துணைவியின் இறுதிப் பயணம் -3

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[21]

எழுதிச் சென்ற ஊழியின் கை !

 

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழியிடம்

ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள் 

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

[22] 

ஊழியின் எழுத்தாணி

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும்

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

 [23] 

அன்னமிட்ட கைகள்.

 

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது அன்புடன்

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோரே.

 

++++++++++++++++++

 [24]

தங்க ரதம்

 

தங்க ரதம் போல்

வீட்டில் தினம்

உலாவி வருவாள் !

மங்கா ஒளி முகத்தோடு

வீட்டில் தினம்

விளக்கை ஏற்றுவாள்.

தகதகக்கும் அந்த

தங்க மேனியாளை

திருமணத்தில் கைப் பற்றிய நான்,

இறுதியாக

என்னிரு கைகளால்

எரியும் மின்சார நெருப்பிலே நான்

தள்ளினேனே ! நான்

தள்ளினேனே !

++++++++++++++++

[25]

[ஆயுள் சான்றிதழ்]

[Life Certificate]

 

ஓய்வு ஊதியம் பெறுவதற்கு

ஓவ்வோர் ஆண்டும்

ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்

அவசியம்.

இந்திய அரசாங்க ஆணையர்

நவம்பர் மாதம்

முதல் வாரம் அளிப்பார்

முத்திரை குத்தி !

தம்பதிகள் இருவரும் புறப்பட்டோம்.

பயணம் துவங்கியது.

பாதி வழியில்

இருளும் மாலை நேரத்தில்,

திடீரெனத் துணைவி

இரத்தக் குழல் குமிழியில்

நேர்ந்தது வெடிப்பு !

உள் பூகம்பம் !

நாள் காட்டியில்

காலன் என்றோ குறித்து வைத்த

நவம்பர் ஒன்பதாம் நாள் !

அடுத்தோர் 9/11

அபாய மரண நிகழ்ச்சி

நேரும்

ஓருயிருக்கு !   

முடிவில் நடந்தது என்ன ?

எனக்குக் கிடைத்தது

அரசாங்கத்தின்

ஆயுள் சான்றிதழ்.

என்னருமைத் துணைவிக்கு

எமனின் 

மரணச் சான்றிதழ் !

 

++++++++++++

 [26]

மரணம்

 

மானுட  இனத்துக்கு

மரணம் என்பது

புதிதல்ல !  

மரணம்  என்பது

பொல்லாது ! 

உயிருடன் வாழ்வோரைத் தினமும்

கொல்லாமல் கொல்வது !  

மரணம் என்பது

விதியல்ல என்று நீ

சொல்லாதே !

மதியால் நீ விதியை

வெல்லலாம் என்று சொல்லிக்

கொள்ளலாம். 

ஆனால்

மரணத்தை வெல்ல

முடியுமா !

பிறப்பும், இறப்பும்

உயிரின வாழ்க்கையின்

இருதுருவங்கள்.

பிறந்தவர்

ஒருநாள் இறப்பவர் தான் !  

இறப்பவர் மீண்டும்

பிறப்பர்

என்பது தெரியாது !

மரணம் புதிதல்ல என்று

உரைத் தெனக்கு

ஆறுதல் கூற வராதீர் !

மரணம் விதியல்ல என்று

இறையிடம்

முறையிடுவேன் !

மரணம்

அரக்கர் தொழில் !

மானிடப் படைப்பைச் சீராய்

உருவாக்கிய பிறகு  

ஊனுருகப் பறிப்பது தான்

உன் அறுவடையா ?

அல்லது

அறநெறியா ?

 

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.