அமர கீதங்கள்
துணைவியின் இறுதிப் பயணம்
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
தோற்றம் : அக்டோபர் 24, 1934
மறைவு : நவம்பர் 18, 2018
++++++++++++++++++
[27]
தீவைப்பு
ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி
மாய்த்த துணைவிக்கு கானடா வில் தீவைப்பு !
ஆயுள் முடிந்த கதை.
++++++++++++++++++++++++
[28]
தனிமை
கொடிது கொடிது இளமையில்
வறுமை !
அதனினும் கொடிது
நடுமையில்
ஊழிய வருவாய் இன்மை !
அதனினும் கொடிது
முதுமையில் நோய்மை !
அதனினும் கொடுமை
மண விலக்கு,
இல்லற உடைப்பு,
புறக்கணிப்பு !
அனைத்திலும் கொடுமை
மனத்துக் கினிய
மனைவியோ, கணவனோ
பட்டெனத் தவறிப்
பல்லாண்டு
மனிதப் பிறவி நொந்து நோகும்
தனிமை, தனிமை ! தவிக்கும்
தனிமை.
++++++++++++++++
[29]
இட்ட கட்டளை
முதலில் கண் மூடுவது
தானோ அல்லது
நானோ என்று
நாள்தோறும்
எட்டிப் பார்ப்பாள் என்னை
அடிக்கடி,
அடுத்த அறையில் நான்
எழுதும் போது !
இரவு பதினொரு மணி
இனிமேல்
எழுத வேண்டாம் என
எனக்கிடுவாள் கட்டளை !
உங்களுக்கு
எதுவும் நேர்ந்தால்
எனக்குத் தெரியாது.
என்னால் உதவ முடியாது
தூங்கச் செல்வீர்.
+++++++++++
[30]
துணைவியின் கொடை
கண்ணும் கருத்துமாய்
வளர்த்த
பெண்டிர் இருவர்.
மூத்தவள்
மருத்துவப் பணி.
இளையவள்
பொறியல் பணி.
தக்கார் தகவிலர் என்பது
மக்கட் திறனால்
தெரியும்.
இல்லறப் பயன்பாடு
என்பது
பிள்ளைகள் செயற்பாடு.
++++++++++++++
[31]
பொங்கலோ பொங்கல்
ஒவ்வோர் ஆண்டும்
தவறாது
ஒவ்வோர் தை மாதமும்
மறவாது,
குளிர்நாடு கானடாவில்
எங்கள் இல்லத்தில்
கமகமவென மணக்கும் பால்
பொங்கல் வைப்பாள்
என்னருமைத் துணைவி.
தித்திக்கும்
சர்க்கரைப் பொங்கல் !
சாம்பார்
வெண் பொங்கல் !
இரட்டைப் பொங்கல் !
இவ்வாண்டு தைத் திங்கள்,
பொழுது புலர்ந்தது,
பொங்கல் பானை,
புத்தரிசி,
சர்க்கரை, கரும்பு, பால்
அக்கரையுடன்
காத்திருக் கின்றன,
வீட்டு வாசல் முற்றத்தில் !
சர்க்கரைப்
பொங்கல் வைக்க இல்லை
துணைவி
எங்கள் இல்லத்தில் !
+++++++++++++++++++++
[32]
மானுடப் பிணைப்பு
[Human Bondage]
“மானுடம் பூத்தது
வாழ்வதற்கு ! அந்த
மன்மத ராகங்கள்
காதலுக்கு !” என்று
கனடா கவிஞர் புகாரி
கவிதை
எழுதி வைத்தார்.
முன்புறம்
ஒரு கதவு மூடினால்
பின்புறம்
மறு கதவு திறக்கிறது !
இறுதியில்
பிரிந்து செல்லும் கை
பிடித்தது
என் இடது கையை
பிரியா விடை பெற்று !
உடனே அடுத்து நான் வாழப்
பிணைக்கும்
இருகரங்கள் பற்றி
இழுத்துக் கொள்ளும் என்னைத்
தன்வசம் !
இன்னும் ஆயுள் நீடிக்கும்
உனக்கு !
வாழ நினைப்பாய்.
இல்லார்க்கு உதவ முனைவாய்,
இன்னும் முடிக்க வேண்டிய
பணிகள் பல உள்ளன,
உன்னைப் படைத்த படைப்பாளி
உனக்கிட்ட வினைகளை
முடிப்பாய் !
பயணம் முடிய வில்லை
உனக்கு !
+++++++++++++++++++++
[33]
சிலுவை
ஒவ்வோர் மனிதனும்
தன் முதுகிலே
தனது சிலுவைச்
சுமந்து கொண்டு தான்
சுற்றி வருகிறான் உலகை
செக்கு மாடுபோல்,
தெரிந்தோ
தெரியாமலோ !
மதுபானம் சிலருக்கு!
மரிவானா சிலருக்கு !
மடிவெடி சிலருக்கு !
புற்று நோய் சிலருக்கு !
பட்டென வெடித்துக் கொல்லும்
இரத்தக் குழல் வீக்கம்
சிலருக்கு !
பயண முடிவிலே சிலுவையில்
யார் உன்னை அடிப்பது
ஆணியில் ?
ஊழிக் காலன் தான் !
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்

