
சி. ஜெயபாரதன், கனடா
பரிதியின்
கதிர் அம்புகள் புகுந்திட அஞ்சும்
திக்குத்
தெரியாத காட்டில், என்
ஆத்மாவின்
பிரதி
பிம்பத்தைத்
தேடித் தேடி அலைந்தேன்!
தொப்பென
தோள் மேல்
குதித்தமர்ந்தது, ஓர்
குயில்!
காவியக் குயில்!
தாவிப் பிடித்து என்
இதயக் கூண்டில் அடைத்தேன்!
அப்பாவிப் பறவை
ஆத்மாவின் இரட்டை யென
எப்படி அறிவது ?
சட்டெனக்
கூண்டைத் திறந்தேன்!
குயில்
பாடிக் கொண்டே
பறந்து போனது!
கூடு விட்டுக் கூடு பாயும் குயில்
பல நாள் கழித்துத் தன்
பிரதி
பிம்பத்தின் இருப்பிடம் மறவாது
பூட்டிக் கிடந்த என்
வீட்டுக்குள்ளே
மீண்டும்
குடி
புகுந்து கொண்டது!
நீ யார்,
நான் யாரென்று
ஆத்மாக்கள் இரண்டும்
இதயத்தின்
பக்கங்களை எல்லாம் புரட்டிப்
புரிந்து கொள்ளவே
இப்பிறப்பின்
ஆயுள் காலம்
தேய்பிறை யானது!
கண்ணாடிப் பேழைக்குள் நீ
காவியம்
படைப்பதை நானும்
வேலிக்குள் இருந்து தான்
வேடிக்கை
பார்க்கிறேன்!
அந்து போகாத
இனத் தோரணங்கள் தொங்கும்
பந்தலின் கீழ்
வாசிக்கும்
நாதஸ்வரக் குழலின் நாக்குகள்
அறுபட்டுப்
போகின்றன!
ஓரிசை பாடும்
ஆத்மாக்கள்
அடுத்த பிறப்பிலாவது
ஜோடிப் புறாக்களாய்
கூடிக் குலாவ
இறைவன் கை எழுதிச் செல்லுமா ?
அந்தரங்க சுத்த
ஆசைகள்
மெய்யாய் விளையும்
என்றோர்
வேத நெறி பொய்யாகுமா ?
அடுத்த ஜென்மம்
தப்பினால்
இன்னும் பொறுப்பது
எத்தனை ஜென்மங்கள் ?
நரைத்து
உதிரப் போகும் இப்பிறவி
எப்போது
புதை மண்ணாகும் ?
பிரளயத்தில்
புரட்சி வெள்ளம் துடைத்தாலும்
புத்துயிர் பெற்று,
விழுதுகள் விடும் ஆலமரங்கள்
குலம், கோத்திரம்,
சாத்திரங்கள்!
அவற்றின்
யானைக் கால்கள்
ஆத்மாவின் கோலங்களை
அழிப்பதற்கு முன்
பிரம்மா!
ஒரு வரம் தா!
அவள் ஆத்மா
என் குலத்தில் வந்து உதிக்கட்டும்!
அன்றி
என் ஆத்மா
அவள் குலத்தில் போய்
அவதரிக்கட்டும்!
பிரம்மா!
இரண்டும் தர வேண்டாம்!
ஏதாவது
ஒரு பிறவியில்
ஒரு வரம் தா !
*******
Published by
S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
அன்பரே,நான் அதிசயிக்கும் சிறந்த வலை பூக்களில் தங்களது வலைப்பூ முதன்மையானது.
பெரிய சேவைதான்.வாழ்த்துகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் ஜெரி ஈசானந்தா.
ஜெயபாரதன்