ஆடும் அழகே அழகு


image.png

CERN ATOM SMASHER – FRANCE SWISS BORDER
   

ஆடும் அழகே அழகு 

சி. ஜெயபாரதன், கனடா

ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ 

ஆடும் அழகே அழகு – உனைத்

தேடும் விஞ்ஞான உலகு.

தமிழ் ஏடும், பாரத நாடும், பாட நீ 

ஆடும் அழகே அழகு, தமிழ் 

நாடும், ஏடும், பாடும், தேடும் 

ஆடல் அரசே, கூடல் முரசே நீ  

ஆடும் அழகே அழகு. 

அணு உடைப் பாய்வக வாசலில்  

நாடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ 

ஆடும் அழகே அழகு, அங்குனைத் 

தேடும் விஞ்ஞான உலகு. 

ஆதி மூலன் நீஅகிலம் படைத்தது நீ 

அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !  

அண்ட சராசரம் அனைத்திலும் நீ 

ஆடும் அழகே அழகு.  

ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு 

தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து 

ஆடும் அழகே அழகுகம்பீர மாய் நீ 

ஆடும் அழகே அழகு. 

நெற்றிக் கண் மின்ன ஒற்றைக் காலில்,  

எற்றி ஆடும் அழகே அழகு. 

வெற்றி பெற்று முற்றும் அதிர

சுற்றி ஆடும் அழகே அழகு.

 

ஒரு கையில் அக்கினி ஏந்தி  

மறு கையில் உடுக்குடன் கூத்தாடி  

ஆடும் அழகே அழகு. உனைப்  

பாடும் சீடரை ஆசீர்வதி நீ. 

ஆதி முதல்வன் நீஅண்டக் குயவன் நீ ! 

ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமம் நீ ! 

நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்வது நீ ! 

வேத ஞானி நீ ! மேதினி செழிக்க  நீ  

ஆடும் அழகே அழகு,  

நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு ! 

நின்றால் பூமியே நின்று விடும் 

மானிடம் அழிந்து விடும், தொடர்ந்து 

ஆதி சக்தி நீ ஆட வேண்டும், தினம் 

ஓதி உனை யாம் பாட வேண்டும். 

ஆடும் அழகே அழகு. உனைப்  

பாடும் சீடரை ஆசீர்வதி நீ. 

தேடும் மாந்தரைக் காப்பாய் நீ 

சாடும் மனிதரை  மீட்பாய் நீ 

******************* 

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

2 thoughts on “ஆடும் அழகே அழகு”

  1. ஜெயபாரதன் அவர்களே,

    தங்களின் சில அறிவியல் சார்ந்த பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு அறிவியல் + அழகியல் + ஆன்மீகம் கலந்த பாடலை தங்கள் வாயிலாக படித்தமைக்கும், கேட்டமைக்கும் மிக்க நன்றி. நான் சமயப் பற்று இல்லாதவனாக இருந்த போதிலும், இப்பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. ‘தீங்கிழைத்த அசுரன் மீது’ என்பதற்கு பதிலாக ‘அறியாமையான அபஸ்மரன் மீது’ என்றிருந்தால் மேலும் சிறப்பாகவும், இச்சிலை ஒரு அறிவியல் ஆய்வகத்தின் முன்பாக இருப்பதற்கு பொருத்தமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். தங்களின் படைப்புகள் செறிவுடன் தொடர வேண்டுகிறேன், விரும்புகிறேன் . என்னைப் போன்ற சிற்பல தமிழ் விரும்பிகளுக்கு உங்கள் படைப்புகள் ஒரு நல் விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.

    ஒரு வாசகன்.
    தே. பிரகாஷ்.

  2. ஆடும் அழகே அழகு! தில்லைக் கூத்தனின் ஆடும் அழகினை வியந்தது அதனினுமழகு! சிறப்பாக உள்ளமைக்கு வாழ்த்துக்கள்!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.