மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
ஸஹாரா பாலைவனச் சூரியக்கதிர் நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து மீள்புதிப்பு மின்சக்தி பரிமாறத் திட்டம்.
மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம்
முதன்முதல் மொராக்கோ நாட்டில் மிகப்பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையம் அமைக்க உலக வங்கி 519 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று 2014 அக்டோபர் 3 ஆம் தேதி உறுதி கூறியது. ஆப்பிரிக்க நாடுகளிலே மொராக்கோ போல் சூரிய ஒளி கிடைக்கும் நாடு வேறொன்றில்லை. வருடம் ஒன்றில் சுமார் 3600 மணிநேரம் மொராக்கோ பாலை வனத்தில் சூரிய ஒளி பெற முடிகிறது. ஸஹாரா பாலை வனத்தின் சராசரி சூரிய ஒளி ஆண்டுக்கு 3117 மணிகள். உச்ச உஷ்ணம் ஸஹாராவில் 77 டிகிரி C [170 டிகிரி F ]. மொராக்கோ 9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, உலகிலே மிகப் பெரும் சூரியக்கதிர் மின்சக்தி நிலையத்தைக் கட்டுமானம் செய்யத் திட்ட மிட்டது. மொராக்கோவின் குறிக்கோள் 2020 ஆண்டுக்குள் 5 சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் [Photovoltaic, Concentrated Solar Power, Solar Steam turbine types ] கட்டி முடிக்க வேண்டும் என்பதே. அவ்விதம் முடியும் போது சூரியக் கதிர் மின்சக்தியின் பயன்பாடு 38% சதவீதம் இருக்கும்.
மொராக்கோ நாடு ஒன்றுதான் [1400 MW or 2100 MW Capacity Under Sea Cable Link ] ஐரோப்பாவுடன் [ஸ்பெயின்] 9 மைல் (15 km) நீண்ட கடலடி மின்வடத் தொடர்பு வைத்துள்ளது. முதல் சூரியக்கதிர் நிலையம் 2015 இல் இயங்கத் துவங்கியது. 2017 இல் 5750 GWh மின்னாற்றல் ஸ்பெயின் மொராக்கோவுக்கு அனுப்பியது. இப்போது மொராக்கோ ஸ்பெயினுக்கு சூரியக்கதிர் மின்சக்தி அனுப்பும் காலம் வந்துவிட்டது.
திட்டமிட்ட ஐந்து சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்களுள் முதலாக ஒன்று 500 MW யூனிட் மொராக்கோ தென் பகுதியில் உள்ள ஓரட்ஸாசாட் [Ouratzazate] நகரில் கட்டப்பட உள்ளது. 2013 மே மாதம் 10 இல் கட்டுமானம் ஆரம்பமானது. திட்டம் முக்கட்டப் போக்கில் [160 MW சூரியக்கதிர் குவிப்பு நிலையம், 200 MW விரிவு வட்ட நிலையம் & 150 MW சூரிய அடுப்பு நிலையம்] நிறுவகம் ஆனது. [Noor 1 (160 MW Concentrated Solar Power Plant), Noor 2 (200 MW Parabolic Mirror Plant), Noor 3 (150 MW Solar Trough Plant ]. புது நிலையங்களில் பயன்படும் விரி வளைவுச் சூரிய எதிர் ஒளிக் கண்ணாடித் தட்டுகள் [Solar Parabolic Mirrors] 12 மீடர் [39 அடி] உயரம் உள்ளவை. சூரிய வெப்பத்தை குவித்து உறிஞ்சும் திரவக் குழல்கள் 390 டிகிரி செல்சியஸ் [740 டிகிரி பாரன்ஹீட் ] அளவீட்டில் ஓடுபவை. அந்த நிலையங்கள் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மின்சக்தி அனுப்புபவை. நூர் 1 [Noor 1] சூரியக்கதிர் நிலையத்தில் 500,000 வளைவுக் கண்ணாடிகள் [Parabolic Mirrors] 800 அணி வகுப்பில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மாடல் நிலையம் அமெரிக்கா காலிஃபோர்னியா – நெவேடா, எல்லைப் பக்கம் மொஹாவி பாலை வனத்திலும் உள்ளது. 2.2 பில்லியன் செலவில் 400 MW திறனில் உருவாகும் “இவான்பா” [IVANPAH ] சூரியக்கதிர் மின்சார நிலையம் 5 சதுர மைல் பரப்பில், நாற்பது மூவடுக்குக் கோபுரத்தில் ஆயிரக் கணக்கான சூரியக் கண்ணாடிகளால் இயங்கி வருகிறது. இவான்பா சூரியக் கதிர் நிலயம்140,000 இல்லங்களுக்கு மின்சக்தி பரிமாறும் திறம் உடையது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா