துணைவியின் இறுதிப் பயணம் -2

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன்,  ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

துணைவியின் இறுதிப் பயணம் – 2

[6]

நேற்று,

 

நேற்று

ஒளிகாட்டி, வழிகாட்டி

நடமாடிய தீபம்,

புயல்

காற்றில்

அணைந்து போய்,

வீட்டுச் சுவரில்

படமாகித் தொங்கும்

இன்று,

மாலை போட்டு !

+++++++++++++++++ 

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
ன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போய் விட்ட பிறகு
அதன் இழப்பு தான்,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது  !

+++++++++++++

[8]

புனிதவதி

 

 

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,     
ஒருமுறை நான் பார்த்து                                                                     
ஒப்பிய திருமணம்.
என்னையே மணந்தாள்,
என் இல்லத் தீபத்தை
ஏற்றினாள்
ஐம்பத் தாறு ஆண்டுகள்     
என் வானில்                                                                                             
ஆதவன் உதித்தான் !
ஆனால் இன்று
நின்ற போன தவள்
கைக் கடிகாரம்.

 

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம்
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
ட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் கிழிந்து குருதி
கொட்டும் !
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி                                                                   கண்டேன் !                                                                                                           வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அறுவை முறை
வெற்றியே !
ஆனால்
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்
இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
மது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து
காலவெளி
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++++++++++++++

[13]

உயிர்த்தெழுவாள் !

 

விழித்தெழுகஎன் தேசம்

என்னும்

கவிதை நூல்

எழுதி வெளியிட்டேன்.

ஆனால்

என் துணைவி,

அறுவை சிகிட்சையில்

விழிதெழ வில்லையே என

வேதனைப் பட்டேன்.

இந்துவாய் வாழ்ந்து

பைபிள் பயின்று

கிறித்துவை நம்பும்

உன் துணைவி

உயிர்த்தெழுவாள்என்று

ஓர் அசரீரிக் குரல்

ஒலித்தது உடனே

வெளி வானில் !

 

+++++++++++++

[14]

நேற்று 

 

நேற்று

ஒளிகாட்டி, வழிகாட்டி

நடமாடிய தீபம்

புயல்

காற்றில் அணைந்து,

ஓவியமாகி

வீட்டுச் சுவரில் நினைவுப்

படமாகித்

தொங்குகிறது

இன்று

மாலையோடு !

++++++++++++

[15]

பெருங் காயம் !

உயிர்மெய்க் காயம்

பொய்யாம் !

மண்ணிலே தோன்றிய

பெண்மணிக்கு

எத்தனை,

எத்தனை அணிகள் !

ஜரிகைப் பட்டு

ஆடைகள் !

ஒப்பனைச் சாதனம் !

அனைத்தையும்

விட்டுப்

போனது துணைப் புறா,

இப்போது

துருப்பிடிக் காத

ஒரு கும்பா வுக்குள்

எரி சாம்பலாய்,

அவள் நீடித்த

குடியிருப்பு !

+++++++++++++++                                  

[16]

தொட்ட இடம் !

இவ்வுலகில்

முப்பத்தாறு ஆண்டுகள்

மூச்சிழுத்த

இல்லத்தைப் பூட்டி விட்டுப்

போனவள்,

மீண்டும் திறக்க இங்கு

வரவில்லை !

வீட்டில்

தொட்ட இடம், துடைத்த இடம்

தூய்மை இழந்தன !

சுட்ட சட்டி, அறைத்த

அம்மி

விம்மி, விம்மி

அழுதன !

துவைத்த உடை காயாமல்

ஈரமாய் உள்ளது !

பண்ணிய வடை

இனித் தின்பாரற்று

ஊசிப் போகுது !

மண்ணாகி

மீளாத் துயிலில்

அவள்

தூங்கும் இடம் இப்போது

விண்ணாகிப்

போனது !

++++++++++++++++

[17]

ஆபரணங்கள்

பெண்ணுக்குப்

பொன்னாசை உள்ளது !

உயிர் உள்ளவரை மேனியில்

அணிகள் ஒளிவீசும் !

உயிர் போன பிறகு

எதுகை, மோனை

எதற்கு ?

உபமானம், உபமேயம்

எதற்கு ?

உடை யில்லாத

உயிர்மெய்

சொல்லுக்கே

வல்லமை அதிகம் !

உயிர்மெய்

உலகை விட்டுப் போன

பிறகு

உன் சோக வரலாறு

சொல்ல

இலக்கணம் எதற்கு ?

தலைக் கனம்

போதும்.

+++++++++++++++++++

[18]

இறுதிப் பயணம்

முப்பதாவது நாளின்று !

போன மாதம்

இதே நேரம், இதே நாளில்,

ஓடும் காரில்

பேரதிர்ச்சியில்

இரத்தக் குமிழ் உடைந்து

உரத்த குரல்

எழுந்தது என்னருகே !

ஃபோனில்

911 எண்ணை அடித்தேன் !

அபாய மருத்துவ

வாகனம் அலறி வந்தது

உடனே !

காலன் துணைவியைத் தூக்க

நேரம் குறித்தான் !

ஏக்கத்தில் தவிக்கும் நான் !

நவம்பர் 9 ஆம் நாள்,

இதுவுமோர் 9/11 ஆபத்து தான் 

மாலை மணி 6 !

நடுத்தெரு நாடக மாகி,

சிறுகதை யாகி

பெருங்கதை யாகி,

இறைவன்

திருவிளை யாடல் 

வரலாறாய்த்  துவங்கும் !

++++++++++++++

[19]

[டிசம்பர் 9 ஆம் நாள்]

அந்த வெள்ளிக் கிழமை

அற்றைத் திங்கள்

அந்த வெள்ளிக் கிழமை

எந்தன் துணைவியும் இருந்தாள் !

அவளோடு ஒட்டி

நானும் இருந்தேன்.

வீட்டு விளக்கு

வெளிச்சம் தந்தது !

இற்றைத் திங்கள்

இந்த வெள்ளிக் கிழமை 

என் துணைவியும் இல்லை !

தனியனாய் நான்

பிரிவு நாள் அது.

பெரிய துக்க நாள் அது !

+++++++++++++++++++

[20]

என் இழப்பை நினை !

ஆனால் போகவிடு எனை !

ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

கருமாதி எதற்கு துக்க அறையில்,

கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?

என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,

இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,

ஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.

ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.

தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது

உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,

உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை.

+++++++++++++++++++++++++

 ஆங்கில மூலம்

[21]

எழுதிச் சென்ற ஊழியின் கை !

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழிடம்

ஒரே ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள்  

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

++++++++++++++++

[22]

ஊழியின் எழுத்தாணி

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும் ! 

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

+++++++++++++

[23] 

அன்னமிட்ட கைகள்.

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோர்.

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

 

 

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

2 thoughts on “துணைவியின் இறுதிப் பயணம் -2”

  1. எவ்விதமான வார்த்தைகளாலும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு ஐயா
    அன்புச் சகோதரனின் ஆழ்ந்த இரங்கல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.