ஒரு தாய் மக்கள் ?

madurai-gopuram-1.jpg

சி. ஜெயபாரதன், கனடா

 

எந்தையும் தாயும் குலாவிய
இத்தாய கத்தில்
உன் தாய் பிறந்தாலும்
உனது  தாயக மாய் நீ என்றும்
ஒப்புக் கொள்ள வில்லை !
உன் மூதாதையர்
பிறப்பிடம் என்றாலும் !
ஒருதாய் மக்கள்
நாமில்லை யென்று
பூமியில் சுட்டிக் காட்டினாய் !

பட்டொளி வீசும்
மூவர்ணக் கொடியை வணங்கி
நாவிலே
வந்தே மாதரம் மந்திரச் சொல்
வாயில் வரவில்லை !
பாரத இனங்களை விடுவித்த
முதல் சுதந்திர முழக்கம்
வந்தே மாதரம் !
விடுதலை பெற்ற மாந்தர் தமது
மதத்துக்கு அடிமைகள் !
அரிவாளும், சுத்தியும்
ஓங்கிடும்
உன் விருப்பக் கொடியில் !

என் தாய் வேறு
உன் தாய் வேறு
ஒரு நாட்டில் பிறந்த நமக்கு !
என் வாய் வேறு
உன் வாய் வேறு
ஒரு மொழி பேசும் நமக்கு !
என் நிழல் வேறு !
உன் நிழல் வேறு
ஒரு வீட்டில் சுற்றி வந்தாலும் !
இரு வாயிலும் ஒலிக்க வில்லை
ஒரு வாய்க் குரல்  !
எதிர்த் திசையில் போகும் நாம்
இந்த யுகத்தில்
அன்னிய ராகச் சந்தித்தோம் !

பிணைத்தவை சில !
பிடித்தவை சில ! ஆயினும்
பிரித்தவை பல !
ஒரு தாய் மக்களும்
இரு தாய்ப் பிள்ளையாய்ப்
சண்டை யிட்டார் !
இரு தாய் மக்களை
இணைத்திட
இரும்புப் பாலம் ஒன்றில்லை !
பிரிந்து, பிரிந்து
அந்நியராய்ப் போனோம்
சொந்த நாட்டிலே !

காலங் காலமாய்
ஆலயங்கள் கொள்ளை போயின !
மோனச் சிற்பங்கள்
மூக்கறுபட்டு முலை அறுபட்டு
மானம் இழந்தன !
ஆக்ராவிலே
ஆகாவென்று எழுந்தது
தாஜ்மஹால் !
கஜினிஸ்தான் ஆவதை நிறுத்திடும்
ஆங்கிலக் காலனி
ஆட்சி !

புத்துயிர் பெற்றது பாரதம்
முக்கால் கண்டமாய் !
மொகஞ்ச தாரோ
முகவரி அழிந்தது !
ஹரப்பா
வரலாறு மாறியது !
சிலுவையில் அடிக்கப் பட்டது
சிந்து நதி நாகரீகம் !
திருடு போன
பிரமிட் கோபுரம்
அரணில்லாத பாரதம் !
தாயகத்தின் விளம்பரக் காட்சியா
தாயிக்கு அடித்த சிலுவையா
பளிங்குக் கொலு வான
தாஜ்மகால்  ?

*******
[S. Jayabarathan (jayabarathans@gmail.com)  [ July 21, 2018] [R-1]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

2 thoughts on “ஒரு தாய் மக்கள் ?”

  1. திருநீரு பூத்த நெருப்பாய் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் வேற்றுமை.. வரலாற்றிலேயே அதன் வெம்மைன்னு அருமையா கவிதையாக்கியிருக்கிங்க.. நல்லாயிருக்கு.. சிந்திக்க வேண்டிய யதார்த்தம்..

  2. Hey there! I know this is kinda off topic but I’d figured I’d ask. Would you be interested in trading links or maybe guest writing a blog post or vice-versa? My site addresses a lot of the same subjects as yours and I believe we could greatly benefit from each other. If you are interested feel free to shoot me an e-mail. I look forward to hearing from you! Excellent blog by the way!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.