இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

ஆழ விண்வெளி ஆய்வுகளுக்கு அனுப்பும் பளுமிக்கத் துணைக்கோள்கள் இப்போது நிதி சுருங்கிய மின்னுந்து விசையால் இயக்கப்படப் போகின்றன. மின்னுந்து விசை ஏற்பாடுகள் மெதுவான வேகத்தில், வெகுதூரம் செல்லக் குறைவான உந்துவிசைத் திரவத்துடன் [Propellants] பயணம் செய்ய பூதப்பெரும் ராக்கெட்டில் பயன்படுகின்றன.

எம். என். வகியா [டாடா அடிப்படை ஆய்வக விஞ்ஞானி, மொம்பை]

 

GSLV MK III ROCKET READY FOR LAUNCHING

இந்திய விண்வெளி ஆய்வகம் முதன்முதல் ஏவிய பூதப்பெரும் ராக்கெட்.

2017 ஜூன் 5 ஆம் தேதி இந்தியாவின் பேராற்றல் படைத்த பூதப்பெரும் ராக்கெட் முதன்முதல் வெற்றிகரமாக ஏவப்பட்டு, மனிதனோடு பூமியைச் சுற்றிவரப் போகும் விண்வெளிப் பயணத்துக்கு அடுத்த ஓர் மைல் கல் நாட்டியது.  140 அடி [43 மீடர்] உயரமும், 640 டன் எடையுள்ள அந்த அசுர வடிவ ராக்கெட் தென்னிந்தியாவில் உள்ள ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.   அந்த ராக்கெட்டில் உள்ள பேராற்றல் படைத்த எஞ்சின், இந்தியப் பொறியியல் நிபுணர் டிசைன் செய்துப் பல்லாண்டுகளாய் விருத்தி செய்தது.  இனிமேல் இந்தியா ஈரோப்பிய எஞ்சின்களை வாங்க வேண்டியதில்லை.  ஏவப்பட்ட அந்த ராக்கெட் மூன்று டன் பளுவுள்ள துணைக்கோள் ஒன்றை முதன்முறைத் தூக்கிச் சென்று, அதி உயரச் சுற்றுப்பாதையில் விட்டது.  இதற்கு முன் 2 டன் பளுவுள்ள துணைக் கோள்தான் தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.

விண்வெளிப் போட்டியில் 2014 ஆண்டில், குறைந்த செலவில், இந்தியா சைனாவுக்கு முன்பு செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றியதற்குப் பிறகு இந்த பூதப்பெரும் ராக்கெட் சோதனை அடுத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.  அமெரிக்கா தனது நாசா மாவன் மார்ஸ் [NASA’s MAVEN MARS] பயணத்துக்கு 671 மில்லியன் டாலர் செலவழித்தது. செந்நிறக்கோள் செவ்வாய் செல்ல இந்தியா செலவழித்தது 73 மில்லியன் டாலர்.  அடுத்து, 4 டன் பளுச் சுமக்கும் தகுதியுள்ள இந்த பூதப்பெரும் ராக்கெட் மூலம், துணைக்கோள்கள் பூதக்கோள் வியாழனுக்கும், வெள்ளிக் கோளுக்கும் அனுப்பும் திட்டங்கள் இஸ்ரோ இந்திய விண்வெளித் தேடல் ஆணை யகத்தின் குறிக்கோளாய் உள்ளன.  இம்முறை தூக்கிச் சென்ற மின்னுந்து விசைத் துணைக்கோள் மூன்று விண்வெளி விமானிகள் அமர்ந்து செல்லும் தகுதி உடையது. ஆனால் இன்னும் 7 ஆண்டுகள் கடந்து 2024 ஆண்டில்தான், மனிதர் இயக்கிப் பூமியைச் சுற்றும் விண்ணுளவி தயாராகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

One thought on “இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.