அக்கினிப் பூக்கள் !

சி. ஜெயபாரதன், கனடா


1.  படைப்போன் இல்லாது
படைப்பே கிடையாது !
முட்டை முதலாய் இட்டதா ?
கோழி முன்பே பிறந்ததா
ஞானத் தங்கமே ?

2.  ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதமாம் !
நுனிப் புல் மேய்ந்து
வனத்தை அறிவதோ
ஞானத் தங்கமே ?

3.  வந்த சண்டைக்கு நழுவு !
வராத சண்டைக்குத் தழுவு !
சண்டை வந்தாலும் முடிவில்
சமாதானா மாய்க் கைகொடு
ஞானத் தங்கமே !

4.  குருடனுக் குதவச் செவிடன் !
செவிடனுக் குதவ நொண்டி !
நொண்டிக் குதவக் குருடன் !
மண்டுக் குதவ எவன்
ஞானத் தங்கமே ?

5.  போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனையாய் ஆக்கு !
போர் வாள் ஊரை உழுதால்
வேர்கள் எங்கே நிலைக்கும்
ஞானத் தங்கமே ?

6.  தூரத்துப் பச்சை
கண்ணுக்கு இச்சை !
கிட்டப் பார்வை குள்ளனுக்கு
எட்ட ஏணி உள்ளதா
ஞானத் தங்கமே ?

7.  காணாத மோதிரம் தேடக்
கை விளக்கில் திரியில்லை !
திரி இட்டதும் எண்ணை சிந்த
தீபம் ஏற்றுவோன் வழுக்கி விழுந்தான்
ஞானத் தங்கமே ?

8.  உன்னைப் பற்றி நான் அறியேன் !
என்னைப் பற்றி நீ அறியாய் !
இல்லறக் சிறையில் நீயும், நானும்
பல்லாங்குழி விளை யாடுவோம்
ஞானத் தங்கமே !

9.  ஜன்னல் இடத்தில் முகம் பார்க்கும்
கண்ணாடி வைத்திடு !
கண்ணாடி இடத்தில் ஒளிவரும்
ஜன்னலை வைத்திடு
ஞானத் தங்கமே !

10.  பாதிப்பேர் மூடர் என்றேன் !
பளாரென அறைந்தார் அவ்வூரில் !
பாதிப்பேர் அறிஞர் என்றேன் !
பூமாலை கழுத்தில் விழும் இவ்வூரில்
ஞானத் தங்கமே !

11.  ஈராக்கில் ஆஹாவென எழுந்தான்
விடுதலைச் சூரியன் !
குடிமக்கள் நிம்மதியாய்த் தூங்கினர்
கூடாரக் குப்பை வெளியில்
ஞானப் பெண்ணே !

12.  செருப்பைத் தைத்துக் கொண்டு
பாதத்தை நுழைக்கப் போனான் !
செருப்பு பல்லால் கடித்ததும்
நறுக்கப் போனான் காலை
ஞானப் பெண்ணே !

13.  வந்த சண்டை போடவா ?
வராத சண்டை நாடவா ?
போன சண்டை கீறி விட்ட
புண்ணை ஆற்றிக் கொள்ளவா
ஞானப் பெண்ணே ?

14.  ஆழம் தெரியாமல் காலை விடாதே !
ஒரு கால் நொண்டி
காலை விடுவானா ? அல்லது
கோலை விடுவானா
ஞானப் பெண்ணே ?

15.  எல்லாரும் வலது கால் வைக்க
இடது கால் வைத்தான் பேரன் !
எல்லோரும் தவறிய பாதம்
என்றாள் பாட்டி பேரனைத் தவிர
ஞானப் பெண்ணே !

16.  சுட்ட சட்டி எறிவதா ?
சுடாத சட்டி அறிவதா ?
சுட்ட சட்டி தெரிந்திட
எட்டி நிற்க முடியுமா ?
ஞானப் பெண்ணே ?

*************

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

3 thoughts on “அக்கினிப் பூக்கள் !”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.