சிற்றருவி ! பேரருவி !

 kutralam-niagara1

சி. ஜெயபாரதன், கனடா

 

இறை வணக்கம்

அண்டக் குயவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !

***********

கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு  கூறிடவே ஓது !

***********

குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.

+++++++++++++++++

ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
ஒரு மூச்சில் !

******************

குற்றால அருவி !

குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
வற்றி விடும் நீரருவி !
வான்தொடும் கானருவி !

குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !

நயாகரா அருவி !

புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் தாழருவி !

முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் தண்ணருவி !

தோற்றம் கீழுனக்கு ! வானத்
தோரணம் ஏதுனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடைதான் !

குற்றால அருவி !

குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !

குரங்காடும் நீரருவி !
கூடு கட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் சீரருவி !
மானோடும் ஓரருவி !

குற்றாலம் சிற்றருவி ! மழைக்
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் சீரருவி !

குற்றால அருவி !

எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான  ஆறது !

குற்றாலச் சூழ் வெளியே
குலவி வரும் நல்வாடை !
நயாகரா நதி வழியே
நாற்ற முள்ள துர்வாடை  !

நயாகரா அருவி !

ஆறாக ஓடி இரையுது !
ஆழமாய்ப் பாய்ந்து தவ்வுது !
மாறாகத் தெரியுது !
மண்ணைப் போய்க் கவ்வுது !

குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பில்லை ! எங்கும்
செயற்கை மினுக்குயரும் !

ஒருநதி இடையில் பிரியுது !
இருநீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !

குற்றால அருவி !

வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !

ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாதம் எழும் சீரருவி !

குற்றாலத் தேனருவி
மேலிருந்து  குதிக்குது !
குபேரப் பேரருவி நழுவிக்
கீழேதான் மிதிக்குது.

நயாகரா அருவி !

வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !

காசிருந்தால் நீர்வீழ்ச்சி !
காசுரிக்க ஓர்சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !

பகலிரவாய் நீர் பாயும் !
பார்த்தாலே குடல் சாயும் !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !

தேனிரவில் கண்காட்சி  !
திகட்டாத நிறக் காட் சி
வானூர்தி வட்ட மிட்டு
வானிருந்து நிறம் காட்டும் !

குற்றால அருவி !

பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !

பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !

நயாகரா அருவி !

நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை ! உணர்வில்லை !
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

வான வில்லாய் நீர்வீழ்ச்சி
மாறிவிடும் நிறக்காட்சி !
வீணாகும் மின்சக்தி  !
வேடிக்கை பின்புத்தி  !

நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !

சிற்றருவியா ? 

மேல் நோக்கிப் பார்த்தால்
மின்னல் நூல் நெய்தாற்போல்
நூலாடைக் கானருவி !
நூலிடைப் பெண்ணருவி !

பேரருவியா ?

பாவாடை  போல் பெய்யருவி !
பருத்த இடைப் பேயருவி !
தூவாடை நீரருவி !
துரத்தி விடும்  காட்டருவி !

++++++++++++

தேனருவி குற்றாலம் !
தேடிவரும் குளிப்பருவி !
கூனருவி நயாகரா !
கூடவரும் சொர்க்க புரி

டாலர் வாழும் நயாகாரா !
டாலர் ஆளும் நயாகரா !
டாலர் கூடும் நயாகரா !
டாலர் நாடும் நயாகரா !

துருவப் பனிக் காற்றில் நயாகரா
அருவி உறைந்து ஓட்டம் நின்று விடும்
பருவக் கால மழை நின்று குற்றாலம்
பாயாமல் வீழ்ச்சி ஓய்ந்து விடும்.

குபேரச் சாக்கடை முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !

******************************

S. Jayabarathan [http:jayabarathan.wordpress.com/]  June 28, 2022  [R-6]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

7 thoughts on “சிற்றருவி ! பேரருவி !”

  1. இதையே சிற்றின்பம், பேரின்பம் அப்படின்னும் சொல்லலாமா…..

  2. நண்பர் சுரேஷ்,

    நல்ல கற்பனை. சிற்றின்பம், பேரின்பம் என்று பொருள் கொள்ளலாம். ஆன்மீகம், பொருளியம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++

  3. Hey! I could have sworn I’ve been to this blog before but after reading through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely glad I found it and I’ll be book-marking and checking back often!

  4. whoah this blog is excellent i love reading your posts. Stay up the good work! You already know, a lot of people are looking round for this info, you could aid them greatly.

  5. சச்சிதானந்தம் wrote on 27 December, 2013, 18:18

    அருமை! அருமை! ஐயா! இறைவணக்கம் தொடங்கி ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். கவிதையின் தொடக்கம் முதல் இறுதிவரை சந்தநயம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

    சி.ஜெயபாரதன்

    +++++++++++

    சி. ஜெயபாரதன் wrote on 28 December, 2013, 6:02

    பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் சச்சிதானந்தம்.

    சிற்றருவி குற்றாலம்
    சிரித்தோடும் ஊரருவி !
    கொட்டி முழக்குவது
    நயாகரா பேரருவி !

    சி. ஜெயபாரதன்

    +++++++++++++++++

    தேமொழி wrote on 28 December, 2013, 6:41

    குற்றாலத்தினைப் பற்றிய வரிகள் மனத்தைக் கொள்ளை கொண்டன ஜெயபாரதன் ஐயா, மிகவும் அருமை.

    வெள்ளிக் கதிர் எழுமருவி !
    வேகமாய் விழுமருவி !
    துள்ளி வரும் நீரருவி !
    தூங்கி விடும் ஓரருவி !

    ஆன்மீக நாட்டருவி !
    ஆடிவரும் காட்டருவி !
    நான் விழையும் நீரருவி
    நாதம் எழும் தூயருவி !

    எளிய வரிகளும் வார்த்தைகளும் போதுமே அழகை வர்ணிக்க என்று காண்பித்துள்ளீர்கள்.

    சி.ஜெயபாரதன்

    ++++++++++++++++++

    சி. ஜெயபாரதன் wrote on 28 December, 2013, 7:41

    பாராட்டுக்கு மிக்க நன்றி தேமொழி.

    சி. ஜெயபாரதன்

    ++++++++++++

    செண்பக ஜெகதீசன்

    செண்பக ஜெகதீசன்… wrote on 28 December, 2013, 18:30

    தேனருவித் திரையெழுந்து
    வானின்வழி ஒழுகும்
    திருக்குற்றால அருவிகளை,
    வணிகப்பொருளாகி
    வானின்வழி பாயும்
    நயாகராவுடன் ஒப்பிடும் கவிதை
    அருமை…!

    சி.ஜெயபாரதன்

    ++++++++++++

    சி. ஜெயபாரதன் wrote on 28 December, 2013, 20:31
    பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் செண்பக ஜெகதீசன்.

    சி. ஜெய பாரதன்

    ++++++++++++++

    sathiyamani wrote on 28 December, 2013, 22:45

    அருவிகள் ஒப்பீடு கவிதை கலக்குது
    அமெரிக்கத் தப்போடு ஆடம்பரம் வழுக்குது
    இந்திய எழிலின் சிறப்பினை உரைக்குது
    சிந்திய தமிழில் உண்மைகள் கிடைக்குது

    அங்கே டாலர் வாழ்ந்ததும் எவரால்
    இங்கே ரூபாய் வீழ்ந்ததும் எவரால்
    ஆய்வுகள் செய்யென அருவிகள் சிரிக்குது
    அறிந்தால் கயவரைத் தள்ளவும் அழைக்குது

    சி.ஜெயபாரதன்

    +++++++++++++++++++++

    சி. ஜெயபாரதன் wrote on 29 December, 2013, 22:47

    பாராட்டுக்கு நன்றி நண்பரே

    வெள்ளை மாளிகை ஒரு வைர யானை !
    விற்கும் சுதந்திரம் விடுதலை பறித்து !
    கொள்ளை ஆயில் வேண்டி ஈராக் சென்றது !
    குவலய ராஜா ! பெரிய சோதரர் அடிபணி !

    சி. ஜெயபாரதன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.