆனார்! நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்பு, அதனைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது, பலருக்குப் புகட்டி அவரது கண்களைத் திறப்பது இவைதான் கார்ல் சேகனின் சிறப்புக் குணப் பாடுகள்! அவரது அகால மரணம் கார்நெல் பல்கலைக் கழக நண்பர்களுக்கும், உலக நபர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பெரும் இழப்பாகும்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விட்டுச் சென்ற அவரது அன்பு மனைவி ஆன் டுருயன், அவரது அருமைத் தங்கை கேரி கிரீன், ஐந்து பிள்ளைகள், ஒரு பேரப் பிள்ளை ஆகியோரின் இழப்புக்கு இணையாகச் சொல்லத் தமிழில் எந்தச் சொற்களும் இல்லை! பூமியைச் சுற்றிவரும் பெரும் விண்கல் [Astroid] ஒன்றுக்குச் ‘சேகன் ‘ என்று பெயரிடப் பட்டுள்ளது!

 

 

 

ஆதாரங்கள்:-

1. Carl Sagan By: William Poundstone [1999]

2. Cosmos By: Carl Sagan [1980]

3. Comets By: Carl Sagan & Ann Druyan Sagan [1985]

4. Planet Guides ‘Mars ‘ By: Duncan Brewer [1993]

5. Frontiers of Science By: National Geographic Society [1982]

6. Book of the Universe By: Ian Ridpath [1991]

7.  http://www.brainyquote.com/quotes/authors/c/carl_sagan.html  [Carl Sagan Quotations]

8. http://news.nationalgeographic.com/news/2014/03/140316-carl-sagan-science-galaxies-space/ %5BMarch 17, 2014]

9.  https://en.wikipedia.org/wiki/Cosmos:_A_Personal_Voyage  [December 7, 2015]

10.  Carl Sagan Wikipedia (http://en.wikipedia.org/wiki/Carl_Sagan)  (January 13, 2016)

************

jayabarathans@gmail.com

S. Jayabarathan (https://jayabarathan.wordpress.com/)  [January 13, 2016]

 

பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.

 

Fig 1A The Biig Bang Theory

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM

https://youtu.be/dLG0-tmimsc

https://youtu.be/VOz4PkdY7aA

https://youtu.be/ofI03X9hAJI

https://youtu.be/4eKIjkk0NVY

https://youtu.be/g-MT4mIyqc0

++++++++++++++++

ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

ஒற்றைத்திண்மை அல்லது ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும்.  மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு  ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.  உள் விரிவுக் கோட்பாடு [Inflation Theory] சரியே என்று பிளாங்க் முடிவு செய்தாலும், உள் விரிவு எப்படி நேர்ந்திருக்கும் என்னும் வினா எழுகிறது.

நியாயேஷ் ஆஃப்ஷோர்டி [Niayesh Afshordi, Astrophysicist, Premeter Institute for Theoretical Physics, Waterloo, Ontario, Canada]

புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான சித்தாந்தங்களை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு யூகிப்பே

2016 ஆண்டு ஆரம்பத்தில் “பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு” விடை கொடுத்து விடலாம் என்று சில பௌதிக விஞ்ஞானிகள் கூறுகிறார். பிரபஞ்சவியல் நிபுணர் [Cosmologists], நாற்புறப் பரிமாண விண்மீன் [Four-Dimensional Star] சிதைவாகிக் கருந்துளைக்குள் விழுந்து சிதறிய எச்சங்களிலிருந்து, நமது பிரபஞ்சம் உருவானது என்று இப்போது ஒரு புதியதோர் கோட்பாட்டை அறிவித்துள்ளார்.  இந்தப் புதுக் கோட்பாடு, ஏன் பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் சமநிலையில் [Uniform State] காணப் படுகிறது என்பதற்கு விளக்கம் தருகிறது.

பெரு வெடிப்பு நேர்ச்சி மாடல் “ஒற்றைத்திண்மை, அல்லது ஒற்றைத்திணிவு ” [Singularity] எனப்படும் எல்லையற்ற திணிவு நிலைப் புள்ளி [Infinitely Dense Point] வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது எனக் கூறுகிறது. ஆனால் இந்த வெடிப்பு எப்படித் தூண்டப் பட்டது என்று யாரும் விளக்கம் தரவில்லை.  நமக்குத் தெரிந்த பௌதிக விதிகளும் [Laws of Physics] அந்த வினாடியில் என்ன நேர்ந்தது என்று கூற இயலவில்லை. மேலும் எப்படிக் கொந்தளிப்பான பெரு வெடிப்பில் முழுமையான சமநிலை உஷ்ணத்துடன் பிரபஞ்சம் நிலை பெற்றது என்று விளக்குவதும் மிகச் சிரமமானது.  காரணம் நிரந்தர உஷ்ண நிலை பரவிடப் போதுமான தருணம் இருக்கவில்லை.

வாடர்லூ கல்விக் கூடத்தைச் சேர்ந்த கனேடியன் வானியல் பௌதிக விஞ்ஞானி நியாயேஷ் ஆஃப்ஷோர்டி கூறுவது இதுதான்:  நமது பிரபஞ்சம், உயர் பரிமாண பொதிப்பளு அடங்கிய ஒரு சவ்வு [A Brane contained within A Higher-Dimensional Bulk Universe] என்பதே.

Bye Bye to Big Bang Theory

பிரமஞ்சத்தின் மூலத் தோற்றத்துக்குப் பெரு வெடிப்புக் கோட்பாடு 

பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்!  அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்!  பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background  Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால  அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும்  வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தி யில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத்  தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein  Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.

The Big Bang was Mirage

அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்!  உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர்.  பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட  பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலைக் கதிர்வீச்சு [Residual Microwave Radiation]  இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப் படுத்தினர்!

பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை’ [Big Bang  Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள்  முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத்’ தற்போது பெரும்பான்மை யான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த  ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George  Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம்  தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின்  ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ்  அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி  செய்தார்.

அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு  செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான்,  நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு  வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி  இருக்க வேண்டும் என்று முன்னறி வித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக்  கதிர்வீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டிருந்தது!

பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Force], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum  Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும்  மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்!  பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றிப் பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி  மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டிஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்!  பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும்  இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித் திருக்கலாம்! ஆகவே  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!

பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு  வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று  நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின!

விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை  மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும்  சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ  செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்களுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.

இந்த  மாறுதல் கதிர்வீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல கதிர்வீச்சு’ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல்  அகிலவியல் பின்புல கதிர்வீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல கதிர்வீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி’ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல கதிர்வீச்சு அடர்த்தியை [Intensity of the  Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல கதிர்வீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப்  படுகின்றன!

பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு!  ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation  Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘மாக்ஸ் பிளான்க் வளைகோடு’ முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத்  தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும்  ‘சம வெப்பநிலை’ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

[தொடரும்]

++++++++++++++

Images : NASA, Wikipedia

Information :

1.  Physicists  – The Biographical Dictionary of Scientists  Edited By :  David Abbott, Ph.D.   (1984)

2.  Wikipedia –  George Gamow  (February 13, 2011)

3.  George Gamow – Answers.com

4. https://en.wikipedia.org/wiki/Big_Bang  [January 4, 2016]

5. http://www.nature.com/news/did-a-hyper-black-hole-spawn-the-universe-1.13743  [September 13, 2013]

6.  http://www.huffingtonpost.ca/2013/09/17/4-dimensional-black-hole-big-bang_n_3941690.html  [September 11, 2013]

7.  http://www.ibtimes.co.uk/alternate-big-bang-theory-universe-mirage-black-hole-4d-alternate-realm-1460640  [August 11, 2014]

8. http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/-the-big-bang-was-a-mirage-from-a-collapsing-higher-dimensional-star.html  [February 14, 2015]

9.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html  [November 13, 2015]

10.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html  [November 3 2015]

11.  http://jessbarkertheuniverse.weebly.com/origin-of-the-universe.html  [Origin of the Universe]

++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 8, 2016

http://www.jayabarathan.wordpress.com/

நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

பொழுது புலர்ச்சி விண்ணுளவி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++

https://youtu.be/MTfMBJngwtw

https://youtu.be/0bWZ5U-YYq4

https://youtu.be/5OFgJwdZxRc

http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html

https://twitter.com/NASA_Dawn

http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0

++++++++++++++

நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் உளவ இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
வால்மீனை விரட்டிச் சென்று
தூசியைப் பிடித்துக்
காசினியில் இறக்கும் விண்கப்பல் !
வக்கிரக் கோள் ஒன்றின்
மாதிரி மண் எடுத்து
பூமிக்கு மீண்டது
ஜப்பான் விண்ணுளவி !
அயான் எஞ்சினை முதன்முறை இயக்கி
பல மில்லியன் மைல்கள்
பயணம் செய்து
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டு
புலர்ச்சி விண்ணுளவி
குள்ளக் கோள் செரிஸை நெருங்கி,
நீரெழுச்சி காணச் செல்லும்
சூரிய மண்டலம் ஆய்வதற்கு !

+++++++++++

Dawn close to Ceres

பொழுது புலர்ச்சி விண்கப்பல் குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது.

2007 இல் ஏவப்பட்டு நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி [Dawn Space Probe] முதன்முறையாக அயான் எஞ்சினை உந்துவிசையாகப் பயன்படுத்தி சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, முரண் கோள்கள் திரியும் வளையத்தில் [Astroid Belt – Between Mars & Jupiter] வெஸ்டா முரண்கோளைச் 14 மாதங்கள் [2011- 2012] சுற்றி முதலில் ஆராய்ந்தது.  பிறகு பயணம் தொடர்ந்து, இப்போது அடுத்தோர் குள்ளக் கோள் செரிஸை [Dwarf Planet Ceres] ஆராய நெருங்கி விட்டது.  முதல் நெருக்கத் தளப்பதிவுச் சுற்றுவீதி [Survey Orbit- RC3]  2700 மைல் [4400 கி.மீ.] உயரத்தில் இயக்கப் பட்டது. அது நிகழ விண்ணுளவி ஒரு மாத நாட்களில் 5 சுற்றுக்கள் செய்தது. அந்த உயரத்தில் பொழுது புலர்ச்சி விண்ணுளவி 3 வாரங்கள் தளப்பதிவு [Survey] செய்தது.

Dawn's orbit

அடுத்து புலர்ச்சி விண்ணுளவி 118 சுருள் சுற்றுகளில் [Spiral Revolutions] செரிஸ் நோக்கி இறங்கி, 915 மைல் [1470 கி.மீ.] உயரத்தில் மூன்றாம் தளப்பதிவுச் சுற்றைத் [HAMO -High Altitude Mapping Orbit] தாண்டி, 240 மைல் [385 கி.மீ.] உயரத்தில் நான்காம் தளப்பதிவுச் சுற்றுக்கு [LAMO -Low Altitude Mapping Orbit] மாறுகிறது.  அந்த மாறுபாடு நேரும்போது விண்ணுளவி 2 மாதக் காலம் 160 முறை சுற்றிவரும்.

பொழுது புலர்ச்சி விண்ணுளவில் இயங்கி வரும் கருவிகள் :

  1.  நியூட்ரான் ஒளிப்பட்டை மானி  [Neutron Spectrometer]
  2.  காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி  [Gamma Ray Spectrometer]
  3.  உட்சிவப்புத் தளப்பதிவு ஒளிப்பட்டை மானி   [Infrared Mapping Spectrometer]
  4.  கூர்மையான காமிரா  [Powerful Camera]

குள்ளக் கோள் செரிஸ் தன்னை ஒருமுறை சுற்ற சுமார் 9 மணி நேரம் எடுக்கிறது.  அதன் விட்டம் : 587 மைல் [945 கி.மீ.]  பொழுது புலர்ச்சி விண்ணுளவி செரிஸை ஒருமுறை சுற்ற 5:30 மணி நேரம் பிடிக்கிறது.  இப்போது [டிசம்பர் 4, 2015] புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 309 மில்லியன் மைல் [500 மில்லியன் கி.மீ] தூரத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது.  அதிலிருந்து வரும் வானலைச் சமிக்கைகள் [ரேடியோ சிக்னல்ஸ்] பூமிக்கு வந்து சேர சுமார் 1 மணி நேரம் [55 நிமிடங்கள்] ஆகும்.

Dawn closer to Ceres

“ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுகள் இருப்பதாக நாங்கள் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டுபிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபித்துக் காட்டியது.”

மைக்கேல் கியூப்பர்ஸ் [European Space Agency -ESA Spain] 

“செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் உண்டாக அடித்தளக் கடல் உறைதுள்ளதா ?   அல்லது தென்படும் இருபுற நீர் எழுச்சி ஊற்றுகள் மட்டும் தனித்து இயங்குபவையா என்னும் வினாக்கள் எழுகின்றன. ”

ஃபிரான்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சித் தேசீய மையம் வானியலார்.

Dawn close to Ceres -1

செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு பில்லிய ஆண்டுகளுக்கு முன்பு  நீரும், கார்பன் மூலக்கூறுகளும் சுமந்து வந்த முரண் கோள்கள் [Comets & Asteroids] பூமியைத் தாக்கின என்னும் முன்னோடி நியதிகளை வலியுறுத்தும்.    அடுத்த  ஆண்டு நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [Dawn Spacecraft] செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றும் போது மேலும் புதிய தகவல் கிடைக்கும்.”

ஹம்பர்டோ  காம்பின்ஸ் & கிரிஸ்டீன் கம்ஃபர்ட்,  வானியலார், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்.  

“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு [Asteroid]] அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

Location of Dawn spacrcraft

“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

சார்லஸ் போல்டன் (NASA Administrator)

Water found in Ceres

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த குள்ளக் கோள் செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு  

2014 ஜனவரி 22 இல் ஈசாவின் விஞ்ஞானிகள் [ESA European Space Agency Scientists]  தமது ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் [Herschel Space Observatory] குள்ளக் கோள் செரிஸிலிருந்து விட்டுவிட்டுத் தெரியும் இரண்டு நீர் எழுச்சி ஆவி ஊற்றுகள் [Water Vapour Spouts, like Geysers] வெளியேறு வதை நோக்கியுள்ளார்.   முழு உருண்டையான குள்ளக் கோள் செரிஸ் முரண் கோள்கள் சுற்றும் வளையத்தில் [Asteroid Belt]  ஒன்றாக உள்ளது.  முரண்கோள்கள் வளையம் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன.  செரிஸ் குள்ளக் கோள், முரண்கோள்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரியது !

Dawn approaches Ceres

2007 இல் நாசா ஏவிய “புலர்ச்சி” விண்ணுளவி வெஸ்டா முரண் கோளை முதலில் சுற்றி உளவித் தற்போது குள்ளக் கோளை நோக்கிச் செல்கிறது.  புலர்ச்சி 2015 ஏப்ரலில் செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றி நீர் எழுச்சி ஊற்றுக்களை நெருங்கி ஆராய்ந்து, புதுத் தகவலை அனுப்பும்.  செரிஸ் குள்ளக் கோளை முதன்முதல் 1801 இல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கியூஸெப் பியாஸ்ஸி [Giuseppe Piazzi] கண்டுபிடித்தார்.  அது வேளாண்மை, இனவிருத்தியைக் குறிப்பிடும்  ஒரு ரோமன் பெண் தெய்வத்தின் பெயர்.  செரிஸின் விட்டம் 950 கி.மீ. [590 மைல்].  அது ஒருதரம் சூரியனைச் சுற்றிவர நாலரை ஆண்டுகள் எடுக்கும்.   முதலில் அதைச் சூரிய மண்டலத் தோற்றத்தில் எச்சமான ஒரு பளுமிக்க முரண்கோள் [Massive Asteroid] என்றுதான் கருதினார்.   கூர்ந்து நோக்கியதில் அது முழு உருண்டை வடிவத்தில் சிலிகேட் உட்கரு கொண்ட, பனிக்கவச உட்புறத்தை  உடைய சிறுகோள் என்று முடிவு செய்யப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் அகில் வானியல் ஐக்கியக் குழுவினர்   [IAU – International Astronomical Union] தீர்ப்புப்படி அது குள்ளக் கோள்கள் [Dwarf Planets] வகுப்பில் ஒன்றாய் புளுடோ கோளுடன் இடப்பட்டது.

Dawn spiraling toward Ceres

2011 -2013 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா விண்வெளி  ஆணையகத்தைச் [ESA -European Space Agency] சேர்ந்த மைக்கேல் கியூப்பர்ஸ் [Michael Kueppers] என்பவர் பூமியைச் சுற்றிவரும் ஹெர்ச்செல் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி மூலம் [Infra-Red Instrument] நான்கு முறை, குள்ளக் கோள் செரிஸை உளவி வந்தார்.   அப்போது அவர் வியக்கத் தக்க முறையில் செரிஸ் குள்ளக் கோளில் முதன் முறையாக இரண்டு நீர் எழுச்சி ஊற்றுக்களைக் கண்டார்.  அவை இரண்டும் சூரியனை நோக்கும் திசையில் தெளிவாய்த் தெரிந்தன.   நீள்வட்ட  வீதியில் சூரியனைச் சுற்றி வரும் செரிஸ் குள்ளக் கோள் சூரியனை நெருங்கும் போது மட்டுமே அந்த நீர் ஊற்றுகள் தென்பட்டன.   அந்த இரண்டு நீர் ஊற்றுக்களும் வினாடிக்கு [6 கி.கி.] 13 பவுண்டு வீதம் நீரை வெளியேற்றியன.  விஞ்ஞானிகள் நீர் எழுச்சி ஊற்றுகள் செரிஸில் இருப்பதாகக் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டு பிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபிக்க  வழி வகுத்தது.

Herschel Space Observatory

செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் ஒரு சமயம் தெரிந்தும், மறு சமயம் மறைந்தும் மாறி மாறி  வருவதற்குக் காரணம் என்ன ?   விந்தையாக நீர் எழுச்சி ஊற்றுகள் சூரியனுக்கு நேர் எதிரில் வரும் போதுதான் தெரிகின்றன.   சூரியனுக்கு அப்பால் செரிஸ் நீள்வட்ட வீதியில்  செல்லும் போது, நீர் ஊற்றுகள் தெரிவதில்லை.   அதவது செரிஸ் சூரியனுக்கு அருகில் வரும் போது  மேற்தளம் சூடாகி, அதன் அடித்தளத்தில் உள்ள உறைந்த நீர் உருகி, அழுத்தம் ஏறி பீறிட்டு எழுகிறது !   சூரியனைச் செரிஸ் தாண்டிப் போனதும் அடித்தளம் குளிர்ந்து போவதால் நீர் எழுச்சி ஊற்று நிறுத்தம் அடைகிறது !  2015 ஏப்ரலில்சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸை நெருங்கி நோக்கும் போது இன்னும் புதிய தகவல் வெளியாகும்.

Dawn Orbit around Ceres -1

“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.   அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவி லிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

“வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண்கோள் நோக்கிச் செல்கிறது.

முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண்கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனி லிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண்கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

Relative Sizes of Dwarf Planets

விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லா வற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

Dawn Orbit around Ceres

2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, செரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள் தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான செரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.  பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

Complete Project

(தொடரும்)

************************
தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, JAXA

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp[Dawn Update]
26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp[October 31, 2012]

29. http://spaceref.com/asteroids/dawn-spacecraft-heads-for-ceres.html  [December 4, 2013]

30. http://articles.timesofindia.indiatimes.com/2014-01-23/science/46513244_1_ceres-dwarf-planet-asteroid-belt [January 23, 2014]

31.    http://www.skyandtelescope.com/news/home/Dwarf-Planet-Ceres-Exhales-Water-241639001.html  [January 23, 2014]

32. http://gizmodo.com/the-long-spiraling-path-nasas-dawn-spacecraft-will-tak-1684284947  [February 6, 2015]

33.  http://earthsky.org/space/closest-look-yet-at-ceres-bright-spots [May 11, 2015]

34.  http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html  [July 17, 2015]

35. http://www.spacedaily.com/reports/Dawn_spiraling_in_towards_Ceres_999.html  [December 4, 2015]

36.  http://spaceflightnow.com/2015/06/07/dawn-enters-new-orbit-closer-to-ceres/  [December 27, 2015]

37.  https://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft)  [December 29, 2015]

38.  http://mashable.com/2014/12/30/dawn-ceres/#LiMmmONXomq3

39.  http://theplanets.org/ceres/

40.  https://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) [January 1, 2016]

++++++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( January 1, 2016)

https://jayabarathan.wordpress.com/

2015 ஆண்டு பார்வைகள்

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 76,000 times in 2015. If it were an exhibit at the Louvre Museum, it would take about 3 days for that many people to see it.

Click here to see the complete report.

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது

Earth's Axial Tilt

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++

https://youtu.be/fHS042a-Nb0

https://youtu.be/-lLgA9C1G4c

https://youtu.be/WLRA87TKXLM

https://youtu.be/hvjTicipAwo

https://youtu.be/xQSHxY5ZR6w

https://youtu.be/dfiT3Zh5q3c

https://youtu.be/ZD8THEz18gc

https://youtu.be/OqsRD4HPtH0

https://youtu.be/xVQnPytgwQ0

https://youtu.be/B4Q271UaNPo

https://youtu.be/3Uua_OEW2QY

+++++++++

Milankovitch cycles 2

பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது !
பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது !
மூச்சடைத்து விழி பிதுக்க
சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
தொத்து நோய் குணமாக்க
தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
வருவீ ர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை வெடித்து
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
உருகி, உருகி
உப்பு  நீர்க்கடல் மட்டம் உயரும் !
உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
தாளம் தடுமாறி
வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர் காலம் குறுகிப் போகும்,
பனி மலைகள் வளராமல்
குள்ள மாகும்
நில வளம் செழிப்பிழக்கும் !
நிலப் பகுதி நீர்மய மாகும் !
நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோசமாகி
வெறிபிடித் தாளும்
வெப்ப யுகப் பிரளயம் !

+++++++++++++++++++++++++

கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம்.  தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.

கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]

What we can do

பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது.  உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி.  அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி.  பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது.  சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி “சுற்றச்சுத் திரிபாட்டம்”  [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன.  பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.

சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை விஞ்ஞானி கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார்.  அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.       

Seasonal variations

பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

Global ocean mean temperature

2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]  

அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.

ஜேம்ஸ் ஒயிட்.

World sharing of gas emiissions

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

Arctic Ice Retreat

Antarctica

“கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

“கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

Pollution groups

“55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

“மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

Global Warming Effects

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

Impacts of Global Warming

What Global Warming does

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

Global warming family tree

பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

Deaths due to Natural Disasters

Fig 3 Gore's Presentation

சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

Earth's Orbit change

சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

Fig 2 Milankovitch Cycles

 

3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

Earth'a Axis wobbles

Earth’s Axis Wobbles

4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

Impacts

(தொடரும்)

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)

2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)

3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]

10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]

11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]

12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]

13.  http://www.answers.com/topic/global-warming

14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]

15. http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to_Earths_atmosphere_999.html  [August 14, 2013]

16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]

17. http://www.planetseed.com/relatedarticle/sun-and-earth-and-temperature-change

18. https://en.wikipedia.org/wiki/Solar_activity_and_climate  [October 1, 2015]

19. http://www.bgs.ac.uk/discoveringGeology/climateChange/general/causes.html?src=topNav

20. http://www.spacedaily.com/reports/New_research_shows_Earths_tilt_influences_climate_change_999.html  [December 16, 2015]

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (December 24, 2015)

https://jayabarathan.wordpress.com/