அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது முதல் தமிழ் நூல் ‘ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” கலைமகள் வெளியீடு 1964இல் சென்னை பல்கலைக்கழக முதற்பரிசு பெற்றது. இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன. இப்போது 2022-2023இல் வல்லமை.காம், இவரது தமிழாக்க நாடகமான “ஏழ்மைக் காப்பணிச் சேவகி” பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பராவை வெளியிடுகிறது. அதே சமயத்தில் திண்ணை.காம் ஷேக்ஸ்பியரின் “ஓத்தல்லோ” நாடகத்தைத் தமிழ்த் தழுவலாய் வாரம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது.
2023 பிப்ரவரி 26 அன்று சி. ஜெயபாரதன், 89 முடிந்து 90 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, அன்றைய தினம் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு அவர் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன், ஜெயபாரதனுக்கு வாழ்த்துகள் இசைத்துக் கொண்டாடினர்.
அறிஞர் ஜெயபாரதன் நீடூழி வாழ, வல்லமை.காம், திண்ணை.காம் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
2 thoughts on “சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்”
அன்புள்ள ஐயா,
வணக்கம்.
உண்மையிலே, எனக்கு வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
பிரதிபலன் எதிர்பாராத தங்களது மகத்தான தமிழ்த்தொண்டு வியக்கத்தக்கது. 1960-லிருந்து சுமார் 75 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். `… நெஞ்சின் அலைகள் …’, நீங்கள் எழுதிய நூல்கள் சிகரங்களாக நிற்கின்றன.
உங்களது அரிய தொடர் முயற்சிகள், எங்களை, தமிழகத்தை ஊக்குவிக்கின்றன.
நண்பர் செல்வா வழியாக உங்களை இருமுறை நேரில் சந்தித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னும் உங்களை சந்திக்க அவா.
அண்மைய காலத்தில் மருத்துவ வசதிகள் பெருகி வருவதாலும், உங்களது மன வலிமையினாலும், இறை ஆசியினாலும் நீங்கள் 100 என்ற சிகரம் தாண்டி, உற்றார்-உறவினருக்கும், நண்பர்களாகிய எங்களுக்கும், வழிகாட்டியாக இருந்து, மகிழ்வுடன் உங்களது தொண்டை தொடர்வதுதான் எங்கள் அவா.
அன்புள்ள ஐயா,
வணக்கம்.
உண்மையிலே, எனக்கு வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
பிரதிபலன் எதிர்பாராத தங்களது மகத்தான தமிழ்த்தொண்டு வியக்கத்தக்கது. 1960-லிருந்து சுமார் 75 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். `… நெஞ்சின் அலைகள் …’, நீங்கள் எழுதிய நூல்கள் சிகரங்களாக நிற்கின்றன.
உங்களது அரிய தொடர் முயற்சிகள், எங்களை, தமிழகத்தை ஊக்குவிக்கின்றன.
நண்பர் செல்வா வழியாக உங்களை இருமுறை நேரில் சந்தித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. இன்னும் உங்களை சந்திக்க அவா.
அண்மைய காலத்தில் மருத்துவ வசதிகள் பெருகி வருவதாலும், உங்களது மன வலிமையினாலும், இறை ஆசியினாலும் நீங்கள் 100 என்ற சிகரம் தாண்டி, உற்றார்-உறவினருக்கும், நண்பர்களாகிய எங்களுக்கும், வழிகாட்டியாக இருந்து, மகிழ்வுடன் உங்களது தொண்டை தொடர்வதுதான் எங்கள் அவா.
க. பாஸ்கரன்
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி நண்பர் பாஸ்கரன்.
சி.ஜெ.