வால்ட் விட்மன் வசன கவிதைகள்

Walt Whitman

(1819-1892)

(புல்லின்  இலைகள்)

மூலம் : வால்ட்  விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

வால்ட்  விட்மன்  வாழ்க்கை வரலாறு:

அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார்.

புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடி யவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson].

1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை. 1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப் படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமை களையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டிய தாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது.  தலைநகர் வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது. சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறை யாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப்  பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்”  படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது.

19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”]. 1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

+++++++++++++++++++++++++++++

வாவென அழைத்த தென் ஆத்மா

(Come, Said My Soul)

[வால்ட்  விட்மன்]

தன்னைப் பற்றி

வாவென அழைத்த தென் ஆத்மா

எழுதுவோம் அவ்விதப் பாக்கள்

எனது உடல் நலத்துக்கு.

(ஏனெனில் நாம் இருவரும் ஒருவரே)

மரணத் துக்குப் பின் நானிங்கு

மறைவாய், அல்லது வேறு அண்டங்களில்

நீண்ட காலம் வாழ

வேண்டி வந்தால், அங்கே சில

தோழர் குழுவுக்கு இவை

சுலோகங் களாய் மீண்டும் கேட்கும்

(இப்பூமி, மரங்கள், காற்றும் கொந்தளிக்கும்

அலைகளுக் கேற்ப)

எனதினிய புன்னகையில் நான்

எப்போதும் நீடிக்கலாம்

அடுத்தடுத்து

எனது சொந்தப் பாக்கள் மூலம் !

இப்போது முதலில் நான்,

இங்கு இடுகிறேன்

எனது கையொப்பம்

என் உடலுக்கும், ஆத்மா வுக்கும்

என் பெயரை இட்டு !

++++++++++++++++++++

ஒருவர் சுயத்தனம் பற்றி

எனது பாடல்    

ஒருவன் சுயத்தனம் பற்றி

ஒரு பாட்டு பாடுகிறேன்.

எளிய தனி மனிதன் ஒருவன் பற்றி

எனினும் உரைப்பேன் ஒரு வார்த்தை

அது குடியாட்சி !

ஒருமித்து ஓங்கிச் சொல்லும்

ஒரு வார்த்தை.

தலை முதல் கால் வரை

உடலியல் பற்றிப் பாடுவேன் !

உறுப்பமைப்பு, மூளை மட்டுமல்ல

என் வழிகாட்டி

குருவாய்த் தகுதி பெற !

கூறுவேன் நான் :

பூரணத் தோற்றம் பெறுவது

நேர்மை உடையது !

ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும்

நான் பாடுவேன்

ஒரே சமத்துவ முறையில் !

உணர்ச்சி யோடு துடிப்போடு,

உன்னத சக்தி யோடு, உற்சாக மோடு

உரிமை இயக்கத்தை

உருவ மாக்கும் தெய்வீக விதியில்.

நான் பாடுவேன்

நவீன மனிதன் பற்றி !

+++++++++++++

என் பாடத் துவக்கம்

(Beginning My Studies)

[வால்ட் விட்மன்]

படிக்கத் துவங்கிய போது

பரவசம் அளித்தது

எனக்குப் பேரளவில் :

எனது முதல் எட்டு நடை,

கற்கும் தன்னுணர்வு,

கற்கும் வடிவங்கள்,

விளை யாட்டின் மேன்மை,

சின்னஞ் சிறு பூச்சி, விலங்கு,

கண்ணோக்கு, நட்பு, ஐம்புல உணர்வு !

முதல் எட்டு அச்சம் தரினும்,

மிகையாய் மகிழ்ச்சி அளித்தது

எனக்கு !

நடந்த தூரம் சிறிது !

நடை மேலும்

தொடர விருப் பில்லை !

நிறுத்தினேன், திரிந்தேன் எந்நாளும்,

பள்ளியில் கற்றதைப்

பரவசப் பாக்களில்

பாடுதற்கு !

+++++++++++++++++

அவனுக்கு ஒரு பாடல்

(To Him I Sing)

[வால்ட்  விட்மன்]

 

அவனுக்காக நான் பாடுகிறேன்

முற்காலத்தின்

மேலிருந்து எழுப்புகிறேன்

தற்காலத்தை நான் !

என்றும் நிலைத்த மரம்

வேரிலிருந்து இழுப்பது போல்

இறந்த காலத்தின்

மேலிருந்து எடுத்து வருகிறேன்

இந்த நிகழ் காலத்தை !

காலவெளி நீட்சியில் நான்

அவனை

மேலாக்கி வருகிறேன்.

தனக்கென விதிகள் படைத்து

அந்த முறைகளால்

தன்னையே தான்

ஆக்கிக் கொள்ள

பின்னிப் பிணைக்கிறேன்

காலம் அழிக்கா

விதிகளை !

++++++++++++++

மாநிலங்களுக்கு எச்சரிக்கை

[To the States]

 

ஒரு மாநிலத் துக்கு

அல்லது

எந்த ஒரு மாநிலத் துக்கும்

அல்லது மாநிலத்தில் உள்ள

எந்நகரத் துக்கும்

என்னுரை இதுவே :

எதிர்த்து நில் தீவிரமாய் !

எதற்கும் சிறிது கூட

அடிபணி யாதே !

ஏனென்று எந்த வினா யின்றி

அடி பணிந்து நீ ஓர்

அடிமை யாக

ஆக்கப் பட்டால்,

முழு அடிமை யாக ஆக்கப் படின்,

இந்த பூமியிலே

எந்த நாட்டுக்கும்,

எந்த நகரத் துக்கும்,

எந்த மாநிலத் துக்கும்

இழந்த சுதந்திரம் மீளாது

என்றென்றும் !

+++++++++++++

வரலாற்றுஆசான்ஒருவனுக்கு

(To The Historian)

[வால்ட்விட்மன்]

இறந்த காலத்தைக்

கொண்டாடுவாய் நீ !

புற உலகை ஆராயச் சென்று,

மானிட இனத்தின்

வாழ்வுக் களத்தை,

காட்டிக் கொள்ளும்

சுய வாழ்வைத்

தேடப் போனாய் நீ !

 

மதாதிபதி களையும்,
மன்னரையும்
ஒருமைப் படுத்தி
மானிடனை

அரசியல் பிறவியாய்க்

காண்பவன் நீ !
நான் அல்லிகனி* மலைவாசி !
தானெனும் சுயநல உரிமையில்
இருப்பதாய்
நானவனை நடத்துவேன்.
தன்னை அபூர்வமாய்
வெளிப்படுத்தும்
வாழ்வுத் துடிப்பை அழுத்தும்

மானிடச் சுயமதிப்பு

பெரு மகத்துவம் உடைத்து !

எப்படி இருக்குமென

வரம்பிட்டு

வெளிப்புறத் தோற்றத்தைத்

துதிபாடி

வேண்டுபவன் !
வருங்கால வரலாற்றைத்
திரையிடுவேன்
பழங்காலக்
காரணத் துக்கு !
+++++++++++++

அல்லிகனி மலைவாசி  à  Alleghenies Inhabitant.

+++++++++++++

மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

(As I Ponder in Silence)

[வால்ட் விட்மன்]

ஆழ்ந்த மௌன சிந்தனையில்

மூழ்கித் தீரமாய்

நீண்ட கற்பனை மீண்டது

என் கவிதைகள் மீது !

மதிப்பில்லா முறையில்

அகோர வனப்பில், வயதில்,

வல்லமையில்

மாய வடிவம் ஒன்று

தோன்றும் என்முன் !

பூர்வ மண்ணின்

மேன்மைக் கவிஞர்கள்

விழிகளில்

தீப்பொறி போல் எனக்கு

வழிகாட்டுவார்,

உன்னதப் பாடல்களை

அவரது விரல் சுட்டிக் காட்டும் !

அச்ச மூட்டும் குரல் கேட்கும் :

என்ன பாடுகிறாய் நீ ?

உனக்குத் தெரியாதா

பொறுமை மிக்க

பாடகருக்கு குறிக்கோள்

ஒன்றைத் தவிர

பிறிதொன் றில்லை என்று ?

அச்சொல்லே போருக்கு அடிப்படை !

உருவாக்கும் அதுவே

உன்னதப் படை வீரர்களை !

அப்படியே இருக்கட்டும் பிறகு

அதைச் செப்புவேன்.

போரைப் பற்றியும்

கடிந்து நான்

நீண்டதாய் பாடுவேன்

அனைத்தையும் விடப் பெரிதாய் !

என் நூலில் பதித்திருக்கும்

போரின் பற்பல வெகுமதி

விளைவுகள்

புற முதுகு காட்டி ஓடல்,

பின்வாங்கல்,

முன்னேறல்

வெற்றித் தளர்ச்சி, வீழ்ச்சி,

போரில் விட்டுக் கொடுத்தல்,

[அவற்றில் உறுதியாய் உள்ளேன்]

உலகப் போர்த் தளங்களில்

உயிர்காப்பு, உயிரிழப்பு

இரண்டும் உடலுக்கு நேரும்

அழிவில்லா ஆத்மா வுக்கு !

நடை அணியில் வருகிறேன்

போர்ச் சுலோகம் சொல்லிக் கொண்டு,

பாராட்டுவேன் மேலாக நான்

படைவீரரை !

+++++++++++++

தொடங்குபவர்கள்

(Beginners)

வால்ட் விட்மன்

வையத்தில் தொடங்குவோர்க்

கெல்லாம்

வசதிகள் எவ்விதம்

வழங்கப் படும் படிப் படியாய் ?

எவ்விதம் அவை அரிதானவை

எவ்விதம் உலகுக்கு அச்சம் அளிக்கும் ?

எவ்விதம் தமக்கேற் றளவில்

ஏற்றுக் கொள்கிறார் ?

தமக்குத் தாமே எவ்விதம் அவர்

தாங்கிக் கொள்கிறார்

இன வெறுப்பை எல்லாம்

பிறரையும் முன் னிறுத்தி !

தோன்றும் அவர் முரண்பாடு

எத்தகையது அவரது வயதுக் கேற்ப !

எப்படி அதை எதிர் கொள்வர்

மக்கள் ஆயினும்

அதை அறியாமல் ?

எப்படி அவரது விதியில்

ஏதோ ஒன்று நிலையாக உள்ளது எந்நாளும் ?

எப்படி அவர் எப்போதும்

தப்பாகத் தேர்ந் தெடுக்கிறார்

தாம் மேலாய்ப் போற்றும்

தமது வெகுமதிப் பரிசுகளை ?

எவ்விதம் மாறாத

ஒரே விலை கொடுத் தின்னும்

வாங்கிக் கொள்கிறார்

மாபெரும் அதே

வாணிபச் சரக்கை ?

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978] 5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012] 6. https://jayabarathan.wordpress.com/abraham-lincoln/ [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarathans@gmail.com [S. Jayabarathan] (January 1, 2013)

https://jayabarathan.wordpress.com/

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.