சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறந்து இப்போ
தத்தித் தவழுது ! தாவி எழுகுது !
நடந்து நிற்கப் பார்க்குது !
கடந்த ஆண்டு மறைந் தாலும்,
தடம் இன்னும் போக வில்லை !
போர்கள் தொடருது !
காயங்கள் ஆற வில்லை !
சீர்மை, நேர்மை, ஓர்மை பரவப்
பாலங்கள் கட்ட வேணும்.
வித்தைகள் தொடருணும் !
விஞ்ஞானம் சீராய்த் தழைக்கணும் !
சித்தர்கள் தலை தூக்கணும் !
பித்தர்கள் தெளி வாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும் !
மதச் சண்டை, மொழிச் சண்டை ஓயணும் !
மனித நேயம் உருவாக
இனங்கள் கைகோர்த்து வாழணும் !
பெண்டிரைக் கண்கள் போல் காக்கணும்.
பொரி உருண்டை ஆச்சு பூகோளம் !
கொரோனா தீட்டு நோய் உலகத்தாரை
ஒரே குலமாய் ஒன்று படுத்தும்.
திறமைகள் ஒன்றாகி எதிர்க்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருக்கணும்.
மின்சக்தி பெருகி ஆலைகள் ஓடணும்.
வேலைகள் பெருகணும்.
கூலிகள் கூடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைந்து மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி ஒடுங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளி மூன்றும்
மாந்தரே துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்;
கல்விக் கூடங்கள் யாவும்
செல்வக் கூடம் ஆவதைத் தடுக்கணும்.
நாட்டுப் பொறுப்பை நாமே ஏற்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊரணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
++++++++++++
Published by
S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
ஐயா வணக்கம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
தாங்கள் மற்றும் தங்கள் குடும்பம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Sent from Yahoo Mail on Android
உயரிய சிந்தனை. நம் உலகம் சிறந்த நிலைக்கு உயரும். தங்களின் சொல்வன்மையில் உயிர்த்தது நனவில் நிகழும் ¡¡¡
இனிய பாராட்டு காமாட்சி.
சி.ஜெயபாரதன்