சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[41]
மீளா புரிக்கு !
என்னுள்ளத்தின் சுவர்களில்
ஒவ்வோர் அறையிலும்
நான் காண விழைவது
துணைவி படம் ஒன்றைத்தான் !
நான் கேட்க
விரும்புவது துணைவி
இனிய குரல்
ஒன்றைத் தான் !
ஓவ்வோர் அறைத் தளத்திலும்
என் காதில்
விழ வேண்டுவது
துணைவி தடவைப்பு
எதிரொலி
ஒன்றைத்தான் !
ஒவ்வோர் சுவர்ப் படத்திலும்
அவளது கண்கள்
உற்று நோக்க வேண்டுவது
எனது கண்களைத் தான் !
எண்ணற்ற அவளது
படங்களைத் தேடி எடுத்து
பலகையில் ஒட்டிப்
பலர் பார்க்க வைத்தேன்,
ஈமச் சடங்கிலே !
யாரை நான் இழந்தேன் என்று
ஊராரும், உற்றாரும்
பார்க்க வேண்டும் அன்று !
உடலையும் உயிரையும்
பிடித்து வைக்க முடிய வில்லை !
படங்களை யாவது
தினம், தினம்
பார்த்துப் பார்த்து
துணைவியை நினைக்கலாம் !
திரைப் படங்களில் அவள்
உயிரோடு
நடமாடி இருந்ததைக்
காணலாம்
மீண்டும், மீண்டும் !
என்னை விட்டுத் துணைவி
பிரிந்து விட்டாள்
நிரந்தரமாய் !
எனது இல்லத்தில் இனிமேல்
வாழத் தேவை யில்லை
என்று ஆயுள்
அத்தமனம் ஆனது !
ஒருபோக்குப் பாதையில்
திரும்பிப் பாராது,
புலம் பெயர்ந்து விட்டாள்
மீளா புரிக்கு !
++++++++++++++++
[42]
உயிரா ? உடலா ?
உயிர் என்னும் மாய விசை
இல்லையேல்,
உடம்பெனும் யந்திரம்
ஓடாது இப்புவியில் !
உடம்பு என்றோர்
பம்பரம் இல்லை யெனின்
உயிருக்கு வேலை
உண்டோ ?
தனித்து வாழ முடியாத
இரண்டும்
பிணைத்து வாழ வேண்டும்,
பிறப்புருவில்.
அல்லது
முறிந்து வீழ வேண்டும்,
என்பது ஊழ்விதி !
முதன் முதல்
உயிர் நீங்க வில்லை
துணைவிக்கு !
முறிந்து,
முடங்கியது முதலில்
உடம்பு !
உயிருக்கு ஆயுள் நீட்சி
இருப்பினும்
நோயுற்ற கூண்டிலே
குடியிருக்க
முடிய வில்லை,
உயிர்ப் புறா !
இறுதியிலே
பூரண
ஓய்வெடுத்தது உயிரும்
உடம்பும் !
+++++++++++++++++
[43]
ஈமச் சடங்கு
உயிருள்ள மானிடப் பிறவிக்கு
உரிய மதிப்பளிப்பது
நியாயமே மனித நேயமே.
அது போல்
உயிரிழந்த சடலத்துக்கும்
பயண முடிவில்
மரியாதை புரிவது
மனித நாகரீகம். மனித நேயமே.
பிரம்மாண்ட மான
வரலாற்றுச் சின்னமான
பிரமிடைக் கட்டினர்
ஃபெரோ வேந்தர்கள்
தமது உயிரிழக்கும் சடலத்துக்கு
முன்பாகவே !
மும்தாஜ் மனைவிக்கு
உலக ஒப்பற்ற,
எழில் கொலு மாளிகை,
தாஜ் மகாலை எழுப்பினார்
ஷாஜஹான் !
துணைவிக்கு நான் இரங்கற்
பாமாலை வடித்துச் சூட்டினேன்.
ஐம்பத்தாறு ஆண்டுகள்
உடனிருந்து
இடர், துயர், இன்பத்தைப்
பகிர்ந்து
கடமை, உடைமை
வறுமை, செழுமை, திறமையில்
தானும் பங்கெடுத்து
மரித்த என் துணைவிக்கு
உரிய மரியாதை
அளிப்பது என் இறுதிக் கடமை,
அதுவே ஈமச் சடங்கு !
மௌன மாளிகையில்
ஆரவர மின்றி ஆடம்பர மின்றி
ஊரார், உற்றார், உறவினர்
கூடி இருக்க,
நீத்தார் பெருமை நினைப்பது
ஈமச் சடங்கு !
தகன மாளிகையில் அன்பர் சூழக்
கடவுளை நினைத்து,
சடலத்தை
அக்கினி மூலமாய்
வழியனுப்பி வைத்தோம்.
தங்க உடம்பு
குடத்துச் சாம்பல் ஆனது.
துணைவி புரிந்த
நல்வினை எல்லாம் அன்று
நாலுபேர் பேசி
நினைவில் வைத்தோம்.
செல்லும் போது
சொல்லாமல் பிரிந்த துணைவிக்கு
“போய் வா” என்று
வாயால் சொல்லும் வாடிக்கை
விடை தரவில்லை !
ஆயினும்
காதில் துணைவி முணுத்தது :
“என் இழப்பை நினை !
ஆனால் போக விடு எனை !
++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
++++++++++++++
Published by
S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
ஐயா, தங்களின் நினைவலைகளில் நாங்களும் பங்களிப்புச் செய்கிறோம்.
மிக்க நன்றி ராஜசேகரன்.
கனிவுடன்
சி. ஜெயபாரதன்