பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.

 

Fig 1A The Biig Bang Theory

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-Ro7rprA9EM

https://youtu.be/dLG0-tmimsc

https://youtu.be/VOz4PkdY7aA

https://youtu.be/ofI03X9hAJI

https://youtu.be/4eKIjkk0NVY

https://youtu.be/g-MT4mIyqc0

++++++++++++++++

ஒவ்வொரு கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

ஒற்றைத்திண்மை அல்லது ஒற்றைத்திணிவு [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும்.  மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு  ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.  உள் விரிவுக் கோட்பாடு [Inflation Theory] சரியே என்று பிளாங்க் முடிவு செய்தாலும், உள் விரிவு எப்படி நேர்ந்திருக்கும் என்னும் வினா எழுகிறது.

நியாயேஷ் ஆஃப்ஷோர்டி [Niayesh Afshordi, Astrophysicist, Premeter Institute for Theoretical Physics, Waterloo, Ontario, Canada]

புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான சித்தாந்தங்களை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

பெரு வெடிப்புக் கோட்பாடும் ஒரு புனைவு யூகிப்பே

2016 ஆண்டு ஆரம்பத்தில் “பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு” விடை கொடுத்து விடலாம் என்று சில பௌதிக விஞ்ஞானிகள் கூறுகிறார். பிரபஞ்சவியல் நிபுணர் [Cosmologists], நாற்புறப் பரிமாண விண்மீன் [Four-Dimensional Star] சிதைவாகிக் கருந்துளைக்குள் விழுந்து சிதறிய எச்சங்களிலிருந்து, நமது பிரபஞ்சம் உருவானது என்று இப்போது ஒரு புதியதோர் கோட்பாட்டை அறிவித்துள்ளார்.  இந்தப் புதுக் கோட்பாடு, ஏன் பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் சமநிலையில் [Uniform State] காணப் படுகிறது என்பதற்கு விளக்கம் தருகிறது.

பெரு வெடிப்பு நேர்ச்சி மாடல் “ஒற்றைத்திண்மை, அல்லது ஒற்றைத்திணிவு ” [Singularity] எனப்படும் எல்லையற்ற திணிவு நிலைப் புள்ளி [Infinitely Dense Point] வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது எனக் கூறுகிறது. ஆனால் இந்த வெடிப்பு எப்படித் தூண்டப் பட்டது என்று யாரும் விளக்கம் தரவில்லை.  நமக்குத் தெரிந்த பௌதிக விதிகளும் [Laws of Physics] அந்த வினாடியில் என்ன நேர்ந்தது என்று கூற இயலவில்லை. மேலும் எப்படிக் கொந்தளிப்பான பெரு வெடிப்பில் முழுமையான சமநிலை உஷ்ணத்துடன் பிரபஞ்சம் நிலை பெற்றது என்று விளக்குவதும் மிகச் சிரமமானது.  காரணம் நிரந்தர உஷ்ண நிலை பரவிடப் போதுமான தருணம் இருக்கவில்லை.

வாடர்லூ கல்விக் கூடத்தைச் சேர்ந்த கனேடியன் வானியல் பௌதிக விஞ்ஞானி நியாயேஷ் ஆஃப்ஷோர்டி கூறுவது இதுதான்:  நமது பிரபஞ்சம், உயர் பரிமாண பொதிப்பளு அடங்கிய ஒரு சவ்வு [A Brane contained within A Higher-Dimensional Bulk Universe] என்பதே.

Bye Bye to Big Bang Theory

பிரமஞ்சத்தின் மூலத் தோற்றத்துக்குப் பெரு வெடிப்புக் கோட்பாடு 

பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்!  அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்!  பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background  Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால  அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும்  வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தி யில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத்  தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein  Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.

The Big Bang was Mirage

அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்!  உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர்.  பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட  பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலைக் கதிர்வீச்சு [Residual Microwave Radiation]  இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப் படுத்தினர்!

பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை’ [Big Bang  Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள்  முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத்’ தற்போது பெரும்பான்மை யான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த  ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George  Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம்  தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின்  ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ்  அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி  செய்தார்.

அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு  செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான்,  நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு  வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி  இருக்க வேண்டும் என்று முன்னறி வித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக்  கதிர்வீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டிருந்தது!

பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Force], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum  Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும்  மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்!  பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றிப் பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி  மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டிஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்!  பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும்  இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித் திருக்கலாம்! ஆகவே  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!

பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு  வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று  நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின!

விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை  மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும்  சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ  செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்களுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.

இந்த  மாறுதல் கதிர்வீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல கதிர்வீச்சு’ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல்  அகிலவியல் பின்புல கதிர்வீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல கதிர்வீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி’ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல கதிர்வீச்சு அடர்த்தியை [Intensity of the  Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல கதிர்வீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப்  படுகின்றன!

பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு!  ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation  Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘மாக்ஸ் பிளான்க் வளைகோடு’ முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத்  தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும்  ‘சம வெப்பநிலை’ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

[தொடரும்]

++++++++++++++

Images : NASA, Wikipedia

Information :

1.  Physicists  – The Biographical Dictionary of Scientists  Edited By :  David Abbott, Ph.D.   (1984)

2.  Wikipedia –  George Gamow  (February 13, 2011)

3.  George Gamow – Answers.com

4. https://en.wikipedia.org/wiki/Big_Bang  [January 4, 2016]

5. http://www.nature.com/news/did-a-hyper-black-hole-spawn-the-universe-1.13743  [September 13, 2013]

6.  http://www.huffingtonpost.ca/2013/09/17/4-dimensional-black-hole-big-bang_n_3941690.html  [September 11, 2013]

7.  http://www.ibtimes.co.uk/alternate-big-bang-theory-universe-mirage-black-hole-4d-alternate-realm-1460640  [August 11, 2014]

8. http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/-the-big-bang-was-a-mirage-from-a-collapsing-higher-dimensional-star.html  [February 14, 2015]

9.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html  [November 13, 2015]

10.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/the-big-bang-was-a-mirage-todays-most-popular.html  [November 3 2015]

11.  http://jessbarkertheuniverse.weebly.com/origin-of-the-universe.html  [Origin of the Universe]

++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 8, 2016

http://www.jayabarathan.wordpress.com/

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

One thought on “பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.”

  1. சி. ஜெயபாரதன்
    Jan 10, 2016

    to Eskki, mintamil, vallamai
    விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா,

    http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/-the-big-bang-was-a-mirage-from-a-collapsing-higher-dimensional-star.html

    https://jayabarathan.wordpress.com/2016/01/08/big-bang-mirage/

    பெரு வெடிப்பு நேர்ச்சி மாடல் “ஒற்றைத்திண்மை, அல்லது ஒற்றைத்திணிவு ” [Singularity] எனப்படும் எல்லையற்ற திணிவு நிலைப் புள்ளி [Infinitely Dense Point] வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது எனக் கூறுகிறது. ஆனால் இந்த வெடிப்பு எப்படித் தூண்டப் பட்டது என்று யாரும் விளக்கம் தரவில்லை. நமக்குத் தெரிந்த பௌதிக விதிகளும் [Laws of Physics] அந்த வினாடியில் என்ன நேர்ந்தது என்று கூற இயலவில்லை. மேலும் எப்படிக் கொந்தளிப் பான பெரு வெடிப்பில் முழுமையான சமநிலை உஷ்ணத்துடன் பிரபஞ்சம் நிலை பெற்றது என்று விளக்குவதும் மிகச் சிரமமானது. காரணம் நிரந்தர உஷ்ண நிலை பரவிடப் போதுமான தருணம் இருக்கவில்லை.

    “ஒற்றைத்திண்மை, அல்லது ஒற்றைத்திணிவு ” [Singularity] என்பது என்ன ?

    பெரு வெடிப்பு நேர்ச்சி தீபாவளிப் புஸ்வான வேடிக்கையா ?

    சி. ஜெயபாரதன்

    Reply ↓
    சி. ஜெயபாரதன் on January 14, 2016 at 5:04 PM said: Edit

    +++++++++++++++++

    ருத்ரா (இ.பரமசிவன்)
    Jan 14, 2016
    to வல்லமை, minTamil
    விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே

    உங்கள் (சுட்டி)மூலம் மற்றும்
    உங்கள் கட்டுரைகள் மூலம்
    இந்த பிரபஞ்சத்தின் “பதஞ்சலி” சூத்திரத்தை
    நன்கு காட்டியிருக்கிறீர்கள்.
    ப்ளாங்க் தொண்டைப்புள்ளி வழியே
    ஊதுவதும் (எக்ஸ்ப்ளோஷன்)
    உறிஞ்சுவதும்(இம்ப்ளோஷன்)
    நிலைப்படுவதும் (ஈக்யூப்ளோஷன்)
    கூட கண்ணுக்குத்தெரியாத
    பதஞ்சலியின்
    ரேஸகம் மணிப்பூரகம் கும்பகம்
    எனும்
    மூச்சுப்பயிற்சிகள்.
    விஞ்ஞானிகள் தற்போது
    நிரவியிருக்கும் அல்லது விரவியிருக்கும்
    அந்த மூணு டிகிரி (கே) வெப்பத்தை வைத்து தான்
    வெடிப்பு நிகழ்ச்சியை
    ஒரு புறப்படிவ பிரபஞ்ச படப்படிவமாய்
    இ.சி.ஜி அதாவது
    எக்ஸொஜெனிக் காஸ்மாலஜிகல் க்ராஃப் ஆக‌
    காட்டுகிறார்கள்.
    அற்புதம் அருமை.
    மெய் அல்ல மூளையே சிலிர்க்கிறது.
    விஞ்ஞான ஆழம் செறிந்த விவரங்கள்.
    மிக்க நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

    Reply ↓
    சி. ஜெயபாரதன் on January 14, 2016 at 5:08 PM said: Edit

    ++++++++++++++++++++++

    ருத்ரா (இ.பரமசிவன்)
    3:05 AM (13 hours ago)
    Reply to all
    to வல்லமை, minTamil

    சிங்குலாரிடி [Singularity] என்பது ஆய்வு கணிதவியலில் (அனாலிஸிஸ் அல்லது கால்குலஸ்) ஒரு பகுவிய இயங்கியம் (டிஃப்ரன்ஷியல் ஃபங்ஷன்) மறைந்து (வேனிஷின்) போதல்.இந்த இயங்கியத்தை கணித வியலாளர்கள் ஒரு தொடர்வியம் (கன்டினுவம்)ஆக பார்க்கிறார்கள்.

    எனவே பிரபஞ்சத்தில் மிக மிக அதிக அடர்த்தியும் நிறையும் ஒரு புள்ளியில் குவியும்போது ஈர்ப்பும் அங்கே மிக மிக அதிக மாகிறது. உதாரணமாக இந்த பிரம்மாண்ட சூரியன் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான ஆரம் கொண்டதாகச் சுருங்கினால் அங்கே தூரம் அல்லது நீள அகல உயர‌ப் பிரபஞ்சம் (3டி மெட்ரிக் யுனிவர்ஸ்) இறந்து போய் விடுகிறது.அதாவது நமது மின்காந்த அல்லது ஒளிக்கதிர் கொண்டு அதை காண இயலாது.அங்கே நுழைந்த ஒளி உறிஞ்சப்பட்டு விடும் மேலே குறிப்பிட்ட வேனிஷிங் அங்கே நிகழ்கிறது.இதுவே ஒருமையம்
    (சிங்குலாரிட்டி) விஞ்ஞானிகள் அதற்குள் நுழைந்த துகள் அல்லது விசையின் வேகம் ஒளிவேகத்தை மிஞ்சியதாக (சூபர் லுமினஸ்) இருக்கும் என்றும் அதுவே “டேக்யான்” என்று தங்கள் எக்ஸ்ட்ராபொலேஷன் கணக்குகள் மூலம் கற்பனை செய்கிறார்கள்.

    அது கருந்துளைக்குள் (ப்ளாக் ஹோல்) ஒரு புழுக்கூடாக (வோர்ம் ஹோல்) இருக்கலாம் என்றும் அதே அடர்த்தி நிறை ஈர்ப்பு வித்யாசத்தினால் இன்னொரு முனையில் இன்னொரு பெருவெடிப்பாக மாறி இன்னொரு பிரபஞ்சமாக வடிவு பெறலாம் என்றும் கற்பனை செய்கிறார்கள்.இப்படிப்பட்ட “சிந்தனைப் பரிசோத‌னைகள்”(தாட் எக்ஸ்பெரிமென்ட்ஸ்)மெய் விஞ்ஞானங்களாக மாறும் நாள் விரைவில் வரலாம்.அப்படிப்பட்ட “ஐன்ஸ்டீன்” சிந்தனைப்பரிசோதனைதான் கருந்துளையின் வாசலைத்திறந்து வைத்தது.ஒரு வினாடியை ஒரு எண்ணால்(36 அல்லது 37 பூஜ்யங்கள் போட்டுக்கொள்ளுங்கள்) வகுத்தால் ப்ளாங்க் மாறிலியே மறைந்து போகும்.அதுபோலவே ஒரு செ.மீ.யை வகுத்தால் ப்ளாங்க் தூரம் மாயமாகி விடும்.இதன் புற விளைவுகளே புதிய பிரபஞ்சத்தின் பிரசவங்கள்.இதை விளிம்பு பிரபஞ்சம் எனலாம்.அந்த விளம்பு நிலை (கிரிடிகல் ஆஸ்ட்ரல் நம்பர்) ஒன்றுக்கு கீழே என்றால் நம் பிரபஞ்சத்திலேயே அது ஈர்ப்புக்கு எதிராய் “ஒரு வீக்கப் பிரபஞ்சத்தை”(இன்ஃப்லேஷனரி யுனிவர்ஸ்) உள் நுழைக்கும்.அது ஒன்றுக்கு சமம் என்றால் அந்த வீக்கம் ஈர்ப்போடு சமமடையும்.அப்போதே நம் பிரஞ்சம் காணாமல் போய்விடும்.நாம் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போய்விடலாம்.

    ஆனால் அதை தடுத்துக்கொன்டிருப்பது நம் பிரபஞ்சத்துள் இருக்கும் அந்த‌
    புதிர்ப்பிண்டமும் (டார்க் மேட்டர்) அந்த புதிர் விசையும் தான்(டார்க் எனர்ஜி)தான்.இது நம் பிரபஞ்சத்தில் 75 சதவீதத்துக்கும் மேலே இருப்பதாக சொல்கிறார்கள்.இதன் அகற்சி விசையே (ரிபல்ஸிவ் ஃபோர்ஸ்) நம் பிரபஞ்சத்தின் எட்டாத தொலைவில் இருக்கும் குவாஸர்கள்(குவாஸி ஸ்டெல்லார் ரேடியோ ஆப்ஜெக்ட்ஸ்) என்பவை.

    பிண்டங்களின் விசையும் வேகமும் ஈர்ப்பும் கூட கணக்கிடப்படத் தேவை யில்லை.கால வெளி நெசவு விசையை (ஸ்பேஸ் டைம் வார்ப்) ஒரு பிரபஞ்ச விசையாக்கி விண்கலங்களை செலுத்துவதாக “ஸ்டார் ட்ரெக்”போன்ற படங்கள் காட்டுகின்றன. அப்போது ஒளிக்கூம்பு பிரபஞ்சத்தை மீறிய ஒரு வெளியில் விண்கலம் செல்வதாக கணிக்கப்படும்.ஒளிவேக எல்லைகள் மறைந்து காலமும் வெளியும் இழைவு பெற்ற (ஃப்யூஸ்ட்) நிலை உள்ள பிரபஞ்சங்கள் கணக்கிடப் படும்.எனவே மனித சிந்தனை விஞ்ஞானத்தால் கூர் தீட்டப்படும்போது பிரஞ்சங்களையெல்லாம் அவன் தன் “சீட்டு விளையாட்டுகளில்” கூட சேர்த்துக்கொண்டு ரம்மி விளையாடுவான்.

    ருத்ரா

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.